எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 05, 2013

சித்திரகூடத்திலிருந்து கான்பூரை நோக்கி! சங்கடங்கள் தீர்ந்தனவா?

மறுநாள் காலை ஐந்து மணிக்கே  எழுந்துவிட்டாலும், (உண்மையில் விழித்தது நாலரை மணி) ஆறரை மணிக்குத் தேநீர் கேட்டிருந்ததால் அது வரை பொறுத்திருந்தோம்.  எனக்கோ பசியிலும், சரியான உறக்கமில்லாமலும் ஒரு மாதிரி மயக்கமாகவே இருந்தது.  எப்போடா ஆறரை ஆகும்னு காத்திருந்து நாமே கீழே போகலாம்னு அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.  படியில் இறங்கப் போகும் சமயம் அந்தக் காப்பாளர் பையர் எங்களை அழைத்துக் கொண்டே வந்தார்.  திரும்பிப் பார்த்தால் இரண்டாவது தளத்தில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நீர் விட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  எங்களைப் பார்த்து, "தேநீர் தானே?  கீழே போங்க, இதோ இந்த வேலையை முடிச்சுட்டு, தண்ணீர்த் தொட்டியை நிரப்பிட்டு வரேன்."  என்றார்.

அப்பாடா, உயிர் வந்ததுனு இருவரும் கீழே சென்றோம்.  வேறொருத்தரும் அங்கே இன்னொரு கட்டிலில் படுத்திருந்தார்.  சற்று நேரத்துக்கெல்லாம் மேலிருந்து அந்தப் பையர் வந்தார்.  கொல்லைப்பக்கம் என்று சொல்லக் கூடிய இடத்துக்குச் சென்று குழாயடியில் ஏதோ செய்துவிட்டு ஒரு சாஸ்பானில் நீர் நிரப்பி வந்தார். தேநீருக்குத் தான் என நினைத்தோம்.  சற்று நேரம் அப்படியும், இப்படியுமாகப் போய்க் கொண்டிருந்தார்.  படுத்திருந்த ஆளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.  நாங்க அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், தேநீர் வருதானு இன்னொரு கண்ணுமாக உட்கார்ந்திருந்தோம். திடீர்னு என் பக்கம் வந்து, "பானி கரம் ஹோ கயா!" என்றார்.  தேநீருக்குத் தான் என நினைத்து, நான் "அச்சா!" என்றேன்.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அரை வாளித் தண்ணீரை (வெந்நீர்) கொண்டு வந்து என் முன்னே வைக்க, என்ன இது? என்று கேட்டேன். "ஆப் கோ நஹானே கே லியே பானி!" என்றார்.  என்ன இது, குளிக்க வெந்நீரை அதுக்குள்ளே கொண்டு வந்துட்டாரேனு நினைச்சு, "ஏன் இவ்வளவு சீக்கிரமாக் கொண்டு வந்தீங்க?" னு கேட்க, "கரம் ஹோ கயா ந!" என்றார்.  நானும் சரி தொலையட்டும்னு நினைச்சு மாடியில் அறை வாசலில் கொண்டு போய் வைக்கச் சொன்னேன்.  அந்த இரண்டடி உயரப் படியில் நானோ, அவரோ அந்த வாளி வெந்நீரைத் தூக்கிக் கொண்டு ஏற முடியாது.  அரை மனதாகக் கொண்டு போய் வைத்தார்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனது.  மணி ஏழரையும் ஆகி ஏழே முக்காலும் ஆனது.  தேநீர்னு எழுதித் தான் பார்க்கணும் போலனு நினைச்சேன்.  அதுக்குள்ளே அந்த நபர் மீண்டும் என் கிட்டே வந்து, "பானி டன்டா ஹோகயா ஹோகா!  ஆப் ஜாகர் நஹா லீஜியே!"  என்றார்.  உடனே நம்ம ரங்க்ஸ் "தேநீரைக் கொடுத்தால் நாங்க போயிடறோம்.  இங்கே ஏன் உட்காரப் போறோம்?" என்றார்.  அந்த நபர், "சாய், சாய், வாய் குச் பி நஹி!  தூத் கோ பில்லி பி கர் கயி!" என்று சாவகாசமாகச் சொன்னார்.

இரண்டு பேருக்கும் தூக்கி வாரிப் போட இதை முன்னாலேயே சொல்வதற்கென்ன? என்று கேட்டோம்.  அதுக்கு பதிலே வரலை.  இப்போப் போய்ப் பால் வாங்கணும்.  அதுக்குக் கடைத்தெருவுக்குத் தான் போகணும்; என்னாலே இப்போப் போக முடியாதுனு கறாராகக் கூற, நாங்க பக்கத்து வீட்டிலே இரண்டு, மூணு பசு மாடு இருக்கு. நாங்க போய்ப் பால் வாங்கி வரோம், தேநீர் தயாரித்துக் கொடுங்கனு கேட்டதுக்கு, அவங்க பால் எல்லாம் வெளியே கொடுக்க மாட்டாங்க.  நீங்க வாங்கி வந்தாலும் என்னால் போட முடியாது." அப்படினு சொல்ல இரண்டு பேருக்குமே கண்ணீர் நிஜம்மாவே வந்துவிட்டது.

பேசாமல் மாடி ஏறினோம். அறை வாசலில் வைத்திருந்த அரை வாளி வெந்நீரில்(பேர்தான் வெந்நீர்)  அவசரமாய்க் குளித்தேன்னு பேர் பண்ணினேன்.  அப்புறமா அவரும் குளித்துவிட்டு வந்தார்.  இரண்டு பேரும் மறுபடி கீழிறங்கி நேற்றுப்போன திசைக்கு எதிர்த் திசையில் ஏதேனும் தேநீர்க்கடை இருந்தால் குடிச்சுட்டு அப்படியே காலை ஆகாரமும் கிடைக்குமானு பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.  ரயில்வே ஸ்டேஷன் போக ஆட்டோவுக்கு இந்த நபரை நம்பினால் நாம் ரயிலைப் பிடிக்க முடியாது. அது ராத்திரி இரண்டு மணி வண்டியாய் இருந்தாலும் என எனக்குத் தோன்ற அவரிடம் சொன்னேன்.  அவரும் ஆமோதித்தார்.  இருவரும் கீழே இறங்கி நேற்றுச் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் போனால் அங்கே ஒரு உள்ளூர்ப் பேருந்து நிலையம், அதை ஒட்டி ட்ராவலர்ஸ் பங்களா எல்லாமும் இருந்தன.

கடவுளே, இந்த ட்ராவலர்ஸ் பங்களாவுக்குக் கூட வந்திருக்கலாமே! னு நினைச்சோம்.  அங்கே இருந்த ஒரு டீக்கடையில் நாஷ்தாவும் கிடைக்கும்னு அறிவிப்புப் பலகை இருந்தது.  நாங்க தேநீர் தான் கேட்டோம்.  அவ்வளவு சீக்கிரம் காலை ஆகாரம் சாப்பிட வேண்டாம்;  கிளம்பும் முன்னர் சாப்பிட்டுக்கலாம்.  வழியில்  சாப்பிட ஏதேனும் வாங்கி வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம்.  ஏனெனில் பனிரண்டு மணிக்குள்ளாக அறையைக் காலி செய்யணும்.  அதோடு முதல்நாள் கொடுத்த பணம் முடிகிறது.  பத்து நிமிஷம் கூடப் போனால் கூடக் கறாராக ஒரு நாள் வாடகையை வசூலிப்பார்கள்.

அந்தத் தேநீர்க்கடையில் நாங்க வாங்கின தேநீருக்குப் பதினாறு ரூபாய் சார்ஜ் பண்ணிட்டாங்க.  தூக்கி வாரிப் போட்டது.  குடிச்ச தேநீரை என்ன செய்ய முடியும்?  முதல்லேயே தேநீரின் விலையைக் கேட்டிருக்கணும்.  எல்லா இடங்களிலும் ஐந்து ரூபாய் தான் ஒரு கப் (சின்னது)  நாங்க ஒருத்தருக்கு இரண்டு கப் கேட்டிருந்தோம். ஆகவே நாலு கப் இருபது ரூபாய் தான் என நினைத்தால் 32 ரூ. கொடுக்க வேண்டி வந்தது.  கொடுத்துவிட்டு நாஷ்தா பற்றி விசாரிக்காமல் நடையைக் கட்டினோம்.  ஹோட்டலில் நுழைந்ததுமே விடுதிக்காப்பாளரிடம், நாங்க பனிரண்டு மணிக்குக் காலி பண்ணப் போவதாகவும், ஆட்டோ நாங்களே பார்த்துக்கறோம்னும் சொல்லிட்டு மேலே போய் சாமான்களை எல்லாம் ஒழுங்கு செய்து கட்டி வைத்துவிட்டுப் பத்து மணி வரை பொழுது போக்கிவிட்டு மீண்டும் கீழே வந்தோம்.

நேற்றுச் சென்ற கடைத்தெருவில் போய்க் காலை ஆகாரம் சாப்பிடலாம்னு கிளம்பினோம்.  முதல்நாள் எங்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர் இன்று சவாரியுடன் போய்க் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் நிறுத்தி இரண்டு மணி நேரத்துக்குள்ளாக பரதன் குகையைக் காட்டிவிட்டுக் கொண்டு விடுவதாகவும் நானூறு ரூபாய் கொடுக்குமாறும் மீண்டும் கேட்டார்.  அவர் ஏமாத்துகிறார் என்பது நன்கு புரிந்தது.  கிளம்பும் சமயம் தகராறு வேண்டாம்னு நாங்க பார்க்கலைனு சொல்லிட்டோம்.  காலை ஆகாரம் சாப்பிட கடைத்தெருப்பக்கம் சென்ற ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றோம். எவ்வளவுனு கேட்டுக்காமல் ஒருத்தருக்கு  ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம். ஆட்டோக்காரர் பேசாமல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.  முதல்நாள் ஏமாந்தது நன்கு புரிய வந்தது.

அந்த ஹோட்டலில் தான் முதல்நாள் மதியம் சாப்பாடு சாப்பிட்டிருந்தோம் ஆகவே அங்கேயே சென்று நான் சாதா பரோட்டா இரண்டும், அவர் ஆலு பரோட்டாவும் சாப்பிட்டார்.  இங்கேயும் காலை ஆகாரத்தில் இனிப்புக் கட்டாயம் உண்டு.  மில்க் கேக் கொடுத்தாங்க.  அதைத் தவிர ஒரு சப்ஜி, தயிர், ஊறுகாய்.  சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம்.  பெரிய கப்பில் தேநீர் . பத்து ரூபாய் தான்.  காலை ஆகாரம் ஐம்பது ரூபாய் தான். அந்த ஹோட்டல்காரர் முதல்நாள் நான் சாப்பிடாததையும் மோர் வாங்கிக் குடித்ததையும் நினைவு வைத்துக் கொண்டு பேசினார்.  நாங்க சார்தாம் செல்ல எத்தனை ரூபாய் கொடுக்கணும்னு அப்போதான் (உணர்ச்சியே அப்போத் தான் வந்ததோ?) கேட்டோம்.  சார்தாம் ஹனுமான் தாரா, அநசூயா ஆசிரமம், குப்த கோதாவரி, பரதன் குகை நாலும் செல்ல ஐநூறு ரூபாய் என்றும் ஹனுமான் தாரா உங்களால் போக முடியாது மற்ற மூன்று இடங்களுக்கு நானூறு ரூபாயில் ஏற்பாடு செய்து தருவதாகவும் சொல்ல, பணம் ஏமாந்தது குறித்தும், மீண்டும் ஏமாற்ற நினைத்தது குறித்தும் மனம் அடித்துக் கொண்டது.

அவரிடம் நாங்க போயிட்டு வந்தாச்சுனு சொல்லிட்டு(பின்னே, ஏமாந்தோம்னு சொல்ல முடியுமா) சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினோம்.  ஹோட்டலுக்குப் போய் மாடியில் அறைக்கு வந்தோம்.  மணி அதற்குள்ளாகப் பதினொன்று ஆகி இருக்க, ரங்க்ஸ் கிளம்பிடலாம்.  இங்கேயும் உட்கார்ந்து தான் இருக்கப் போறோம்.  ஸ்டேஷன் போயே உட்காரலாம். என்றார்.  ஆகவே பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மெல்லக் கீழே இறங்கினோம்.  இறங்குகையில் அந்த விடுதிக்காப்பாளர் மாடித் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார்.  நான் மிச்சப் பணமும், தேநீருக்குக் கொடுத்த பணமும் வரணுமேனு ரங்க்ஸிடம் சொல்ல, அவர் மிச்சப் பணத்தை விட்டுடு.  ஆட்டோக்காரன் கிட்டே நூற்றுக் கணக்கில் ஏமாந்தாச்சு.  டீக்குக் கொடுத்ததை மட்டும் கேட்டு வாங்கறேன்னு அதைக் கேட்டு வாங்கினார்.  அப்போவும் நடந்ததுக்கு ஒரு வார்த்தை மன்னிப்போ, வருத்தமோ  காட்டிக்காமல் கிண்டலாகச் சிரித்தபடியே இருந்தார்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து சரிவில் இறங்கி, மீண்டும் மேலேறிச் சாலைக்கு வந்தோம்.  ஆட்டோவுக்குக் காத்திருந்தோம்.  ஒரு ஆட்டோ முழுதும் சவாரியோடு போனது.  எங்க சாமான்களைப் பார்த்ததுமே நிறுத்தவில்லை.  வைக்க இடம் இல்லை.  அடுத்து ஒன்று காலியாக வர, அதை நிறுத்தி, நாங்க ஸ்டேஷன் செல்லணும்னு சொல்லிக் கேட்டோம். நல்லவேளையாக அது ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ஆட்டோ தான்.  அந்த ஆட்டோ ஓட்டி நாங்க மட்டும் தனியாப் போகணும்னா 200 ரூபாய் கொடுக்கணும்னு சொல்லி, "ரிஜர்வ்?" னு கேட்க, நாங்களும் ரிஜர்வ்னு சொல்லி அங்கீகாரம் செய்துவிட்டு வண்டியில் ஏறினோம்.  சாமான்களை ஆட்டோ டிரைவர் வைத்து உதவினார்.  சிறிது தூரத்தில் சில போலீஸ்காரர்கள் ஆட்டோவில் ஏறி டிரைவருக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர்.



மேலும் யாரும் தொந்திரவு செய்யாமல் இருக்கவே ஶ்ரீராமன் அனுப்பி வைச்சிருப்பான்னு பேசிக் கொண்டோம்.  இருவருமே ஸ்டேஷன் பக்கம் ட்யூட்டியில் போறவங்க.  ஆகையால் டிரைவரும் மறுப்புச் சொல்லலை.  நாங்களும் மறுப்புச் சொல்லலை.

இந்த ஆட்டோ டிரைவர் நல்லவராக இருந்ததோடு ஸ்டேஷன் வாசலில் இறக்கிவிட்டு சாமான்களையும் எடுத்துக் கொடுத்து உதவினார்.  ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலுக்குக் காத்திருந்தோம்.

11 comments:

  1. பயணக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    சாயா கேட்டால், குளிக்க வெந்நீர், அதுவும் ஆறின வெந்நீர், அதுவும் அரை பக்கெட், ஒரே சிரிப்பு தான்.

    ReplyDelete
  2. ஏமாறும் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்! கொடுமையான நிகழ்வில் இருந்து மீண்டது மகிழ்ச்சி! தொடருங்கள்!

    ReplyDelete
  3. தேநீருக்காகக் காத்திருந்ததும், ஏமாந்ததும் பாவமாக இருந்தது. எவ்வளவு கஷ்டம்? ரிஜர்வ் என்று கேட்பதும் அதையே திருப்பிச் சொல்ல வேண்டி இருப்பதும் புன்னகைக்க வைத்தது.

    ReplyDelete
  4. நீங்கள் சிரமப்பட்டீர்கள் என்றாலும் நாங்கள் சிரித்தால் தவறாகாது என்று தோன்றுகிறது. இதுவரை படித்ததில் ஒரு அன்புமல்லி கதைக்கான அத்தனை triggersம் இருப்பதாகப் படுகின்றது.

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், நாங்களும் இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறோம் தான்! ;)))

    ReplyDelete
  6. வாங்க சுரேஷ், மனிதம், மனிதநேயம் என்பதெல்லாம் இல்லாத ஒரு நிகழ்வு. ஏன் அப்படிப் பண்ணினார் என்பது இன்று வரை புரியலை. இத்தனைக்கும் அவருக்கு வேறே வேலை இல்லை. வரவங்களைக் கவனிக்கத் தான் இங்கே போட்டுச் சம்பளமே கொடுக்கறாங்க.

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, சாட்சாத் ஶ்ரீராமன் இங்கே என்ன காஃபியும், டீயுமா குடிச்சிருக்கான்? இல்லையே! அதான் போலிருக்கு எங்களுக்கும் கிடைக்கலை! ஆனால் பாருங்க ஒழுங்கா குப்த கோதாவரி குகையிலேயே இருந்து பரதனை எதிர்கொண்டிருக்கக் கூடாதோ! அது 30 கிமீ தள்ளி இன்னொரு குகையிலே போய்ப் பார்த்து, கடைசியில் அங்கே போகவே முடியலை!

    இன்னொரு ட்ரிப் சித்ரகூடம் வைச்சுக்கணும்னு ஐடியா இருக்கு! :)))))

    ReplyDelete
  8. அப்பாதுரை, கட்டாயம் தவறாகாது.

    இதோ நேத்திக்குக் குழுமத்தில் தி.வா. கேட்ட கேள்விக்கு என்னோட பதிலைப் பாருங்க! :))))

    வா.தி. //hum! staircase wisdom!
    முத நாள் ஏமாந்தாச்சுன்னு தெரிஞ்சதுமே வேற இடத்தை பாத்து இருக்கணும்.​//


    ஹிஹிஹி, செய்திருக்கணும் தான். ஆனால் முதல்நாள் மதியம் பனிரண்டு மணிக்கே அறையைக் காலி செய்திருக்கணும். நாங்க அப்போ சுத்தறதிலே இருந்தோம். காலை எட்டு மணிக்குக் கிளம்பி அறைக்கு வரச்சே சாயந்திரமாகிவிட்டதே! மறுநாள் கணக்கு, வாடகையும் கொடுத்தாச்சு, அதுக்கப்புறமா கடைத்தெருப்பக்கம் போய் வேறே அறையைத் தேடணும். எங்களுக்கு இருந்த அலுப்பிலேயும், களைப்பிலேயும் அன்னிக்குக் கீழே இறங்கத் தோணலை. மறுநாள் இப்படிச் செய்திருக்கணும்னு பேசிக் கொண்டோம். எல்லாம் அப்புறமாத் தானே தோணுது! இப்படி ஒரு அனுபவம் இல்லாட்டிக் கிடைச்சிருக்குமா? இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறோம். :)))))

    ReplyDelete
  9. எழுதுங்க அன்புமல்லி எப்படி வரானு பார்க்கலாம். :))))

    ReplyDelete
  10. அண்மையில் நான் எழுதி இருந்த பயண அனுபவக் கட்டுரையின் இறுதியில் எழுதி இருந்ததே என் பின்னூட்டம் It is said that good judgements come from experience but you get experience from bad judgements.

    ReplyDelete
  11. மோசமான அனுபவம்.... சில சமயங்களில் நல்ல பாடமாக அமைந்து விடுகிறது.....

    தொடர்கிறேன்.....

    ReplyDelete