எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 12, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 4

ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான்.

எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ,
சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!” என்று கூறுகிறது.

மஹிஷாசுரனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் அவர்களுக்குத் தேவையான சமயம் தான் திரும்பவும் தோன்றுவதாய்க் கூறி மறைகின்றாள். இனி ஸும்ப, நிஸும்பர்களின் வதத்தைப் பார்ப்போம். எல்லா அசுரர்களையும் போலவே ஸும்பன், நிஸும்பன் என்ற இரு சகோதரர்களும் தேவேந்திர பதவியைப் பறித்துக்கொண்டு மூவுலகையும் தங்களுக்குக் கீழே கொண்டு வந்தனர். ஆபத்தில் தன்னை நினைக்குமாறு கூறிச் சென்ற தேவியின் வாக்கு நினைவில் வர, தேவர்கள் இமயத்தை அடைந்து தேவியைத் துதித்தனர். பல்வேறு நாமங்களால் தேவியைத் துதித்துப் போற்றி வழிபட்டனர். தங்கள் கஷ்டங்களைக் களைய வந்திருக்கும் துர்காதேவி எனவும், ஜகத்தின் ஆதாரமும், இயக்கமும் அனைத்துமாக உள்ள தேவிக்கு நம்ஸ்காரங்கள் செய்தும் வழிபட்டனர். அனைத்து உயிர்களிலும் விஷ்ணு மாயை உருவத்தில் இருப்பவளும் அவளே எனக் கூறி வழிபட்டனர்.

இந்த வழிபாட்டு ஸ்லோகங்கள் அனைத்தும் தொகுக்கப் பட்டு 2008-ம் வருஷத்திய நவராத்திரிப் பதிவுகளில் காணலாம்.
இங்கே

“யாதேவி ஸர்வ பூதேஷூ விஷ்ணுமாயேதி சப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

என்று ஆரம்பிக்கும். தேவர்கள் இங்கனம் தேவியைத் துதித்து வருகையில் பர்வத ராஜனின் மகளான பார்வதி அங்கு வந்து தேவர்களைப் பார்த்து, “என்ன?” என்று வினவ, அவளின் உடலில் இருந்து அப்போது மங்கள சொரூபியாக ஒரு பெண் தோன்றினாள். அம்பாளின் சரீர கோசத்திலிருந்து தோன்றிய அவளைக் கெளசிகீ என்பார்கள். சிவந்த அவள் வெளிவந்ததும் பார்வதியான அம்பாள் கறுப்பு நிறமடைந்து காலி(ளி)கை யானாள்.

கெளசிகீயின் அழகையும் நிறத்தையும் பார்த்து மோகித்தனர் சண்ட, முண்டர்கள் என்னும் அசுரத் தளபதிகள். இவர்கள் சும்ப, நிசும்பனின் படைத்தலைவர்கள். சும்ப, நிசும்பர்களைக் கண்டு கெளசிகீயின் அழகை வர்ணிக்கின்றனர். அவளைப் போன்ற உத்தமமான வடிவை எங்கும் கண்டதில்லை என்றும், அவளை அடையவேண்டியவர்கள் சும்ப, நிசும்பர்கள் தானே தவிர வேறு எவரும் இருக்கமுடியாது எனவும் சொன்னார்கள். அவளுடைய சிவந்த நிறம் உதய சூரியனின் கிரணங்களின் நிறத்தைத் தோற்கடிக்கக் கூடியதாகவும், எட்டுத் திசைகளையும் பிரகாசப் படுத்துவதாயும் இருப்பதாயும், கூறிவிட்டு, அவளுக்கு ஈடு, இணையாக இன்னொரு பெண் மூவுலகிலும் இல்லை என்கின்றனர்.

விலை மதிக்க முடியாத பல சொத்துக்களை சும்ப, நிசும்பர்கள் பெற்றிருப்பதாயும், அவை அனைத்தும் தேவாதி தேவர்களிடமிருந்தும், பிரம்மா, சமுத்திரராஜன், மற்றும் திக்கஜங்கள் போன்றவர்களிடமிருந்த விலை மதிக்க முடியாத பொருட்களும் சும்ப நிசும்பர்கள் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு உத்தமமான ஸ்த்ரீ ரத்னம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்றும் கூறினார்கள். சும்பன் இதைக் கேட்டுவிட்டு, தன் சபையில் இருந்த அசுரர்களில் சிறந்தவன் ஆன சுக்ரீவன் என்பவனைத் தூது அனுப்புகிறான். (ராமாயண சுக்ரீவனோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்).

சுக்ரீவன் தேவியிடம் வந்து தன் இனிமையான சொற்களால் அவள் மனதை மாற்ற முயல்கின்றான். மூவுலகையும் ஆளும் ஈஸ்வரன் சும்பன் ஒருவனே என்றும் தேவர்கள் அனைவரையும் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்திருக்கும் சும்பனைத் தவிர, மற்றவர் யார் எது கூறினாலும் கேட்கவேண்டாம் எனவும் தேவியிடம் கூறுகிறான். இவ்வுலகின் தலை சிறந்த ரத்தினங்கள் அனைத்தும் தன் வசம் வைத்திருக்கும் சும்பனிடமே இந்த ஸ்த்ரீரத்னம் இருக்கவேண்டிய இடம் என்றும் சுட்டிக் காட்டுகிறான். சும்பனைப் பிடிக்கவில்லை எனில் அவன் தம்பி நிசும்பனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்கின்றான். இதை ஆலோசித்துக் கொண்டு சும்பனுக்கோ அல்லது நிசும்பனுக்கோ பத்தினியாக வந்து அடையுமாறு தேவிடம் சும்பன் தெரிவித்ததாய் சுக்ரீவன் கூறுகிறான்.

தேவி தன் முகத்தில் குமிண்சிரிப்புத் தெரிய, கூறிய பதில் என்னவெனில்:”உண்மைதான், சும்பனும் நிசும்பனும் பராக்கிரமசாலிகள் தான். ஆனால் நான் யாருக்குப் பத்தினியாகவேண்டும் என்பதற்கு ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. அந்தப் பிரதிக்ஞை என்னவெனில் என்னைப் போரில் வெல்லவேண்டும். போரில் என்னை வெல்பவர்களே எனக்குக் கணவன் என முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் சும்பனையோ, நிசும்பனையோ என்னோடு வந்து போர் புரியச் சொல். என்னை ஜெயித்துவிட்டுப் பின்னர் அடையட்டும். “ என்கிறாள்.

தேவரெல்லாருமாய் ஸ்தோத்தரிக்கத்
தேவியும் பிரத்யக்ஷமாக வந்து
அஞ்சாதேயுங்கள் நீங்களென்று
அபயஹஸ்தங் கொடுத்தாள் தேவருக்கு.
ஹிமயபர்வதந்தன்னில் வந்து தேவி
கன்னிகாரூபமெடுத்துக்கொண்டு
கோகிலம் போலும் குரலுடையாள்
கொம்புத்தேன் போலும் மொழியுடையாள்
ஹம்ஸம்போலும் நடையுடையாள்
அபயங்கொடுக்கும் கரமுடையாள்
மன்மதன் கைக்கொண்ட விற்போலுமுள்ள
வளைந்த புருவச் சிலையழகும் 
முத்துக்கோத்தாற்போல் பல்லொளியும்
பவழம் போன்ற அதரங்களும்
பட்டமுஞ்சுட்டியும் நெற்றிதன்னில் மின்ன
பதக்கம் சரப்பளி மார்பிலசைய,
தண்டைசிலம்பு கலகலவென்னக் காலில்
சிலம்பு கொஞ்சிச் சலுஞ்சலென்க
சொர்ணமயமான ஊஞ்சலில் இருந்து
கோடி சூரியர் உதித்தது போல்
தங்கத்தினாலான சங்கிலியைத் தொட்டு
தானே பாடிக்கொண்டு ஆடலுற்றாள்

சுக்கிரீவன் கேட்டு ஸந்தோஷமாய்
வெகு சீக்கிரமாகவே ஓடிவந்தான்
தேவியருகினில் கிட்ட வந்துமெள்ளச்
சேதியை நன்றாய் எடுத்துரைப்பான்.
சும்பநிசும்பனென்று இரண்டு பேர்
மூன்றுலகங்கட்டி யாண்டிருக்கார்
உமக்கு மெத்த அழகிஅருந்தும் நல்ல
போகபாக்கியம் புஜியாமல்
இந்த அதிரூப செளந்தரியத்துடன்
தனித்திருக்கின்ற காரியமேன்?
எங்கள் ராஜாவிற்கு ஏர்வையம்மா நீர்
இந்த க்ஷணத்தில் வாருமென்றான்
வாருமென்று அழைக்கவுமேயவன்
மஹேஸ்வரியுமேது சொல்வாள்
சபதமொன்றல்லவோ செய்திருக்கேன்
சத்தியமாகவே சொல்லுகிறேன்
சண்டையிட்டு என்னை ஜெயித்தவர்கள்
கொண்டு போகலாமென்று சொல்லி,
உங்கள் ராஜாவிற்குச் சொல்லுங்களென்று
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாள்.

இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச்சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.

துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை
துரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம்
ஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர்
தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே!
என்கின்றார் தாயுமானவ ஸ்வாமிகள்.

 இதையே அபிராமி பட்டரும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே!

என்றும்,

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே!

இதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. இனி சும்ப, நிசும்பர்கள் என்ன ஆனார்கள் எனப் பார்க்கலாமா??

சுக்ரீவன் கூறியதைக் கேட்ட சும்பன் முதலில் தூம்ரலோசனன் என்பவனை அனுப்புகிறான். அம்பிகையைக் கேசத்தைப் பிடித்து இழுத்துவரப் பணிக்கப்பட்ட தூம்ரலோசனன் அம்பிகையை நோக்கிப் பாய்ந்தான். தன் ஹூங்காரம் ஒன்றாலேயே அம்பிகை அவனை அழித்தாள். அம்பிகையின் வாகனம் ஆன சிங்கமும் கோபத்துடன் அசுரச் சேனையின் மீது பாய்ந்து அவர்களை அழித்தது. திகைத்துப் போன சும்ப, நிசும்பர்கள் இப்போது சண்ட, முண்டர்களை அனுப்புகிறான். சண்ட, முண்டர்கள் பலத்த ஆயத்தங்களோடு கூடிய சதுரங்க சேனைகளுடன் பரிபூர்ண ஆயுதபாணிகளாய்த் தேவியைக் கொல்லச் செல்கின்றனர். அம்பிகை தன் கோபத்தில் இருந்து காளியைத் தோற்றுவித்தாள். நாக்கைச் சுழற்றிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் பயங்கர ஸ்வரூபத்துடன் தோன்றிய காலியானவள், சற்றும் தாமதிக்காமல் அசுரப் படைக்குள் புகுந்து அவர்களை அழிக்க ஆரம்பித்தாள். கோபம் கொண்ட சண்டன் காலியை நோக்கி ஓடி அம்புகளால் அவளை மறைத்தான். காலியின் சிரிப்பால் அவை சரமழையாக உதிர்ந்தன. பின்னர் காலி தேவி , சண்டனை அழித்துப் பின் முண்டனையும் அழிக்கிறாள். கெளசிகீ அவளை நோக்கி சண்ட, முண்டர்களைக் கொன்ற அவளைச் சாமுண்டா என அழைக்கப்படுவாள் என்றாள். இதையேலலிதா சஹஸ்ரநாமம், இந்த ஸ்வரூபமே லலிதா சஹஸ்ரநாமத்தில், “மஹேஸ்வரி, மஹாகாலி, மஹாக்ராசா, மஹாசநா” அபர்ணா, சண்டிகா, சண்ட, முண்டாசுர நிஷூதினி!” என்று கூறும்.

தூம்ரலோசனன் பட்டுப் போனானென்று
தூதர்கள் ஓடிச் சொன்னாருடனே
மந்திரியும் பட்டுப்போனான் என்றவுடன்
மண்டியெரிந்து கண்கள் சிவந்து,
சண்டமுண்டரைக்கிட்டழைத்து நீங்கள்
ஸம்ஹரித்திங்கே வாருமென்றான்
சண்டமுண்டரும் ஓடிவந்து அந்தச் 
சங்கரிதேவியை வந்தெதிர்த்தார்.
கண்டுதேவிதன் கோபத்தினாலே
காளிதேவியை உண்டாக்கினாள்(அவள்)
சண்டமுண்டர் தலையை வெட்டிச்சிவ
சங்கரிதேவிமுன் வைத்து நின்றாள்.
சங்கரியம்மனும் ஸந்தோஷமாயப்போ
சாமுண்டி என்ற பேர்தான் கொடுத்தாள்
தேவர்கள் எல்லாருங்கூடிக்கொண்டு மஹா
தேவிக்குப் புஷ்பமலர் சொரிந்தார்.”

நவராத்திரி நான்காம் நாளுக்கான தேவி கூஷ்மாண்டா எனப்படுவாள். உலகைப் படைத்தவள் என்னும் பொருளில் ஆதி சக்தி துர்கா தேவியை இந்தப் பெயரில் அழைத்து இன்று வழிபடுகின்றனர். சிலர் வாராஹியாகவும் வழிபடுவதுண்டு.



படங்களுக்கு நன்றி கூகிளார்

அன்னை ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் வாராஹி அன்னையின் படைக்குத்  தலைமை வகித்தவள்.  சத்ருக்களிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாக்க அன்னை வாராஹியை வழிபட வேண்டும். இன்றைய தினம்  மஹாலக்ஷ்மியாக சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும்படி அன்னையை அலங்கரிக்கலாம். ஷோடதசாக்ஷரி என்னும் பெயராலும் அழைக்கப்படுவாள்.  அக்ஷதை, மலர்கள் இரண்டாலும் கோலம் போடலாம். படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். கீழே குறுகி மேலே செல்லச் செல்ல அகலமாக இருப்பது போல் போட வேண்டும். வாழ்வில் படிப்படியாக உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.

வாராஹி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

செந்தாமரை, ரோஜா மலர்கள், கதிர் பச்சை, கஸ்தூரி மஞ்சள் பொடி போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ஜயதுர்கையாக நினைத்து வழிபடும் அன்னையை ரோகிணி என்னும் பெயரால் அழைக்கலாம். ஐந்து வயதுப் பெண் குழந்தையை ரோகிணியாகப் பாவித்து வழிபட வேண்டும்.  நிவேதனத்திற்குக் கதம்ப சாதம் செய்யலாம். மாலை பட்டாணிச் சுண்டல் செய்யலாம். கதம்ப சாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போலத் தான். காய்கறிகள் நிறையப் போடணும் என்பதோடு நாட்டுக்காய்களாகவும் இருக்கவேண்டும். பூஷணி, பறங்கி, வாழைக்காய், முருங்கைக்காய்( விருப்பமானால்), கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, அவரை, கொத்தவரை போன்றவை போடலாம். மொச்சை இருந்தால் ஊற வைத்துச் சேர்க்கலாம்.

26 comments:

  1. ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
    வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்
    தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
    கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே!

    இந்த மாதிரி அருமையான பாடலைப் போட்டுவிட்டு, அதில் முக்கியமானவற்றிர்க்கு நயம் சொல்லாமல் போகிறீர்களே... இடுகை முழுமை பெறுமா?

    வானந்தமாய வடிவுடையாள் - பஞ்ச பூதங்களான நிலம், நீர்.... ஆகாயம் ஆகியவற்றின் வடிவுடையவள். அதாவது ஐம்பூதங்களில் கடைசி ஆகாயம், வானம். இதை நயமாகக் குறிப்பிடுகிறார், பஞ்சபூதங்கள் என்று நேரிடையாகச் சொல்லாமல்.

    மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - நான்கு வேதங்களுக்கும் முடிவாக விளங்குவது அவளது திருவடித் தாமரைகள்.

    தவள நிறக் கானம் தம் ஆடரங்காம் - சாம்பல் மேடிட்டு வெண்மை நிறமான சுடுகாட்டைத் தன் ஆடல் அரங்கமாகக் கொண்ட சிவன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, ஏற்கெனவே பதிவுகள் நீளம்! இதிலே எல்லாத்துக்கும் அர்த்தம் சொன்னால் பதிவின் நோக்கமே மாறும் அல்லவா? அப்புறமா அதற்கேற்ற சௌந்தரிய லகரி ஸ்லோகமும் தேடி எடுக்கணும்.:)))) அது தனியாப் பண்ணிண்டு இருக்கேன். இப்போச் சில வருஷங்களாகத் தொடர முடியலை! :(

      Delete
  2. அருமை! ஆவலோடு தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நேரம் ஒத்துழைத்தால் முந்தைய பதிவுகளையும் பார்த்து விடுங்கள்! நன்றி. தாமதமாய் வந்தாலும் கொலு முடியறதுக்குள்ளே வந்தீங்களே! :))))

      Delete
  3. நின்றும், இருந்தும், கிடந்தும் தான் இப்போது வணங்கமுடிகிறது.
    அபிராமி சரியாகதான் பாடி இருக்கிறார்.
    சுருக்கமாய் உள்ள தேவி மாகாத்மியச் சுருக்கம் படித்து வருகிறேன்.
    உங்கள் பதிவையும் நவராத்திரியில் படித்து வருகிறேன்.


    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நான் நின்று தான் வணங்குகிறேன். பெரியவங்களையும் சேர்த்து! :))) இப்போல்லாம் இருந்தோ, கிடந்தோ வணங்க உடம்பு ஒத்துழைப்பதில்லை! முன்னால் அது கொஞ்சம் பண்ணிட்டு இருந்தேன். இப்போச் சில வருஷங்களாக! :))))

      Delete
    2. நான் சொல்வது முடியவில்லை முன் போல்
      என்பதுதான்.நின்றும் (நின்று கொண்டே) இருந்து( நாற்காலியில்,) கிடந்து படுத்துக் கொண்டு இறைவன் பாடல்களை பாடுவதை பற்றி தான் சரியாக சொன்னார் அபிராமி பட்டர் என்று சொன்னேன் கீதா.

      Delete
  4. அபிராமி பட்டர் சரியாகதான் பாடி இருக்கிறார்.

    ReplyDelete
  5. படிச்சேன், அப்போ இன்று என் குழைசாதம் வைக்கோணும் எனச் சொல்றீங்க... ஆவ்வ்வ்வ்வ்வ் இதை இப்பவே நெல்லைத்தமிழனுக்குச் சொல்லோணும்:).

    ReplyDelete
    Replies
    1. எங்கே போனாலும் குழை சோற்றை மட்டும் விடுவதேயில்லை ....

      Delete
    2. நீங்க என்ன கொடுத்தாலும் அம்பிகை ஏற்றுக்கொள்வாள். அவங்கல்லாம் நிஜம்மாவே சாப்பிட ஆரம்பிச்சா நாம தான் கொடுப்போமா? நெல்லைத் தமிழருக்குச் சொன்னாலும் அவர் அதெல்லாம் கொடுக்கப் போறதில்லை.

      Delete
    3. @துரை, அதானே!

      Delete
  6. காதாரக் கேட்பது சுகம் என்பார்கள்..
    கண்ணார வாசிப்பதும் சுகமே!...

    புண்ணியம்... புண்ணியம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, அனைவருக்கும் அந்தப் புண்ணியம் சென்று சேரட்டும்.

      Delete
  7. தாங்களே இதனை ப்ரவசனம் செய்வதாகப் பாவித்துக் கொண்டேன்...

    ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
    Replies
    1. ஆகா, அத்தகைய பாக்கியமெல்லாம் நமக்குக் கிட்டுமா?

      Delete
  8. சிவப்பெழுத்துகளில் இருப்பது யார் எழுதியது. தேவி வர்ணனையும் போர்க்காட்சிகளும் அருமை. அனந்தசயனம் அவர்கள் குரலில் வாசிக்காத தோன்றுகிறது மொத்தப்பதிவையும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், சிவப்பா? எனக்கு என்னமோ மெஜந்தா நிறமாய்த் தெரிந்தது. சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் பாடப்பட்ட "லலிதாம்பாள் சோபனம்" பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை இவை. இது மொத்தமும் விவரித்து எழுத ஆரம்பித்தால் இன்னொரு "லலிதோ உபாக்யானம்" மாதிரி ஆயிரம் பக்கங்கள் ஆயிடும். நான் சுருக்கமாகச் சோல்லி வருகிறேன். (யாரது, இது சுருக்கம்னு சொல்றது?) இஃகி, இஃகி, அது அடைப்புக்குள் என் ம.சா.

      Delete
    2. அந்தக் காலங்களில் அப்பளம் இடுகையில், சமைக்கையில் காய் நறுக்கும்போது என இதைப் பாடிக்கொண்டே பெண்கள் வேலை செய்வார்களாம். அப்படியே இது பிரபலம் ஆனது. செங்கோட்டையைச் சேர்ந்த ஆவுடையக்காளோட வேதாந்தப் பாடல்கள் மாதிரி.

      Delete
    3. ஆகா...

      >>> அந்தக் காலங்களில் அப்பளம் இடுகையில், சமைக்கையில் காய் நறுக்கும்போது என இதைப் பாடிக்கொண்டே பெண்கள் வேலை செய்வார்களாம்... <<<

      இது அப்படியே அப்படியே - சத்தியம்...

      அதனால் தான் அது கூழாக இருந்தபோதிலும் அமிர்தமாக உடம்பினுள் ஒட்டிக் கொண்டது..

      ஆனால் - இன்றைக்கு 100/100 சுத்தமான பொருள்
      என்று சொல்லப்படுபவைகளால் சமைக்கப்பட்ட உணவானாலும்

      அது உள்ளே புகுந்து ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்து விட்டு
      வேறொரு புதிய வியாதியையும் உண்டு பண்ணி விட்டுப் போகின்றது...

      காரணம் - சமைக்கும் நேரத்தில் நம்மைச் சுற்றி - ஒலியதிர்வுகளாக
      அவனை/அவளை எப்படிக் கெடுப்பது, ஒழிப்பது என்ற மந்த்ராலோசனைகள்...

      ஊளைகள்.. உறுமல்கள்.. சகுனம் கெட்ட அமங்கல ஒலிகள்..

      சாப்பிடும் வேளைகளில் கண்ணீர்த் துளிகள், கதறல்கள்..
      மாலை விளக்கேற்றும் வேளையில் தலைவிரி கோலங்கள், ஒப்பாரிகள், மயானக் கொட்டுகள்..

      நாமே - நம் பணத்தைக் கொடுத்து
      தொலைக்காட்சி ஊடகங்களின் வழியே அடாததை எல்லாம் வரவேற்றுக் கொண்டிருக்கின்றோம்...

      இங்கே - நான் சமைக்கும்போது
      அக்கம்பக்கத்து அறைகளில் ஆட்கள் இல்லையெனில்
      தேவாரம் திருப்புகழ் என - திருப்பாடல்களைக் காதாரக் கேட்டுக் கொண்டுதான் சமைக்கிறேன்...

      நல்ல விஷயத்தைத் தெரியப்படுத்தினீர்கள்.. மகிழ்ச்சி...

      Delete
  9. தொடர்ந்து படிக்கிறேன். அருமை. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மா. சந்தோஷமாக இருக்கிறது!

      Delete
  10. தொடர்ந்து வருகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! நன்றி.

      Delete
  11. மலைக்கவைக்கும் பிரும்மாண்டப் பதிவுகள். அவ்வப்போது தலைகாட்டுகிறேன்.

    நல்ல காலம், இது ராமாயண சுக்ரீவனல்ல என்று தெளிவுபடுத்தினீர்கள். இடையிலே புகுந்து படிக்க ஆரம்பித்த நான் குழம்பியிருந்தேன்!

    சும்ப, நிசும்பர்கள், சண்ட, முண்டர்கள் விதவித ரூபங்களில் தேசமெங்கும் மண்டிக்கிடக்கின்றனரே.. அம்பிகை கோபத்தில் எழுந்துவந்து ஒரு போடுபோட்டாலொழிய எதுவும் சீராகாது இங்கே. நவராத்திரியில் இதற்காக, பெண்களின் நலம், பாதுகாப்பிற்காகப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete