எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 26, 2013

அயோத்தியை நோக்கி!

இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை.  உணவு வண்டி வரும்.  ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.  ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க.  காஃபி என்றால் 90 ரூ,  டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது.  ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம்.  டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம்.  அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம்.  விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும்.  சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது.  லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம்.  விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒண்ணும் புரியவில்லை.

சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம்.  அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம்.   யாரையும் காணோம்.  அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை.  அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம்.  அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைச்சுக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.  அங்கே போனால் தங்க அறை இருக்கு.  ஆனால் வாடகை!!!  அம்மாடியோவ்!  விமானக் கட்டணத்தை விடவும் அதிகம்.  ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை!

நேரே அயோத்யா போயிட்டால் என்ன?

எப்படி?

இந்தக் காரிலேயே!

கட்டுப்படி ஆகுமா?

இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா?  இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

கேட்டுப் பாருங்க.

கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்  அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார்.  அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம்.  அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம்.  என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை.  அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா?  சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே!  பெரிய ஊரா, சின்ன ஊரா?  எதுவுமே புரியலை.  மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.  சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது.  எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை.

ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது.  கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை.  அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன்.  படம் எடுக்கலாமேனு கேட்பீங்க. அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம்.  இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  இனி வேகமாகச் செல்வோம்.

30 comments:

  1. //சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது. //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !


    >>>>>

    ReplyDelete
  2. //அங்கே போனால் தங்க அறை இருக்கு. ஆனால் வாடகை!!! அம்மாடியோவ்! விமானக் கட்டணத்தை விடவும் அதிகம். ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் //

    எது சொன்னாலும் நல்லாவே சொல்றீங்க ! ;)

    >>>>>

    ReplyDelete
  3. //வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம். //

    போட்டோப் படமெடுத்தால் மாடுகளின் ஆயுட்காலம் குறைந்துவிடுமே என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.

    ஆனால் உங்கள் பயம் வேறாக் இருந்துள்ளது.

    // இனி வேகமாகச் செல்வோம்.//

    சரி, சரி. அந்தத் தங்களின் வேகத்தையும் பார்க்கத்தானே போகிறோம். ஏதாவது கதை விடுங்கோ. ;)

    ReplyDelete
  4. ஹோட்டலில் தாங்கும் செலவை விட இது - பயணச்செலவு - கம்மியா?
    படங்கள் இல்லாதது குறைதான்.

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், சொல்வதெல்லாம் உண்மை! கதை இல்லையாக்கும். :))))

    ReplyDelete
  6. ஶ்ரீராம், சாலைப் பயணங்களில் தான் படங்கள் எடுக்கலை. மற்றபடி படங்கள் எடுத்து அப்லோடும் பண்ணி இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போடணும். :))))

    ReplyDelete
  7. பயண விவரங்கள் அருமை.
    கால்நடை செல்வங்கள், பச்சை , பசுமை எல்லாம் அழகுதான்.சாலை வசதி சரியில்லை என்றால் பயணம் கடினம் தான்.

    ReplyDelete
  8. நல்லதொரு யோசனை உடனே யோசித்து விட்டீர்கள்... வேகமாக தொடர்கிறேன்...

    ReplyDelete
  9. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்... படங்களையும் காண ஆவல்....

    ReplyDelete
  10. மிஸ் பண்ணிட்டேனே

    ReplyDelete
  11. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் மட்டுமல்ல, பெரும்பாலான நகரங்களும் இதே நிலை தான்.... முலாயம் சிங் யாதவ் சொந்த ஊரான மெயின்புரியே மோசம் - அதைக் கூட முன்னேற்ற வில்லை!

    ReplyDelete
  12. சுவைப்படச் சொல்லியுள்ளீர்கள். தங்க இடம் நல்லதாக அமைந்ததா? அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே....

    ReplyDelete
  13. +இல் பார்த்து க்ளிக் செய்தபோது ஸ்ரீராம் மந்திர் என்றோ ஏதோ ஒரு பு.ப தெரிந்தது. கமெண்ட் போடநினைத்தால் 'வூப்ஸ்' என்றது. என்ன விஷயம்?

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. வாங்க டிடி, ரொம்ப நன்றிப்பா.

    ReplyDelete
  16. ஸ்கூல் பையர், படங்கள் இப்போத் தான் பதிவிலே அப்லோட் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். :)))

    ReplyDelete
  17. எல்கே, எதை மிஸ் பண்ணினீங்க? அயோத்யா டிரிப்பையா? அல்லது பதிவையா?

    ReplyDelete
  18. வெங்கட், ஆமாம், முன்னால் காசிக்குச் சென்றபோதும் பார்த்திருக்கேன். அப்புறம் மத்ரா டிரிப்பிலேயும் பார்த்தேன், இப்போவும் உள் நாட்டிலேயும் போய்ப் பார்த்தாச்சு! :(

    ReplyDelete
  19. வாங்க ஆதி, இந்தத் தொடரை முன் கூட்டி எழுதி வைச்சுக்கலை. ஆன்லைனிலேயே எழுதறதாலே கொஞ்சமாப் போடறேன். நேரம் வேணுமே! :)))

    ReplyDelete
  20. ஹிஹிஹி, ஶ்ரீராம், அதுக்குள்ளே கண்ணிலே பட்டுடுச்சா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ப்ளாகரோட சதி தான் எல்லாம். அப்லோட் பண்ணறச்சேயே பப்ளிஷ்னு கொடுத்திருக்கு. அது +க்கும் வந்துடுத்து. டெலீட் பண்ணிட்டேனே! :)))))

    ReplyDelete
  21. ஹோட்டலில் தங்கும் செலவை விடக் காரில் அயோத்யா போனது சிக்கன நடவடிக்கை தான் ஶ்ரீராம். எப்படி இருந்தாலும் முக்கியப் பயணம் அயோத்யா தானே! நேரடியா அங்கே போகச் சரியான வழி இல்லாமையால் லக்னோவிலிருந்து போக நேர்ந்தது.

    ReplyDelete
  22. அயோத்தி, காசி, கயா இங்கெல்லாம் போகணும்னு முடிவு பண்ணிட்டா
    காசைப் பத்தி கவலைப்பட்டு பிரயோசனமே இல்லை.

    நாங்க விமான தளத்திற்கே வந்து, ட்ரைன் லே வந்தா, ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து, உங்க சகல வசதிகளையும் செய்து எல்லா கர்மாக்களையும் பண்றதுக்கு உதவியா இருந்து, உங்களை, திரும்பவும் ப்ளேன் லே , ரயில் லே ஏற்றி விடற வரைக்கும் எங்க பொறுப்பு அப்படின்னு சொல்ற பல வைதீக குடும்பங்கள் அங்கே இருக்கிரார்கள்.

    என் நண்பர் ஒரு அஞ்சு நாளைக்கு காசி, கயா , அயோத்தி, எல்லாமே போயிட்டு எல்லா கர்மாக்களையும் மனசுக்கு திருப்தியா பண்ணிட்டு வந்தார்.

    காசிக்கு போனா ஏதாவது ஒண்ணை விட்டுட்டு வரணுமே ...நீங்க எதை விட்டுட்டு வந்தீக அப்படின்னு கேட்டுட்டேன்.

    என்னோட என்டயர் பாங்க் பாலன்ஸ் ஒரு ஒண்ணரை லகாரம் விட்டுட்டு
    ஹரே ராமா ஹரே ராமா என்று சொல்கிறார்.

    பத்திரமா திரும்பி வந்ததே போதும்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  23. இந்தப் பயணத்தினால் உங்களுக்கு எப்படிப்பட்ட மன நிறைவு கிடைத்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தெரிந்து கொள்ளவாவது ஆசைப்படுகிறேன். சுவாரசியமாகத் தொடங்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. அடுத்த காங்கிரஸ் ஆட்சியில லக்னோ மற்றும் உபி முழுக்க பளிங்கு சாலைகள் போடப்படும். அல்லது மோடி ஆட்சியிலா?

    ReplyDelete
  25. சிரமமான பயணம்தான் தொடர்கிறேன்.

    ReplyDelete
  26. வாங்க சூரி சார், நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தால் பணம் மிச்சம் செய்யலாம். :))))) குடும்பத்தோட போயிருந்தால் குறைந்தது நாலு பேருக்கு ஒன்றரை லகாரம் ஆயிருக்கலாம். எங்களோட தேவைகள் குறைவு. சாப்பாடு முன்னேப் பின்னே. ஆகவே செலவில் நிச்சயம் திட்டத்துக்கு மேல் போகாமல் பார்த்துப்போம்.

    ReplyDelete
  27. அப்பாதுரை, ஆன்மிகம், பக்திங்கறதை விட்டுடுங்க. கைலை யாத்திரையில் என்ன நிறைவு கிடைக்கும்னு நினைக்கறீங்களோ அதே நிறைவு இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற இடத்திலும் கிடைக்கும்னு என் கருத்து. மற்றபடி அவரவர் சொந்த விருப்பம் செல்வதும், செல்லாமல் இருப்பதும். :))))

    ReplyDelete
  28. //அடுத்த காங்கிரஸ் ஆட்சியில லக்னோ மற்றும் உபி முழுக்க பளிங்கு சாலைகள் போடப்படும். அல்லது மோடி ஆட்சியிலா?//

    சான்ஸே இல்லை அப்பாதுரை. கிராமங்கள் நிலைமை எல்லாம் மிகவும் மோசமா இருக்கு. மக்கள் இன்னமும் பழைய காலத்திலிருந்து இந்த கணினி யுகமும் தாண்டிய இந்தப் புது யுகத்துக்கு வரலை. :( அறியாமையின் உச்சம்! படிப்பு சதவீதம் கம்மி. அடிப்படைத் தேவைகள் நமக்கு இல்லையே என்ற உணர்வே இல்லாத மக்கள்.

    முதலில் இது எல்லாம் சரியாகணும். சாலைத் தொடர்பு இருக்கணும். மின் வசதி சீராக இருக்கணும். அதுக்கப்புறமாப் பளிங்குச் சாலைக்குப் போகலாம். உண்மையிலே நாமெல்லாம் சொர்க்கத்தில் வசிக்கிறோம்னே சொல்வேன்.:)))

    ReplyDelete
  29. இப்போ இங்கே அறிவிப்பில்லாத மின்வெட்டு இருக்கு தான். ஆனாலும் பொறுக்கும்படி இருக்கேனு நினைச்சுக்கறோம். அங்கே பார்த்ததுக்கு இங்கே எவ்வளவோ பரவாயில்லை. :)))) இத்தனைக்கும் நீருக்குக் குறைவில்லை. மற்ற வசதிகளுக்கும் குறைவில்லை. உழைப்பு? அங்கே தான் இடிக்குதோ?

    ReplyDelete
  30. வாங்க மாதேவி, நன்றிங்க.

    ReplyDelete