எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 04, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

குழந்தைகள் ஐவரும் வியாசரை விழுந்து வணங்கினார்கள். குழந்தைகள் பாரம்பரியத்தை மீறாதபடிக்கும், பெரியோரை மதிக்கும் வண்ணமும் வளர்க்கப் படுகின்றனர் என்பதை வியாசர் உணர்ந்து கொண்டு பெருமை கொண்டார். அவர்களை தம் அருகே அழைத்தார். அனைவரிலும் இளையவன் ஆன சஹாதேவனை மடியில் இருத்திக் கொண்டார். பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டார். அவன் வயதுக்கு மீறிய உயரத்துடனும், உடல் அமைப்புடனும் இருப்பதைக் கண்டு ஆனந்தித்தார். தன் முன்னே அனைவரையும் அமரச் சொல்லக் குந்தியும், வசுதேவரும், தேவகியும் ஒரு பக்கமும், ரிஷிகள் வியாசருக்கு எதிரேயும் அமர்ந்தனர். தன் சீடர்களைப் பார்த்து, அன்றைய பாடத்தை அதோடு முடித்துக் கொண்டதாகவும், மறுநாள் சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டு விருந்தாளிகள் தங்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சொல்லி அனுப்பினார். பின்னர் குந்தியைப் பார்த்து, “மகளே, ப்ரீத்தா, உன் துக்கத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.நீ அனுப்பிய உன்னுடைய மெய்க்காப்பாளன் வந்து எனக்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். மாத்ரியை ஸ்த்ரீ ரத்தினம் என்றே சொல்லவேண்டும். அம்மா, உன்னைச் சொல்லவில்லை என நினைக்காதே. நீ மன உறுதி கொண்டவள். உன்னால் இந்தக் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆகவே நீயும் தகுதி வாய்ந்தவளே. அதிலும் மாத்ரியின் குழந்தைகளையும் நீ சற்றும் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வருகின்றாய். இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்?” என்றார்.

குந்தியும், “ஆம் ஐயா, மாத்ரி மிக மிகச் சிறியவள். அவள் இருக்கும்போதே இந்தக் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆகையால் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. “ என்றாள். வியாசரும் “ஆம், அம்மா உன் மனப்பான்மையும், குழந்தைகளை அவர்கள் யார் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை வளர்ப்பதிலும், அவர்களைக் கண்டு ஆனந்திப்பதிலும் சிறு வயதில் இருந்தே உன் ஈடுபாடு என்னை அதிசயிக்க வைக்கின்றது. உன்னை மாதிரிப் பெண்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.” என்றார். உடனேயே நம் பீமன் பொறுக்க முடியாதவனாய், தன் உரத்த குரலில், “தாத்தா அவர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா? அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா? நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே? அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய்? இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?” என்று சொல்ல, பீமன் மிகுந்த கர்வத்தோடும், பெருமையோடும், “ஆஹா, நான் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுவேனே இவங்களை, “ என்றவன், கொஞ்சம் சிரிப்போடும், யோசனையோடும் மேலும் சொன்னான்:” ஆனால் நாங்க விளையாடும்போது அவங்களை நான் தூக்கிப் போட்டு விளையாடுவேன்.” பீமன் சிரிக்க சுற்றி இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. யுதிஷ்டிரனோ, பெரியவன் என்ற பொறுப்போடும், நிதானத்தோடும், “குருவே, பீமனுக்குப் பெரியவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று இன்னும் பழக்கம் ஆகவில்லை. பேசத் தெரியாமல் பேசிவிட்டான். பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கின்றோம்.” என்றான். அர்ஜுனனும், வியாசரைப் பார்த்துத் தன் கண்களால் அதை ஆமோதிக்கக் குந்தியோ தன் பிள்ளைகளின் ஒற்றுமையால் மனம் நிறைந்து போய்க் கண்ணால் பொங்கிப் பிரவாஹித்தாள்.

அவ்வளவில் வியாசர், சற்றே திரும்பி வசுதேவரைப் பார்த்து, “நான் தனியே உன்னோடும் தேவகியோடும் பேச வேண்டியது நிறைய உள்ளன. அதற்கு முன்னால் வசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவாயா?” என்று கேட்டார். வசுதேவர் தெரியாது என்று சொல்ல, வியாசர் சொல்கின்றார்:” காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்னைக் காண இன்று காலை இங்கே வந்தான். நீ வருவதற்குச் சற்று முன்னர் தான் அவன் கிளம்பினான்.”
வசுதேவர்:”ஆம் குருவே, அவனும் நாங்களும் ஒரே மரத்தடியில் தான் கூடாரங்கள் அமைத்து நேற்று இரவு தங்கி இருந்தோம்.”

வியாசர்:”ம்ம்ம்ம்ம் வசுதேவா, சகுனி காந்தாரியின் சார்பில் சொல்லுவதாய் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கின்றான். காந்தாரியே அதைச் சொன்னாளா அல்லது ஷகுனியின் சேர்க்கையா என்று எனக்குப் புரியவில்லை. செய்தியின் சாராம்சம் இதுதான். பாண்டுவின் பிள்ளைகள் ஹஸ்தினாபுரம் வந்து வசிப்பதைக் காந்தாரி விரும்பவில்லை. அவள் பிள்ளைகளுக்குச் சமமாய்ப் பாண்டுவின் பிள்ளைகளும் ஹஸ்தினாபுரம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். தகுதி அற்ற குழந்தைகளோடு அவள் பிள்ளைகளும் சமமாய்ப் பழகினால் பின்னால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்படும் என்று அவள் பயப்படுகின்றாளாம். ஆகவே பாண்டுவின் புத்திரர்களை நான் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டுமாம்."

வியாசர் புன்னகையோடு இத்தனையும் சொல்ல குந்தி தான் நினைத்தது சரியாய்ப் போயிற்றே என்று கலங்கினாள். அவள் மனக்கலக்கம் அவள் கண்களில் தெரிய மீண்டும் கண்கள் மழையாக வர்ஷித்தது.

“குருதேவா, குருதேவா, என் குழந்தைகளின் கதி என்ன?” என்று புலம்பினாள் குந்தி.(படம் பீஷ்மர் சபதம் போடும் கட்டத்தைக் குறிக்கிறது.)“அவர்களுக்கு நன்மையைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.” வியாசர் உறுதியுடன் கூறினார். மேலும் அவர் சொன்னார்:”குந்தி,கலங்காதே, நான் ஏற்கெனவே என் அன்பு அன்னை சத்தியவதிக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். வணக்கத்திற்குரிய பீஷ்மனுக்கும் சொல்லி இருக்கின்றேன். பாண்டுவின் புத்திரர்களை நானே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப் போவதாகவும், இளவரசர்களுக்கு உரிய மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்புத் தரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டேன்.”

வசுதேவர்:” சகுனி என்ன செய்வானோ குருதேவா?”

வியாசர்: “தன் அன்பு சகோதரியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப்போகும் சாக்கில் அவனும் ஹஸ்தினாபுரத்தில் தங்கிவிடுவான்.
பீஷ்மனைப் பற்றிக் கவலை வேண்டாம். தர்மத்தின் வடிவே அவன் தான். அவனிடம் எந்தவிதமான வித்தியாசமான போக்கையும் காண முடியாது. காந்தாரியின் புதல்வர்களையும் சரி, பாண்டுவின் புத்திரர்களையும் சரி ஒழுங்கான முறையிலும், சமமான அன்புடனும் வளர்க்க பீஷ்மன் ஒருவனே சிறந்தவன். அவன் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும், வசுதேவா, நீ என்னுடன் ஹஸ்தினாபுரம் வரையிலும் வரவேண்டும்.”

4 comments:

  1. ஹும்!
    எப்பவுமே இந்த குட்டிப்பயல் கதை ஆரம்பிச்சா மகாபாரதத்திலே கொண்டு விடுது!
    மாயக்காரன்.
    :-))

    ReplyDelete
  2. அன்பு கீதா,

    குந்தியை நினைத்து மனம் கஷ்டப்படுகிறது.

    ஆதரவற்றவர்களுக்கு ஆண்டவன் தான் துணை.


    யோசித்தால் எந்தக் காலத்தில்தான் இந்தப் போட்டியும் பொறாமையும் இல்லை என்று வேதனை வருகிறது. வெகு அருமையாக கதையை எடுத்துச் சொல்கிறீர்கள். மிகுந்த நன்றிம்மா.

    ReplyDelete
  3. தலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)

    அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  4. //தலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)//

    அதேதான் நினைச்சுக்கிட்டே படிச்சேன் - அழகா கதை சொல்வதில் தேர்ந்தவராயிட்டீங்கன்னு :)

    ReplyDelete