எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 26, 2013

அயோத்தியை நோக்கி!

இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை.  உணவு வண்டி வரும்.  ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.  ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க.  காஃபி என்றால் 90 ரூ,  டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது.  ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம்.  டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம்.  அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம்.  விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும்.  சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது.  லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம்.  விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒண்ணும் புரியவில்லை.

சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம்.  அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம்.   யாரையும் காணோம்.  அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை.  அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம்.  அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைச்சுக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.  அங்கே போனால் தங்க அறை இருக்கு.  ஆனால் வாடகை!!!  அம்மாடியோவ்!  விமானக் கட்டணத்தை விடவும் அதிகம்.  ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை!

நேரே அயோத்யா போயிட்டால் என்ன?

எப்படி?

இந்தக் காரிலேயே!

கட்டுப்படி ஆகுமா?

இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா?  இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

கேட்டுப் பாருங்க.

கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்  அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார்.  அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம்.  அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம்.  என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை.  அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா?  சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே!  பெரிய ஊரா, சின்ன ஊரா?  எதுவுமே புரியலை.  மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.  சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது.  எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை.

ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது.  கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை.  அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன்.  படம் எடுக்கலாமேனு கேட்பீங்க. அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம்.  இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  இனி வேகமாகச் செல்வோம்.

Friday, October 25, 2013

எங்கே போனேன்? தெரிஞ்சுக்க வாங்க!


பல வருடங்களாக இந்த இடம் செல்ல ஆசை.  98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.  ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை.  அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம்  நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம்.  அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள்.  இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம்.  கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடம்


ஶ்ரீராம ஜன்மபூமி.

பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி.  முக்கியமாய்ச் சாப்பாடு கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும்.  செலவு குறையும்.  ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம்.  அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள்.  கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம்.  ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள்.  இது ரொம்பவே நுணுக்கமான விஷயம்.  சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது.


இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம்.  வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயில் பயண வசதி இல்லை.  லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர்.  மூன்று நாட்கள் பயணம்.  முன்னெல்லாம் போயிருக்கோம் தான்.  ஆனால் இப்போ முடியுமா?  அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார்.  கட்டணம்???  ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.  ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும்.

விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம்.  விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள  ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம்.  விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம்.  சென்னையில்  இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம்.  இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம்.  டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம்.  அது வேறேயா!  கடவுளே!

இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெண்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது.  சென்னைக்கு மட்டும் கிடையாதாம்.  என்ன அநியாயம்! 

Thursday, October 24, 2013

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.


காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.


என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.



நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

Saturday, October 12, 2013

சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள் மூன்றாம் பகுதி!

பிரம்மா ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்தாலும் காசி மாநகரம் மட்டுமே ஈசன் படைத்ததாக ஐதீகம்.  எல்லா உலகங்களிலும் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப் பரம்பொருளின் திரிசூலத்தின் நுனியில் அமைந்த இடம் காசிமாநகர்ம். இங்கே அவன் ஆணையே செல்லும் என்பார்கள்.  காசியில் மரணமடையும் ஜீவன்களை சாக்ஷாத் அன்னபூரணியே தன் மடியில் இருத்த, ஈசன் அவர்கள் காதுகளில் தாரக மந்திரம் ஓத ஜீவன்கள் முக்தி அடைவதாகச் சொல்வார்கள்.  இந்தக் காட்சி பகவான் ஶ்ரீராமகிருஷ்ணருக்கு கங்கைக்கரையில் கிட்டியதாகவும் படிச்சிருக்கோம்.  அத்தகைய காசிக்கு முதலில் வந்த அம்பிகை விசாலாக்ஷியை விடப் பின்னர் வந்த அன்னபூரணி தான் பிரபலம் அடைந்திருக்கிறாள்.  அது ஏன்?

நம்ம வீடுகளிலே எல்லாம் அம்மா தானே சமைச்சுச் சாப்பாடு போடறாங்க. அத்தகைய அம்மாவான ஜகதாம்பிகை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்றாட உணவை அளித்து வந்தாள்.  ஒரு நாள் ஈசன் அன்னையிடம், எல்லா ஜீவன்களுக்கும் உணவளித்து முடிந்துவிட்டதா எனக் கேட்க, ஆயிற்று என அன்னை சொல்ல, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு சின்னப் பெட்டியை எடுத்துப் பார்த்தார் ஈசன்.  அங்கே ஒரு சின்ன்ன எறும்பு. அதன் வாயில் ஒரு அரிசித் துகள். ஈசன் புன்னகை புரிந்தார்.  அம்பிகையுடன் திருவிளையாடலுக்கு ஆயத்தமானார்.  அதற்கும் காரணம் இருந்தது. காசிமாநகரில் பஞ்சம் தலை விரித்தாடியது.

அந்தப் பஞ்சத்தைப்போக்கக் காசி ராஜன் செய்த முயற்சிகளெல்லாம் பலனளிக்கவில்லை.  செய்வது என்ன எனத் தெரியாமல் தவித்தான். அன்னபூரணியாக அன்னை அங்கே சென்று அக்ஷய பாத்திரத்தால் உணவளித்தல் ஒழியப் பஞ்சம் தீராது.  ஆகையால் ஈசன் அன்னையிடம் மாயையான இவ்வுலகில் உணவும் ஒரு மாயை, உணவளிப்பதும் மாயை எனக் கூற அன்னைக்கு வருத்தம் ஏற்பட்டது.  இவ்வுலகம் பொருட்கள் நிரம்பியது எனவும், பொருட்களால் ஆனது, ஆற்றல் மிகுந்தது எனவும் கூறுகிறாள். அப்போது ஈசன் இல்லை என மறுக்க அன்னையும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறாள்.  இரு நாழி நெல்லைப் படியளந்து அன்னையிடம் கொடுக்கிறார் ஈசன்.  இதை வைத்து உலகத்து உயிர்களுக்கெல்லாம் படியளக்கச் சொல்கிறார். அன்னை அங்கிருந்து மறைகிறாள்.

சர்வலோக நாயகியான அன்னை அந்த நெல்லை விதையாக வைத்துக் கொண்டாள். என்ன செய்யவேண்டும் என  அவளுக்கா தெரியாது!  உலகமே வயலானது.  கடலே ஏரியானது.  ஈசனின் விடை வாஹனமே உழவு மாடானது.  பலராமனின் கலப்பையை உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டாள். உலகத்து நாயகியான அன்னை அறம் வளர்த்த நாயகியானாள். அங்கிருந்து கையில் அக்ஷயபாத்திரமும் அதில் நிறைந்த பாலமுதோடும் காசி மாநகருக்கு வந்து உணவுக் கூடம் அமைத்தாள்.  பசியென வந்தோருக்கெல்லாம் இல்லை எனாது அமுது படைத்தாள். அன்னையைப் பிரிந்த ஈசன் பிரிவால் வருந்தி தன் கையில் திருவோட்டை எடுத்து வந்து அவளிடம் பிக்ஷை என நீட்ட வந்திருப்பது சர்வேசன் எனத் தெரிந்தும் அன்னை அதில் பிக்ஷை இட்டாள்.

காசிராஜன் அன்னையைச் சோதிக்க நினைத்தான்.  அன்னையிடமிருந்து தானியங்களைக் கடனாகக் கேட்டான்.  அன்னை மறுத்தாள்.  அரசனை அங்கே வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள்.  காசிராஜன், தன் மந்திரிமாரோடு மாறு வேஷத்தில் வந்து அன்னையிடம் உணவு உண்ண வந்த கூட்டத்தோடு அமர்ந்து உணவு உண்டான்.  உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்த அதிசயத்தைக் கண்டான்; வியந்தான்.


இது சாமானிய மனிதரால் இயலாது; சாக்ஷாத் அம்பிகையே வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவள் காலடிகளில் விழுந்து வணங்கி அங்கேயே இருக்க வேண்டுகிறான்.  அன்னை தான் தென் திசை நோக்கிச் செல்வதால் அங்கே தங்க இயலாது எனக் கூறி காசிமாநகரில் அன்றிலிருந்து பஞ்சமே ஏற்படாது எனவும் அருளாசி புரிந்தாள்.  அன்னையின் சாந்நித்தியத்தை அங்கே நிறுவ வேண்டும் எனக் காசி ராஜன் வேண்ட அன்னையும் அவ்வாறே தன் தெய்வீக சாந்நித்தியத்தை அர்ச்சா விக்ரஹமாக நிறுவினாள்.  மன்னனுக்கு முக்தியையும் கொடுத்தாள்.

இதைத் தான் பிரம்ம கபாலத்தில் அன்னை இட்ட பிக்ஷை எனச் சிலர் கூற்று.  ஆனால் காசிமாநகரில் இதை மேற்கண்டவாறே சொல்கின்றனர்.  மேலும் காசிமாநகரில் அன்றிலிருந்து இன்று வரை உணவுப் பஞ்சமே வந்ததில்லை என்றும், எல்லா நாட்களும் ஏகாதசி, போன்ற விரத நாட்களிலும் கூட இல்லை எனாது இரவு பகல் எனப் பாராமல் உணவு கிடைக்கும் ஒரே இடம் அன்னை அன்னபூரணி அருளாட்சி செய்யும் காசிமாநகரம் தான் எனவும் கதியற்றவர்களுக்குக் காசியே துணை என்றும் கூறுவார்கள்.

தங்கமயமான அன்னபூரணியை வங்கி லாக்கரில் இருந்து தீபாவளி சமயம் மட்டுமே எடுத்து வருகின்றனர்.  கண்கள் கூசும் வண்ணம் பிரகாசிக்கும் சுவர்ண அன்னபூரணி நவரத்தினக் கிரீடம் அணிந்து, தங்கக் குடைக்குக் கீழே, தங்கப்பட்டாடை உடுத்தி, கையில் தங்கக் கிண்ணமும், தங்கக் கரண்டியும் பிடித்த வண்ணம், மார்பிலும், கழுத்திலும் நவரத்தின மாலைகள் மின்ன வெள்லிவிடையோனுக்கு பிக்ஷை அளிக்கும் காட்சியை தீபாவளி சமயம் மட்டுமே காசி மாநகரில் காண முடியும்.  அவள் அருகே ஶ்ரீதேவி, பூதேவித் தாயார்களும் அருகே சொர்ண விக்ரஹமாக அமர்ந்த வண்ணம் காட்சி கொடுப்பார்கள்.

ஈசன் கைகளில் இருப்பது பிரம்ம கபாலம் தான் என்றும் இங்கே அன்னபூரணி அளித்த பிக்ஷைக்குப் பின்னரே அது கைகளை விட்டு அகன்றது என்றும் கூறுகின்றனர். ஆதி சங்கரர் அன்னபூரணியை "நித்தியான்ன தானேஸ்வரி" என்று போற்றிப் பாடி உள்ளார்.  வெறும் அன்னத்தை மட்டுமின்றி ஞான வைராக்கியத்தையும் பிக்ஷையாகப் போட்டு இகம், பரம் அனைத்துக்கும் உதவுவாள்.  இவளே தென் திசையாகிய காஞ்சிக்கு வந்து காமாக்ஷியாக நிலைபெற்றாள்.  இவளே ஶ்ரீலலிதை.  சிவப்பரம்பொருளை நாடுபவர்களுக்கு அவர்களின் ஆன்மிகப் பசியை நீக்கி ஞானமாகிய முக்தியை உணவாக அளிப்பவள் இவளே.


Friday, October 11, 2013

சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்! இரண்டாம் பகுதி


இந்தக் கதை அநேகமாக அனைவரும் அறிந்ததே.  எனினும் திரும்பச் சொல்கிறேன். அம்பிகையின் உடலைத் தூக்கிக் கொண்டு ஈசன் தாண்டவம் ஆடியபோது, மஹாவிஷ்ணு அதைப் பார்த்துவிட்டு அம்பிகையின் உடலைப் பல துண்டங்களாக்கினார்.  அவை அனைத்தும் பூமியில் விழுந்த இடங்களே சக்திபீடங்கள் எனப்படுகின்றன.  அந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடமே மேல் மலையனூர் என்று சொல்கின்றனர்.  இங்குள்ள அங்காளியம்மன் போட்ட பிக்ஷையால் தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து அகன்றது என்றொரு ஐதீகம்.  ஈசனைப் போலவே தனக்கும் இருந்த ஐந்து முகங்களால் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய மண்டை ஓடு அவர் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக் கொண்டது.

மண்டை ஓடு கைகளை விட்டு அகலவில்லை என்பதால் இது அம்பிகை பிக்ஷை அளித்தாலே தன் கைகளை விட்டு அகலும் என்பதை ஈசன் புரிந்து கொண்டதாகவும், அம்பிகை எந்த ஊரில் பிக்ஷை இடுகின்றாளோ அங்கே தான் மண்டை ஓடு அகலும் என்பதையும் புரிந்து கொண்டவராக பிக்ஷாடனக் கோலத்தில் ஊர் ஊராக அலைகிறார். மண்டை ஓட்டு மாலை அணிந்து நாகாபரணத்தையும் அணிந்து கொண்டு, இடுப்பில் புலித்தோலுடன், ஒரு கையில் உடுக்கையை ஏந்தி, இன்னொரு கையில் பிரம்மகபாலத்தோடு ஈசன் உலகெல்லாம் உய்வதற்காக பிக்ஷை எடுத்தான்.  சாதாரணக் கோலமா அது!  பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கோலம் அன்றோ!  அதோடு சர்வ லோக நாயகனுக்கு பிக்ஷை இடும் தகுதி தான் யாருக்கு உண்டு!  அன்னை ஒருத்தியைத் தவிர எவரால் பிக்ஷை இட இயலும்?

இந்த நிகழ்வு நடந்த இடம் மேல் மலையனூர் என்றும் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை அன்று அங்காளியானவள் தன் முழு பலத்தோடும், வலுவோடும் இருப்பதாகவும் அனைத்துக்கும் மூலாதார சக்தியானவள் அன்று சுடுகாட்டில் உள்ள ஆவிகள், பேய், பிசாசுகள், பூதங்கள் அனைவருக்குமே சூரை இடுவாள் என்றும் கூறுகின்றனர்.  இதை மயானக் கொள்ளை என்ற பெயரில் அழைக்கின்றனர்.  உலகெங்கும் அலைந்து திரிந்து பிக்ஷை எடுத்த சர்வேசன் கடைசியில் இங்கே வந்து சேர்ந்தான்.  அன்று மாசி மாத அமாவாசை நாள். ஈசன் அன்னையிடம் தன் திருவோட்டை ஏந்தி, 'பவதி பிக்ஷாம் தேஹி!' என்று கேட்க முதல் கவளம் சூரையை பிரம்ம கபாலத்தில் அன்னை போடுகிறாள்

அந்தக் கபாலத்தில் இருந்த பிரம்மஹத்தி ஆவலுடன் தனக்குக் கிடைத்த உணவை உடனே உண்கிறது.  இரண்டாவது கவளத்தையும் அன்னை கபாலத்திலேயே இடுகிறாள்.  அதையும் பிரம்மஹத்தி சாப்பிட்டு முடிக்கிறது.  உணவின் ருசியில் தன்னையும் மறந்த பிரம்மஹத்தி ஆவலுடன் எதிர்பார்க்கும் மூன்றாவது கவளத்தை அனனை சூரையாகச் சுடுகாட்டில் வாரி இறைத்துவிடுகிறாள்.  பிரம்மஹத்தி அந்தச் சூரையை உண்ணும் அவசரத்துடன் ஈசன் உடலில் இருந்து இறங்க வேண்டி கபாலத்துள் புகுந்து அதன் வழியே கீழே இறங்குகிறது.  கபாலம் ஈசன் கைகளை விட்டு அகன்று விட, கீழே இறங்கிய பிரம்ம கபாலம் சூரையைச் சாப்பிடுகிறது.  அப்போது ஈசன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்துவிட்டார்.  அதன் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.  இதைத் தான் "சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்," எனப் பாடலாசிரியர் பாடி இருக்க வேண்டும். எனினும் வேறு சில புராணக்கதைகளும் இது பற்றிச் சொல்கின்றன.

இந்த பிக்ஷையையே அன்னபூரணி இட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.  அதைக் குறித்து நாளை பார்ப்போம்.  நேரப் பற்றாக்குறையால் விரிவாக எழுத முடியவில்லை. 

Thursday, October 10, 2013

சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்.



அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது.  அதைத் தான் மேற்கண்ட பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.  சிரம் அறுபட்டது பிரம்மாவுக்கு.  அதன் பின்னர் ஈசனின் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டு விடாமல் இருக்க, அம்பிகை அளிக்கும் பிக்ஷையில் அந்தக் கபாலம் விலகுகிறது.  அதைக் குறித்துப் பார்ப்போமா?   எனினும் அதற்கு முன்னர் சிறிது அம்மன் புகழ் பாடுவோம். இந்த ஆதிபராசக்தியே அருள் மிகு அங்காளம்மன்  என்னும் பெயரில் அருள் பாலிப்பதாகக் கூறுகின்றனர்.  முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.


முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.


தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

ஒரு சமயம் திருக்கைலையில் ஈசனும், அம்பிகையும் வீற்றிருக்கையில் ஈசனைப் போலவே ஐந்து தலைகள் கொண்ட பிரம்மாவும் அங்கே வந்தார்.  ஒரு க்ஷணம் தன் கணவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகளா என்ற எண்ணத்தோடு உமை பார்க்க, பிரம்மாவோ பார்வதி தேவி தன்னைத் தவறாகப் பார்ப்பதாக எண்ணி கர்வம் கொன்டார்.  அந்த நேரம் அவரின் அகங்காரம் அதிகமாகித் தன்னைப் படைத்த நாராயணனைக் கூட மறந்துவிட்டார். மூலாதார சக்தியான ஈசனையும், சக்தியையும் மறந்தார்.  பஞ்சபூதங்களையும் படைத்தது அவர்களே என்பதையும் மறந்து அகங்காரம் தலை தூக்க, அந்தத் தலையை ஆதிசிவன் வெற்றிலைக்காம்பு கிள்ளுவது போல் கிள்ளி எறிய, அகங்காரம் பிரம்மாவிடமிருந்து மறைந்தது.  ஆனால் பிரம்மனின் மறைந்த தலை ஒரு கபாலத் திருவோடு உருவில் ஈசன் கைகளில் வலக்கையில் ஒட்டிக் கொண்டது. உலக நன்மை கருதியே ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்தாலும் தர்மம் தவறியதால் அதற்கான தண்டனை தான் பிரம்ம கபாலம் அவர் கைகளில் ஒட்டிக் கொண்டது.

ஈசன் பிக்ஷாடன மூர்த்தியாகி பிக்ஷை கேட்கப் புறப்பட்டார். ஶ்ரீமந்நாராயணன் இருக்கும் இடமான பத்ரிநாத் சென்றதாகவும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ரிஷி, முனிவர்கள் தங்கள் கர்வம்,அகங்காரம் ஆகியவற்றை தானம் செய்ததாகவும் அங்கே சொல்வார்கள்.  அப்போது தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து நழுவி,  அங்கே ஓடிக் கொண்டிருக்கும் அலக்நந்தா நதியின் வெள்ளத்தில் விழுந்ததாக ஐதீகம். பத்ரிநாத்தில் இன்னமும், இன்றும் பிரம்மகபாலம் என்னும் இடம் உள்ளது.  அங்கே சென்று பிக்ஷை செய்வித்து, முன்னோர்களுக்கும் பித்ருகடன் தீர்ப்பது வழக்கம். இந்த பிக்ஷாடன மூர்த்தியின் தத்துவமெ நம் உலகியல் ஆசைகளான காமம், க்ரோதம், கோபம், ஆணவம், பொறமை ஆகியவற்றைத் துறந்து ஞானத்தை  பிக்ஷையாக ஏற்கவேண்டும் என்பதே.

இந்தச் சிரமது அறுத்த கதை வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.  பிரம்மா சிரம் அறுத்தது என்னமோ ஈசன் தான். கைகளில் கபாலம் ஒட்டிக் கொண்டதும் சரியே.  ஆனால் கபாலம் விலகியது மட்டும் அம்பிகை அருளினால் என்று சக்தி உபாசகர்கள் சொல்கின்றனர்.  சாக்தர்கள் சொல்வது அவள் போட்ட பிக்ஷையால் ஈசன் கைகளிலிருந்து பிரம்ம கபாலம் அகன்றது என்பதே. அதை நாளை பார்ப்போம். 

Wednesday, October 09, 2013

பெருமாளே, பெருமாளே! :))))

முந்தாநாள் கோயிலுக்குப் போயிருந்தோம்.  தாயார் சந்நிதிக்கு முதல்லே போனோம்.  மூணரைக்கு நடை சாத்திடுவாங்கனு சொன்னதால் கிட்டத்தட்ட ஓட்டம் .  அங்கே உள்ளே நுழையும்கொலு மண்டபக் கதவு சார்த்துவதும், நாங்க போவதும் சரியா இருந்தது.  திறந்து உள்ளே போய் 50 ரூ சீட்டுக் கேட்டால் சீட்டுக் கொடுப்பவர் பேசாம உள்ளே போங்கண்ணே!  சீட்டெல்லாம் வாங்கிட்டிருந்தீங்கன்னா நேரம் ஆயிடும்.  மூடறதுக்குள்ளே போய் தரிசனம் பண்ணுங்கனு சொன்னார். இது முதல் ஆச்சரியம்

இரண்டாவது ஆச்சரியம், பெருமாள் சந்நிதியில்.நேரே போயிட்டே இருக்கலாம், பெருமாள் சாவகாசமாக் காத்து வாங்கிட்டு இருக்கார்னு சொன்னாங்க.  அங்கேயும் சீட்டுக் கொடுக்கும் வரிசையில் நிற்கப் போனால் திரும்பக் கோயில் ஊழியர் வந்து எதுக்குக் காசு கொடுத்துப் போறீங்க?  ஒருத்தருமே இல்லை.  பேசாம இந்த இலவச தரிசன வரிசைக்கு வந்து பார்த்துட்டுப் போங்க.  சீக்கிரமா உள்ளே போயிடலாம்னு சொல்லிட்டார்.   கொஞ்சம் சுத்த வேண்டி இருந்தது தான்.  கயிறு கட்டித் தடுப்புக் கிட்டத்தட்டத் திருப்பதி போலச் செய்திருக்காங்க.  முன்னால் இத்தனை நீள வரிசைக்குக் கயிறு கட்டியதில்லை. ஆர்யபடாள் வாசல் வழியே உள்ளே போனால் நேரே ஐம்பது ரூ சீட்டு வாங்கும் கிளி மண்டபத்துக்குப் போயிடலாம்.  இப்போ அதுக்குச் சுத்த வேண்டி இருக்கு.  அதை விடவும் இலவச தரிசனத்துக்கு நான்கைந்து இடங்களில் சுத்தினாலும் விரைவில் உள்ளே போய் தரிசனம் பண்ண முடிஞ்சது.  நிஜம்மாவே பெருமாள் காத்து வாங்கிண்டு தான் இருந்தார்.  நம்பெருமாளுக்குச் சிரிப்புத் தாங்கலை. 



என்ன ஓசியிலே பார்க்க வந்தியானு கேட்கிறார் போல இருக்குனு நினைச்சேன்.  திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.  போ, போ னு விரட்டலை.

ஆஹா, இது ஶ்ரீரங்கம் கோயில் தானா?


வீட்டிலே விருந்தாளிகள்.  ஆகையால்  ஆருக்கும் அடங்காத நீலியின் தொடர் பதிவு நாளைக்குத் தான். :)))))