எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 24, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25


ஜனஸ்தானத்தில் நடந்த சண்டையில், கர, தூஷணர்கள் கொல்லப் பட்டபின்னர், அவர்களில் தப்பித்த, அகம்பனன் என்பவன், ராவணனிடம் சென்று, அரக்கர்களை ராமன் தனி ஒருவனாய் அழித்த விவரத்தைக் கூறுகின்றான். அதைக் கேட்டுக் கோபம் அடைந்த ராவணன், சூரியனையே அழிக்கும் வல்லமை படைத்த என்னை விரோதித்துக் கொண்டு, ஜனஸ்தானத்தையே அழிக்கத் துணிந்த வல்லமை கொண்ட அவன் யார் என வினவுகின்றான். முதலில் பெரிதும் தயங்கிய அகம்பனன், பின்னர் ராவணன் அவன் உயிருக்குத் தான் பாதுகாப்புக் கொடுப்பதாய் அளித்த உத்தரவாதத்தின் பேரில், தசரத குமாரன் ராமனைப் பற்றியும், அவன் தம்பி லட்சுமணன் பற்றியும், பேரழகியான ராமன் மனைவி சீதை பற்றியும் கூறுகின்றான். அவன் தான் கர, தூஷணர்களைக் கொன்று ஜனஸ்தானைத்தையும் அழித்தான் என்ற தகவலைக் கேட்ட ராவணன், அவனுக்கு உதவியவர்கள் யார் எனக் கேட்க, ராமன் தனி ஒருவனாகவே ஜனஸ்தானத்தில் அழிவை ஏற்படுத்தியதாகவும், அவன் கோபம் கொண்டால் அதை அடக்க முடியாதது என்றும், எங்கு திரும்பினாலும் ராமன் ஒருவனே கண்ணில் தெரியும்படியான வேகத்துடனும், வீரத்துடனும் சண்டை இடுகின்றான் எனவும் தெரிவித்தான். மேலும் அகம்பனன் சொன்னதாவது: "இந்த ராமனைப் போரில் வீழ்த்த முடியாது. ஆனால் அவனுக்கு மரணத்தை ஏற்படுத்த ஒரே வழி அவன் மனைவியான பேரழகி சீதையை நீ அகற்றிவிட்டுப் பலாத்காரமாய் அவளைத் தூக்கி வருவது ஒன்றேதான் இருக்க முடியும். அவளுக்கு ஈடு, இணை யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை. எப்படியாவது ராமனுக்குத் தெரியாமல் நீ அவளைத் தூக்கி வந்துவிடு. அவள் பிரிவு தாங்காமல் ராமன் உயிரை விட்டு விடுவான்" என்று கூறுகின்றான்.

ராவணனும் ஒத்துக் கொண்டு, மாரீசனைக் கண்டு உதவி கேட்கலாம் என அவன் தற்சமயம் இருக்கும் ஆசிரமம் நோக்கிச் செல்லுகின்றான். பால காண்டத்தில் தாடகை வதத்துக்கு முன்னர் அவள் மகன் ஆன மாரீசன் முதலில் ராம, லட்சுமணரோடு போரிட்டதும், ராம பாணத்தால் மாரீசன் வெகு தூரத்துக்குத் தூக்கி எறியப் பட்டதும், நினைவிருக்கலாம். அந்த மாரீசன் தான் அதன் பின்னர் ஜடாமுடி தரித்து, மரவுரி அணிந்து திருந்தியவனாய் ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைக் காணவே இப்போது ராவணன் சென்றான். (இந்த மாரீசன் ஒரு விஷ்ணு பக்தன் எனவும், வைகுண்டத்தின் காவல்காரன் ஆன அவன் நடத்தையில் கோபம் கொண்டு, விஷ்ணு கொடுத்த சாபத்தின் காரணமாய் அரக்க குலத்தில் பிறந்ததாயும், விஷ்ணு தானே அவனைத் தன் கையாலேயே கொன்று முக்தி கொடுப்பதாய் வாக்குக்கொடுத்ததாயும் ஒரு கதை உண்டு.) எப்படி இருந்தாலும் சாபத்தின் காரணமாய் அரக்கி ஆன தாடகையின் மகன் ஆன மாரீசன் தற்சமயம் நல்வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றான். இந்தச் சமயத்தில் அவனை உதவி கேட்கச் சென்றான் ராவணன்.

மாரீசனிடம், தான் வந்த காரியத்தைச் சொல்லி, சீதையை அபகரிக்கப் போவதாயும், மாரீசனை அதற்கு உதவுமாறும் கேட்க, மாரீசனோ அவனைக் கடிந்து கொள்கின்றான். "ஏ,ராவணா, உன் ராஜ்யத்தில் ஒரு குறையும் இல்லை, யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை, அப்படி இருக்கையில் இம்மாதிரி ஒரு யோசனையை உனக்குக் கூறியவர் யார்? நிச்சயம் உன்னுடைய விரோதியாகவே இருக்கவேண்டும். ராமனைப் பற்றி நீ நன்கு அறிய மாட்டாய் என நினைக்கின்றேன். ஆழம் காண முடியாத சமுத்திரம் ஆன அவன் கையில் இருக்கும் வில், முதலைகளுக்குச் சமானம் என்றால், அந்த வில்லில் இருந்து எழும் அம்புகள், பேரழிவை ஏற்படுத்தும் பேரலைகளுக்குச் சமானம் ஆகும். அவனுடைய தோள் வலிமை தெரியாமல் அதில் போய் நீ சிக்கிக் கொண்டாயானால் முற்றிலும் அழிந்து போவாய். நீ உன் நகரத்துக்குப் போய் மனைவிமாரோடு சுகமாய் இருப்பாயாக, ராமன் அவன் மனைவியோடு சுகமாய் இருக்கட்டும், அவன் வழிக்கு நீ போகாதே!" என அறிவுரை கூற, அதை ஏற்று ராவணனும் இலங்கை திரும்புகின்றான். ஆனால் சகல விதமான செளகரியங்களும், சம்பத்துக்களும் நிறைந்த ராவணனுக்கு அழிவு காலம் எற்பட்டு விட்டதை யாரால் தடுக்க முடியும்? இதை நிரூபிப்பதே போல் இலங்கைக்குப் பெரும் கோபத்தோடு, ஆத்திரத்தோடும், அழுகையோடும் வஞ்சனை நிறைந்தவளாயும் வந்து சேர்ந்தாள் சூர்ப்பனகை!
*************************************************************************************
கம்ப ராமாயணம் அகம்பனன் பற்றிக் கூறவில்லை. ஆனால் சூர்ப்பனகையின் வஞ்சனை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் கூறி இருப்பது இது வரை யாரும் சொல்லாத ஒன்றாகும். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன். ராவணன் அளவு கடந்த போர் வெறியில் ஒரு சமயம் தங்கை கணவன் என்று கூடப் பார்க்காமல் அவனைக் கொன்றுவிடுகின்றான். சூர்ப்பனகை மனதில் துக்கமும், ராவணன் மேல் கோபமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதாம். ஆனாலும் காலம் வரவேண்டும் எனக் காத்திருக்கின்றாள் சூர்ப்பனகை. ஜனஸ்தானத்தில் வந்து தங்கி இருக்கின்றாள். அப்போது அவள் குமாரன் பெரும் உயரமாய் வளர்ந்து இருந்த தர்ப்பைப் புற்களுக்கிடையே தவம் செய்து கொண்டிருந்தான். தர்ப்பை புற்களை அறுக்க வந்த லட்சுமணன், அவன் தவம் செய்து கொண்டிருப்பதை அறியாமல் அவன் தலையையும் சேர்த்து அறுத்து விடுகின்றான். கொண்ட கணவனும் போய், உற்ற மகனும் போய்த் தவித்தாள் சூர்ப்பனகை. துயரக்கடலில் ஆழ்ந்த சூர்ப்பனகை, ராம, லட்சுமணர்களையும் வஞ்சம் தீர்க்கவேண்டும், தமையன் ஆன ராவணனையும் பழி தீர்க்க வேண்டும். ஆகவே இவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட்டால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அழிந்துவிடுவார்கள் என எண்ணினாளாம். அதற்கு அவளுக்குக் கர, தூஷணர்களின் முடிவு உதவி செய்தது. மேலும் அருணகிரிநாதர் சொல்வது என்னவெனில்:

//மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி

மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே//

(திருத்தணி திருப்புகழ் பாடல் எண் 272) விளக்கம் நாளை பார்க்கலாம்.

1 comment:

  1. அருணையார் சொல்வது இதுவரை கேட்டதில்லை! தாங்க்ஸ்!

    ReplyDelete