மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
முதல்நாள் நோன்பு ஆரம்பிக்கையில் அழகாக தீபக் கோலம் போட்டு ஆரம்பிக்கலாம். ஆண்டாளின் காலத்தில் முழுநிலா வீசும் நாளில் ஆரம்பித்தித்திருக்கிறது. காலம் செல்லச் செல்லப் பருவங்கள் மாறுபட மாறுபட இதுவும் மாறி இருக்கிறது. மதிநிறைந்த நன்னாளில் நீராடித் தூய்மையுடன் நந்தகோபன் குமாரன் ஆன அந்தப் பரந்தாமனை, சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்துடையானைப் போற்றிப் பாடினால் அவன் நமக்கு அந்த வைகுண்டப் பதவியையே கொடுத்துவிடுவான் என்கிறாள் ஆண்டாள். பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள்.
மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயே நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள்.
ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும். அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே?
இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான். இப்போது நாரயணீயத்தில் பட்டத்திரி கூறுவதைப் பார்க்கும் முன் பட்டத்திரி பற்றிய ஒரு சிறு அறிமுகம். கேரளத்தைச் சேர்ந்த மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்சுத பிஷாரடிக்கு வந்திருக்கும் வாத நோயைத் தனக்கு அளிக்குமாறு விரும்பிப் பெற்றுக்கொண்டவர் . பின்னர் நோயின் கடுமை தாங்காமல் குருவாயூரில் இறைவன் சந்நிதியில் 100 நாட்கள் தங்கி ஒரு நாளை ஒரு தசகம் வீதம் 1036 ஸ்லோகங்களை இயற்றினார். ஆரம்பிக்கும் முன்னர் எதில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்தவரைத் துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற எழுத்தச்சனின் கல்வி ஞானத்தையும் எல்லாவற்றுக்கும் மேல் அவரின் பக்தியையும் அறிந்திருந்த பட்டத்திரி முதலில் குழம்பினாலும் பின்னர் தெளிந்தார்.
பகவானின் மச்சாவதாரம் அவர் மனக்கண்களில் தோன்றியது . பத்து அவதாரங்களையும் பூரணமாக எழுதி நிறைவு செய்ய எண்ணம் கொண்டு முதலில் தன் பிரார்த்தனைகளை பகவத் வைபவம், செளந்தர்யம்,பக்தி லக்ஷணம் ஆகிய முறைகளில் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கிறார். முழுதும் அத்வைதக் கருத்துக்களாகவே காணப்படும் இந்த நாராயணீயம் மிக உயர்ந்ததொரு வேதாந்தமாகக் கருதப் படுகிறது. மேலும் இது முடிவடைந்த நூறாம் நாள் பட்டத்திரியின் வாத நோயும் நீங்கி ஆண்டவனும் தலையசைத்து இவரின் கவிதைகளைப் பாராட்டி திவ்ய தரிசனமும் அளித்தான்.
இதையே நாராயண பட்டத்திரி நாராயணீயத்தில் கூறுவது எப்படி எனில், "படந்தோ நாமாநி ப்ரமதபர ஸிந்த்தெள நிபதிதா: ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந் அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸரவாபிலஷிதாந்" அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இத்தகைய ஆநந்தமயமான வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும்பொருட்டன்று. ஆசைகளே அற்ற பாக்கியசாலிகள் அவர்கள் என்கிறார். ஒரு அசட்டுத் தனமான முயற்சி. திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு எழுத முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு அந்தப்பொருள் வரும் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்திருக்கேன். இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மேலே தொடரும். நன்றி.
கோலத்துக்கு நன்றி. கூகிளார். என்னோட மூலப் பதிவில் வேறே கோலம் இருக்கும். அது முன்னால் மின் தமிழ்க் குழுமத்தில் திரு உதயனின் கோலங்களைப் பதிந்தபோது எழுதியது. சுமார் பத்து வருஷம் முன்னால் 2010 ஆம் வருஷங்களில் எழுதியவற்றைத் தொகுத்திருக்கேன். இது மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்னும் மின்னூலாகவும் வெளி வந்துள்ளது.
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் மின்னூலுக்கான சுட்டி
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். இந்தப்பதிவுகள் இதோடு மூன்றாம் முறையாக வெளி வருகின்றன. முதலில் இப்பதிவுகள் 2020/2011 ஆம் ஆண்டுகளில் வந்து பின்னர் 2029/2020 ஆண்டில் கோலங்களோடு வந்து பின்னர் மின்னூலாகவும் வந்திருக்கிறது. இந்த வருஷம் மார்கழி மாதம் கத்தாரில் தோஹாவில் இருக்கேன். அம்பேரிக்காவில் 2, 3 முறைகள் மார்கழி மாதங்கள், தைப்பொங்கல்னு கழிந்தாலும் இந்த வருஷம் நம்ம ரங்க்ஸ் இல்லாமல் தனியாக இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு பழையனவற்றை அசை போட்டுக் கொண்டு இருக்கேன். மன மாறுதலுக்காக இப்பதிவுகளை இங்கே கொடுக்கலாம். வேறு மார்கழிப் பதிவுகளும் இருந்தாலும் சமீபத்தில் நாராயணீய நாள் கொண்டாடினப்போ இந்தப் பதிவுகளில் நாராயணீயமும் குறிப்பிட்டிருப்பது நினைவில் வரவே இவற்றைத் தேடி எடுத்துக் கொடுக்கிறேன். இந்தியாவில் 2 மணிக்கு மேல் இருந்தாலும் இங்கே இப்போது தான் நண்பகல் பனிரண்டு மணி. காலையிலிருந்து வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. இப்போத் தான் கொஞ்சம் நின்னிருக்கு. மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தில்! தெற்கு கோபுரத்தில் வைகுண்ட ஏகாதசி/மார்கழி மாதம் என்பதால் கோபுரம் முக்கியமாகத் தெற்கு கோபுரம் அழகாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். குட்டிக் குஞ்சுலு அதை கோல்டன் டவர் என்று சொல்லும். நான் என் வழக்கமான இடத்தில் உட்கார்ந்த வண்ணம் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதே சமயமும் தெற்கே பார்த்திருக்கும் பெருமாளும் எங்களைத் தான் பார்த்துக் கொண்டிருப்பார் என நினைப்பேன். இப்போ அதை எல்லாம் எண்ணுவதே ஒரு சுகம்.
இன்றைய பதிவு மிக அருமை.
ReplyDeleteபழைய நினைவுகளை நினைப்பது சுகம் தான்.
பெருமாள் பார்த்து கொண்டுதான் இருப்பார்.
மனமாறுதலுக்கு பதிவுகளை கொடுங்கள் , உங்களுக்கும் நல்லது, படிக்கும் எங்களுக்கும் நல்லது.
நல்ல விஷயங்களை கேட்பதும், படிப்பதும் நல்லதுதான்.
வழிமொழிகிறேன்.
Deleteகீதா அக்கா பாணியிலேயே சொல்லனும்னா கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன்!
:))
நானும் தீபகோலம் தான் போட்டேன், சின்னதாக. முதல் பாடலும் அதற்கு பொருளும் அழகாய் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஸூப்பர் கோமதி அக்கா.
Deleteநன்றி ஸ்ரீராம்
Deleteஇன்றைய பதிவு மிக ஆழமாக மனதில் வாங்கிக்கொள்ள வேண்டிய பதிவு
ReplyDeleteஇன்று மார்கழி மாதப் பிறப்பில் திருப்பதி சன்னிதியில் அரை மணி நேரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ முதல் மார்கழி அதிகாலை 3 மணி தரிசனத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்
திருவரங்கமும் மனதில்
புதிய பதிவுகளும் எழுதலாமே
ReplyDeleteஅருமையான பதிவு. அழகாக, விளக்கமாக கோர்வையாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? பதிவு அருமை. திருப்பாவை பாசுர விளக்கமும், நாராயணீயத்தையும் சேர்த்து இணைத்து பக்தி கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள். பழைய பதிவெனினும், புதியதாகவே படிக்கிறேன். உங்களிடம் பக்தி மார்க்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. இதுபோல் புதிதாகவும் நிறைய பதிவுகள் எழுதி வெளியிடுங்கள். வாழ்த்துகள். தொடர்கிறேன் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவுகளை வரவேற்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. தனித்தனியாய்ச் சொல்ல முடியலை. :(
ReplyDeleteநாராயணீயத்தையும், திருப்பாவையையும் இணைக்கத் தோன்றியதே ஆச்சர்யம். சிறப்பாக செய்திருக்கிறீர்கள்!
ReplyDelete