எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 21, 2007

வெற்றியைக் குறிக்கும் நாள் இது!




விஜயதசமி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்தாலும், பொதுவாக மஹாபாரத்ததில் அர்ஜுனனும், பாண்டவர்களும் அஞ்ஞாத வாசத்தில் இருந்த பின்னர், நவராத்திரி விரதம் இருந்து, தேவியைப் பூஜித்து, அது முடிவடைந்த நாளில், தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்த "வன்னி" மரத்தடியில் இருந்து எடுத்துப் பூஜை செய்து, போருக்குத் தயார் ஆன நாளாகக் குறிப்பிடப் படுகிறது. அதன் காரணமாகவே முதல்நாளான நவமி அன்று இன்றளவும், ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்தபின்னரே எடுக்கும் வழக்கமாக உள்ளது. அது புதியதாய் வாங்கிய ஆயுதமானாலும் சரி, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதானாலும் சரி, பூஜை போட்டுவிட்டே உபயோகிப்பார்கள்.

இது தவிர மற்றொரு கருத்தும் உண்டு. பர்வத ராஜன் குமாரியான "பார்வதி" தேவியைப் பெண்ணாகப் பெற அதிர்ஷ்டம் அடைந்த பர்வத ராஜன் தன்னுடைய குமாரி, மற்ற உலகத்துப் பெண்களைப் போல் சில நாட்கள் பிறந்தகம் வந்து ஓய்வெடுக்க வேண்டும் என இறைவனை வேண்ட, இறைவனும் அவ்வாறே தேவியை அனுப்பி வைத்ததாகவும், தேவி பத்து நாட்கள் பிறந்தகத்தில் தங்கியதாயும், பத்தாம் நாட்கள் தேவியைச் சகலவிதமான ஆடை, ஆபரணங்கள், பூஜைகள் செய்தும், பல்வேறு விதமான ஆயுதங்கள், வாகனங்கள் கொடுத்தும், பட்சண, பலகார வகைகளுடனும், பெண்ணைப் புகுந்த வீட்டுக்கு இமவான் அனுப்பி வைத்ததாய்ச் செவிவழிக் கதை ஒன்று கூறுகிறது. சில வடமாநிலங்களில், குறிப்பாக வங்காளத்தில் இன்றளவும் அன்னையைத் தங்கள் பெண்ணாகக் கருதி வீட்டுக்கு அழைக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கிறார்கள். மேலும் மது, கைடபர்களையும், மஹிஷனையும், சும்ப நிசும்பர்களையும் வதம் செய்து முடித்த தேவியானவள் ஓய்வு வேண்டித் தன் ஆயுதங்களை எல்லாம் அன்றொரு நாள் வைத்துவிட்டு, ஆனந்தத்தில் திளைத்ததாகவும், அன்னை ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்த நாளே "ஆயுத பூஜை" எனவும் கொண்டாடப் படுவதாயும், மற்ற நாளான "விஜயதசமி" வெற்றியைக் குறிக்கும் ஆனந்த நாளாகக் கொண்டாடப் படுவதாயும் ஒரு கதை கூறுகிறது. இப்போதும் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நவராத்திரி பத்து நாட்களில் ஒரு நாள் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்து விருந்து படைத்துத் துணிவகைகள், பொம்மைகள், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், பலகாரங்களுடன் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் உண்டு. குறிப்பாக மதுரை மாவட்டக் காரர்கள் இதை ஒரு கட்டாயமாகப் பின்பற்றுகின்றனர்.

மற்றொரு கதையானது, ஸ்ரீராமர், ராவணனை வதம் செய்வதற்கு முன்னர், அகஸ்தியரின் ஆலோசனைப் படி, தேவி மஹாத்மியம் படிக்கச் சொல்லிக் கேட்டுத் தேவியின் புகழை அறிந்து அவளை வணங்கித் துதித்தித் தன் ஆயுதங்களைத் தேவியின் காலடியில் வைத்துப் பூஜித்து அவள் அருளுடன், மறுநாளான "விஜயதசமி" அன்று ராவணனை வதம் செய்ததாகக் கூறுகிறது. இந்நிகழ்வு தான் "ராம்லீலா" என்ற பெயரில் பெரும்பாலான வடமாநிலங்களில் கொண்டாடப் படுகிறது. "தஷ் ஹரா" தசகண்ட ராவணனை ஸ்ரீராமர் வதம் செய்ததைக் குறிக்கும் இச்சொல் பின்னாளில் திரிந்து "தஷரா" எனப் பெயர் பெற்றதாயும் கூறுவர். ஆனால் பெரும்பாலாகக் குழந்தைகளைப் படிக்க வைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்ப்போமா?

ஆதிசங்கரர், தன்னுடைய சுற்றுப் பயணத்தின் போது "மண்டனமிஸ்ரர்" என்னும் மீமாம்சையைப் பின்பற்றும் ஞானியுடன் விவாதம் செய்ய நேர்ந்தது. அப்போது அவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்களோ அவர்களைக் கண்டுபிடிக்கவும், தோற்றவர் வெற்றி பெற்றவரின் சீடராக ஆவது எனவும் முடிவு செய்யப் பட்டது. மண்டனமிஸ்ரர் தோற்றால், ஆதிசங்கரரின் சீடராக ஆவது எனவும், சங்கரர் தோற்றால் துறவறத்தைக் கைவிடுவது எனவும் முடிவு செய்யப் பட்டது. இதற்கு நீதிபதியாக இருந்தவள் மண்டனமிஸ்ரரின் பத்தினியான சரஸவாணி எனவும் உபயபாரதி எனவும் அழைக்கப் பட்ட மண்டனமிஸ்ரரின் மனைவியானவளே. இவள் வாக்தேவியான சரஸ்வதியின் அம்சம் எனவும், மண்டனமிஸ்ரர் பிரம்மாவின் அம்சம் எனவும் ஐதீகம். சரஸவாணி தன் பதி தோற்றுப் போவதைக் கண்டபின்னர் சங்கரரிடம் அவர் இல்வாழ்க்கையில் அனுபவம் இல்லாதவர் என்பதால், அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்குமாறு மண்டனமிஸ்ரரைக் கேட்க அவரும் அவ்வாறே சங்கரரிடம் இல்வாழ்வின் அனுபவங்களைச் சொல்லுமாறு கேட்டார். ஒரு மாதம் அவகாசம் கேட்ட சங்கரர், அப்போதே தன்னுடைய பயணத்தைத் தொடரும்போது பக்கத்து நாட்டு அரசன் இறந்ததைக் கேள்விப் பட்டு, தன்னுடைய உடலை நீத்து, உயிரை அவன் உடலில் செலுத்தினார். ஒரு மாதம் அந்த மன்னன் உடலில் வாழ்ந்த சங்கரர், பின்னர் தன் உடலில் மறுபடியும் புகுந்து இல்வாழ்வின் நுணுக்கங்களைப் பற்றியும் கூறவே, மண்டனமிஸ்ரர் தோல்வியை ஒப்புக் கொண்டு, சங்கரரின் சீடர் ஆகிறார்.

பர்த்தாவைப் பிரிய மனமில்லாத சரசவாணி தானும் அவர்களுடன் வருவதாய்க் கூறுகிறாள். பெண்ணைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சங்கரர் கூறவே, தான் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவதாயும், சங்கரரோ, சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்துத் தான் வருவதை அறியலாம் எனவும், திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை எனவும் கூறவே அவ்வாறே பயணம் தொடருகிறது. சிருங்கேரி, (சிருங்க கிரி) மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் பயணத்தைத் தொடரும் முன்னர், அங்கே ஒரு கர்ப்பிணியான பிரசவித்துக் கொண்டிருந்த தவளைக்குப் பாம்பு வெயில் தாக்காமல் குடை பிடிப்பதைப் பார்த்துவிட்டு ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் அது என அறிந்தார். இந்த இடமே தான் சிஷ்யர்களுடன் இருக்கத் தகுந்த இடம் எனத் தீர்மானித்துத் திரும்பி பார்க்கவே சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவில் உறைந்தாள். சங்கரருக்கு அசரீரியாகத் தான் "சாரதை"யாக இங்கேயே இருப்பதாயும், தன்னைப் பூஜித்து வருமாறும் கூறினாள். தன்னைப் பூஜித்து வருபவர்களுக்குத் தன்னுடைய அருள் பரிபூரணமாகக் கிட்டும் எனவும் கூறினாள். சிருங்கேரியில் 'சாரதை" குடி கொண்டநாள் "விஜயதசமி" எனவும், அன்று அவளைப் பூஜித்துப் படிக்க வைக்க ஆரம்பித்தாலோ, அன்று கொஞ்சமாவது படித்தாலோ சாரதையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதும் ஐதீகம். இன்றளவும் சிருங்கேரியில் நவராத்திரி பத்து நாட்களும் சாரதைக்குப் பூஜைகள் செய்து பத்தாம் நாளான இன்று "விஜயதசமி" கோலாகலமாய்க் கொண்டாடப் படுகிறது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டும், மாணவர்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டும் வந்து பூஜையில் வைத்துப்பின் திரும்பப் பெற்றுச் செல்வதும் நடந்து வருகிறது.

அனைவர் இல்லங்களிலும் "விஜயதசமி" நாளான இன்று அனைத்துச் செல்வங்களையும் அன்னை மஹாசக்தி வாரி வழங்குமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

சிருங்கேரி "சாரதா பீடம்" கோவில் படம் மேலே உள்ளது. அது மட்டும் தான் அப்லோட் ஆயிருக்கு. :D "சாரதை" படம் அப்லோட் ஆகலை. விஷயத்தைச் சொல்லிட்டேன். இல்லாட்டி டாக்டர் வந்து படம் இதோ இருக்கே ஏன் போடலைனு கேட்டு மானத்தை வாங்குவார். :P
மூணாவது (லட்சத்து?) முறையாகப் படம் போட முயன்றிருக்கிறேன். வருதா தெரியலை! :((((

14 comments:

  1. நான் தான் கிறுக்குனால் என்னோட ப்ளாக்கர் என்னை விடக் கிறுக்கா இருக்கே! எத்தனை முயன்றும் படம் போடவே முடியவில்லை, We are sorry, we are unable to fulfill your request னு வருத்தப் பட்டுட்டே இருக்காங்களே! :P

    ReplyDelete
  2. கீதா! உங்களுக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்!
    ஏன் கொலு படம் போடமுடியவில்லை?
    பார்த்தீர்களா இதே போல்தான் எனக்கும் பதில் போடமுடியவில்லை.

    ReplyDelete
  3. ஆஹா, வந்துடுச்சு, படம் போட்டு விட்டேன்,

    @நானானி, உங்க ராசியே ராசி, தினமும் வாங்க என்னோட பதிவுக்கு, படம் போட முடியலைனாலோ, அல்லது பதிவு போட் முடியலைனாலோ நீங்க வந்ததும் சரியாயிடுது. டாங்ஸு, டாங்ஸு! :P

    ReplyDelete
  4. //மற்றொரு கதையானது, ஸ்ரீராமர், ராவணனை வதம் செய்வதற்கு முன்னர், அகஸ்தியரின் ஆலோசனைப் படி, தேவி மஹாத்மியம் படிக்கச் சொல்லிக் கேட்டுத் தேவியின் புகழை அறிந்து அவளை வணங்கித் துதித்தித் தன் ஆயுதங்களைத் தேவியின் காலடியில் வைத்துப் பூஜித்து அவள் அருளுடன், மறுநாளான "விஜயதசமி" //

    இதுதான் வசந்த நவராத்திரி என்பது....வசந்த ருதுவில் வருவது...இதில் வரும் நவமிதான் ராமநவமி.

    ReplyDelete
  5. படம் வரலை :)

    விஜயதசமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. படம் இல்லைன்ன என்ன பதிவுதானே முக்கியம். அது இருக்குகில்லே போரும்

    ReplyDelete
  7. ம்ம்ம்., மெளலி, இல்லைனு நினைக்கிறேன். கேட்டே சொல்லறேன். அகத்தியர் சொன்னது இந்த நவராத்திரிதான்னு பலர் சொல்லிக் கேட்டிருக்கேன்.

    புலி, படம் இப்போ எனக்குத் தெரியுது! பார்க்கலாம்.

    திராச. சார், என்ன சந்தோஷம், எனக்குப் படம் வரலைனதும் உங்களுக்கு! :P

    ReplyDelete
  8. தெரியாமப் போச்சே:))
    கிறுக்காயிருந்தால் பதிவு போடலாம்னு.

    இன்னிக்கு எனக்கும் போட்டோ தகறாரு. அப்புறம் சரியாகி விட்டது.


    ரொம்ப உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்கிறீற்கள் கீதா.
    விஜயதசமி வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மேதாம்... அதான் நவராத்ரி முடிஞ்சிருச்சு இல்லீங்க.. ஏதாச்சும் ஜெய்சங்கர், ரவிச்சந்தரன், எல்.விஜயலச்சுமி படம் பார்த்த கதைய எழுதறது :-)

    ReplyDelete
  10. Navrathri mudindhudhaan yellor pathivum padikka mudindhadhu.

    Belated Navrathri Vazhthukkal Maami. Aana Advance Diwali vazhthukkal. Golu super,golu vizhakangalum super.Thanks.

    ReplyDelete
  11. ரொம்ப உபயோகமான தகவல்கள்!

    //ஏதாச்சும் ஜெய்சங்கர், ரவிச்சந்தரன், எல்.விஜயலச்சுமி படம் பார்த்த கதைய எழுதறது //

    @prakash, அவங்க ரேஞ்சுக்கு பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா படங்களை பற்றி கூட எழுதுவார்கள். :p

    ReplyDelete
  12. konjam aghambavam enaku vundu - for ??? for knowing many mythological hindu stories better than many of the hard core orhtodex conventional religiously hindu followers but none of these stories except one i was aware. en siram thazthughere thangalidam katrukondatharuku.

    ReplyDelete
  13. ada, vaangga known stranger, ரொம்ப நாள் கழிச்சு வந்து கமெண்ட்ஸ் மழையாப் பொழிஞ்சு தள்ளிட்டுப் போயிட்டீங்களே? ஒரு தகவல் விட்டுட்டேன், இந்த மண்டனமிஸ்ரரோட குரு "குமாரில பட்டர்" சுப்ரமணியரோட அம்சம்னு சொல்லுவாங்க்,சங்கர விஜயத்திலேயும் அப்படித்தான் இருக்கு!

    ReplyDelete
  14. விஜயதசமி என்றால் மஹிஷாச்ர வதம் என்று மட்டும் தான் எண்ணிக் கொண்டிருந்தேன் அம்மா. இராமாயணத் தொடர்பும் தெரியும். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு வன்னி மரத்தில் இருந்து ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களை வெளிப்படுத்திக் கொண்டது ஒரு விஜயதசமி அன்று தான் என்பதைப் படித்திருந்தாலும் அது மனத்தில் முன் வந்து நிற்கவில்லை.

    பர்வத இராஜகுமாரி பிறந்தகத்தில் பெற்ற சீராட்டைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்.

    தஷ் ஹரா தசரா ஆனது சுவையாக இருக்கிறது. பத்து இரவுகள் (தச ராத்ரி) என்பது தான் தசரா என்று எண்ணிக் கொண்டிருந்தேன்/கொண்டிருக்கிறேன். :-)

    இரவிசங்கர் பதிவுல பாஸ்டன் பாலா கொடுத்த சுட்டி மூலமா வந்து படிச்சது நல்லதா போச்சு. நல்ல தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். :-)

    ReplyDelete