எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 12, 2017

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்! :)

இந்தியா திரும்பப் போகும் நாளுக்காகக் காத்திருக்கோம். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கோம். என்ன ஒரு வருத்தம்னா புதுப் பேத்தி துர்கா நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டாள்.  அவளை விட்டுப் பிரிவதில் தான் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இப்போத் தான் விளையாட்டெல்லாம் ஒவ்வொன்றாக வருகிறது. அம்மம்மா கொழுக்கட்டைக்குக் கையைக் கொழுக்கட்டை போல வைச்சுக்கறா! கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் சின்னக் கையைத் தூக்கித் தட்டிட்டு மேலே கையைத் தூக்கி கோவிந்தா சொல்றா! சங்குச்சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம் சொன்னால் ஜிங்கு ஜிங்குனு நம்ம கையிலேயே குதிக்கிறா! இப்போச் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு பாட்டும், ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம் பாட்டும் பழகிக்கறா! :)

உட்கார, தவழ முயற்சி செய்கிறாள். நாங்க கிளம்பறதுக்குள்ளே தவழ ஆரம்பிச்சா, "ஆனை, ஆனை , அழகர் ஆனை"யும் சொல்லிக் கொடுத்துடலாம்! எங்கே! :( அதுக்குள்ளே கிளம்பிடுவோம் போல! மனசு இங்கேயும், அங்கேயுமா அலை பாய்கிறது! என்றாலும் முக்கியக் கடமைகள் இருப்பதால் இந்தியா திரும்பித் தான் ஆகவேண்டும். விசாவும் அடுத்த பதினைந்து நாட்களில் முடிகிறதே! பதினைந்து நாட்கள் முன்னர் பையர் வீட்டிலேருந்து  கொஞ்ச நாட்கள் பெண் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போ அவளை அங்கே விட்டு விட்டுப் பெண் வீட்டுக்கு வந்ததிலே என் கிட்டேக் கோபம் போலிருக்கு.  நாங்க விட்டுட்டு வந்த முதல் இரண்டு நாட்கள் ரொம்பவே அழுதிருக்கா! :( தேடி இருக்கா! அந்தக் கோபமோ என்னமோ! :( குழந்தை ரொம்ப ஏங்கிப்போய் விட்டதாச் சொன்னாங்க! இன்னும் பிரியப் போகிறோமே என நினைத்தால் மனம் வருந்துகிறது. ஆனால் வேறே வழியே இல்லையே!  ஆனால் அப்பு ஶ்ரீரங்கம் வந்து எங்களைப் பார்த்துக்கறதாச் சொல்றா! ஆனால் ஸ்கூல் மட்டும் இந்தியாவில் வேணாமாம்! :) ஏன் என்றால் படியுங்க மேலே!

அப்புவுக்கு ஸ்கூலில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இங்கெல்லாம் நம்ம ஊர் மாதிரித் தேர்வு முறை இல்லை. அதோடு இங்கே எந்த வட்டாரத்துக்குள்ளே வீடு இருக்கோ அந்த வட்டாரத்தில் உள்ள பள்ளியிலே தான் குழந்தையைச் சேர்க்கணும். வீட்டிலிருந்து பள்ளி ஐந்து மைலுக்குள்ளே தான் இருக்கணும்.
ஒவ்வொரு நகரத்தையும் பல வட்டங்களாகப் பிரித்திருக்கின்றனர். அந்த அந்த வட்டத்துக்குள் உள்ள பள்ளியிலேயே குழந்தைகள் படிக்கணும். மாறாக வேறு வட்டத்துப் பள்ளி நல்ல பெயர் பெற்றது என்று அதில் சேர்க்க நினைத்தால் சிறப்பு அனுமதி வாங்கிக்கணும். அதை ஏற்கெனவே படிக்கும் பள்ளியிலும் இனிமேல் சேரப் போகும் பிரபல பள்ளியிலும் ஒத்துக்கணும். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அதை அங்கீகரித்து ஒப்புதல் தரணும். அதன் பின்னரே அந்தப் பள்ளியில் சேரலாம். அப்போதும் பெற்றோர் வீட்டை அந்தக் குறிப்பிட்ட பள்ளி இருக்கும் வட்டத்துக்கு மாற்றிக்கொள்ளச் சொல்லிச் சொல்லி விடுகிறார்கள்.  எங்க பொண்ணும், பையரும் சென்னை கேந்திரிய வித்யாலயாவில் படிக்கையில் கிட்டத்தட்டப் பதினான்கு மைல் தினமும் ரயிலில் பயணம் செய்தார்கள்! தினம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் வரை திக், திக், திக் தான்! இங்கே அப்படி எல்லாம் முடியாது!


தேர்வு முறைகளும் இங்கே மாதிரி எல்லாம் இல்லை. ஒரு கல்வியாண்டை ஒன்பது வாரங்களாகப் பிரித்து நான்கு முறை தேர்வு நடத்துகின்றனர். இதில் கடைசி வாரம் வருடம் முழுவதும் படித்தவற்றில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு வாரமும் வீட்டுப் பாடம் கொடுக்கையில் பெற்றோருக்கும் அதைக் குறித்துக் கடிதம் அனுப்பப்படுகிறது. இப்போக் கணினி இருப்பதால் எல்லாப் பெற்றோருக்கும் கணினி வழியே மின் மடல் அனுப்பி விடுகின்றனர். ஒரு சில வீட்டுப்பாடங்களை நான்காவது படிக்கும் எங்கள் பேத்தி ஐபாட் மூலமே செய்து அனுப்புகிறாள்.  கல்வியாண்டின் முடிவில் ஆசிரியர்களின் கற்பிக்கும் தகுதி எப்படி இருக்கிறது என்பதற்காகக் குழந்தைகளுக்குச் சில பாடங்களில் தேர்வு வைக்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியரின் கற்பிக்கும் தகுதியைக் கணித்து அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள முடிகிறது என்று சொல்கின்றனர். மேலும் இது ஐக்கிய அமெரிக்கக் குடியரசு முழுவதற்குமான பொதுத்தேர்வாகச் சொல்கின்றனர். இதை எல்லாக் குழந்தைகளும் அவரவர் பள்ளியில் எழுதியே ஆகணும்! இங்கே என்னடான்னா மருத்துவத்திற்கான "நீட்" தேர்வுக்கு எவ்வளவு எதிர்ப்பு! :( பொதுத் தேர்வுகளுக்கே இங்கே எதிர்ப்புக்கள் தெரிவிக்கிறோமே!   ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் படிப்பது எளிமை போல் தோன்றினாலும் கணக்குப் பாடத்தில் ஜியோமிதியும், பின்னங்களும் மூன்றாம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.  ஆனால் ஒரு வகுப்பில் குறைந்த பட்சமாக 20 மாணவ, மாணவிகள் தான் இருக்கின்றனர். அதற்கு மேல் இல்லை. ஆகவே கற்பிக்கவும் வசதியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும்  பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்புகையில் பள்ளிக்கு அருகே இருக்கும் வீடுகளுக்கு நடந்தே செல்லும் குழந்தைகளைப் பள்ளி ஊழியர் ஒருவர் கிட்ட இருந்து அழைத்துச் சென்று தெருமுனை வரை கொண்டு விடுகிறார். பேருந்தில் செல்லும் குழந்தைகளை வகுப்பு ஆசிரியை வந்து பேருந்தில் ஏற்றி விடுகிறார். பேருந்தில் எல்லாக் குழந்தைகளும் சரியாக வந்து ஏறிவிட்டார்களா என்று ஓட்டுநர்/நடத்துநர் சோதித்துக் கொண்டே பின்னர் பேருந்தை எடுக்கிறார்கள். காரில் அழைத்துச் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் பெயர்/குடும்பப்பெயர் கொண்ட ஓர் அட்டையைக் காரில் முன்னால் கொடி மாதிரி வைத்திருக்க வேண்டும். கார் வரிசையாக வரும். பெயரைப் பார்த்து விட்டு ஒரு ஆசிரியர் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைப்பார். இதைத் தவிரவும் பள்ளி இருக்கும் தெருவில் அந்த நேரம் மாமூல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு விடும். பள்ளியிலிருந்தே இதற்கென ஓர் ஆசிரியை சென்று போக்குவரத்தை ஒழுங்கு செய்வார். என்ன அவசரமாக வந்தாலும் அப்போது அந்த வழியே செல்ல முடியாது.

குழந்தைகளின் திறமையைப் பொறுத்து ஒவ்வொரு திறமைக்கும் ஓர் அவார்டு எனப் பரிசு கொடுக்கிறாங்க. அப்போப் பள்ளியிலேயே பள்ளியின் பெயர் போட்டுச் சிறப்புத் தகுதி வாய்ந்த மாணவன்/மாணவி என்னும் ஃப்ளெக்ஸ் போர்ட் மாதிரிக் கொடுத்துடறாங்க. பெற்றோர் அவங்க வீட்டு நுழைவு வாயிலுக்கும், தெருவுக்கும் நடுவே இருக்கும் தோட்டப்பகுதியில் அதைத் தொங்க விட்டு வைக்கிறாங்க. இதன் மூலம் குழந்தைகளுக்கு மனோரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு ஒரு குழந்தையின் பிறந்த நாள் என்றால் அன்று அந்தக் குழந்தையின் தந்தை பள்ளிக்கு அன்று தம் குழந்தையுடன் சென்று அன்று பள்ளி முடிவு வரை பள்ளியிலேயே சிறு சிறு தன்னார்வ வேலைகள் செய்து கொடுக்கும் வேலையை எடுத்துக் கொள்கிறார். இந்த விஷயத்தில் தந்தை வேலை பார்க்கும் கம்பெனியும் ஒத்துழைப்புக் கொடுத்து விடுமுறை அளிக்கிறது. அப்புவின் பிறந்த நாளைக்கு அவள் அப்பா போனார்.  Daddy of Great Student என்று எழுதப்பட்ட டீ ஷர்ட் பள்ளியிலேயே கொடுத்துடறாங்க. அதைப் போட்டுக் கொண்டு போகணும். வாரம் ஒரு நாள் உடையை மாற்றிப் போட்டுக்கச் சொல்லி சொல்றாங்க! அது மாதிரியும் போட்டுக் கொண்டு ஷூ முதற்கொண்டு மாற்றிப் போட்டுக் கொண்டு போகணும்.  இங்கே பப்ளிக் ஸ்கூல் எனப்படும் அரசுப் பள்ளிகளில் சீருடை இல்லை. எது வேணாப் போட்டுக்கலாம். தனியார் பள்ளிகளில் தான் சீருடை!

அமெரிக்காவைப்பார் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறாங்க என்று சுலபமாகச் சொல்கிறோம். அதற்கேற்றாற்போல் வரிகளும் போடுகின்றனர். இங்கே யாரும் அதற்குக் கூக்குரல் கொடுப்பதில்லை. கூடியவரை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றனர். இங்கே இருப்பவர்கள் வீடு வைத்திருந்தால் சொத்து வரியாகக் குறைந்த பட்சமாக ஆறாயிரம் டாலர் வரை சொத்து வரி கட்டியாக வேண்டும். வீட்டை நம் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. ஒரு பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் அல்லது தனித் தனி வீடுகள் கட்டுவதென்றால் முதலில் சாலை போடுகின்றனர். பின்னர் தண்ணீர்க் குழாய்கள், கழிவு நீர்க்குழாய்கள் அமைக்கின்றனர். மின்சார வசதிகளைச் செய்கின்றனர். கடைகள், வணிக வளாகங்கள், போன்றவற்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.  இவை எல்லாம் செய்து முடித்த பின்னரே வீடுகளை விற்கும் வேலை ஆரம்பிக்கும். அது வரை யாரும் விற்பனையை ஆரம்பிக்க முடியாது.

தெருவிலிருந்து வீட்டை உயரமாகக் கட்டுவதற்காக முதலிலேயே வீடு கட்டும் பகுதியில் மண்ணை அணைத்து மிக உயரமாக புல் தரை அமையும்படி ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் என்ன மழை பெய்தாலும் வீட்டுக்குள் தண்ணீர் வராது!  தெருக்கள் கீழேயும், வீடுகள் மேலேயும் காணப்படும். ஆகையால் வீட்டுக்குள் நீர் வந்துவிடுமோ என்று பயமே இல்லாமல் இருக்கலாம்.  வெளியே தான் செங்கற்கள் தெரியும். உள்ளே ஏதோ அட்டை போன்ற ஒன்றை வைத்துப் பூசுகின்றனர். படங்கள், அலங்காரப் பொருட்கள், காலண்டர் மாட்ட சுவரில் ஓட்டை போட வேண்டாம். அதற்கென உள்ள க்ளிப்பில் செருகி மாட்டி விடலாம்.  அதோடு ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் கட்டாயமாய் ஓர் செயற்கை ஏரி அமைக்கின்றனர். அதில் மீன்களை விட்டு நீரைச் சுத்திகரிக்கின்றனர். ஏரிக்கரையோரமாகப் பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை நட்டு அழகு செய்து விடுகின்றனர். குடியிருப்பு வளாகங்களில் குடியிருப்போர் மட்டுமே அந்த அந்தப் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் உலாவலாம். பக்கத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் நம் வட்டாரத்துக்குள்ளாக வந்துவிட முடியாது! மின் இணைப்பு, எரிவாயு இணைப்பு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெரிய பிரம்மாண்டமான கெய்சர், ஏசி எல்லாவற்றுக்கும் இணைப்புக் கொடுக்கின்றனர். ஏசி வீடு முழுவதுக்கும் வரும். குளிர்காலத்தில் அதிலேயே சூடு வரும்படியான அமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர். அதைப் போட்டுக்கொள்ளலாம்.

இதை எல்லாம் பார்க்கிறச்சே இந்தியாவிலும் இம்மாதிரிக் கடுமையான சட்டங்கள் வரணும்னு தான் தோணுது!  வீட்டு அமைப்பும் நம் இஷ்டத்துக்கு எல்லாம் கிடைக்காது.  பெரிய ஹால்/கூடம் ஒன்று கட்டாயமாக இருக்கும். அதிலேயே ஒரு பக்கமாகச் சமையல் செய்ய அடுப்புக்களை நிறுவுவார்கள். சாமான்கள் வைக்கும் பான்ட்ரி ஏற்படுத்துவார்கள். மர வேலைப்பாடுடன் கூடிய அலமாரிகள் கட்டித் தந்துவிடுவார்கள். சமையல் மேடையிலேயே எரிவாயு அல்லது மின்சார அடுப்புக்கு மேலே மைக்ரோவேவ் அவனும், அடுப்புக் கீழே உள்ள பகுதியில் வழக்கமான அவனும் இருக்கும். இந்த மேடை தான் எந்தத் திசையைப் பார்த்து வர வேண்டும் என்பதில் எங்க பையரும், பொண்ணும் கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. பின்னர் பையர் கிழக்கைப் பார்த்துச் சமைக்கிறாப்போலயும், பொண்ணு வடக்கே பார்த்துச் சமைக்கிறாப்போலயும் அமைந்தது. அதையும் அவங்க வீடு கட்டுபவரிடம் கேட்டுக் கொண்டார்கள். எங்களுக்கு இப்படி வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட வேண்டும். அதே போல் குளியலறையிலும் இப்போல்லாம் நம்ம ஊர் மாதிரி வாளி வைத்துக் குளிக்கும் வசதியும், கழிவறையில் ஹோஸ் பைப் போட்டுக் கொள்ளும் வசதியும் செய்து தருகின்றனர்.  வீடு கட்டி வரும்போதே வாஷிங் மெஷின் (இதுக்குத் தனியா ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அநேக வீடுகளில் காரேஜ் பக்கம் இருக்கும். இதன் வழியாக வீட்டினுள் நுழைபவர்களும் உண்டு. பையர் வீட்டில் வாஷிங் அறை தனியாக உள்ளது) துணி தோய்க்க ஒன்றும், தோய்த்தவற்றை உலர்த்த ஒன்றும் பிரம்மாண்டமாக நிறுவி விடுகின்றனர். குளிர்சாதனப் பெட்டி நம்முடைய விருப்பம் போல் வாங்கி வீடு கட்டும்போதே அதற்கும் இடம் பார்த்து வைத்து விட வேண்டும்.

நாங்க முதல் முதல் வந்தப்போ பொண்ணும் சரி, பையரும் சரி குடியிருப்பு வளாகங்களில் அபார்ட்மென்டில் குடியிருந்தப்போக் கொஞ்சம் பழக்கம் ஆவதற்குச் சிரமமாகத் தான் இருந்தது. இப்போப் பழகி விட்டது என்பதோடு குளிக்கத் தனியாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.  நாம இந்தியாவில் வீடு கட்டினால் சாமி அறை அல்லது சாமி அலமாரினு தனியாக் கட்டுவோம். இங்கே அப்படி முடியாது.  எந்த அறையில் அலமாரிகள் கிழக்கு, மேற்காக அமைந்துள்ளதோ அந்த அறையில் சுவாமியை வைக்க வேண்டியது தான். பையர் வீட்டில் சமையலறை மேடைக்கு மேலேயே ஓர் அலமாரியில் வைச்சிருக்கோம். பொண்ணு வீட்டில் கீழே உள்ள ஓர் அறையை சாமி அலமாரியாக மாத்தி இருக்காங்க!

மொத்தத்தில் அமெரிக்க வாழ்க்கை இளைஞர்களுக்குப் பிடிக்கும். அவங்க எதிர்பார்க்கும் சௌகரியங்கள், வசதிகள் எல்லாமும் கிடைக்கின்றன அல்லவா! இந்தியத் தயாரிப்புக்கள் அனைத்துமே இங்கே கிடைக்கின்றன. என்றாலும் இந்திய ஓட்டல்களில் தோசை, இட்லி, ஊத்தப்பம் சாப்பிடுவதைப் போன்ற தண்டனை வேறே எதுவும் கிடையாது! சாம்பார் என்னும் பெயரில் தக்காளிச் சாறில் கொஞ்சம் போல் புளியைக் கரைத்து ஊற்றி, சோம்பு, தேங்காய் அரைத்து விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துக் கொத்துமல்லி தூவிக் கொடுத்து விடுகிறார்கள். ஜாஸ்தி கொதிச்சிருக்காதுனு நினைக்கிறேன். பொடி வாசனை மேலிட்டுத் தெரியும் அதையும் நல்லா இருக்குனு சாப்பிடறாங்க. மிளகாய்த் தூள் காரம் நாக்கில் பட முடியலை! பருப்புப் போட்ட சாம்பார் என்ற பெயரே இங்கே இல்லை. சிவப்பு நிறத்தில் வெங்காயம், தக்காளி போட்டுக் கொத்துமல்லி சேர்த்துச் சுட வைத்தால் சாம்பார்!  இங்கே வீட்டில் வாங்கி வைச்சிருக்கும் மிளகாய்த் தூளைச் சமையலில் கால் ஸ்பூன் சேர்த்தாலே காரம் உச்சந்தலைக்கு ஏறும். அதிலே சாம்பார் எப்படி இருக்கோ தெரியலை. அதை  விடக் கொடுமை தோசை தான்! ரப்பர் மாதிரி இழுக்கலாம்! அதையும் நல்லா இருக்குனு சாப்பிடறாங்க! ஆனால் இதுக்கும் ரசிகர்கள் இருக்காங்களே!


சப்பாத்தி, ஃபுல்கா, பரோட்டா, பூரி கொஞ்சம் பரவாயில்லை ரகம்! ஆனால் இந்த "நான்" இருக்கே அதை மட்டும் வாங்கினா உங்களுக்கு 32 பல் பத்தாது! எப்போவோ சாப்பிடும் நமக்கே இப்படின்னா தினம் சாப்பிடறவங்க பாடு என்ன ஆறது! ஆனாலும் இதையும் நல்லா இருக்குனு சாப்பிடறவங்க இருக்காங்க தான்!  மொத்தத்தில் அமெரிக்க வாழ்க்கையை ரசிக்க எங்களுக்குத் தெரியவில்லை. நாங்க அநேகமா வீட்டுலே செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி தான்! வீட்டுச்சமையலை  ரசிக்கத் தெரிந்தவங்களுக்குப் பிடிக்கும்! நாமெல்லாம் ஓட்டல் ரசிகர்கள் இல்லை.  நல்லவேளையா பொண்ணு வீட்டிலும் சரி, பையர் வீட்டிலும் சரி, தினசரி சமையல் உண்டு. ஏதேனும் மிஞ்சினால் கூட அவங்க வரை வைச்சுப்பாங்க. நமக்கு வராது! :)))) இந்திய ஐஸ்க்ரீமிலிருந்து கிடைக்குது. க்வாலிடி, அமுல் இரண்டும் அதிகம் வருது! இன்னும் சொல்லப் போனால் சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் "பதஞ்சலி" பொருட்கள், மருந்துகள் கூட இங்கே கிடைக்க ஆரம்பிச்சாச்சு! ஜோஸ் அலுக்காஸ்/ஜாய் அலூக்காஸ் யாரோ ஒருத்தரோட நகைக்கடை கூட இங்கே இருக்குனா பாருங்க! சரவணபவன் இங்கே பையர் இருக்கும்பகுதியிலும் இன்னொரு இடத்திலும் இருக்கு. விலை ரொம்ப அதிகம் என்பதாலும் வயிறு நிறையாது என்பதாலும் போவதில்லை என்று பையர் சொன்னார்.

ஆக மொத்தம் அமெரிக்க வாழ்க்கை என்பது எங்களைப் பொறுத்தவரை இங்கே அமெரிக்காவில் ஞாயிறு காலை எனில் இந்தியாவில் ஞாயிறு மாலை/இரவு! இந்தியாவில் திங்கள் காலை எனில் அமெரிக்காவில் ஞாயிறு மாலை/இரவு! அவ்வளவே!  

31 comments:

  1. சமையல் கலை வல்லுநரான தாங்கள் அத்தனை எளிதாக ஹோட்டல் ஐடங்களுக்கு
    நற்சான்றிதழ் தந்து விடுவீர்களா !

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அப்படி ஒண்ணும் எல்லாம் தெரிஞ்ச மேதாவி இல்லை! :) அவங்க அவங்களுக்கு அவங்க வீட்டுச் சமையல் தானே பிடிக்கும்! அதே தான் இங்கேயும்! :))))

      Delete
  2. அருமையான ஒப்பீடு

    ReplyDelete
  3. கீதா,அப்புவுக்கும் குட்டிப் பேத்திக்கும் வாழ்ததுகள். அப்படியே என் உணர்ச்சிகள. பெண் வீட்டிலும் வெளியே சாப்பிடுவதில்லை. எல்லாம் வீட்டில் செய்வதுதான் பேரன் இரண்டு மணி நேரப் பயணத்தில் உள்ள யுனிவர்சிட்டிக்குப் போறான்.வீடு வெறிச்னு ஆகிடும். அருமையாகப் பதிந்து இருக்கிறீர்கள். குழந்தை மேலும் வளரந்து ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீண்ட நாட்கள் பின்னர் வந்திருக்கீங்க! எங்க பெரிய பேத்தியும் இங்கேருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் உள்ள கல்லூரியில் தான் படிக்கிறாள். இப்போ இந்த வருஷப் படிப்பு முடிஞ்சு லீவுக்கு வந்திருக்கா! திங்கட்கிழமையிலிருந்து வேலைக்குப் போகப் போறா! அப்புவும் நன்றாகப் படிக்கிறாள். துர்கா நன்றாக விளையாடுகிறாள்.

      Delete
  4. இந்த நிலையில் குழந்தையைப் பிரிந்து வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். தாத்தா கிட்டே பேத்தி ஒட்டவில்லையா! அவர் எப்படி பீல் பண்ணுகிறார்?

    அமெரிக்க நடைமுறைகள் பாராட்டும்படிதான் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தாத்தா உருத்திராட்ச மாலை வைத்துக் கொண்டு ஜபம் செய்யலைனா அவள் அவரைப்பார்த்து எப்படியோ தன் பாஷையில் கேட்கிறாள். அவரும் அதை எடுத்து வந்தால் அசையாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருப்பா! அப்போ அவ அம்மா கூப்பிட்டால் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டா! அவருக்கும் கஷ்டமாத் தான் இருக்கு! ஆனால் எழுதுவது நான் தானே! அதான் என்னை முன்னிலைப் படுத்தி விட்டேன், வழக்கம்போல்! :)))

      Delete
  5. அருமை! ரசித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, நன்றிப்பா.

      Delete
  6. அடேங்கப்பா... எவ்வளவு விசயங்கள் பிரயிப்பாக இருக்கிறது

    எந்த பாட்டிக்குத்தான் பேரன், பேத்திகளை பிரிய மனது வரும் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! ஆமாம், நாம் பெற்ற குழந்தைகளை விடப் பேரன், பேத்திகள் அருமையாகத் தோன்றுகின்றனர். :)))

      Delete
  7. நல்ல பகிர்வு.

    நம் நாட்டிற்கும் அங்கேயும் உள்ள வித்தியாசங்கள் எத்தனை! சில விஷயங்கள் இங்கேயும் சாத்தியம் என்றாலும் செய்வதில் நிறைய தடைகள் உண்டு!

    இந்தியா எப்போது திரும்புகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! எப்போத் திரும்புவேன்னு சொல்ல மாட்டேனே! சஸ்பென்ஸ்! நீங்க அங்கே இருப்பீங்களானு தெரியலை! :)))))

      Delete
  8. எனது கருத்துரை என்னாச்சு ?
    நான் வரும்பொழுது 3 இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அது ஒண்ணும் இல்லை கில்லர்ஜி! உங்க கருத்துரை வந்தப்போ ராத்திரி உணவு தயாரிக்கப்போயிட்டேன். முடிச்சுட்டு வர ஒன்பது மணி ஆச்சு. அப்புறமா கணினியைத் திறக்கலை. இப்போக் காலம்பரத் தான் பார்த்தேன். :)))

      Delete
  9. அமெரிக்க வாழ்க்கையை நல்ல விவரிச்சிருக்கீங்க. வெளில செங்கல், வீட்டு உள்ள மரச்சட்டங்கள் (குளிருக்காக), வாஷிங்மெஷின் என்று அமெரிக்க வீட்டை நல்லா கண்முன் கொண்டுவந்திருக்கீங்க.

    வாரம் ஒருநாள் உடை மாற்றிப் போட்டுக்கச் சொல்றாங்க என்பது மட்டும் புரியவில்லை.

    பிரிவது எப்போதும் மீண்டும் சேர்வதற்குத்தானே.

    ஐயோ... இந்தத் தடவையும் சினிமா விமர்சனமா என்று பயந்துகொண்டுதான் வந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாரம் ஒரு நாள் உடையைத் திருப்பிப் போட்டுக்கணும். தலைகீழாக! அது என்னமோ இங்கே இப்படி ஒரு வழக்கம். சில சமயம் முகமூடி மாதிரி மிருகங்களின் முகத்தை அணிந்தும் வரச் சொல்லுவாங்க. எங்க அப்பு முயல்குட்டி வேஷத்தில் போவாள்.

      Delete
    2. ஹாஹாஹா, கடைசி வரியை இப்போத் தான் பார்த்தேன். இன்னும் ஒன்றிரண்டு படங்கள் பத்தி எழுதலை நான். 1,2 கா4 என்னும் படம் அதிலே ஒண்ணு! செம அறுவை! :))))

      Delete
  10. அருமையான பகிர்வு.
    குழந்தை துர்காவை விட்டு வருவது கஷ்டம் தான்.
    பையன் அழைத்துக் கொண்டே இருக்கிறான் , நாங்கள் போதும் என்று நினைக்கிறோம்.
    நீங்கள் சொல்வது போல் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் குழந்தைகளுக்காகதான் அங்கு இருக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், துர்கா பிறக்கலைனா நாங்க இப்போ வந்திருப்போமா சந்தேகமே! 2011 ஆம் வருடம் வந்துட்டு, 2012 இல் திரும்பிய பின்னர் ஐந்து வருஷம் அமெரிக்காவையே நினைச்சுப் பார்க்கலை! குழந்தைகள் இல்லைனா இங்கே ஒண்ணும் ரசிக்கவும் முடியலை! :))))

      Delete
  11. எவ்ளோ பெரிய மாத்தர!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்?????? புரியலையே!!!!!!!!!!!!!!!!! இதிலே மாத்திரை பத்தி எதுவும் எழுதலையே!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  12. பேரனோ பேத்தியோ சின்ன வயதில் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள் வளர்ந்தபின் அவர்கள் உலகே வேறு பார்வையே வேறு இது என் அனுபவக் கருத்து

    ReplyDelete
    Replies
    1. ஐயா, கணவன், மனைவிக்குள்ளேயே ஒத்த கருத்து இருப்பது கடினம். பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலும் அப்படித் தான். அப்படி இருக்கையில் பேரன் பேத்தியைக் குறித்து எதிர்பார்க்கவே முடியாது! என்றாலும் அவர்கள் பிரியம், பாசம் குறையாது.

      Delete
  13. அமெரிக்கா போய் 5 மாசம் ஆச்சு. ஆனால் ஒரு அமெரிக்கா போட்டோ கூட போடலை. அட் லீஸ்ட் அமெரிக்காவில் செய்த ஊறுகாய் வகைகள் மற்றும் பொடி வகைகளையாவது போட்டோ பிடித்து போடுங்கள்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. படம் போட்டிருந்தேனே ஜேகே அண்ணா! போனதும் நடந்த குடியரசு தினக் கொண்டாட்டங்கள் குறித்தும் பின்னர் எங்க பையர் வீட்டுக்கருகே இருக்கும் ஏரியின் படமும் போட்டிருந்தேன். இம்முறை வெளியே எங்கும் போகாததால் வேறே படங்கள் போடவில்லை.

      Delete
  14. அமெரிக்க வாழ்க்கை பிரமிப்புகளைத்தான் தருகிறது குறிப்பாகப் பள்ளிகள்!!

    கீதா: ஆம் அக்கா அமெரிக்க வாழ்க்கையை நாங்களும் ரசித்தோம். ஜஸ்ட் 9மாதங்கள் மகன் அப்போது அங்கு 7 ஆம் வகுப்பு படித்தான் பப்ளிக் பள்ளிதான். ஆனால் மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் சொல்லியிருப்பது போல் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே போன்றுதான் என்றாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சில வேறு பாடுகள் உண்டுதான் அந்தந்த மாநிலத்தின் சட்டப்படி. வெதருக்கு ஏற்றபடி....என்று...மகனுக்கு இருந்த கற்றல் குறைபாடு அங்கு சொகரியமாக இருந்தது அப்புறம் கணவர் வேலை பார்த்த கம்பெனி கவுந்ததால் மீண்டும் இந்தியய் வருகை இதெல்லாம் அப்பொத் பின்லேடனின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது அங்கிருந்ததால் ..நானும் அந்த ஊர் வாழ்க்கையை ரசித்தேன் தான் ஏனென்றால் நான் தான் எங்கள் வீட்டு சாரதி. அந்த ஊர் லைசன்ஸ் டெஸ்ட் எல்லாம் அட்டென்ட் செய்து பெற்றென். அங்குதான் ப்ராஜெக்ட் பல வருடங்களுக்கு என்றுதான் போனது ஆனால் இரட்டைக் கோபுர அட்டாகில் மார்கெட் சரிந்து கணவர் வேலை செய்த கம்பெனி படுத்தது. பல இன்னல்களுக்கிடையில் கவிழ்ந்தடித்து வந்தோம். எனக்கு அங்கு நேரம் சரியாக இருக்கும். பல விஷயங்கள் கற்றும் கொண்டேன்.

    அங்கு ஹோட்டலில் இந்திய உணவு நன்றாக இருக்கவே இருக்காது. விலையும் அதிகம் போல் தோன்றியது. நாங்கள் வீட்டில்தான் வெளியில் சாப்பிட்டது ஒரே ஒரு முறைதான். அங்கு வெளியில் சாப்பிடுவதென்றால் சைவ உணவுகள் இட்டாலியன், மெக்சிக்கன் நன்றாக இருக்கும் ஒரே ஒரு முறை நண்பர் ஒருவர் கொடுத்த விருந்தில் கலந்து கொணட போது சாப்பிட்டது.

    பள்ளியும் சரி இப்போது மகன் அங்கு இன்டெர்ன்ஷிப் செய்யும் கல்லூரியும் சரி நன்றாக இருக்கிறது.

    பேத்தி ஒட்டிக் கொண்டுவிட்டாள் கஷ்டமாகத்தான் இருக்கும், குழந்தையைப் பிரிவது என்பது...

    ReplyDelete
    Replies
    1. இரட்டை கோபுரத் தாக்குதல் சமயம் எங்க பொண்ணு பாஸ்டனில் இருந்தாள். ரொம்பக் கவலையாக இருந்தது. பையர் அப்போத் தான் போயிருந்தார். இரண்டு மாதம் ஆகி இருந்தது. இப்போ அவங்களுக்கு அங்கே பழகி விட்டது. மற்றபடி படிப்பு அங்கே படிப்பது நன்றாகத் தான் இருக்கும் போல் தெரிகிறது.

      Delete
  15. உடை மாற்றிப் போடுதல் எல்லாம் என் மகனுக்கு இருக்கவில்லையே அப்போது. அவன் படித்தது பப்ளிக் பள்ளி. ஃபீஸ் எதுவும் இல்லை. 36 டாலர்தான் வாங்கினார்கள். புத்தகங்கள் எல்லாம் தடி தடியாக இருக்கும்..ஆராய்ச்சிப் புத்தகங்கள் போல ஆனால் அருமையான பேப்பர் படங்கள் தகவல்கள் என்று நாம் ரெஃபர் செய்து படிக்க நன்றாக இருக்கும். பள்ளியிலேயே கொடுத்துவிட்டார்கலள் ஆனால் நாம் அதனை மிகவும் பத்திரமாகக் கொடுத்துவிட வேண்டும். எந்தவித டேமேஜும் இருக்கக் கூடாது. பள்ளி அருகில்தான் வீடு இருக்க வேண்டும். மகன் நடந்து சென்று வந்தான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க பெரிய பேத்தி படித்ததும் பப்ளிக் பள்ளி. இப்போச் சின்னவள் அப்புவும் பப்ளிக் பள்ளி தான்! இங்கே உடையைத் தலைகீழாகப் போட்டுக் கொள்ளச் சொல்கின்றனர். வகுப்பு ஆசிரியையும் அப்படித் தான் உடை மாற்றிக் கொண்டு வருகிறார். இடக்கால் சாக்ஸ் வலக்காலிலும், வலக்கால் சாக்ஸ் இடக்காலிலும் மாற்றிப் போட்டுக் கொள்கின்றனர்.

      Delete