

என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி. நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும் ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.
அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர் நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.