நான் முதல்லே ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சது ஆறாம் வகுப்பில் இருந்து. அப்போல்லாம் ஸ்டாண்டர்ட் ஆரம்பிக்கலை. ஆகவே அது ஃபர்ஸ்ட் ஃபார்மாக இருந்தது. ஹிந்தி சொல்லிக் கொடுத்தது ராதானு ஒரு டீச்சர். அ, ஆ, இ, ஈ இல் இருந்து க, ங, ச, ஞ, ட, ண, ன, ப, ம, ய, ர, ல, வ, ஹ, ஷ, ஸ, ஹ வரைக்கும் ஒழுங்கா எழுத வந்தது. அப்புறமாத் தான் விதியின் விளையாட்டு ஆரம்பம். வார்த்தைகள், வாக்கியங்கள்னு ஆரம்பம். வார்த்தைகளிலேயே தகராறு வர ஆரம்பிச்சது. खाना என்றால் சாப்பாடுனும் வரும். சாப்பிடுவது எனவும் வரும். டிக்டேஷனில் நான் எழுதினது काना என்று. இப்படி முதல் ப போட வேண்டியதில் இரண்டாவதும், மூன்றாவது Ba போடுவதற்கு நான்காவதும் Bha போட்டு எழுதிட்டேன்.
சின்னப் பொண்ணுனு டீச்சர் முதல் முறை மன்னாப்புக் கொடுத்துட்டாங்க. அப்புறமா பிராகிரஸ் ரிப்போர்ட் தயார் பண்ணணும்னு மறுபடி என்னை மாதிரிச் சரியா எழுதாதவங்களுக்கு டெஸ்ட் வைச்சாங்க. அதிலேயும் சொதப்பல். பயந்து கொண்டே டீச்சரிடம் நோட்டை நீட்டினேன். நீட்டினேனோ இல்லையோ, கையைக் காட்டுனு டீச்சர் மிரட்டல். கையை நீட்டினேன். பெரிய ஸ்கேலால் அடி ஒன்று விழுந்து துடித்துப்போய் விட்டது. மோதிர விரலிலோ, பாம்பு விரலிலோ பட்டு வீங்கவும் ஆரம்பிச்சது. ஆனாலும் டீச்சருக்குக் கோபம் அடங்கவில்லை. ஏனெனில் அவங்க தான் என்னை ஸ்கூலில் சேர்க்கையில் பெயர்க் குழப்பம் வந்தப்போ என்னோட தேர்வுப் பேப்பர்களை எல்லாம் பார்த்துட்டு நான் நல்லாப் படிப்பேன்னு தெரிஞ்சு வைச்சிருந்தார். அதனால் அத்தனை மாணவிகளிலும் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு என்னைத் தெரியும். அவங்களோட நல்ல எண்ணத்திலே நான் மண்ணை வாரிப் போட்ட கோபம்.
"யாருடி உங்க அப்பா? என்ன பண்ணறார்?"
"சேதுபதி ஹைஸ்கூலில் ஹிந்தி டீச்சர்!"
"என்ன? ஹிந்தி டீச்சர் பொண்ணா இப்படி எழுதறே? வீட்டிலே அப்பா சொல்லிக் கொடுக்க மாட்டாரா?"
என்னத்தைச் சொல்றது. அப்பா அதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஸ்கூல்லே என்னத்தைக் கவனிச்சேனு சத்தம் போடுவார். எந்தப் பாடமும் எங்களுக்கு அப்பா சொல்லிக் கொடுத்ததே இல்லை. :) அம்மா தனக்குத் தெரிந்த ஹிந்தியை வைச்சு எனக்குச் சொல்லிக் கொடுத்தார். டீச்சர் கிட்டே அடி வாங்கிண்டு வீட்டுக்கு வந்தப்போவும் அப்பா என்னைத் தான் திட்டினார். சரியாப் படிக்கலைனா படிப்பை நிறுத்திடுவேன் என்னும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் வழக்கம் போல்.
அதுக்கப்புறமா முனைந்து படிச்சேன். அடுத்த ஒரு மாதத்துக்குள்ளே ஹிந்தியில் 80% க்கு மேல் வாங்கும்படியாகப் படிக்க ஆரம்பிச்சேன். அப்போல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யில் ஹிந்தியும் ஒரு கட்டாயப் பாடம். ஆனால் எனக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் அதாவது மூன்றாவது ஃபார்ம் படிக்கையில் ஹிந்தி இருந்தது. அதுக்கப்புறமா ஹிந்தியை எடுத்துட்டாங்க. என்றாலும் தெரிந்த இந்த ஹிந்தியை வைச்சுட்டே, நான் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபா பரிக்ஷைகளில் தேர்வு எழுத முடிந்தது. ஆனால் அங்கே சொல்லிக் கொடுப்பதற்கும் நடைமுறை வாழ்வில் ஹிந்தி பேசுவதற்கும் உள்ள மாபெரும் வேறுபாடு முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ தான் புரிஞ்சது.
உச்சரிப்பே இங்கே தப்புத் தப்பாய்த் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. பல சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் Idioms and phrases (இதுக்குச் சரியான தமிழ் வார்த்தைகள் தேடினப்போக் கிடைச்சது, சாட்டு வாக்கியங்கள் என்று விக்கி சொல்கிறது) போன்றவற்றுக்கு இங்கே சொல்லும் பொருள் அதன் உண்மையான பொருளில் இருந்து மாறுபட்டது. இதை அங்கே போனதுமே புரிந்து கொண்டதோடு அல்லாமல் எங்க பொண்ணு அங்கே கேந்திரிய வித்யாலயாவில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சப்புறம் நல்லாவே புரிஞ்சது. அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் நான் மீண்டும் ஹிந்தி கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் மிகை இல்லை. அதைத் தனியா வைச்சுப்போம்.
இப்போ மோதி அரசு என்னமோ ஹிந்தித் திணிப்பை உருவாக்குவதாக ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமர்க்களத்தின் நடுவில் அவங்க மறுப்புக் கூட உண்மையானதில்லைனு சொல்லிட்டு இருக்காங்க. அப்படி ஒரு அரசாணை இருந்தால் அந்த அரசாணையின் காப்பியை எவரானும் வெளியிட்டிருக்கலாமே? அதெல்லாம் ஒண்ணும் வரலை. ஆனாலும் என்னமோ தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தீனி கிடைச்சுட்டு வருது! :))))))))) உண்மையிலே தமிழ்நாட்டிலே பெரும்பாலோர் வேலை தேடி வெளிமாநிலம், அரபு நாடுகள்னு போறதாலே கட்டாயமாய் ஹிந்தி கத்துக்கத் தான் செய்யறாங்க. ஹிந்தி சினிமா, ஹிந்தி சினிமாப் பாடல்கள்னு எல்லாத்தையும் ரசிக்கும் நாம் மொழியை மட்டும் ஏன் வெறுக்கிறோம்னு புரியலையே?
ஹிஹிஹி, இப்போ ஒரு வாரமா இணையத்தின் ட்ரென்ட் ஹிந்தி மொழி பற்றியே. ஆகவே அதை மீறாமல் ஹிந்தி பத்தி போஸ்ட் போட்டாச்சு!