எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label மகளிர் தினச் சிறப்புப் பதிவு 2014. Show all posts
Showing posts with label மகளிர் தினச் சிறப்புப் பதிவு 2014. Show all posts

Saturday, March 08, 2014

பெண்களே உங்கள் தேவைதான் என்ன! :)

 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. ஊர்வலங்கள், புத்தகங்களில் கட்டுரைகள், போட்டிகள், பெண்களுக்கெனச் சிறப்பு நிகழ்ச்சிகள் என உலகெங்கும் அமர்க்களப் படும். எங்கும் பெண்ணியம் குறித்தே பேச்சு. பெண்கள் சுதந்திரம் குறித்தே பேச்சு.  பெண் சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றுத் திரிவது தான் என்றொரு பொருளும் ஆகிப் பல காலம் ஆகிவிட்டது. உண்மையான சுதந்திரம் என்பது கட்டுப்பாடை உடைப்பது அல்ல. நெறிமுறைகளைத் தகர்ப்பதும் அல்ல.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் கட்டுப்பாடையும் நெறிமுறையையும் குறித்துப் பேசுபவர்கள் தாம் பழமைவாதிகள்.  பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பவர்கள். பெண் வேலைக்குச் செல்வதே கூடாது என்ற காலம் மாறிப் பெண் வேலை தேடித் திரிந்த காலமும் மாறி இன்று பெண் ஒவ்வொரு வேலையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.  இங்கே இவை எல்லாம் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது இல்லாமல் நடந்திருக்கக் கூடிய விஷயமா என யாரும் யோசித்ததாய்த் தெரியவில்லை.

ஒழுக்கம் என்பதன் தத்துவமும் மாறிவிட்டது.  விவாகரத்தும், இரண்டாம் கல்யாணமும் சர்வ சகஜமாக ஆகிவிட்ட நிலையில் கற்பைக் குறித்த பார்வையும் கட்டாயமாய் மாறித்தான் இருக்க வேண்டும். மாறக்கூடாது என்பது என் எண்ணம் அல்ல. விவாகரத்தையோ, இரண்டாம் கல்யாணத்தையோ எதிர்ப்பவளும் அல்ல.  ஆனால் நமக்கென ஒரு தனிக் கலாசாரம் உண்டு. கூடியவரையில் அந்தக் கலாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்பதே என் முக்கியக் கருத்து. இன்றைய காலகட்டத்து நாகரிகமும் வாழ்க்கையும் நம்மை நிறுத்தி இருக்கும் இடம் முற்றிலும் சரியானது அல்ல. முழுமையாக மேற்கத்திக் கலாசாரத்தையும் ஏற்கவில்லை;  முழுமையாக நம் கலாசாரத்தையும் பின்பற்றவில்லை. இரண்டுக்கும் இடையிலே நிற்கிறோம். பொங்கி வரும் புதுவெள்ளம் போல ஐடி கலாசாரம் இடையில் நம் நாட்டில் நுழைந்து விட்டது.  அதன் வேகத்தில் நாம் அது இழுத்த இழுப்பிற்கு இப்போது சென்று கொண்டிருக்கிறோம். ஆகவே விவாகம் ரத்தாகி மறு கல்யாணம் செய்து கொண்டாலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான் இப்போதைய நிலையில் கூற முடியும்.

இப்போதைய பெண்களின் எதிர்பார்ப்பே என்னவெனப் புரியவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள்.  இதிலே பெண்களின் பெற்றோர் செய்யும் தந்திரங்கள்.  இத்தனையையும் மீறி ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனால் அந்தத் திருமணத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே இன்றைய நாட்களில் பெண்ணானவள் போராட வேண்டி இருக்கிறது.   இன்றைய காலமானது செக்ஸ் என்னும் உடல் ஆசையில் அடிபட்டு அதன் போக்கில் தான் போய்க் கொண்டிருக்கிறது.  இதில் தான் பெண்களும் அடிபட்டு, மிதிபட்டு ஒரு நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.  இது எதனால்??  டேட்டிங் எனப்படும் மேல்நாட்டுக் கலாசாரம் வந்ததும், இந்த ஒழுக்ககேடான வாழ்க்கை முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. இவற்றை எல்லாம் தடுக்கச் சரியான சட்டங்களும் இல்லை.  ஏனெனில் இறை நம்பிக்கை என்பதே இல்லாத பல புத்திசாலியான ஆன்றோர்களால் வகுக்கப்பட்ட நம்முடைய சட்டங்கள்  நமது கலாசாரத்தையோ, பண்பாட்டையோ ஆதரித்து அதை அனுசரித்து அமையவில்லை என்பது நம்முடைய பெரிய துரதிர்ஷ்டம்.

இன்றைய பெண்ணுக்கு சுதந்திரம் எதில் இல்லை? ஆடை அலங்காரத்தில், படிப்பில், வேலைக்குச் செல்வதில், பணத்தைக் கையாளுவதில், குடும்பம் நடத்துவதில், குழந்தை பெற்றுக் கொள்வதில், எனப் பெரும்பாலும் எல்லாவற்றிலும் பெண்ணின் விருப்பத்துக்கு ஏற்பவே நடைபெற்று வருகிறது. இதிலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். திருமணம் ஆகும்போதே குழந்தை பெற்றுக் கொள்வதைக் குறித்துப் பெண்கள் ஒரு முடிவுடன் தான் இருக்கின்றனர்.  முடிந்தவரை தள்ளிப் போடுகின்றனர்.  ஏற்கெனவே 25 வயதுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கையில் முப்பதுக்கும் மேல் ஆகிவிடுகிறது.  ஒரு சில பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தில் விரைவில் மாதவிடாய் நின்று மெனோபாஸ் நிலையும் வந்துவிடுகிறது.  இது கட்டுக்கதை அல்ல.  உண்மை.  தெரிந்த ஒரு பெண்ணுக்கு நடந்தது தான். பால்ய விவாகம் கூடாது என்று தான் சொன்னார்கள்.  திருமண வயதைத் தள்ளிப் போடச் சொல்லவில்லையே! படிப்பு முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்து மூன்று வருடங்களாவது ஆனால் தான் ஒரு பெண் திருமணத்துக்கே சம்மதிக்கிறாள். பெற்றோரும் அதுவரை பொறுக்கத் தான் வேண்டும் என்கின்றனர்.  இப்போது திருமணம் இல்லை எனத் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.


இரு வருடங்கள் முன்னர் நடந்தது இது!  எனக்குத் தெரிந்த ஒரு பெண் சொந்த ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி வேறொரு ஊரில் வேலை.  திருமணம் நடந்ததோ தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்தில் வேலை செய்யும் பையரோடு.  மிக அமர்க்களமாக, விமரிசையாக நல்ல செலவு செய்து நடந்த திருமணம்.  பெண் விடுமுறை கிடைக்கவில்லை எனக் கல்யாணம் ஆனதுமே தான் வேலை செய்யுமிடம் சென்றுவிட்டாள்.  இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டது இந்த இருவருடங்களிலும் மொத்தம் நான்கு ஐந்து முறை இருந்தால் அதிகம்.  புக்ககம் என்று அந்தப் பெண் போகவும் இல்லை. கணவனோடு அவன் இருக்கும் ஊரில் வாழவும் இல்லை.  விடுமுறைக்குத் தாய் வீட்டுக்கு வரும்போது அவள் கணவனும் மனைவியைப் பார்க்க வருவான்.  அவர்கள் சந்திப்பே இப்படித் தான் அமைந்தது.  ஆனாலும் சில நாட்களில் அந்தப் பெண் ஒத்துவரவில்லை எனப் பிரிந்து செல்ல முடிவு எடுத்து இருவரின் சம்மதத்தின் பேரிலும் இப்போது பிரிந்துவிட்டனர்!

இதற்காகவா பெற்றோர் பாடுபட்டுக் கல்யாணம் செய்து வைத்தனர்?  முன்னை எல்லாம் போல் இப்போது மாமியார் கொடுமை, நாத்தனார் பிடுங்கல் என்பதெல்லாம் இல்லை.  இருந்தாலும் ஒரு நாத்தனார் தான் இருப்பாள்.  அல்லது ஒரே ஒரு மைத்துனர் இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றைக் குழந்தை தான்.  அப்போது அந்த ஒரே ஆண்பிள்ளையைத் தான் இவள் கல்யாணம் செய்திருக்க, குறை கண்டது யாரிடம்?  மாமியார் படுத்தலா? மாமனார் பிடுங்கலா? கணவன் சரியில்லையா?  வேலையை விட முடியாது; என்னுடைய career தான் முக்கியம் என்றால் திருமணத்துக்கு முன்னாலேயே சொல்லி இருக்கலாமே!  இப்போது தான் நிச்சயம் செய்வதற்கு முன்பிருந்தே ஒருவருக்கொருவர் பேசிப் பழகிக் கொண்டு தானே நிச்சயமே ஆகிறது.  அதன் பின்னரும் பேசிப் பழகுகின்றனர். இவ்வளவு வசதிகள் இருந்தும் பெண்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களா? ஏன் இல்லை?  ஒத்துவரவில்லை என்பது தான் ஒரே காரணமாகச் சொல்லப்பட்டது.  கணவன், மனைவிக்கிடையே எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியான அபிப்பிராயங்கள் இருக்காது தான்.  பேதங்கள் இருக்கும் தான்.  இப்படி பேதங்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்த்துப் போராடி வாழ்வது வாழ்க்கையா?  அல்லது ஒத்துவரவில்லை எனப் பிரிவது வாழ்க்கையா? இன்னொரு திருமணம் செய்து கொண்டால் அந்தக் கணவனுடனும் ஒத்துப் போகவில்லையெனில்?

நம் முன்னோர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல;  கணவன் பேச்சுக்கு அடங்கி இருந்த நம் தாத்தாவும், பாட்டியும் வாழ்க்கையில் நிறைவைக் காணவில்லையா? அவர்கள் சந்தோஷமில்லா வாழ்க்கையை நடத்தி இருந்தால் இன்றைக்கு நாமெல்லாம் எங்கே இருப்போம்?  ஐந்து வயதில் திருமணம் ஆகிப் பள்ளிக்கே செல்லாத என் தாய்வழிப் பாட்டி தன் நான்கு பிள்ளைகளையும், ஐந்து பெண்களையும் இவர்களின் பேரன், பேத்திகளையும் நன்கு வளர்த்துத் தான் ஒரு முன் மாதிரியாக இருந்து காட்டினாள்.  வீட்டில் கற்றுக் கொண்ட மொழி அறிவைப் புத்தகங்கள் படித்து வளர்த்துக் கொண்டு தமிழும், ஆங்கிலமும் நன்கு புரியும்படி பேசி இருக்கிறாள். ஆனால் இன்றோ தங்கள் செளகரியத்துக்காகவே மாமியார், மாமனாரைக் கூட வைத்துக் கொள்கின்றனர் பெண்கள்.  இல்லை எனில் மாமியார், மாமனார் கூட இருப்பதை விரும்புவதில்லை.  பெரும்பாலான பெண்கள் தனிக்குடித்தனம் செய்து கொண்டு குழந்தையை மட்டும் மாமியார், மாமனார் பார்த்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.  இதுவும் பெண்களின் செளகரியப்படி அவர்கள் எண்ணப்படியே நடக்கிறது. ஆனாலும் இன்றைய  பெண்களுக்குக் குறைதான்.

பெண்களே உங்கள் தேவை தான் என்ன?