எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 05, 2014

குரங்காரால் கிடைத்த ஓய்வு! :)

இன்னிக்குத் தனியா இருக்கிறச்சே குரங்கார் படுக்கை அறைக்குள் நுழைஞ்சதிலே இருந்து ஏற்பட்ட பாதிப்பில் சமைக்கிறச்சே கவனம் இல்லாமல் ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது.  குரங்காரைக் கண்டு நான் பயப்படுவதால் சமையலறை பால்கனி ஜன்னலுக்கு ரங்க்ஸ் கம்பி வாங்கிக் கட்டி விட்டார்.  ஆனால் படுக்கை அறை பால்கனி ஜன்னல் எல்லாம் இன்னமும் பெரிசு.  அங்கே தான் உட்கார்ந்திருக்கு!  அந்த பால்கனிக் கதவைத் திறக்கிறதே இல்லை!

சமைச்சு முடிச்சுட்டுச் சாப்பிடும்போது வடாம் பொரிக்கலாம்னு எண்ணெய் காய வைத்தேன்.  எப்போவுமே இரண்டு பேருக்குனு சின்னச் சட்டியிலே தான் காய வைப்பேன்.  நேத்திக்கும் அப்பளம் பொரிச்சேன்.  இன்னிக்கு வடாம் பொரிக்கையிலே எண்ணெய் கொட்டிக் கைவிரல்களில் பட்டு வெந்து போய் விட்டன.  முக்கியமா ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ரொம்ப பாதிப்பு.  சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும்.  அதுவரை எஞ்சாய் மாடி!!! :)))

கண்ணன் பதிவுகள் எழுதி வைச்சிருப்பதால் முடிஞ்சவரை அதைப்போடுவேன். விடமாட்டோமுல்ல! அதோடு திங்களிலிருந்து புதன் வரை ஒரு சின்ன விடுமுறையும் கூட. எல்லாரும் ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க.  செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டுண்டு வந்தாச்சு.  

Tuesday, July 01, 2014

குரங்காரின் கொட்டம் !

நம்ம வீட்டுக்கு நாலுகால் பிராணிகள் ஆன பசுக்கள், கன்றுகள், நாய்கள், பூனைகள்னு தான் வந்துட்டு இருந்தன.  இதெல்லாம் அம்பத்தூரில் இருக்கிறச்சே.  நாயும், பூனையும் குடித்தனமே இருந்ததுங்க.  எல்லாம் எழுதி இருக்கேன்.  அதோட சுப்புக்குட்டிங்க வேறே. விதம் விதமா வருங்க.  இப்போ இங்கே வந்தப்புறமா ஒரே ஒருநாள் எலியைப் பார்த்துப் பயமுறுத்தியதோடு சரி.  அவ்வப்போது ஹால்லே இருக்கும் பால்கனியில் தேன்சிட்டு வந்து உட்காரும்.  அதைப் படம் பிடிக்கணும்னு எழுந்தா ஓடிப் போயிடும்.

இப்போப் போன வாரத்திலே இருந்து கு"ரங்கார்" வந்துட்டு இருக்கார்.  போன வாரத்திலே ஒருநாள் வாசல் வராந்தாவுக்கு வந்து பால் வாங்கிட்டேனானு செக் பண்ணிட்டுத் திரும்ப நினைவா பாத்திரத்தை அதே போல் மூடி விட்டுப் போனார்.  மறுநாள் பிள்ளையாருக்கு மட்டுமா கொழுக்கட்டை? எனக்கு வடைகிடையாதானு வந்து கேட்டுட்டுப்போனார்.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் வரவு குறைந்திருந்தது.  ஞாயிறன்றிலிருந்து எல்லாக் கதவுகளையும் வழக்கம் போல் திறந்து வைக்க ஆரம்பித்தோம்.  நேத்து மத்தியானம் உள் அறையில் மேசைக்கணினியில் வேலை செய்யும்போது சமையலறைப் பக்கமிருந்து சத்தம் வரவே, சமையலறையின் வெளி வராந்தாக் கதவை இழுத்துச் சார்த்தினேன்.  அப்புறமா ஏதுமில்லை.

இன்னிக்குக் காலம்பரக் கஞ்சி தான்போட்டுட்டு இருந்தேன்.  சமையலறைக்கு வெளியே வாளியை யாரோ எடுக்கும் சப்தம்.  ரங்க்ஸோ மும்முரமான வேலை எதிலோ கவனமாக இருந்தார்.  ஆகவே அவர் இல்லை.  சந்தேகமா எட்டிப்பார்த்தா நம்ம நண்பர்.  நல்லவேளையா வாளியில் போட்டிருந்த துணிகளை எல்லாம் அலசிக் கிரில் கம்பியில் காய வைத்திருந்தேன்.  அதுக்கு ஏதும் கிடைக்கலை.  என்னைப் பார்த்ததும் உள்ளே வரலாமா என்கிறாப்போல் என்னையும் பார்த்து சமையலறையின் உள்ளேயும் பார்த்தது.  ரங்க்ஸைக் கூப்பிட்டேன்.  ஆனால் அவர் எழுந்து வரதுக்குள்ளே என்ன நினைச்சதோ ஒரே தாவு தாவி கிரில்லுக்கு வெளியே புகுந்து ஜன்னல் கைப்பிடியில் உட்கார்ந்து கொண்டு உலர்த்தி இருந்த துணிகளை எல்லாம் எடுத்துட்டு மறுபடி உள்ளே வரலாமானு யோசிக்க ஆரம்பிச்சது.

அதுக்குள்ளே ரங்க்ஸ் வந்து பார்த்து அதைச் செல்லமாகப் போடானு சொல்ல அது பல்லைக்காட்டியது.  பல்லைக் காட்டி பயமுறுத்தி இருக்குனு நினைக்கிறேன். அப்புறமா கம்பைத் தூக்கவும் ஒரே தாவாத் தாவிப் போய் விட்டது.  மறுபடி எல்லாக் கதவுகளையும் சார்த்திட்டு உட்கார்ந்துக்கறோம். :( நேத்திக்கு அம்மா வந்ததாலே இதை எங்கானும் கொண்டு விட்டிருந்தாங்களா இல்லாட்டி இதுவே அம்மாவுக்குப் பயந்துண்டு வெளியே தலைகாட்டலியா தெரியலை.  இன்னிக்கு மறுபடி வந்திருக்கு.


கொசுறு:  அம்மா வந்ததாலே நேத்திக்கு மின்வெட்டே இல்லைனு நினைச்சால் சாயந்திரம் ஆறரைக்கு வெட்ட்டிட்டாங்க.   இடியும், மின்னலும் இருந்ததும் ஒரு காரணம். :)


தடை செய்யப்பட வேண்டிய விளம்பரங்கள்:   Indian Men Wanted விளம்பரம் மற்றும் பார்லே மாரிகோல்டில் வரும் பெண்கள் பேசிக்கொள்ளும் அசிங்கமான கமென்ட்கள்!  ஃபேர் அன்ட் லவ்லி போட்டுக்கொண்டால் தான் தன்னம்பிக்கை பிறக்கும் என்னும் விளம்பரங்கள்.  ஆஃப்டர் ஷேவ் லோஷன் விளம்பரங்கள், ஒரு ஆண் செல்ஃபோனில் ஒரு பெண்ணைப் படம் பிடிக்கும் விளம்பரம், அதற்கு அந்தப் பெண் கொடுக்கும் மட்டமான காட்சிகள்.  காஜல் நடிக்கும் ஜெல்லி விளம்பரம்(இப்போ அதிகமா வரதில்லை) 

Monday, June 30, 2014

நானும் ஹிந்தி கற்றுக்கொண்டேன்!

பாஸ் பண்ணிடுவேன்னு நினைச்சேன். ஆனால் இப்படி ஒரு ரிசல்டை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  என்னோட நம்பர் முதல் வகுப்பில் இருந்தது.  எடுத்த உடனேயே இரண்டாம் வகுப்பில் நம்பரைப்பார்த்துத் தேடிக் கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் பார்க்கலாமா என யோசிக்கையில் கூட வந்த தம்பி முதல் வகுப்பில் என் நம்பரைப் பார்த்துட்டு, "அக்கா, இதோ இங்கே இருக்கு பார்!" என்று சொல்ல ஆச்சரியத்தில் நான் மயங்கி விழாத குறைதான்.  அதற்குள் சபாவில் இருக்கும் பெண்மணி விஷயத்தைப் புரிந்து கொண்டு மார்க் லிஸ்டையும் எடுத்துக் கொடுத்தார்.

முதல் ஐந்து பேர்களுக்குள்ளாக என் பெயரும் நம்பரும் வந்திருந்தது.  மதிப்பெண்களும் 75 க்கும் மேலே.  உடனே போய் வீட்டில் சொல்லிட்டு ஹிந்தி வகுப்புக்கும் போனேன்.  அங்கே போனால் லக்ஷ்மிஜி என்னைப் பார்த்துட்டுக் கண்டுக்கவே இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் வந்த கமலாஜி என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே போக ஒண்ணுமே புரியலை. அதுக்குள்ளே என்னோட சிநேகிதி வந்து, என் பக்கம் உட்கார்ந்து சபாவிலே போய் ரிசல்டைப் பார்த்தியானு கேட்க, முதல் வகுப்பில் பாஸாகி இருக்கும் விஷயத்தை நானும் சொன்னேன்.  உடனேயே என்னை லக்ஷ்மிஜியிடம் விஷயத்தைச் சொல்லும்படி சொன்னாள்.  ஏன், அவங்களும் பார்த்திருப்பாங்களேனு நான் மறுக்க, அவளோ கட்டாயப்படுத்தினாள்.

தொந்திரவு பொறுக்க முடியாமல் நான் எழுந்து முதல் வகுப்பில் நான் பாஸாகி இருக்கும் விஷயத்தையும், மதிப்பெண்களையும் சொல்லிட்டு லக்ஷ்மிஜிக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும் என்றும் கூறினேன்.  லக்ஷ்மிஜிக்குத் தூக்கிவாரிப்போட்டது.  நிஜமாவானு கேட்டவங்க, "நீ ஃபெயில் ஆகிட்டேனு சொன்னாங்களே!  அதான் உன்னைப் பார்த்ததும் என்ன சொல்றது, என்ன பேசறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்ல, கமலாஜியோ, "நான் இதை நம்ப மாட்டேன்.  இவ பொய் சொல்றா!"னு சொல்லிட்டாங்க.  நேத்து ரிசல்ட் பார்த்து வந்த பெண்ணைக் கூப்பிட்டுக் கேட்டதுக்கு அவ முதல் வகுப்பிலே யார் நம்பரையும்  தேடலை என்றும்  இரண்டாம், மூன்றாம் வகுப்பிலே மட்டும் பார்த்துட்டு வந்துட்டதாயும் சொன்னாள்.  பின்னர் கமலாஜியும், அந்தப் பெண்ணும் மறுபடி சபாவுக்குப் போனாங்க.  தானப்ப முதலி அக்ரஹாரத்திலே இருந்து சபா கிட்டத்தான்.

அவங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்ததிலே யாரை எல்லாம் ஃபெயில்னு அந்தப் பொண்ணு பார்த்திருந்தாளோ அத்தனை பேரும் பாஸாகி இருந்ததோடு ப்ராத்மிக் பெண்கள் மூவர் முதல் வகுப்பிலும் பாஸாகி இருந்தனர்.  பின்னர் மார்க் லிஸ்டையும் பார்த்துச் சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர்.  ஆனாலும் கமலாஜிக்கு என் மேல் இருந்த கோபம் முழுசும் போனதாகத் தெரியலை.  ஏன்னா ராஷ்ட்ரபாஷா முடிக்கிறதுக்குள்ளே எனக்குக் கல்யாணம் நிச்சயமாகி ராஷ்ட்ரபாஷா பரிக்ஷை எழுதின மூன்றே மாதங்களில் கல்யாணமும் ஆனதாலே ஹிந்தியை மேலே தொடரவில்லை.  அதிலே அவங்களுக்குக் கோபம். :) இதெல்லாம் படிச்சு உருப்படாதுனு ஆசீர்வாதம் பண்ணினதாக் கேள்விப்பட்டேன்.


அதுக்கப்புறமாக் குடும்ப சூழ்நிலையாலே ஹிந்தியைத் தொடரவே முடியாமல் போன நான் பொண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதும், பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கையிலும் என்னோட ஹிந்தி அறிவை வளர்த்துக்கொண்டேன். வட இந்திய உச்சரிப்புக்களும், பழமொழிகளுக்கான சரியான பொருளும் உறவின்முறைப் பெயர்களும், மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றின் பெயரும், அன்றாட வேலை செய்யும்போது குறிப்பிடும் வார்த்தைகள் எனத் தெரிந்து வைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் நான் மறுபடியும் ஹிந்தி ப்ரசார சபாவின் ப்ரவேஷிகா எழுதும்போது என்னோட பொண்ணு ஒன்பதாம் வகுப்புக்கு வந்துட்டா.  அவளிடம் தெரியாத சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.  இதோடு சேர்த்து சென்ட்ரல் ஹிந்தி டைரக்டரேட்டின் ஹிந்திப் பாடங்களும் படித்துப் பரிக்ஷையும் எழுதினேன்.  இதிலே நிறைய தொழில் நுட்ப வார்த்தைகள், அரசாங்கக் கோப்புகளுக்குப் பயன்படும் வார்த்தைகள், வாக்கியங்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதுக்காக சாஹித்யம் எழுதும் அளவுக்கெல்லாம் ஹிந்தி தெரியாது, பொதுவாகப் புரிஞ்சுக்கத் தெரியும், அம்புடுதேன்!

Saturday, June 28, 2014

நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!

இங்கே

நான் எழுதி முடிக்கிறதுக்குள்ளே ஹிந்தி ட்ரென்ட் போய் வேறே வந்துடும்; வந்தாச்சு! :)  ஆனாலும் விட மாட்டோமுல்ல!

மத்யமா பரிக்ஷைக்கு எக்கச்சக்கமாப் படிக்கணும். பெப்ரவரி இரண்டாம் சனி, ஞாயிறில் தான் ஹிந்திப் பரிக்ஷை இருக்கும். அதுக்குள்ளே தயாராகணும்.  ஒரு வசதி என்னன்னா, எங்க வீட்டிலே சாப்பாடு சூடா இருக்கணும்னு இல்லை.  காலம்பரவே சமைச்சுடலாம்.  பத்து மணிக்குச் சாப்பிட்டால் கூட ஆறிப் போச்சுனு சொல்ல மாட்டாங்க.  அதோட வெண்கலப்பானையில் சாதம் வைக்கணும்.  கல்சட்டி, ஈயச் செம்பில் குழம்பு, ரசம் பண்ணணும்.  எல்லாமே சூடு தாங்கும்.  ரொம்ப நேரம் சூடாக வைத்திருக்கும்.  ஆகவே ஏழு மணிக்குள்ளாகச் சமைச்சுட்டுக் கிளாஸுக்குப் போவேன்.  ஒன்பது, ஒன்பதரைக்கு வந்து சாப்பிட்டுட்டு டெய்லரிங் கிளாஸ், மத்தியானம் ஒரு மணிக்கு வந்தால் அப்பாவுக்கு டிஃபன், காஃபி கொடுத்தனுப்பணும்.  தம்பியும் அதே ஸ்கூல்லே படிச்சதால் அவன்ன் வந்து எடுத்துப் போவான்.  அதைத் தம்பி கிட்டே கொடுத்துடுவேன்.  டிஃபன் கடையும் முடிஞ்சுடும்.  அதே அடுப்பிலேயே ராத்திரிக்கு சாதம் வைச்சுடுவேன்.  எல்லாம் ஆக இரண்டரை மணி ஆயிடும். அதுக்கப்புறமாப் பக்கத்து வீட்டு அக்கா கிட்டே போய் ஹிந்தி படிப்பேன். அவங்க ப்ரவீன் ப்ரசாரக் படிச்சுட்டு அப்பா அனுமதி இல்லாததால் வீட்டிலேயே இருந்தாங்க.

தாத்தா வீட்டிலே இருந்து ஒரு பழைய ஹிந்தி- ஆங்கிலம்- தமிழ் அகராதியும் தற்செயலாக் கிடைச்சது.  அதையும் துணைக்கு வைச்சுட்டுப் படிச்சேன். அதுக்குள்ளே பொங்கல் பண்டிகைக்கு அம்மாவும் மதுரை வந்தாங்க.  கொஞ்சம் நேரமும் கூடக் கிடைச்சது.  பெப்ரவரியில் பரிக்ஷை எழுதி முடிச்சுட்டேன்.  ஏப்ரலில் ரிசல்ட் வந்துடும்.   தொடர்ந்து ராஷ்ட்ரபாஷா வகுப்புக்குப் போயிட்டு இருந்தேன்.  அப்போப் பார்த்து திடீர்னு ஜுரம் வர ஒரு வாரம் வகுப்புக்குப் போகலை. அதுக்குள்ளே தமிழ்ப் புத்தாண்டும் வந்தது. அன்னிக்குப் பெரியப்பாவைப் பார்த்து ஆசி வாங்கறதுக்காகப் பெருமாள் தெப்பக்குளம் அருகே இருந்த அவங்க வீட்டுக்குப் போனப்போ பெரியப்பா பொண்ணு ஹிந்தி ரிசல்ட் வந்தாச்சே, தெரியுமானு கேட்டாள்.  எனக்குத் தெரியாதுனு நான் சொல்லிட்டு, என் ரிசல்ட் பத்தி ஏதானும் அவளுக்குத் தெரியுமானு கேட்கவே பெரியம்மாவும், அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தெரியாதேனு சொல்லிட்டாங்க.  எனக்குச் சந்தேகம் முளை விட்டது.

சந்தேகத்தோடயே வீட்டுக்கு வந்தேன்.  வர வழியிலே என்னோட ஹிந்தி படிக்கும் இன்னொரு பெண்ணைப்பார்த்தேன்.  அவள் பாஸா என்று கேட்டதுக்குப் பாஸ் என்று சொன்னாள்.  என் ரிசல்ட் பத்திக் கேட்டதுக்கு அவளும் தெரியாதுனு சொல்லிட்டு நழுவப் பார்த்தாள்.  அவளை நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கேட்டதற்கு எதுக்கும் நீ சபாவிலேயே போய்ப் பார்த்துக்கோனு சொல்லிட்டா.  ஹிந்தி பிரசார சபாவின் கிளை அப்போ ராஜாபார்லி பேக்கரி இருக்கும் சந்தில் மாடியில் தான் இருந்தது.  ஆகவே மீண்டும் மேலகோபுர வாசலுக்கு வந்து அந்தச் சந்தில் போய் மேலே மாடிக்குப் போனேன்.  ரிசல்ட் வந்த லிஸ்டைக் கேட்டேன்.  என்னோட நம்பரைக் கேட்டுட்டு அந்தக் குறிப்பிட்ட மத்யமா ரிசல்ட் வந்திருக்கும் பேப்பரை மட்டும் எடுத்துக் கொடுத்தாங்க.  ஆஹா என்ன ஆச்சரியம்!  நிச்சயமா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை தான்! 

Tuesday, June 24, 2014

கால் தான் திப்பிசம் பண்ணுதுனா மூளை கூடவா?

அப்பாடா, ஒரு மாசமாச்சு, இணையத்துக்கு அவ்வப்போது வந்தாலும் தொடர்ந்து உட்கார முடியலை.  காலில் பிரச்னை.  வலி நிவாரணிகளை எடுத்துக்க மருத்துவர் தடை செய்திருப்பதால் அரை மணி உட்கார்ந்தா ஒன்றரை மணி படுக்கை.  :) இதுக்கு நடுவிலே சமையல், சாப்பாடு, இத்யாதி, இத்யாதி!

அப்புறமா ரொம்ப யோசிச்சு ஆயுர்வேத மருத்துவர் கிட்டே போனேன்.  அவர் மருந்துகள் கொடுத்ததோடு கடுமையான உணவுக் கட்டுப்பாடும் சொல்லி இருக்கார். நேத்து ராத்திரி தூக்கம் சரியில்லைனாலும், காலில் கணிசமாகப் பிரச்னை குறைஞ்சிருக்கு.  என்றாலும் இன்னமும் முழுதும் சரியாகலை.  நாளாகும்னு சொல்லிட்டார்.   ஆனால் பாருங்க,  என்னோட பதிவைப் படிக்க முடியாமல் ரசிகப் பெருமக்கள் எல்லாம் தவிப்பாங்களேனு அவ்வப்போது வந்து மொக்கை போஸ்ட் மட்டும் போட்டுட்டுப் போறேன்.   பல மடல்கள் பார்க்கவே இல்லை.  இனிமேல் தான் பார்க்கணும்.  போற அவசரத்திலே இப்போ சில திப்பிச வேலைகள் சொல்லவா?  இதுக்கெல்லாம் எழுதி வைச்சுக்காமப் பத்தே பத்து நிமிஷத்திலே ஆன்லைனிலே கிறுக்கிட்டுப் போயிடலாம்! :)))))


1.மாவடு ஊறுகாய் போடறீங்களா?  மாவடு தீர்ந்து போய் அந்த ஜலம் மட்டும் மிச்சம் இருக்கா?  கவலை வேண்டாம்.  கொஞ்சம் ஜலத்தை எடுத்து ஒரு வாளியில் விட்டு நீர் கலந்து பித்தளை, வெண்கலத்தை ஊற வைங்க!  அரை மணி கழிச்சு எடுத்துத் தேய்ச்சால் பித்தளையும் வெண்கலமும் தங்கம் போல் பளபள!

மாவடுக்கு மேல் ஜலம் நிறையவே இருக்கும்.  ஆகவே பித்தளை, வெண்கலம் தேய்ச்சால் கூட ஜலம் மிச்சம் இருக்கும் தான்.  அதை என்ன பண்றதாம்?  ஒண்ணும் வேண்டாம்!  ஒரு கிலோ பச்சைச் சுண்டைக்காய், ஒரு கிலோ மணத்தக்காளிக்காய், ஒரு கிலோ மிதுக்க வத்தல் காய்(துமட்டிக்காய்) வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சுண்டைக்காயையும், துமட்டிக்காயையும் மட்டும் கொஞ்சம் கீறி விட்டுட்டுத் தனித்தனியாக எல்லாவற்றையும் மாவடு ஜலத்தில் ஊற வைங்க. தினம் கிளறி விடவும். ஒரு வாரத்துக்கப்புறமா எடுத்து வெயிலில் காய வைங்க.  காரம் இன்னும் வேணும்னா ஜலம் முழுசும் வற்றும் வரை அதிலேயே திரும்பத் திரும்பப் போடலாம். இந்த வற்றலை வறுத்துச் சாப்பிட்டுப்பார்த்தால் அப்புறமா இதுக்காகவே மாவடு ஊறுகாய் போட ஆரம்பிப்பீங்க!  வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவையும் வாங்கி அலம்பி நறுக்கி ஒரு நாள் வெயிலில் காய வைச்சுட்டுப் பின்னர் மாவடு ஜலத்தில் ஊற வைக்கலாம்.   நம்ம ரங்க்ஸ் பச்சை மிளகாயை இப்படிப் போடலாமானு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டிருக்கார்!  இந்த வருஷத்து மாவடு ஜலம் தேமேனு உட்கார்ந்து இருக்கு; பார்க்கலாம்!

2.ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவை எல்லாம் பாவப்பட்ட உணவுகள்.  அதிகம் வேண்டப்படாத உணவுகள்.  என்றாலும் பண்ணுவீங்க தானே?  என்ன?  மிஞ்சிப் போறதா?  ம்ஹூம், இதுக்கெல்லாமா கவலைப்படறது?

உங்க வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு ஒன்றிரண்டு உருளைக்கிழங்கு வேக வைச்சு எடுத்துக்குங்க.  ப்ரெட் இருக்கா வீட்டிலே?  இருந்தால் 2 ஸ்லைஸ் ப்ரெட் எடுத்துக்குங்க.  இரண்டையும் நன்கு பிசைங்க.  லேசாக கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, பச்சைக் கொத்துமல்லி (இருந்தால்) சேர்த்துக்குங்க.  மிச்ச உப்புமாவோட இந்தக் கலவையை நன்கு கலக்குங்க.  தோசைக்கல்லில் இதைக் கட்லெட் மாதிரித் தட்டி  இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைங்க. 

தக்காளி சாஸோட சாயந்திரம் குழந்தைங்களுக்குப் புது டிஃபனா இதைக் கொடுக்கலாம்.  தக்காளி சாஸ் இல்லைனா நாலைந்து பேரிச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைச்சு ஒரு ஸ்பூன் மி.பொடி, ஒரு ஸ்பூன் உப்பு,  கொஞ்சம் வெல்லம் ஆகியவற்றோடு மிக்சியில் நன்கு அரைத்து வறுத்த ஜீரகப் பொடியைப் போட்டுக் கலக்கி வைத்துக் கொண்டு அதை விட்டுக் கொடுக்கலாம்.

பச்சைக்கொத்துமல்லி இருந்தா சட்னி அரைச்சு அதுவும் சேர்க்கலாம்.  என்ன ஒரு முக்கியமான விஷயம்னா இது காலம்பர செய்த உப்புமானு உங்களுக்கும், எனக்கும் மட்டுமே தெரிந்ததாய் இருக்கணும்.  உப்புமா சாப்பிடாமல் தட்டிக் கழிச்சதுக்குப் பழி வாங்கினாப்போலயும் ஆச்சு; உப்புமாவும் வீணாகாது.  இதே மாதிரி அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவற்றையும்  இதே போலத் திப்பிச வேலை செய்யலாம்.


3.போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சிப் போயிருக்கா?  அதுக்கும் கவலைப்பட வேண்டாம்.  உங்க வீட்டிலே அது பழசுனு வெறுத்து ஒதுக்கினவங்களைச் சாப்பிட வைக்கலாம்.


ஒரு கிண்ணத்தால் மிச்சம் இருக்கும் ஆவக்காய் ஊறுகாயை அளந்துக்குங்க.
அல்லது பாட்டிலில் முக்கால் பாட்டில் இருந்தால் அதைக் கணக்கு வைச்சுக்குங்க. 

கால் கிலோவுக்குக் குறையாமல் பாகு வெல்லத்தை எடுத்துக் கொஞ்சமா நீர் சேர்த்து அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சுங்க.  மிளகு பதம் வந்ததும் கீழே இறக்கிப் பாகை ஆற வைங்க.  ஆறிய பாகில் ஆவக்காய் ஊறுகாயைப் போட்டு நல்லாக் கிளறுங்க.  கொஞ்சம் சோம்பு(வேண்டுமென்றால்), கொஞ்சம் ஜீரகம் (கட்டாயம்) வறுத்துக் கொண்டு அந்தப் பொடியை அந்த ஊறுகாயில் போட்டு நல்லாக் கிளறுங்க.

குஜராத்தி டைப் ஊறுகாய் இதுனு சொல்லிச் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக்க வைச்சுக்கலாம்.  எப்படிப் பண்ணினேன்னு கேட்டால் மட்டும் வாயே திறக்கக் கூடாது!  ஆமாம், சொல்லிட்டேன்! :)))))

Monday, June 23, 2014

என் சமையலறையில் நீ ஹிந்தியா, தமிழா!

அதோடு விட்டுடுவோமா? எட்டாம் கிளாஸுக்கு அப்புறமா ஹிந்தி இல்லை தான்.  ஆனால் மறந்தெல்லாம் போகலை.  பத்தாம் வகுப்பில் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய.  தமிழ், ஆங்கிலம், அறிவியல்,  டைப் ரைட்டிங், புக் கீப்பிங் + அக்கவுன்டன்சி, காமர்ஸ், கமர்ஷியல் ஜியாக்ரஃபி, எகனாமிக்ஸ்,  எல்லாமும் உண்டு.  மொத்தம் எட்டுப் பாடங்கள். ஆகவே தனியாக ஹிந்தி வகுப்பில் எல்லாம் சேர முடியலை.  இத்தனைக்கும் அப்பா ஒரு வார்த்தை சபாவில் சொன்னால் ஃபீஸே வாங்க மாட்டாங்க.  இலவசமாய்ப் படிக்கலாம். அப்படி எல்லாம் அப்பாவும் போய்க் கேட்க மாட்டார்.  எனக்கும் நேரம் சரியாக இருந்தது.

பள்ளி இறுதிக்கப்புறமா காலேஜோ, பாலிடெக்னிக்கோ இல்லைனு ஆனப்புறமா, தனியா டிப்ளமா இன் காமர்ஸ் பண்ணலாம்னு வீட்டுக்கு எதிரே இருந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  முதல் காரணம் ஃபீஸ் என்னிடம் வாங்கவில்லை.  புத்தகங்கள் அப்பாவின் நண்பர் ஜாக்கி ராயர் என்பவர் இலவசமாகக் கொடுத்திருந்தார்.  அதோடு மாமாக்கள் படித்த புத்தகங்கள் எல்லாமும் கிடைத்தன.  அக்கவுன்டசிக்கும், நோட்ஸ் எழுதவும் நோட்டுக்கள், பேனா, பென்சில் தான் தேவை.  அவற்றையும் எப்படியோ வாங்கிக் கொண்டாச்சு.  அக்கவுன்டசி ஹையர் நேரிடயாகப் போகலாம்னாலும் நான் லோயர் பாஸ் பண்ணிட்டே போறேன்னு வாத்தியாரிடம் சொல்லிட்டேன். இதில் என் அப்பாவுக்குக் கோபம் தான்.  ஆனாலும் எனக்கு அஸ்திவாரம் கொஞ்சம் பலமா இருக்கணும்னு ஆசை. 

அதோடு டைப்பிங் ஹையர் நேரிடையாகப் போகவும், ஷார்ட்ஹான்ட் எழுதவும் பயிற்சி எடுத்தேன்.   இது எல்லாம் ஒன்பது மணிக்கு முடிஞ்சுடும். அதுக்கப்புறமா மத்தியான நேரத்தில் சும்மா இருக்கக் கூடாதுனு தையல், எம்ப்ராய்டரிங் சேர்ந்தேன்.  எங்க தெருவுக்கு அடுத்த தெரு தானப்ப முதலி அக்ரஹாரத்தில் இருந்த  ஹிந்தி பிரசார சபாவின் மாலை நேர வகுப்பில் ஹிந்தியும் சேர்ந்து கொண்டேன்.  அங்கே அப்போது இருந்த லக்ஷ்மிஜி என் அப்பாவுக்குத் தெரிந்தவர்.  நான் ஹிந்தி தடங்கலில்லாமல் படிப்பதைப் பார்த்துட்டு, நேரிடையாக ராஷ்ட்ரபாஷா எழுதிட்டு, அப்புறமா ப்ரவேஷிகா போகலாம்னு சொன்னார்.  ஆனால் அவரின் உதவிக்கு இருந்த கமலாஜிக்கோ என்னை  ப்ராத்மிக் கிளாசில் இருந்து ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும் என்றே ஆசை.

இருவருக்கும் ஒரு தீவிர வாக்குவாதம் நடந்து முடிந்து கடைசியில் மத்யமாவுக்கு நேரிடையாகச் சேர்க்கலாம்னு லக்ஷ்மிஜி முடிவு செய்ய, கமலாஜி அரை மனசாகத் தலை ஆட்டினார்.  நான் சேர்ந்தது நவம்பரில். பெப்ரவரியில் பரிக்ஷை ஆரம்பம்.  டிசம்பரில் பணம் கட்டணும்.  ஹிந்தி டீச்சருக்கு ஃபீஸ்  இல்லை தான்.  அங்குள்ள ஆன்மிக சங்கம் சார்பில் இலவசமாய்க் கற்றுக் கொடுத்தாங்க.  ஆனால் டீச்சர் கிட்டே தனியாக் கொடுத்தால் வாங்கிப்பாங்க.  இல்லைனா இல்லை தான். ஆனால் பரிக்ஷை எழுத சபாவுக்குப் பணம் கட்டியே ஆகணும்.  அப்போ மத்யமாவுக்கு 3 ரூபாயோ, 5 ரூபாயோனு நினைக்கிறேன்.  ஆனால் அதுவே பெரிய தொகை தான்.  ஆகவே பெப்ரவரியில் பரிக்ஷை எழுத வேண்டாம்; ஏற்கெனவே பாடங்கள் முடிஞ்சுடுத்துனு அப்பா கிட்டே சொல்லி அடுத்த செப்டெம்பரில் எழுதறேன்னு சொல்லிப் பார்த்தேன்.  அப்பா ஒரே எகிறு எகிறினாரே பார்ப்போம். 

"உனக்கென்ன ஹிந்தி தெரியாதா?  இப்போ உடனே மத்யமாவுக்கோ, ராஷ்ட்ரபாஷாவுக்கோ பணம் கட்டிப் படிக்கிறதானால் படி;  இல்லைனா படிப்பே வேண்டாம்."

வழக்கமான பிரம்மாஸ்திரம்.  என்ன செய்யறதுனு புரியலை.  லக்ஷ்மிஜியோ தைரியமாப் பணம் கட்டு, நீ பாஸ் ஆயிடுவேனு சொல்ல கமலாஜியோ 10 மார்க்குக் கூட வராது.  இதுவரை நாம அனுப்பின எல்லோருமே பாஸ் ஆகிட்டு இருக்காங்க.  இதுக்கு ஃபெயில் மார்க் தான்கிடைக்கும்னு ஆசீர்வதிக்க, நேரு பிள்ளையார் மேலே பாரத்தைப் போட்டுட்டுப் பரிக்ஷைக்குப் பணம் கட்ட முடிவெடுத்தேன்.  ஆனால் ராஷ்ட்ரபாஷா இல்லை.  மத்யமா தான்.  மூன்று, நான்கு புத்தகங்கள் படிக்கணும்.  அதைத் தவிர இலக்கணம் தனி. எல்லோருக்கும் குழம்பும் ஹிந்தி இலக்கணம் எனக்குக் குழப்பவில்லைனாலும் பரிக்ஷைக்கு எழுதற அளவுக்குப் படிச்சகணுமே! 

மொழிபெயர்ப்பு வேறே தனியா இருக்கும்.  என்ன செய்யப் போறேன், பகவானே!  புத்தகங்கள் போன முறை மத்யமா படிச்ச பொண்ணு கிட்டே வாங்கிட்டேன்.  நான் படிச்சுட்டு அடுத்துப் படிக்கிறவங்களுக்கு இதே போல் இலவசமாக் கொடுக்கணும்.  இதான் நிபந்தனை.  புஸ்தகமெல்லாம் வாங்கியாச்சு.  டிசம்பரில் அக்கவுன்டசி பரிக்ஷை, டைப்பிங் பரிக்ஷை. நல்ல வேளையா ஷார்ட் ஹான்ட் ப்ராக்டிஸ் என்னும் நிலையிலேயே இருந்தது. பரிக்ஷைக்குத் தயார் ஆக இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகலாம். இத்தனைக்கும் நடுவிலே ஹிந்தியும் படிச்சாகணும்.  அந்த நேரம் பார்த்து ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குச் சமைச்சுப் போடணும்னு அம்மாவும் ஹோசூர் போயாச்சு.  சமையலறையும் என் பொறுப்பில்!


ஹிந்தி போஸ்ட் விடமாட்டோமுல்ல! 

Saturday, June 21, 2014

நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!

நான் முதல்லே ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சது ஆறாம் வகுப்பில் இருந்து.  அப்போல்லாம் ஸ்டாண்டர்ட் ஆரம்பிக்கலை.  ஆகவே அது ஃபர்ஸ்ட் ஃபார்மாக இருந்தது. ஹிந்தி சொல்லிக் கொடுத்தது ராதானு ஒரு டீச்சர். அ, ஆ, இ, ஈ இல் இருந்து க, ங, ச, ஞ, ட, ண, ன, ப, ம, ய, ர, ல, வ, ஹ, ஷ, ஸ, ஹ வரைக்கும் ஒழுங்கா எழுத வந்தது.  அப்புறமாத் தான் விதியின் விளையாட்டு ஆரம்பம். வார்த்தைகள், வாக்கியங்கள்னு ஆரம்பம். வார்த்தைகளிலேயே தகராறு வர ஆரம்பிச்சது. खाना   என்றால் சாப்பாடுனும் வரும். சாப்பிடுவது எனவும் வரும். டிக்டேஷனில் நான் எழுதினது काना என்று. இப்படி முதல் ப போட வேண்டியதில் இரண்டாவதும், மூன்றாவது Ba  போடுவதற்கு நான்காவதும் Bha போட்டு எழுதிட்டேன்.

சின்னப் பொண்ணுனு டீச்சர் முதல் முறை மன்னாப்புக் கொடுத்துட்டாங்க. அப்புறமா பிராகிரஸ் ரிப்போர்ட் தயார் பண்ணணும்னு மறுபடி என்னை மாதிரிச் சரியா எழுதாதவங்களுக்கு டெஸ்ட் வைச்சாங்க.  அதிலேயும் சொதப்பல். பயந்து கொண்டே டீச்சரிடம் நோட்டை நீட்டினேன்.  நீட்டினேனோ இல்லையோ, கையைக் காட்டுனு டீச்சர் மிரட்டல். கையை நீட்டினேன்.  பெரிய ஸ்கேலால் அடி ஒன்று விழுந்து துடித்துப்போய் விட்டது.  மோதிர விரலிலோ, பாம்பு விரலிலோ பட்டு வீங்கவும் ஆரம்பிச்சது.  ஆனாலும் டீச்சருக்குக் கோபம் அடங்கவில்லை. ஏனெனில் அவங்க தான் என்னை ஸ்கூலில் சேர்க்கையில் பெயர்க் குழப்பம் வந்தப்போ என்னோட தேர்வுப் பேப்பர்களை எல்லாம் பார்த்துட்டு நான் நல்லாப் படிப்பேன்னு தெரிஞ்சு வைச்சிருந்தார்.  அதனால் அத்தனை மாணவிகளிலும் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு என்னைத் தெரியும்.  அவங்களோட நல்ல எண்ணத்திலே நான் மண்ணை வாரிப் போட்ட கோபம்.

"யாருடி உங்க அப்பா? என்ன பண்ணறார்?"

"சேதுபதி ஹைஸ்கூலில் ஹிந்தி டீச்சர்!"

"என்ன?  ஹிந்தி டீச்சர் பொண்ணா இப்படி எழுதறே?  வீட்டிலே அப்பா சொல்லிக் கொடுக்க மாட்டாரா?"

என்னத்தைச் சொல்றது.  அப்பா அதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்.  ஸ்கூல்லே என்னத்தைக் கவனிச்சேனு சத்தம் போடுவார். எந்தப் பாடமும் எங்களுக்கு அப்பா சொல்லிக் கொடுத்ததே இல்லை. :) அம்மா தனக்குத் தெரிந்த ஹிந்தியை வைச்சு எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.  டீச்சர் கிட்டே அடி வாங்கிண்டு வீட்டுக்கு வந்தப்போவும் அப்பா என்னைத் தான் திட்டினார். சரியாப் படிக்கலைனா படிப்பை நிறுத்திடுவேன் என்னும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் வழக்கம் போல்.

அதுக்கப்புறமா முனைந்து படிச்சேன். அடுத்த ஒரு மாதத்துக்குள்ளே ஹிந்தியில் 80% க்கு மேல் வாங்கும்படியாகப் படிக்க ஆரம்பிச்சேன். அப்போல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யில் ஹிந்தியும் ஒரு கட்டாயப் பாடம். ஆனால்  எனக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் அதாவது மூன்றாவது ஃபார்ம் படிக்கையில் ஹிந்தி இருந்தது.  அதுக்கப்புறமா ஹிந்தியை எடுத்துட்டாங்க.  என்றாலும் தெரிந்த இந்த ஹிந்தியை வைச்சுட்டே, நான் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபா பரிக்ஷைகளில் தேர்வு எழுத முடிந்தது.  ஆனால் அங்கே சொல்லிக் கொடுப்பதற்கும் நடைமுறை வாழ்வில் ஹிந்தி பேசுவதற்கும் உள்ள மாபெரும் வேறுபாடு முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ தான் புரிஞ்சது.

உச்சரிப்பே இங்கே தப்புத் தப்பாய்த் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. பல சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் Idioms and phrases (இதுக்குச் சரியான தமிழ் வார்த்தைகள் தேடினப்போக் கிடைச்சது, சாட்டு வாக்கியங்கள் என்று விக்கி சொல்கிறது) போன்றவற்றுக்கு இங்கே சொல்லும் பொருள் அதன் உண்மையான பொருளில் இருந்து மாறுபட்டது.  இதை அங்கே  போனதுமே புரிந்து கொண்டதோடு அல்லாமல் எங்க பொண்ணு அங்கே கேந்திரிய வித்யாலயாவில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சப்புறம் நல்லாவே புரிஞ்சது. அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் நான் மீண்டும் ஹிந்தி கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் மிகை இல்லை. அதைத் தனியா வைச்சுப்போம்.


இப்போ மோதி அரசு என்னமோ ஹிந்தித் திணிப்பை உருவாக்குவதாக ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த அமர்க்களத்தின் நடுவில் அவங்க மறுப்புக் கூட உண்மையானதில்லைனு சொல்லிட்டு இருக்காங்க.  அப்படி ஒரு அரசாணை இருந்தால் அந்த அரசாணையின் காப்பியை எவரானும் வெளியிட்டிருக்கலாமே?  அதெல்லாம் ஒண்ணும் வரலை.  ஆனாலும் என்னமோ தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும்  தீனி கிடைச்சுட்டு வருது!  :)))))))))  உண்மையிலே தமிழ்நாட்டிலே பெரும்பாலோர் வேலை தேடி வெளிமாநிலம், அரபு நாடுகள்னு போறதாலே கட்டாயமாய் ஹிந்தி கத்துக்கத் தான் செய்யறாங்க.  ஹிந்தி சினிமா, ஹிந்தி சினிமாப் பாடல்கள்னு எல்லாத்தையும் ரசிக்கும் நாம் மொழியை மட்டும் ஏன் வெறுக்கிறோம்னு புரியலையே?


ஹிஹிஹி, இப்போ ஒரு வாரமா இணையத்தின் ட்ரென்ட் ஹிந்தி மொழி பற்றியே.  ஆகவே அதை மீறாமல் ஹிந்தி பத்தி போஸ்ட் போட்டாச்சு!