எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 08, 2013

பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்!

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்.//

தேவி உபாசகர்களின் கருத்து படைப்பு, காப்பு, அழிப்பு மூன்றுக்கும் ஆதாரமாக இருப்பது ஒரு பராசக்தி. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் பராசக்தி ஒருத்தியாலேயே நடைபெறுவதாக ஐதீகம்.  இவற்றைக் கடந்து அதீதமாக நிற்பது பராசக்தியான காமேசுவரியாகும்.  இந்த மூன்று தொழிலும் அவளுடைய மாயை.  இந்த மாயையால் அகில சராசரங்களையும் அவள் ஆட்டுவிக்கிறாள்.  இந்தத் தொழில்களுக்காகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை சிருஷ்டித்தாள்.  காரியமில்லா நிலையில் உள்ள ஒரே வஸ்துவான அம்பாள் காரியமாகிறபோது பலரூபங்களையும் எடுக்கிறாள்.  இவற்றில் உயர்வு தாழ்வு என்பது நம் மனம் கற்பிக்கும் பேதமே அன்றி உண்மையில் இல்லை. அம்பாளையே பல ரூபங்களில் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் அனைத்தும் ஒரே சக்தியே. இத்தகைய சக்தியானவள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய அனைத்தையும் செய்வதற்காக முறையே  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகியோரைப் படைத்ததாக சாக்தர்கள் சொல்வார்கள்.  மஹாவிஷ்ணுவை ஸ்திதி கர்த்தாவாக அம்பிகையே நியமிப்பதாக சாக்தர்கள் சொல்வார்கள்.  அப்போது இவ்வுலகைக் காப்பதற்காக மஹாவிஷ்ணு பல அவதாரங்களையும் எடுக்க வைத்தாளாம் அம்பிகை.  லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்ருஷ்டிகர்த்ரீ--ப்ரம்மரூபா; கோப்த்ரீ--கோவிந்தரூபிணீ; ஸம்ஹாரிணி--ருத்ரரூபா; திரோதானகரி--ஈஸ்வரி;  ஸதாசிவா--அநுக்ரஹதா:  பஞ்சக்ருத்ய பராயணா! என்று அம்பிகையைக் குறித்து வரும்.  அப்படி அம்பிகையே கோப்த்ரீயாக கோவிந்தரூபிணியாக இருப்பதாகவும் அவளே இந்தப் பத்து அவதாரங்களையும் எடுத்ததாகவும் லலிதாம்பாள் சோபனம் சொல்கிறது.  இங்கேயோ பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள் என்று வருவதால் பரந்தாமனைப் பத்து அவதாரங்கள் எடுக்க வைத்தவள் அம்பிகை என்ற பொருள் கொள்ள வேண்டும்.  கீழே லலிதாம்பாள் சோபனத்தின் பாடல்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்.  ஏற்கெனவே பகிர்ந்தவையே.



அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.

சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்

இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்


“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.

மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.  கீழே பரசுராமாவதாரப் பாடல்கள்

கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.

அடுத்து பூரணமான மனிதன்.  ஶ்ரீராமன்.  மர்யாதா புருஷோத்தமன்.  மனிதனாக எப்படி வாழ்ந்து காட்டுவது, ஒரு அரசனாக அரசனுக்குரிய நீதி பரிபாலனத்தை எப்படிக் காப்பது?  அதற்காக மனைவியையே துறக்க வேண்டி இருந்தாலும் அவளையும் துறந்து அரச தர்மத்தைக் காப்பது என இருந்த மஹாவீரன்.  தான் ஒரு அவதாரம் என்ற நினைப்பில்லாமல் மனிதனாகவே வாழ்ந்து காட்டியவன்.

“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து நம்ம கண்ணன் வந்தே விட்டான்.  சகலரையும் மகிழ்வித்துக் கொண்டு தான் பூரண அவதாரம் என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிலைநாட்டிக் கொண்டு கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்.  கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.

“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.

அடுத்து இனி நடக்கப் போகும் அவதாரம்.

அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்

Monday, October 07, 2013

பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-



பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-- தொடர்ச்சி.  அபிராமி பட்டர் சொல்வது

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.

ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

இறைவன் ஆணா, பெண்ணா?  இந்தக் கேள்விக்குப் பதில் எவராலும் சொல்ல இயலாது.  பெண்ணென்றால் அவன் பெண்ணே!  ஆணென்றால் அவள் ஆணே! ஆணாகிப் பெண்ணாகி நின்றான அந்த அர்த்த நாரீஸ்வரர் ஆன கோலத்தையே மேலுள்ள பாடல் வரிகள் சுட்டுகின்றன.    புரட்சிகரமாக  ஆணும், பெண்ணுமாகக் கலந்து உமையொருபாகனாக இருக்க ஈசனைத் தவிர எவரால் இயலும்?  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர திருத்தலம்.  அர்ச்சனை செய்யும்போது கூட ஒரு நாமம் ஈசனுக்குரியதாகவும், அடுத்த நாமம் அம்பிகைக்கு உரியதாகவும் அமைந்திருக்கும் என்கின்றனர்.  ஆண், பெண் சமத்துவத்தைக் குறிக்கும் வண்ணம் சிறப்புப் பெற்ற கோலம் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்.  இதைக் குறித்துப் பலவாறு கூறுவது உண்டு.  பிருங்கி முனிவர் ஈசனை மட்டுமே வணங்கி வந்த நிலையில், அம்பிகைக்குக் கோபம் வந்து அவர் சக்தியை இழக்குமாறு செய்ததாகவும் அப்போது ஈசன் பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் அளித்து உதவ, உமையன்னை மனம் வருந்தி தானும் ஈசனுக்குச் சமமாக அவரின் பாதியாகவேண்டும் என தவம் கடுமையாக இருந்ததாகவும், சிவன் தம்முடலில் பாதியை அவளுக்குக் கொடுத்ததாகவும் கூறுவார்கள்.  ஈசனோடு இணைந்த உமையன்னையைக் கண்ட பிருங்கி முனிவர் வேறு வழியில்லாமல் இருவரையும் வணங்கினார் என்பார்கள்.  இத்தகைய அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்ட நாள் திருக்கார்த்திகை தினம் எனச் சொல்வதுண்டு.  அன்று திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரரைக் கண்டு வணங்கி வழிபடுவது சிறப்பு.

இப்படி அர்த்தநாரீஸ்வரரைக் குறித்துப் பற்பல விளக்கங்கள் இருந்தாலும் ஆதிசங்கரர் சொல்வது இன்னும் அருமையானது.  நிர்க்குணப்ப்ரம்மம் ஆனது தனக்கென்ரு எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈஸ்வரனாக இருக்கையில் அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாய் என்கிறார்.  அப்படிப் பார்த்தாலும் பாதி உடம்பு தான் இருக்கணும்.  ஆனால் முழு தேகத்தையும் அம்பிகையே ஆக்கிரமித்துக் கொண்டு செக்கச் செவேலெனக் காமேச்வரியாக ஆகிவிட்டதாகச் சொல்கிறார்.  இதையே அபிராமி பட்டர் சொல்கையில்,

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!


படங்கள் உதவி: கூகிளார்.

Sunday, October 06, 2013

பாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை!

பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை).


இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து  மாயா சக்தியால் தோன்றியுள்ளதாக ஐதீகம். ஒரே பிரம்மம் தான் இத்தனை உருவங்கள், குணங்கள் உள்ள ஜீவராசிகளாயும், பிரபஞ்சங்களாயும் தோன்றுகிறது என்றும் ஒன்றான பிரம்மத்தைப் பலவாகக் காட்டுவது அம்பிகையான மாயாசக்தி எனவும் அம்பிகையின் மாயா சக்தி எனவும் கூறுவார்கள்.   இந்தப் பாருள் பிரம்மத்தை அடக்கியவண்ணமும் அவளே காட்சி அளிக்கிறாள்.  பிரம்மமாகவும் அம்பாளே காட்சி அளிக்கிறாள்.  இவளே ஞானாம்பிகை.  இந்த அகண்ட பேரண்டத்தில் பரப்ரும்மத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு அம்பாளாகக் காட்சி தருவதும் அவளே. அதோடு மட்டுமின்றி ஜீவாத்மாக்களைப் பிறவியாகிய பெரும் கடலில் இருந்து விடுவித்து முக்தி என்னும் கரையில் சேர்ப்பவளும் அவளே!  ஆகவே இந்தக் காளியானவள் பரப்ரும்மத்தை மட்டும் உள்ளடக்கியவளாய் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பவதாரிணியாகவும் விளங்குகிறாள்.

இவளுடைய மூன்று கண்களில் வலக்கண் சூரிய வடிவம் எனப் பார்த்தோம்,  அது பகலைப் படைக்கிறது. இடக்கண் இரவைப் படைக்கிறது.  இரண்டுக்கும் நடுவே உள்ள அக்னியாகிய கண்ணானது சந்த்யா காலத்தைப் படைக்கிறது.  ஆகவே அது சிவந்து விளங்குகிறது.  இவ்வாறு காலத்தையும் கடந்து நிற்பதால் காலஸ்வரூபிணி என்றும் இவளைச் சொல்லலாம்.

//பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //

வேத மந்திரங்களாலும் இவளைப் பற்றி வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு எல்லையற்றவள்.  ஏனெனில் வேதங்களின் பரம தாத்பரியமான அத்வைதமாகவும் இவளே விளங்குகிறாள்.  அவளே அனைத்துமாய் எங்கும் நிறைந்தவளாய் காலங்களை எல்லாம் கடந்தவளாய் இருக்கிறாள்.  இதோ பாரதியின் பார்வையில் காளி:

"யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்:
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ!
பூதமைந்தும் ஆனாய்-காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்!"

பாரதி கண்ட காளி இவள். பாரதி காளியின் பக்தன். கண்ணனின் பக்தன் ஆனால் காளியின் பக்தனும் ஆனான்.பாரதி எவ்வாறு காளியைத் துதித்தான் என்றால்

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண்" என்றும் "நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்:அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே!
சொல்லத்தகுந்த பொருளென்று காண்!இங்குசொல்லுமவர் தமையே!
அல்லல் கெடுத்தமரர்க்கிணையாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்." என்கிறான்.


பாரதி கண்ட அந்தக் காளியின் காட்சி எவ்வாறு என்பதைப் பார்ப்போமா?

படர்ந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்ததனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் குருதி சொட்டும் அசுரனின் தலை என்று காண்போரைக் கதி கலங்க வைக்கும் தோற்றமுள்ள இந்தக் காளி, சடலமாகத் தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன்னிரு கால்களைப் பதித்துப் பயங்கரமாகத் தரிசனம் தருகிறாள். ஆனால் இந்தத் தோற்றம் ஒவ்வொன்றுக்கும் அரிய தத்துவங்கள் உண்டு.


உயிர்கள் அவளிடம் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவளின் மாலையில் உள்ள அரிந்த சிரங்கள் உணர்த்துகின்றன. மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்துக்கும் சக்தியாக இருப்பவள் அவள் ஒருத்தியே என்பதை உடைந்த கரங்களால் ஆன ஆடை மூலம் தெரிய வரும். ஆணவத்தோடு மனிதர்கள் செய்யும் அற்பக் காரியங்களை அவள் காலக்கிரமத்தில் வெட்டி வீழ்த்துகிறாள் என்பதை இடது கரத்தில் உள்ள வாள் தெரிவிக்கிறது.இயற்கை நடை முறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் மனிதன், இறுதியில் தாயின் வாளுக்கு வெட்டுண்டு பலியாவான் என்பதை வெட்டுண்ட சிரம் தெரிவிக்கிறது. காளியை ஆராதிப்பவர்கள் வீரமாக இருக்க வேண்டும். பயம் கூடாது. அதாவது மரண் பயம். காளி அனுதினமும் சம்ஹாரத் தொழிலைச் செய்கிறாள்.இதையே செந்நிறமான அவளுடைய நீட்டிய நாக்கு காட்டுகிறது. இவளுடைய கோரத் தாண்டவம் நடக்கும் இடம் சுடுகாடு. நம் மனத்தில் ஏற்படும் ஆசை, காமம், கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் ஒழிந்து பஸ்பம் ஆக வேண்டும் . நம் மனம் நிர்மலம் ஆக வேண்டும் என்பதையே அவளது தாண்டவத்தலம் சுடுகாடு தெரிவிக்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் அல்லவா? கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம்? அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா? அப்போதுதான் உலகில் நீதியும், நேர்மையும், நியாயமும் ஏற்பட்டு சாந்தியும், சந்தோஷமும் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தியாக இருந்து நம்மை ரட்சிப்பவளே காளி என்னும் மஹாசக்தி.இவளைத்தான் ஊழிக்கூத்தில் பாரதியார்

"காலத்தொடுநிர்மூலம் படுவுலகும்- அங்கே
கடவுள் மோனத் தொனியே தனியாயிலகும்-சிவன்
கோலங்கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-
கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத்திடுவாய்!
அன்னை!அன்னை! ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை!"

என்று பாடுகிறார்.

அன்னையின் கோபம் ஈரேழு பதினாலு உலகத்தையும் வாட்ட, அவள் கோபத்தைச் சிவன் தான் ஒருவரே தணிக்கமுடியும் என்று உணர்ந்து, சடலம் போலக் கீழே படுக்கிறார். தன்னிலை தெரியாது கோபாவேசத்தில்இருக்கும் அன்னை சிவன் மார்பில் ஏறி நின்று ஊழிக்கூத்தாடினாள். அவள் காலால் மிதியுண்ட சிவன் ஒரு குழந்தையாக மாறி அழ, குழந்தையின் குரல் கேட்ட அன்னை கோபம் தணிகிறாள். அது போல நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள். இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்திலும் காளிக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றிருக்கின்றன.

கருத்து உதவி: தெய்வத்தின் குரல்

Saturday, October 05, 2013

பொன் அம்பலத்தாடும் காளி! 1




பல்லவி
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி

அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)
பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //

காளியைக் குறித்து இதுவரை எழுதியது இல்லை.  அதிலும் ஆருக்கும் அடங்காத நீலியான அவளைக் குறித்து எழுதத் தான் முடியுமா?  இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் சக்தி அவளே. காலங்களுக்கெல்லாம் அவளே பொறுப்பு.  காலமாறுதல்களுக்கும் அவளே பொறுப்பு.  காளி கறுப்பானவள்.  ஆனால் அதே சமயம் நிறமற்றவள்.  என்ன, குழப்பறேனா!  இல்லை.  கடல் நீர் நீலநிறம் என்று நினைக்கிறோம்.  ஆனால் கடல் அருகே சென்று ஒரு கை நீரை அள்ளிப் பாருங்கள்.  என்ன நிறம்?? நிறமற்றுத் தானே இருக்கும்.  காளியும் நம் அக்ஞானத்தால் கருமை நிறமாய்த் தெரிகிறாள். அக்ஞானம் தொலைந்தால் அவள் எல்லையற்ற தெய்வீக ஒளி பொருந்தியவளாகக் காட்சி தருவாள்.  அதே போல் அவள் ரூபமும் நாம் பார்க்கப் பயங்கர வடிவில் இருந்தாலும் அதுவும் நம் அக்ஞானத்தாலேயே அப்படித் தெரிகிறது.  உண்மையில் ஆனந்த சொரூபிணி அவள்.


நான்கு கைகளை உடையவளாக இருக்கும் இந்தக்காளியின் நான்கு கைகளும் மனிதர்களைக் காட்டிலும் அவள் ஆற்றல் அதிகம் என்பதைக் காட்டுவதற்காக  உள்ளன. இடுப்பிலோ கைகளை ஒட்டியாணமாக அணிந்திருப்பாள் காளி.  இவ்வுலகத்து மாந்தரின் கரங்களை இயக்கி அவர்களின் செயல் அனைத்தையுமே காளியாகிய பராசக்தியே நடத்துவதால் இடுப்பில் கைகளால் ஆன ஒட்டியாணம் காணப்படுகிறது.  நாலா திசைகளிலும் பரந்து விரிந்திருக்கும் அவள் சக்தியால் இவளுக்கு "திகம்பரி" என்னும் பெயர் உண்டு.  திசைகளையே ஆடையாகக் கொண்டிருக்கிறாள் இவள். இவள் மாலையோ குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து வெவ்வேறு பருவத்து மக்களின் மண்டையோடுகளாகக் காணப்படும்.  முண்டமாலினி என இதனால் இவளை அழைக்கின்றனர்.  குழந்தை பிறந்ததில் இருந்து எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு இறப்பு நேரிடும்.  வாழ்க்கை அநித்தியமானது.  எனவே அரிதான இந்த மனித வாழ்க்கையில் ஆன்மிக வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே இப்படி மண்டை ஓட்டு மாலைகளைத் தரித்திருக்கிறாள்.


இவள் ஒரு கை வரம் தரும் நிலையிலும், இன்னொரு கை  அபயம் காட்டியும் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டும்,அவர்களைத் துன்பத்திலிருந்து நீக்கிப் பாதுகாத்தும் வருகிறது.  வாள் ஏந்திய மற்றொரு கை தீமைகளை வெட்டிச் சாய்ப்பதில் வல்லவள் என்பதையும் வெட்டிய தலையைப் பிடித்திருக்கும் மற்றொரு கை தீயவர்களைச் சலனமே இல்லாமல் காளி வெட்டித் தள்ளுவாள் என்பதையும் காட்டுகிறது.  சூரிய, சந்திர, அக்னிஸ்வரூபமான தன் கண்களால் இவ்வுலகைப் பகல், இரவு, பருவ மாற்றம் அக்னியின் சக்தியை மாந்தர்க்கு உணர்த்துவது எனக் காட்டி வருகிறாள்.  விரிந்த சடாமுடியுடைய காளனாகிய ஈசனின் மனைவியான காளியும் விரிந்த கரிய கூந்தலோடு காணப்படுவது எல்லையற்று அவள் வியாபித்து இருப்பதையும் அவள் ஆற்றல்களையும் காட்டும்.  அந்த ஈசனின் மார்பின் மீது காளி தன் கால்களை ஊன்றி நிற்பது போலப் பார்க்கிறோம்.  இது சிவனாகிய பரப்ரும்மம் சவம் போல் இருப்பதைக் காட்டும்.  சக்தியானவள்  அவன் மார்பின் மீது ஏறி நடனம் புரிவது அவள் உட்புகுந்து சிவனை இயக்கினால் தான் நாம் சிவத்தையே அறிய இயலும் என்பதைச் சுட்டுகிறது.

எப்படி ஒரு விளக்கில் விளக்கில் எண்ணெய் ஊற்றும் பாகமும், எண்ணெயும் சும்மா இருக்கிறதோ, விளக்கின் திரிச் சுடர் மட்டும் பிரகாசமாய் எரிகிறதோ அப்படியே சிவனில் உறைந்த சக்தி தான் அப்படிச் சுடர் போலப் பிரகாசித்துக் கொண்டு நடனம் ஆடுகிறாள்.  சக்தி இயங்கினாலே நம்மால் சிவனை அறிய முடியும்.  இல்லை எனில் அறிய முடியாது.  செயலற்று சிவன் படுத்திருப்பது  நிர்க்குண பிரம்மத்தைச் சுட்டினால், சிவன் மீது நர்த்தனம் ஆடும் காளி செயலுள்ள சத்குணப்பிரம்மத்தைச் ச்ட்டுக்கிறாள்.  கடலின் மேலே அலைகள் ஆர்ப்பரிப்பது போல் தான் இவையும்.  ஆனால் கடல் உள்ளே அசைவற்று இருப்பது போல் கடலைத் தாங்கி நிற்கும் பூமிப் பகுதியைப் போல் சிவன் காணப்படுகிறான்.

சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  நெருப்பு இருந்தால் உஷ்ணமும் இருக்கும்.  பால் என்பது வெண்மையாகவே இருக்கும். ரத்தினம் ஒளிவீசிப் பிரகாசிக்கும். அது போல் அசையாப் பாம்பின் நிலை சிவனுடையது எனில் ஓடும் பாம்பு சக்தியாகும். சிவசக்தி இணைந்தாலே பிரபஞ்ச இயக்கம் சாத்தியம்.

மற்ற வரிகளுக்கான விளக்கம் நாளை வரும்.


காளி பற்றிய தகவல்களுக்கு உதவி: ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்

http://www.rasikas.org/forum/viewtopic.php?f=11&t=21500&p=242982&hilit=arukkum+adangada#p242982

சுட்டி உதவி: திரு ஈரோடு நாகராஜன்.

ஆருக்கும் அடங்காத நீலியின் விளையாடல்!



இந்த வருடம் நவராத்திரிப் பதிவுகள் எழுதறதா நினைக்கலை. எந்தக் குறிப்புக்களும் எடுத்தும் வைச்சுக்கலை.  அதோடு பண்டிகை வேறே கொண்டாட முடியாது என்பதால் சுவாரசியம் இல்லை.  ஆனால் ஆருக்கும் அடங்காத நீலி எழுத வைத்துவிட்டாள்.  இளைய நண்பர் திரு ஜீவா வின் பதிவில் http://jeevagv.blogspot.in/2013/10/blog-post.html இங்கே சென்று பார்க்கவும்.  சிப்பியில் விளையும் அபூர்வ முத்துக்களைப் போல எப்போதேனும் ஒரு அபூர்வ முத்தாகப் பதிவுகள் வரும். ஜீவாவின் பதிவில் கொடுத்த பாடலுக்கு அவர் என்னை அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரிகளின் அர்த்தத்தைச் சொல்லும்படியும், அல்லது பதிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார்.  முதல், மூன்றாம் வாக்கியங்களின் பொருள் புரிந்தாலும் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் புரியவில்லை.  இரண்டு நாட்களாக இதே நினைவு.  கடைசியில் நண்பர் ஈரோடு நாகராஜன்(மிருதங்க வித்வான்) http://erodenagaraj.blogspot.in/2013/09/blog-post.html  அவர்களைக் கேட்டிருந்தேன்.  அருமையான விளக்கத்தை அனுப்பி விட்டார்.  மதியம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பல்லவி 
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி 

அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை 

சரணம் 
ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள் 

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்
சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள் 

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள் 



பி.கு: சுட்டியெல்லாம் போகிறதில்லை என்பதால் அப்படியே கொடுத்துட்டேன். வாய்ப்புக் கொடுத்த நண்பர்கள் 


நன்றி:  திரு ஈரோடு நாகராஜன், மிருதங்க வித்வான்

நன்றி: திரு ஜீவா

Friday, October 04, 2013

சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!


மணமகனையும், மணமகளையும் அப்படியே உட்கார்த்தி வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டது.  கடைசியா பாணிக்ரஹணம் குறித்துப் பார்த்தோம்.  மணமகன் தன் வலக்கையால் மணமகளின் கரத்தைப் பிடிப்பதற்கும் நான்கு மந்திரங்கள் உண்டு.  பிராமணர் தவிர மற்ற சமூகங்களில் இதன் பின்னரே மாலை மாற்றலும் நடக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.  இதன் பின்னர் அக்னிக்கு வடக்கே மணமகன் மணப்பெண்ணின் வலக்கையைப் பிடித்தவாறே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் தொட்டுக் கிழக்கே பார்த்தோ அல்லது வடக்குத் திசையிலேயோ பாதத்தை எடுத்து வைத்து அவளுடன் நடந்து செல்லவேண்டும்.  ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு.  7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும்.  சாஸ்திரப் படி ஏழு அடிகள் ஒருத்தருடன் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் ஆகிவிடுவார் என்று ஆகிறது.  சாவித்திரி சத்யவானின் உயிரைக் காப்பாற்ற வேண்டி யமதர்ம ராஜனோடு இப்படித் தான் ஏழடிகள் எடுத்து வைத்துப் பின்னர் யமனின் நண்பன் என்ற ஹோதாவில் அவனிடமே வரங்களை வேண்டிப் பெற்றுத் தன் கணவனின் உயிரையும் மீட்டு வருவாள் என்று படித்திருக்கிறோம் அல்லவா!  அதே போல் இங்கே மணமகளோடு சேர்ந்து ஏழடி எடுத்து வைக்கும் மணமகன் தன் மனைவியைத் தன் சிநேகிதியாகவே கருத வேண்டும்.  இத்தனையும் செய்கையில் பிடித்த வலக்கையை விடவே கூடாது.  இது தான் திருமணத்தின் முக்கியக் கர்மாவாகும்.  சட்டப்படியும் இந்த சப்தபதி ஆனாலே திருமணம் நிறைவு பெற்றுத் திருமணம் சட்டரீதியாகவும் செல்லுபடி ஆகும்.

மந்திரங்கள் என்று சொன்னாலும் இன்னொரு விதத்தில் இது மணமகன் - மணமகள் இடையே நடக்கும் உரையாடல் என்றும் சொல்லலாம்.  மணமகன் தன் மனைவியிடம் தாங்கள் இருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாசகத்தைப் பேசுவான்.

முதல் அடி: நீ என் வீட்டுக்கு வருகிறாய்.  மஹாலக்ஷ்மி போன்ற உன் வரவால் என்ன் குலம் விருத்தி அடையட்டும்.  நீ மட்டும் சந்தோஷம் அடையாமல் என்னையும் சந்தோஷப் படுத்தப் போகிறாய்.  எல்லாவற்றிலும் முக்கியமான உணவுப் பொருட்கள் உன்னால் விருத்தி அடைந்து நீ என் இல்லம் வரும்போது நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு அருளட்டும்.

இரண்டாம் அடி:காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு என் வீட்டில் வந்து இருப்பதற்கு வேண்டிய உடல் வலிமையை உனக்குத் தரட்டும்.  அவன் அருளால் உன் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

மூன்றாம் அடி: நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சட்ட, திட்டங்களை மீறாமலும், கடமையுடன் நாம் செயலாற்றும்படியும், அதற்கான நம்பிக்கைக்காகவும் இறைவன் நம்முடன் ஒத்துழைப்பானாக!

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.  அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக,போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் நிறைந்து இருக்குமாறு கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நம்மைத் தாக்கினால் வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் மனங்களுக்குத் தருமாறு அந்தக் கடவுள் அருளட்டும்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகத்தை மட்டுமே பார்க்க மாட்டோம்.  எல்லாவற்றையுமே அனுபவிப்போம்.  அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளான, மழை, வெயில், பனி போன்றவை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு உதவி புரியும் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியை வணங்கவும், அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் ஆண்டவன் அருளட்டும்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

Thursday, October 03, 2013

ஆதார் அடையாள அட்டை பற்றி!

நீங்க ஆதார் அட்டை வாங்கிட்டீங்களா?  பெரியதொரு வேலை. ஆனால் மிக எளிமையான ஒன்று.  எனினும் முன் திட்டம் சரியாக இடாமையாலும், பயிற்சி பெற்ற நபர்கள் இல்லாததாலும் ஆதார் அடையாள அட்டைப் பதிவுக்கு ஏகத்துக்குக் கூட்டம் நெரிகிறது. மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி இருப்பதாகச் சொல்கின்றனர்.  அதோடு ஆதார் கணக்கெடுப்பின் போது  கொடுக்கும் வங்கி எண்ணிற்கு எரிவாயு சிலிண்டரின் மான்யத் தொகையை  மத்திய அரசே நேரடியாக அளிக்கும் என்றும் ஒரு அறிவிப்பு.  தமிழ்நாட்டிற்கு வேண்டாம்னு இங்கே முதலமைச்சர் சொல்ல, தள்ளிப் போடப்பட்டு ஒருவழியா இன்னிக்கு ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு செய்தவர்களுக்கு, இன்று அடையாளங்கள் பதிவு செய்யப்படும்னு நேத்திக்கு தினசரியில் வந்தது.

நம்ம ரங்க்ஸுக்குக் கேட்கணுமா?  இன்னிக்குக் காலம்பர ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிட்டார்.  ஒன்பதே காலுக்கு அங்கே ஆஜர்.  அங்கிருந்து ஃபோன். இன்னிக்கு டோக்கன் மட்டும் தராங்க.  நீ வர வேண்டாம்னு.  டோக்கன் வாங்கறச்சே என்னோட எண்ணுக்கும் சேர்த்துக் கொடுத்துட்டாங்க. (கைலை யாத்திரைக்கு இப்படித்தான் அகஸ்மாத்தாக் கிளம்பினேன். அது போல நான் போகாமலே என் எண் வந்துவிட்டது.) உடனே சமையலை முடிச்சுக் கிளம்பி வானு மறுபடி ஒரு அழைப்பு.  சமையலை முடிச்சுக் கொண்டு பதினொன்றரை மணிக்குக் கிளம்பினேன்.  அங்கே இருக்கும் வரிசையைப் பார்த்தால் இன்னிக்கு ஆகாது போல் இருந்தது.  அங்கே ரங்க்ஸும் எப்போ வேணாக் கீழே விழுந்துடுவேன்ங்கற நிலை.  நான் நின்று கொண்டு அவரை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு வர அனுப்பி வைச்சேன்.  அவர் வந்ததும் நான் போய் உட்கார்ந்தேன்.  தரையில் உட்காரணும்.  நம்மால் ஆகாதது.  கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.  அப்புறமா ரங்க்ஸிடம் சொல்லிட்டு அலுவலகத்துக்குள்ளே போய் உட்கார்ந்துவிட்டேன்.  அலவலக ஊழியருக்குத் தெரிஞ்சவங்க வந்தால் அந்தப் பக்கமாக அனுப்பி வைக்கிறார். என்னத்தைச் சொல்றது.  கொஞ்ச நேரம் கழிச்சு ரங்க்ஸும், அங்கே அறிமுகம் ஆன நண்பர்களோடு உள்ளேயே வந்து உட்கார்ந்தார்.

அத்தனை கூட்டத்துக்கும் படம் எடுக்கக் கணினியில் பதிய இரு இளைஞர்கள் மட்டுமே.  காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது அவங்க இயற்கையின் அழைப்பைக் கூடச் சட்டை செய்யாமல் வேலை செய்ய வேண்டிய நெருக்கடி.  இதிலே அலுவலக ஊழியர்களின் சிபாரிசுகள் வேறே. இரண்டு பேருக்கும் ஒரு ப்ரின்டர், ப்ரின்டரின் கேபிள் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறிப் பயணித்து அலுத்திருக்கும் அதுக்கு.  அங்கேயே நின்றிருந்த சமயம் கேபிளை நாங்களே வாங்கிக் கொடுத்து உதவினோம். ஒருத்தருக்குக் குறைந்தது இருபது நிமிடம் ஆகிறது.  கூடவே ஆட்களைப் போட்டு வரும் மக்கள் உட்காரவும் நாற்காலிகள் போட்டு ஏதேனும் ஒரு கல்யாண மண்டபத்தில் முன் பதிவு செய்து இடம் கேட்டு மக்களையும் அங்கே வரச் சொல்லிச் செய்யலாம்.  நீங்க யாரேனும் போறதா இருந்தால் தண்ணீர்(முக்கியம்) நின்றபடியே சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதேனும் எடுத்துச் செல்லுங்கள்.  நீங்கள் சீக்கிரமே போனாலும் டோக்கன் வாங்கிப் படங்கள் எடுத்து ரேகைகள் பதிவு செய்யக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

ஒரு வழியா எங்களுக்கு நேரம் வரச்சே  பகல் மூன்று மணி ஆகிவிட்டது. வார்ட் நம்பர் நான் சொன்னது சரியில்லைனு ஊழியர் சாதிக்க, இன்னிக்கு கோவிந்தா கோவிந்தா தானோனு நான் நடுங்க. நடுவிலே பல குறுக்கீடுகள் வேறே,  ஒருவழியா நான் சொன்ன வார்டிலேயே என்னோட பெயர், எண் கிடைக்கப் பதிவு முடிஞ்சது.  அடுத்து ரங்க்ஸுக்கும் பதிவு முடிஞ்சு இருவருக்கும் பதிவு முடிந்ததுக்கான அடையாளச் சீட்டைக்(ஆதார் தனியா போஸ்டில் வரும்.) கொடுத்து அனுப்பினார்.  வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது மணி நான்கு. :(   ஆதார் அடையாள அட்டையை ஶ்ரீரங்கம் தொகுதிக்காரங்க வாங்க காந்தி ரோடில் கார்ப்பொரேஷன் அலுவலகத்தில் சென்று ஏற்கெனவே கொடுத்திருக்கும் சீட்டின் எண்ணைக் காட்டி டோக்கன் வாங்கிக்கணும்.  நாளைக்கும் டோக்கன் கொடுக்கிறார்கள்.


For more details contact:

npr.rgi@censusindia.gov.in
www.uidai.gov.in
www.censusindia.gov.in