எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 24, 2015

பயணங்கள் முடிவதில்லை! விருத்தாசலம் கொளஞ்சியப்பர்!

ராமேஸ்வரம் யாத்திரை முடிந்து வந்ததும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஏற்கெனவே திட்டமிட்டபடி டிசம்பர் 31(2014) அன்று விருத்தாசலம், ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம், திருவெண்காடு சென்று அன்றிரவு கும்பகோணத்தில் தங்கிக் கொண்டு மறுநாள் எங்கள் பூர்விக ஊரான பரவாக்கரையும், கருவிலியும் பார்த்துக் கொண்டு நாச்சியார் கோயில், திருக்கருகாவூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை ஶ்ரீரங்கம் திரும்புவதாக உத்தேசம். அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலையே வண்டி ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் விருத்தாசலம் வந்து கொளஞ்சியப்பர் கோயிலையும் அடைந்தோம்.


"அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்;
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்." இந்தப் பாடல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முருகன் என்றாலே அழகு. அழகு என்றால் முருகன்.   எட்டுக்குடி, சிக்கல் போன்ற ஊர்களின் முருகன் விக்ரஹங்களின் அழகுக்கு உவமை இல்லை. அப்படி நாம் எப்போதுமே முருகனை அழகனாகவே பார்த்து வருகிறோம் இல்லையா? ஆனால் அந்த முருகன் உருவமும் இல்லாமல் அருவமாகவும் இல்லாமல் அருவுருவாகக் கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் விருத்தாசலத்திற்கு அருகே மணவாளநல்லூர் என்னும் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி அமைந்திருக்கும் கொளஞ்சியப்பர் கோயில். இங்கே குளஞ்சி மரங்கள் சூழ்ந்து இருந்ததால் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்ட முருகனைக் கொளஞ்சியப்பர் என்றே அழைக்கின்றனர்.




திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்திற்கு மேற்கே இது அமைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த கோயிலாகவும் கருதப்படுகிறது. சுந்தரர் திருமுதுகுன்றம் வந்தபோது கோயிலில் சுவாமியும் வயதானவராக இருந்தார். அம்பிகையும் வயதானவளாக இருந்தாள். பழமையான கோயில் என்பதாலும் வயதானவர் என்பதாலும் சுவாமி பழமலைநாதர் என்றே அழைக்கப்பட்டார். வாலிப வயதினரான சுந்தரருக்கு இவர்களைக் குறித்துப் பாடுவதில் சஞ்சலம் தோன்ற பாடல் ஏதும் பாடாமல் வந்து விட்டார். ஆனால் இறைவனின் திருவிளையாடல் என்பது தனி அல்லவா? இறைவனுக்கு சுந்தரர் தன்னைக் குறித்துப் பாட வைக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற தன் மகனை அழைத்து சுந்தரரைப் பற்றிக் கூறுகிறார்.

முருகன் வேடுவ வடிவம் எடுத்து சுந்தரரின் பொன்னையும், பொருளையும் கொள்ளை அடிக்கிறான். மனம் வருந்திய சுந்தரர் இந்தப் பொன்னும், பொருளும் கோயில் திருப்பணீக்காக வைத்திருந்தது; ஆகையால் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்க, முருகனோ திருமுதுகுன்றம் வந்து அங்கே பெற்றுக் கொள் எனச் சொல்லி உடனே மறைகிறார். அப்போது தான் சுந்தரருக்கு இது ஈசனின் திருவிளையாடல் என்பது புரிய வருகிறது. திருமுதுகுன்றம் சென்று விருத்தாம்பிகை என்னும் அம்பிகைக்குப் பதிலாக புதிதாக பாலாம்பிகையைப் பிரதிஷ்டை செய்யச் சொல்லிப் பாடலும் பாடுகிறார். பொன்னும், பொருளும் கிடைக்கிறது. இறைவனிடமும் மன்னிப்புக் கேட்கிறார்.





சுந்தரரை வேடுவனாக வழி மறித்த முருகனோ அந்த இடத்திலேயே சுயம்புவாகக் குடி கொண்டான். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் முருகனை நம்பினோர் கெடுவதில்லை. அவன் அருகேயே அவன் அண்ணனான விநாயகன் துணை இருக்கக் கொளஞ்சியப்பர் என்னும் திருநாமத்தோடு அங்கே கோயில் கொண்டருளினான் முருகன். பொன்னோ, பொருளோ தொலைந்து போனாலும் சரி, குழந்தைப் பிறப்பு என்று போனாலும் சரி, பிறர் வஞ்சித்து விட்டாலும் சரி, நோயால் அவதியுற்றால், மகன், மகள் திருமணம் தடைப்பட்டால், குடும்பப் பிரச்சினைகள், வறுமை, வேலை கிடைக்காமல் தவித்தல் ஆகிய அனைத்துப் பிரார்த்தனைகளும் இங்கே வந்து வேண்டிக் கொண்டு "பிராது' கொடுத்தால் நிறைவேறும்.

அது என்ன பிராது? பார்ப்போம்!








11 comments:

  1. அறியாத கோவில்விருத்தாசலமே போனதில்லை. பதிவுகள் தொடர் பயணத்தின் விளைவா இல்லை இதற்காகவே போனதா.

    ReplyDelete
    Replies
    1. விட்டுப் போனதைச் சேர்த்துவிட்டேன். முகநூலிலும் என் தங்கை சந்தேகம் கேட்டிருந்தாள். ஆகவே பதிவை மீண்டும் புதுப்பித்து விட்டேன். உங்கள் கேள்விக்கு விடை அதிலே இருக்கிறது. என்றாலும் இது தொடர் பயணத்தின் விளைவிலான பதிவே. போன பயணங்கள் முடிவதில்லை பதிவு 15-இல் கூட இதைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன்.

      Delete
    2. நீங்கள் அந்தப் பதிவைப் படிக்கவில்லை என்பதை இப்போது தான் கவனித்தேன். :)

      Delete
  2. முருகன்தான் கொளஞ்சியப்பரா? என் இஷ்ட தெய்வம். என் வாய் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் முருகன்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம். முருகன் தான் கொளஞ்சியப்பர். சுயம்பு வடிவம்

      Delete
  3. மேடம்,
    எனக்கு குலதெய்வம் மயிலம் முருகன். முதல் மொட்டை மயிலத்திலும்,இரண்டாம் மொட்டை சுவாமிமலையிலும், மூன்றாம் மொட்டை கொளஞ்சியப்பர் கோவிலிலும் போடுவது எங்கள் வீட்டு வழக்கம்.

    கொளஞ்சியப்பர் ரொம்ப அறியப்படாதவர். உங்கள் பதிவில் படிக்க பழைய நினைவெல்லாம் வந்துடுத்து. குறிப்பாக அம்மா.. ராத்திரி கொஞ்சம் அழுதாலும் அழுவேனோ என்னவோ.

    வானவில் பதிவைப் பார்க்கலியே நீங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்க மோகன் ஜி, வானவில் பதிவைப் பார்த்துட்டு பதில் சொல்லணும்னு நினைச்சுக் கடைசியிலே அங்கேயே குடி இருக்கும்படி ஆயிடுச்சு! :) பலருக்கும் முருகன் குலதெய்வமாக இருக்கிறான். எனக்குக் காவல் தெய்வம். ஹிஹி, வெளியே போகையில் கந்த சஷ்டி கவசம் தான் துணை.

      Delete
  4. கொளஞ்சியப்பர் கோவில் பற்றிய தகவல் அறிந்ததில்லை அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, எனக்கும் இப்போ நாலு வருஷமா இங்கே வந்தப்புறமாத் தான் தெரியும். அதுக்கு முன்னாடி தெரியாது. :)

      Delete
  5. இதற்குப் பார்வையாளர் எண்ணிக்கை இருந்த அளவுக்குக் கருத்துப் பகிர்வு இல்லை. :) அதே போல் நிறையப் பேர் ஜி+ போட்டிருக்காங்க. !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. கொளஞ்சியப்பர் கோவில் - விருத்தாச்சலம் - நெய்வேலியிலிருந்து வெகு அருகில் இருந்தாலும் ஒரே ஒரு முறை தான் - அதுவும் சிறு வயதில், சென்ற நினைவு. சிறப்பான கோவில் - சில திருவிழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    ReplyDelete