எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 01, 2017

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்!

மறுபடியும்  நான்கு  படங்கள் பார்த்தேன். எல்லாமே 2016 ஆம் வருடத்தில் வெளியிடப் பட்டது. ஒன்று  "பிகு" என்னும் கல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பற்றியது.  தீபிகா படுகோனே "பிகு"வாக நடித்திருக்கிறார். அவர் தந்தையாக அமிதாப் பச்சன். உண்மையிலேயே 70 வயதைக் கடந்த அமிதாப் கதைப்படியும் 70 வயது முதியவராக நடிக்கிறார். 70 வயதுக்குள்ள எரிச்சல், கோபம், எல்லாவற்றையும் மிகச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதையின் முக்கியக் கருவைக் கேட்டால் சிரிப்பீர்கள். படமும் நகைச்சுவைப் படம் என்று தான் பெயர். வயதான அமிதாப் பச்சனுக்கு தினசரி காலைக்கடன் கழிக்க முடியவில்லை. மலச் சிக்கல். கதை முழுவதுமே அதைப் பற்றித் தான் பேச்சு. மற்றபடி இந்தப் படத்திலும் மனதிற்கு நெருடலான காட்சி ஒன்று உண்டு. ஆனாலும் இப்போதையப் பெண்கள் இதைத் தான் முன்னேற்றம் என்று சொல்கிறார்கள், நினைக்கிறார்கள் என்பதால் ஒன்றும் சொல்ல முடியலை.

அடுத்த மூன்று படங்களில் "ஏர்லிஃப்ட்" என்னும் படம், "நீர்ஜா" என்னும் படம், அடுத்து "ருஸ்தும்" என்னும் படம். மூன்றுமே உண்மையான நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.  இவற்றில் எது அதிகம் பிடித்தது என்று சொல்வது கடினம். ஆனால் "பிகு" படம் என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இந்தப் படத்திலும் ஒரு காட்சிகள், வசனங்கள் மனதை நெருடச் செய்தன! :( தற்காலத்து நாகரிக இளம்பெண்கள் இப்படித் தான் இருக்கிறார்களா என்றும் யோசனை வந்தது. ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாய்ச் சொல்லணும். மேலே குறிப்பிட்ட எந்தப் படத்திலும் காதல் காட்சிகள், கதாநாயகனும், கதாநாயகியும் கதைக்குப் பொருந்தாத விதத்தில் வெளிநாட்டில் பாடி ஆடுவது, காமெடி என்னும் பெயரில் கூத்து என்றெல்லாம் இல்லை. தேவையற்ற காட்சிகள் இல்லை. படங்களைத் தொகுத்தவரைப் பாராட்டணும்.

"ஏர் லிஃப்ட்" படம் 1990 ஆம் ஆண்டு குவெய்த்தை இராக் தாக்கிய நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட படம். கிட்டத்தட்ட 2 லட்சம் இந்தியர்கள் அங்கே மாட்டிக் கொண்டு தவிக்க, குவெய்த்தைச் சார்ந்த வணிகராக இருக்கும் ரஞ்சித் கத்யால், உள்ளூர இந்தியாவின் மேல் ஓர் கேலிப்பார்வையும், ஏளனமும் கொண்டவர்.  அவர் காரின் ஓட்டுநராக இருக்கும் நாயரிடம், "உங்கள் இந்தியா" என்றே குறிப்பிட்டுக் கேலி செய்து வருவார்.
airlift review க்கான பட முடிவு

இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அக்ஷய் குமார் அருமையாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரின் அலட்சியமும், பணக்காரத் தனமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையைக் காட்டும் இயக்குநர் பின்னர் தாக்குதலுக்குப் பின்னரும் அவர் தன் குடும்பத்தோடு தப்பித்துச் செல்ல இருந்த சமயம் மனம் மாறி 2 லட்சம் இந்தியர்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதைத் தான் சொல்கிறது இந்தப் படம்.

சொல்லப் போனால் இந்தச் சம்பவம் சிறிதும் கற்பனை அல்ல. முழுக்க முழுக்க உண்மை. குவெயித்தில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை ஜோர்டானின் அம்மான் நகருக்கு வர வைத்து அங்கே அவர்களுக்குத் தாற்காலிகமான பாஸ்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டு ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸும் அவர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர உதவி செய்து அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.
airlift review க்கான பட முடிவு
குவெயித்தில் வணிகராக இருந்த மாதுண்ணி மாத்யூஸ் என்னும் பெரும்பணக்காரரின் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வுகளே படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.  மாதுண்ணியின் பாத்திரமாக ரஞ்சித் என்னும் பெயரில் நடிக்கும் அக்ஷய் குமார் 2 லக்ஷம் இந்தியர்களைக் காப்பாற்றப் போராடுவது தான் கதை!  மெல்ல மெல்ல மனம் மாறும் ரஞ்சித் கத்யால் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஆதரவற்ற இந்தியர்களை மட்டும் காப்பாற்ற நினைத்து ஏற்படுத்தும் அகதிகள் முகாம் மெல்ல மெல்ல குவெயித்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாக்கிறது.

 அவர்களின் உணவுக்கு உதவும் வணிக வளாக நபர்கள், ரஞ்சித்தின் அலுவலக உதவியாளர்கள், தன் சொந்த சுக, போகங்களை மறந்து விட்டு அகதிகள் முகாமிலேயே தங்கி இருந்து கவனிக்கும் ரஞ்சித் கத்யால், அவரிடம் அடிக்கடி அகதிகள் முகாமின் அசௌகரியங்களைக் குறித்துப் புகார் அளிக்கும் மனிதர்கள், அங்கே தன்னந்தனியாக மாட்டிக் கொண்டு சிறு குழந்தையுடன் தவிக்கும் குவெய்த் இளம்பெண், திருமணம் ஆன நான்கைந்து நாட்களிலேயே மனைவியைப் பிரிந்து இங்கே அகதிகள் முகாமில் தன் யஜமானர் ரஞ்சித் கத்யாலுக்காக வேலை செய்யும் இப்ரஹிம் துரானி!  முகாம் ராணுவ வீரர்களால் தாக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் அவர்களால் எடுத்துச்செல்லப்படுகின்றன. எப்படியோ சமாளிக்கின்றனர்.  புகார் கூறுபவராக ஜார்ஜ் குட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் பேல்வாடி என்னும் நடிகர் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இதற்கு நடுவில் குவெயித்திலும், பாக்தாதிலும் தூதரகத்தை அணுகி உதவி கேட்க முயன்ற ரஞ்சித் கத்யால் அங்கேயும் எவ்வித உதவியும் கிடைக்காமல் திரும்ப இங்கே குவெயித்தில் இருக்கும் ராணுவ மேஜர் இந்தியர்கள் குவெய்த்தை விட்டு வெளியேற சதாம் அனுமதித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் எப்படிப்போவது? மறுபடி பாக்தாத் செல்லும் ரஞ்சித் அங்கே வெளி உறவுத் துறை மந்திரி தாரிக் அஜீஸ் என்பவரைச் சந்தித்து இந்தியாவிலிருந்து "திப்பு சுல்தான்" என்னும்  ஓர் கப்பல் உணவுப் பொருட்களுடன் வரப் போவதாகவும் அந்தக் கப்பலில் இந்தியர்கள் திரும்பலாம் என்றும் சொல்ல, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் எந்தக் கப்பலும் அங்கே வரவோ போகவோ முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

குவெயித் இந்திய தூதரகமும், பாக்தாத் இந்திய தூதரகமும் கைவிரிக்க, ரஞ்சித் கத்யால் இந்தியாவின் வெளி உறவுத் துறையின் தொலைபேசி எண்ணை வாங்கி கடும் முயற்சி செய்து அங்கே சஞ்சீவ் கோஹ்லி என்னும் ஓர் அதிகாரியைத் தொடர்பு கொள்ள அவரோ அலட்சியமாகப் பேசுகிறார்.  என்றாலும் விடாமல் அவரைத் தொடர்பு கொள்கிறார் ரஞ்சித் கத்யால். ஆரம்பத்தில் அலட்சியமாக இருக்கும் கோஹ்லி பின்னர் தன் தந்தை தாங்கள் பஞ்சாபின் லாஹோரில் இருந்ததைப் பற்றியும் அந்தப் பூர்விக வீட்டை நினைவு கூர்ந்து வருந்துவதையும் கண்டு மனம் மாறுகிறார். பின்னர் நடப்பவை அனைத்தும் மனதை உத்வேகம் கொள்ள வைக்கும் சம்பவங்கள்.  வெளி உறவுத் துறை மந்திரியிடம் சென்று தான் செய்ய வேண்டியவற்றுக்கான அனுமதியைப் பெற்று வரும் கோஹ்லி பின்னர் விமானம் மூலம் இந்தியர்களைக் கொண்டு வர விமானிகளிடமும் பேசி அவர்கள் மனதை மாற்றுகிறார்.

இங்கேயோ குவெய்த்திலிருந்து ஜோர்டான் வரை செல்ல கிட்டத்தட்ட ஆயிரம் மைலுக்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டும். வழியெங்கும் ராணுவம் இருக்கும். யாரிடமும் பாஸ்போர்ட் இல்லை. ஏனெனில் அனைவரும் சாதாரணத் தொழிலாளர்கள். அவர்களை அங்கே கொண்டு வந்த ஏஜென்டிடமே அவை சிக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தேடிக் கண்டு பிடிப்பது இப்போது இயலாத காரியம். ஆகவே அவர்களுக்கு ஜோர்டானில் இந்திய தூதரகத்தில் தாற்காலிகப் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறார் ரஞ்சித் கத்யால்.

 ஜோர்டான் செல்லும் வழியில் அவர்கள் காப்பாற்றி அழைத்துச் செல்லும் குவெயித் பெண்ணை வெளியேற்றும்படி அகதிகளில் சிலர் சொல்கையில் ரஞ்சித் கத்யால் அந்தப் பெண்ணைத் தன் சொந்தப் பொறுப்பில் தன் காரில் அழைத்துச் செல்வது நெகிழ வைத்தது எனில், எந்தப் பெண்ணை வரக் கூடாது என்றார்களோ அதே பெண்ணுக்கு ஆபத்து நேரிடுகையில் இரண்டு லட்சம் இந்தியர்களும் கூட்டமாகச் சென்று ராணுவ வீரர்களிடமிருந்து அந்தப் பெண்ணையும், ரஞ்சித் கத்யாலின் மனைவியையும் காப்பாற்றி மீட்பது சிலிர்க்க வைக்கும் காட்சி. சிறிதும் செயற்கைத் தனம் இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இவர்கள் பல தடங்கல்களுக்குப் பின்னர் ஜோர்டானின் அம்மான் நகருக்குச் சென்று அங்கே உள்ள தூதரக வாயிலில் பார்த்தால் ஏகக் கூட்டம். பன்னாட்டு மக்களும் அங்கே வந்து காத்திருக்கின்றனர். பல நாட்டுக் கொடிகளும் அங்கே பறக்க இந்தியக் கொடியை மட்டும் காணோம். கவலை கொண்ட மக்கள் மீண்டும் ரஞ்சித்தை வார்த்தைகளால் தாக்க உள்ளே எப்படியோ சென்று விசாரிக்கும் ரஞ்சித்துக்கு நம்பிக்கையான பதில் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகையில் இந்தியாவின் வெளியுறவுத் துறையிலிருந்து தூதரகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வர உடனடியாக இந்திய மக்களுக்குத் தாற்காலிகப் பாஸ்போர்ட் வழங்கும்படியும் இதற்கான விரிவான ஆணை ஃபாக்ஸில் வரும் என்றும் உடனடியாக வேலையைத் துவங்கும்படியும் உத்தரவு வருகிறது.

மெல்ல மெல்ல எழும்புகிறது இந்தியக் கொடி! நம் மனமும்! கதையின் மையக்கருவே இந்த இனம் புரியா உணர்வு நம் அனைத்து இந்தியர்களிடமும் இருப்பதைத் தான் சொல்கிறது. கொடி எழும்பும்போது "தூ பூலே ஜிஸே" என்னும் பாடல் பின்னணியில் ஒலிக்கையில் கண்ணீர் வருகிறது! அது மட்டுமல்ல, மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய தன் மனைவி கிடைக்காமல் முதலில் வர மாட்டேன் என்று சொல்லும் இப்ரஹிம் துரானி பின்னர் இந்தியா திரும்பச் சம்மதிப்பதும் அந்த நிராதரவான குவெய்த் பெண்ணின் பெயர், ஊர் கேட்கும் தூதரக அதிகாரியிடம் அந்தப் பெண்ணைத் தன் மனைவியின் பெயரில் அறிமுகம் செய்து அவளைக் காப்பாற்றுவதும், மனதைத் தொடும் காட்சி.  ஊழல் மலிந்திருக்கிறது என்று சொன்னாலும், தண்ணீர்ப் பிரச்னை, சாலைப் பிரச்னைகள், இன்னும் பல்வேறு பிரச்னைகள் தோன்றினாலும் என்னதான் குறைகள் இருந்தாலும் நம் தாய் நாட்டுக்கு ஈடு இணை இல்லை தான்! ஆயிரம் குறைகள் இருக்கலாம். ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனாலும்

 "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!"

17 comments:

  1. அருமையான விமர்சனம் முழுமையாக சொல்லி விட்டீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் அறிந்தது தானே இந்நிகழ்வுகள். அதனால் சொல்லிட்டேன். :)))) நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. நான்கு படங்கள்... :) பார்க்காமலே இருந்து இப்ப இவ்வளவு படங்கள்.... அக்‌ஷய் படம் பார்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எப்போவுமே யு.எஸ். வந்தால் படங்கள் பார்த்துத் தான் பொழுதைக் கழிக்கிறோம். இம்முறை நான் மட்டும் பார்க்கிறேன். அதுவும் பெண் வீட்டில் இருப்பதால்! அங்கே பையர் வீட்டில் குழந்தை இருப்பதால் பொழுது போவது தெரியாது! :)

      Delete
  3. ​​ஆமாம். உங்க பொண்ணு பெயர் மீனாட்சி தானே? எப்படி கண்டுபிடிச்சேன்னு சொல்லுங்க பார்ப்போம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, சிதம்பர ரகசியமா என்ன? முகநூல் நண்பர்கள் பெரும்பாலோருக்குத் தெரியுமே! :)

      Delete
  4. பிகு என்னால் முழுவதும் பார்க்க முடியவில்லை. அமிதாப்பின் இந்த இன்னிங்ஸ் படங்கள் பல நன்றாக இருந்தன.

    மற்ற படங்கள் நான் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பிகு அப்படி ஒண்ணும் என்னைக் கவரலை! இருந்தாலும் ஓகே ரகம். சகஜமான நடிப்பு! இயல்பாக இருந்தது.

      Delete
  5. நான் கருத்திடாவிட்டாலும் பரவாயில்லைஎன்று சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நீங்க சினிமா பார்ப்பதில்லை என்று சொன்னதால் சொன்னேன். மற்றபடி உங்கள் கருத்தைத் தாராளமாகப் பதியலாம். சினிமா பற்றிய கருத்துத் தான் சொல்ல முடியலை என்பதாக நீங்கள் சொன்னீர்கள். பொதுவான கருத்தைப் பதிக்கலாமே!

      Delete
  6. தங்கள் விமர்சனத்தைப் படிப்பதே படம் பார்த்த அனுபவத்தை தந்துவிட்டதால், ஏர்லிப்ட் படத்தை நான் பார்க்கப்போவதில்லை!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, என்ன இருந்தாலும் படம் பார்க்கும் அனுபவம் இருக்குமா? அதுவும் ஏர்லிஃப்ட் படமும் நீர்ஜா படமும் அருமையோ அருமை!

      Delete
  7. ஏர்லிஃப்ட் படம் இன்னமும் பார்க்கவில்லை (தமிழ் டப்பிங்க் அல்லது ஆங்கில சப் டைட்டில் இருந்தால் பார்ப்பேன்). மற்ற படங்களில் ஆர்வம் இல்லை.

    தாய்நாட்டுக்கு வருவது என்பது, பெண்ணுக்கு பிறந்தவீடு வருவது போன்றது. ஆணுக்கு, தாய் தந்தையர் வீட்டுக்கு வருவது போன்றது. அக்கடான்னு ஒரு ஃபீலிங் வரும்.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்த விஷயம் தான் என்றாலும் ஏர்லிஃப்ட் படம் பார்க்கையில் கடைசிவரை ஆவலுடனே பார்க்கத் தூண்டியது! ஒரு தரம் பார்க்கலாம்.

      Delete
  8. பட விமர்சனம் செம போங்க கீதக்கா..! இப்படிப் புட்டுப் புட்டு வைச்சுட்டீங்களே!!! சுபம் போடற வரை!!ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இவை எல்லாம் உண்மை நிகழ்வுகள் என்பதால் முழுவதும் சொன்னேன்! :) என்றாலும் படம் பார்க்கையில் திகிலாகத் தான் இருக்கிறது!

      Delete
  9. மிகவும் அருமை.

    ReplyDelete