எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 13, 2014

தலை அலங்காரம் புறப்பட்டதே!



மின் தமிழில் பேராசிரியர்  நாகராஜன் அவர்கள் அந்தக் காலத்துத் தலை அலங்காரத்தைக் குறித்த படங்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருந்தார்.  இதைப் பார்த்ததும் எனக்கு என்னோட தலை அலங்காரங்கள் எல்லாம் நினைவில் வந்து கன்னாபின்னாவென மோதிக் கொண்டு இப்போ இருக்கும் அலங்காரத்தைக் கலைக்கப் பார்த்தன. ஆஹா இப்பூடி விடக் கூடாதேனு அதைக் குறித்து எழுதிடலாம்னு நினைச்சேனா.  உடனே செயல்படுத்தியாச்சே!  18 ஆம் எண்ணின் சிறிய படத்து முதல் அலங்காரம் ஆன இரட்டைச் சாட்டை அளவுக்கு நீளம் இல்லாட்டியும் இரட்டைப் பின்னல் பின்னிக் கொண்டு மடிச்சுக் கட்டறது 50களின் கடைசியிலும் 60 களின் ஆரம்பத்திலும் பிரபலமான ஃபாஷன்.  "கல்யாணப்பரிசு" சரோஜா தேவி ஸ்டைல்னு சொல்வாங்க.  நாங்களும் அப்படிப் போயிருக்கோமுல்ல!

அதே பதினெட்டின் வைரஜடை முன்புறம், பின்புறம் (19 ஆம் எண்) படங்களில் இருக்கிறாப்போல் அலங்காரக் கொடிப்பின்னல் வாங்கி வைச்சிருக்கோமாக்கும்.

16, 17 ஆம் எண்ணிலுள்ள இரட்டைச் சடை அரைப்பின்னல் நமக்கு ரொம்பவே இஷ்டமாயிட்டு.  வீட்டிலே இருந்து போறச்சே மடிச்சுக் கட்டிண்டு போயிட்டு ஸ்கூல் போனதும் தோழிகள் அவிழ்த்து அரைச்சடையாகப் பின்னித் தொங்க விடுவாங்க.  மறுபடி வீட்டுக்குப் போறச்சே சேம் விளையாட்டு விளையாடிட்டுப் போகணும். :)))) அதென்னமோ அரைப்பின்னல் பின்னித் தொங்கவிட்டால் கோபம் வரும் எல்லாருக்குமே! ஏன்???  இரட்டையாகப் பின்னலைப் பின்னிட்டுப் பின் அதை ஒற்றையாகச் சேர்ப்பாங்க.  எனக்கு என்னமோ அந்தப் பின்னல் பிடிக்காது. :)




எட்டாம் படத்தின் இரட்டைப் பிச்சோடாவும் சரி ஒன்பதாம் படத்தின் சுருள் பின்னலும் சரி, நவராத்திரி ஸ்பெஷலாகப் பின்னிட்டிருக்கோம்.  இதுக்காக ஸ்கூலுக்கு லீவெல்லாம் போட்டுட்டு வீட்டுக்கு வந்த அனுபவம் எல்லாம் உண்டு. அதே போல் பிரிமணை வத்தும் கொண்டை போட்டுக் கொண்டதுண்டு.  எங்க அப்பா, அம்மாவின் சிநேகிதி ஒருவர் செல்லம்மா அக்கா என்பவர் மணிபர்ஸ் பின்னல் என்றொரு பின்னல் பின்னுவார். அது இந்த ஏழாம் படத்தின் பாப் தலை போலத் தான் இருக்கும். இதைத் தவிர எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆற்றுப் பின்னல்னு பின்னிப்போம்.  எனக்குக் கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்து மூணு வருஷத்துக்கு அப்புறமா என் கணவரோட அத்தை எனக்குத் தாழம்பூ வைச்சுப் பின்னி விட்டாங்க.  அவங்க ஊரான கீழத்தஞ்சாவூரில் இருந்து எங்க புக்ககம் ஆன கருவிலி-பரவாக்கரைக்கு அந்தத் தாழம்பூப் பின்னலோடு வந்திருக்கேன்.  ஹிஹிஹி, சின்னப் பொண்ணு தானே!  அதனால் அப்போல்லாம் ஒண்ணும் புரியலை!




இந்த மலையாளக் கொண்டை போட்டுக் கொண்டது இல்லைன்னாலும் கிருஷ்ணன் கொண்டை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கே போயிருக்கேன். இதுவும் நவராத்திரி ஸ்பெஷல் தான். வலைக் கொண்டைனு நெட் வைச்சுக் கொண்டை போட்டிருக்கேன்.  அந்த வலையிலே வித விதமான மணிகள், சம்க்கிகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.  இந்த அள்ளிச் சொருகிய கொண்டைக்குத் தான் இன்னி வரைக்கும் என் தலை மயிர் சொன்னதைக் கேட்டது இல்லை. :))) எப்படிச் சொருகிக் கொண்டாலும் அவிழ்ந்து விடும்.  இதோடு இல்லாமல் மல்லிகைப் பூக்காலத்தில் குறைந்தது இருமுறையாவது பூத்தைத்துப் பின்னல் போட்டுக் கொண்டிருக்கிறேன்.


குஞ்சலங்கள் வித விதமாக வைத்துக் கொண்டிருக்கேன். சிவப்புக் குஞ்சலம், கறுப்புக் குஞ்சலம், குஞ்சலத்திலேயே ஜரிகை சுற்றியது, மணிகள் வைத்ததுனு விதவிதமான வெல்வெட்டுக் குஞ்சலங்கள் வைத்திருந்தேன். சில குஞ்சலங்களில் சவுரி மாதிரி நீளமாகக் கயிறுகள் தலைப் பின்னலிலேயே வைத்துப் பின்னும்படியும், நுனியில் பிசிர் பிசிராகவும் இருக்கும்படியாக உண்டு.  அந்தக் குஞ்சலங்கள் எனக்குப் பிடித்ததில்லை.  அநேகமாக உருண்டைக் குஞ்சலங்கள் தான்.  ஆண்டாள் கொண்டை போட்டுக் கொண்டு அதிலே நடுவிலே ராக்கொடி அல்லது சூர்யப்ரபை, சந்திரப்ரபை, ஜடைபில்லை ஏதானும் ஒன்றை வைத்துத் தைத்துக் கொண்டு ஜிமிக்கியை அதில் கட்டித் தொங்க விடுவாங்க. நாம் பேசும்பொதெல்லாம் தலைக்கொண்டையில் அது அழகாக ஆடும்.  இந்த அலங்காரங்கள் எல்லாம் செய்து விடுவது எங்க வீட்டில் வீட்டு வேலைக்கு உதவிக்கு இருந்த சுப்பம்மா என்னும் அம்மா தான்.  வளையல்கார நாயக்கர்களான அவங்களோட கைவண்ணம் இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  மீனாக்ஷி கோயிலுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் கட்டளையும், வளையல் திருநாளில் வளையல்கள் அளிக்கும் கட்டளையும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தது.  எங்க வீட்டு வளைகாப்புக்கெல்லாம் அவங்க வீட்டிலே இருந்து வந்து தான் வளை அடுக்குவாங்க.    எல்லாரும் பார்த்து ரசிங்க. ஒரு வழியாப் பல நாட்கள் கழிச்சு ஒரு கொசுவத்தி சுத்தியாச்சு! :)))))

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ---5

அலுவலகம் சென்ற ரவிக்கு அங்கே வேலையிலே மனம் செல்லவே இல்லை.  மதியம் வரை தவித்துக் கொண்டிருந்தான்.  பின்னர் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வீட்டிற்கு அவசரமாகக் கிளம்பினான். வீடு வந்து சேர்ந்த ரவிக்கு அதன் அமைதியும் நிசப்தமும் கொஞ்சம் சங்கடப் படுத்தியது.  நேரே தன் பையன் படுத்திருந்த இடத்துக்குச் சென்றான்.  அங்கே கட்டிலில் பையன் படுத்திருந்தான்.  நான்கு வயது சுஜா தானே தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.  அவளைத் தூக்கி முத்தமிட்டான் ரவி.  தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம் கட்டிலில் படுத்திருந்த மகன் அருகே அமர்ந்து அவனைத் தொட்டுப் பார்த்தான்.  ஜுரம் குறைந்திருந்தது.  அவன் தொட்டதும் பிள்ளை விழித்துக் கொண்டான்.  அவனிடம் உடல்நிலை குறித்து விசாரித்த ரவி மனம் அமைதி அடைந்தது. பின்னர் அவனை அன்று முழுதும் படுத்து ஓய்வு எடுக்கும்படி சொல்லிவிட்டு, சாந்தி எங்கே எனக் கேட்டான்.

"அம்மா, பாப்பாவுக்கும் ஜுரம் வந்துடும்னு அதைத் தனியாக எடுத்துட்டுப் போய்த் தூங்க வைச்சிருக்காங்க." என்றான் பையன்.  போகட்டும் இந்த மட்டும் அந்தக் குழந்தை பக்கத்தில் இல்லையே என சந்தோஷப்பட்டான் ரவி. அன்று இரவுப் பொழுது உணவருந்தும் நேரம் அமைதியாகக் கழிந்தது.  ரவி தன் சமீபத்திய வழக்கப்படி தனியே படுக்கச் சென்றான்.  எத்தனை நாளைக்கு இப்படித் தனியே படுப்பார்; அதையும் பார்த்துவிடலாம் என சாந்தி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.  வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவளும் சின்னக் குழந்தைக்குப் பாலைக் கொடுத்தாள்.  படுக்கை அறையிலிருந்து பையன் கூப்பிடும் சப்தம் கேட்டது.  அங்கே சென்று அவனைக் கவனித்தாள்.  இரவுக்கான மருந்துகளைக் கேட்டான் பையன். கைக்குழந்தையை அங்கேயே படுக்கையில் விட்டுவிட்டு மருந்துகளை எடுத்துக் கொடுத்தாள் சாந்தி. அப்போது தொலைபேசி அழைக்க அப்படியே விட்டு விட்டு அதை எடுக்கச் சென்றாள் சாந்தி. பெரியவன் மாத்திரையைச் சாப்பிடுடா எனச் சின்னவனிடம் சொல்ல, ஏதோ தூண்டி விடப் பட்டவன் போலச் சின்னவன் அவனையே பார்த்தான்.  படுக்கையில் குழந்தை கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அதை சமாதானம் செய்தான் பெரியவன்.  குழந்தை அவனையே பார்த்தது. தன்னையும் அறியாமல் அவன் மருந்து அலமாரியை நோக்கி நடந்தான்.

அவன் முதுகை இரு கண்கள் துளைப்பது போல் இருந்தது.  அது தாங்க முடியாமல் அவன் ஒருஇயந்திர ரீதியாக நடந்து சென்றான்.  அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட பாட்டிலில் உள்ள மாத்திரைகளைக்கைகளில் கொட்டிக் கொண்டான்.  அவற்றை அப்படியே எடுத்து வந்து தம்பியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.  இனம் தெரியா மயக்கத்தில் ஆழ்ந்திருந்த சின்னவனும் மாத்திரைகளைச் சாப்பிட்டான்.  இருவரும் படுத்தனர்.  சுஜா தனிக்கட்டிலில் படுத்திருக்க அண்ணன், தம்பி இருவரும் ஒரு கட்டிலைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.  நடுவே அந்தக் குழந்தை ஷோபா படுத்திருந்தாள். சற்று நேரத்தில்   சாந்தியும் அங்கே தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு வந்தாள்.  பிள்ளைகள் இருவரும் படுத்திருப்பது கண்டு திருப்தியுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.  இருவரையும் தூங்கச் சொல்லிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைக்குப் போர்த்திவிட்டு விட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.  இரவுப் பொழுது எவ்விதமான சங்கடங்களும் இல்லாமல் நிம்மதியாகக் கழிவது கண்டு அவளுக்கு மகிழ்ச்சி.  இந்த நேரம் ரவி அருகில் இருந்தால்???? ரவியைச் சென்று பார்த்தாள்.  அவன் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க எழுப்ப மனமில்லாமல் திரும்பிச் சென்றாள்.

அநாவசியமாக ரவியைக் கோவித்தோமே! பாவம் அவர்! சின்னக் குழந்தை இறந்து போனதில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மனம் இன்னமும் ஆறவில்லை.  நமக்கு இந்தக் குழந்தை இருப்பதால் தெரியவில்லை;  அவர் அவன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். என்ன செய்ய முடியும்? யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சாந்தி. மறுநாள் காலை பெரியவன் ஓடோடி வந்து, தம்பியை எழுப்ப எழுப்ப எழுந்திருக்க மறுக்கிறான் என்று புகார் சொன்னான்.  தூக்கம் வந்தால் தூங்கட்டுமே என்று சாந்தி சொல்ல ரவிக்கு சந்தேகம்.  விளக்கு எரிந்தாலோ,சின்ன சப்தம் கேட்டாலோ முழித்துக் கொள்வானே அவன்!  இப்படித் தூங்க மாட்டானே!  உடம்பு இன்னமும் சரியில்லையோ! சந்தேகத்தோடு ஓடினான்.  சாந்திக்கு இவன் பரபரப்புப் புரியவில்லை என்றாலும் அவளும் கூடப் போனாள்.  சின்னவனைத் தட்டி எழுப்பிய ரவி அவன் கைகளைப் பிடித்துப் பார்த்தான். நெஞ்சில் காதை வைத்துக் கேட்டான்.


சுத்தம்! இதயத் துடிப்பு நின்று போயிருந்தது.  கைகளில் நாடியும் பேசவில்லை. அப்போது, அப்போது????? ரவி சிலையைப் போல் நின்றான்.

Friday, April 11, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?--4

அழுது அழுது ஓய்ந்தாயிற்று.  மற்ற மூன்று குழந்தைகளுக்கும் இதன் ஆழமான துயரம் புரியவில்லை. அவ்வளவு வயசாகவில்லையே!  அதோடு வீட்டில் ஒரு புதுக்குழந்தை வேறு இருக்கிறதே!  ஆனால் ரவிக்கோ அந்தக் குழந்தையின் பக்கம் தன் மற்றக் குழந்தைகளை நெருங்க விட இஷ்டம் இல்லை.  சாந்தியிடம் எவ்வளவோ வாதாடினான்.   தன் குழந்தை இறந்ததற்கு இந்தப் புதுக்குழந்தை தான் காரணம் என ஆணித்தரமாக அவள் மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னான். 'சாந்தி, இனிமேலும் இந்தக் குழந்தையை நாம் வளர்த்தால், நம் மற்றக் குழந்தைகளை இழக்க நேரிடும். விட்டுவிடு சாந்தி! " என்று ரவி கெஞ்சினான்.

சாந்தி பிடிவாதமாக மறுத்தாள். "உங்கள் மனதில் வேற்றுமை புகுந்துவிட்டது.  நாம் இருவருமே தொழிலில் கூடக் குழந்தைகளுக்கு நன்மை விளைவிக்கக் கூடியவாறே செய்ய வேண்டும் என எண்ணிப் பேசியும் தீர்மானித்தோம்.  அப்படியே நீங்க இப்போது குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் எடுத்து வருகிறீர்கள்.  நான் வீட்டில் இருந்தவாறே அனிமேஷன்களில் உதவி வருகிறேன்.  இது அனைத்தும் எல்லாக் குழந்தைகளுக்காகவும் தானே!  இப்படி நீங்க ஒரு சின்னக் குழந்தையை, அதுவும் பிறந்து நான்கைந்து நாட்களே ஆன குழந்தையை, தாய் விட்டுவிட்டுப் போன குழந்தையை வெறுக்கலாமா?  உங்கள் தொழிலுக்கே இதன் மூலம் ஒரு கெட்ட பெயர் வருமே!" என்றாள்.

"அது யார் பெற்ற குழந்தையோ சாந்தி!  ஊர், பேர் தெரியாத அநாதைக் குழந்தை! நல்ல முறையில் குழந்தை பெற்றிருந்தால் அவள் ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போகிறாள்? கொஞ்சம் யோசிச்சுப் பார்!  இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம்.  நமக்கு இருக்கிற மற்றக் குழந்தைகளையாவது காப்பாற்றி ஆகவேண்டுமே என எனக்குக் கவலையாக இருக்கிறது." என்றான் ரவி.  சாந்தி அவனையே முறைத்துப் பார்த்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.  ரவிக்குத் தலை சுற்றியது.  என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து மூளை குழம்பியது.  இது வரை அவன் மணவாழ்க்கையில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை.  அவனும், சாந்தியும் சேர்ந்து பேசிக் கொண்டே எதையும் தீர்மானிப்பார்கள்.  தனியாக எதையும் தீர்மானித்து நிறைவேற்றியது இல்லை.

ஆனால் இப்போது சாந்தி இப்படி முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறாளே!  என்ன செய்யலாம்?  யோசித்த ரவி வெளியே சென்றுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான்.  அவன் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.  எல்லாவற்றுக்கும் நாளை ஒரு முடிவு கட்டிவிடலாம். என்று தெம்பு பிறந்தது.அன்று இரவு அவன் சாந்தியுடன் படுக்கை அறைக்குச் சென்று வாதம் செய்ய விரும்பவில்லை. ஏற்கெனவே தனியாகத் தானே படுத்து வந்தான்.  ஆகவே அன்றும் அவன் எப்போதும் போல் தன் படுக்கையைத் தனியாக அமைத்துக் கொண்டு போய்ப் படுத்துவிட்டான். யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கே சாந்திக்கும் இருப்புக் கொள்ளவில்லை.  ரவி இவ்வளவு தூரம் கவலைப்படுவது அவளுக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவன் கவலை உண்மையானது என்பதைப் புரிந்து கொண்டிருந்தாள்.  ஆனால் இந்தக் குழந்தை!  இதை எப்படிக் கொடுப்பது? தூங்கும் குழந்தையைப் பார்த்தாள் சாந்தி.  குழந்தை எதற்கோ சிரித்தது!  அவள் மனதில் இயல்பான தாய்ப்பாசம் ஊறியது.  ரவிக்கு ஏதோ தேவையற்ற கற்பனைகள்.  நாளாவட்டத்தில் சரியாகும்.  இந்தக் குழந்தையை அவனே எடுத்துக் கொஞ்சுவான். என எண்ணிக் கொண்டாள்.  அவளும் தூங்கிப் போனாள். ரவி சரியாகத் தூங்கவில்லை.  சிறிது நேரத்துக்கு ஒரு முறை மற்றக் குழந்தைகள் தூங்கும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.  மறுநாள் விடிந்தது.  அன்றைய தினசரியும் வந்தது.  தினசரியில் முதல் பக்கத்திலேயே ஒரு விளம்பரம்.

"எண். 30, காந்தி நகர்,

திருவான்மியூர், சென்னை-38. தொலைபேசி எண்.

மேற்கண்ட விலாசத்தில் நாலு நாட்கள் முன்னால் ஒரு  பெண் குழந்தை தாயினால் அநாதையாக விடப்பட்டு உள்ளது.  குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆகின்றன.  குழந்தை இல்லாத பெற்றோர்களோ, அநாதை ஆசிரமங்களோ அந்தக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்பினால் அணுகவும்."

இந்த விளம்பரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ரவி.  காஃபி எடுத்து வந்த சாந்தி அவன் கையில் பேப்பரைப் பார்த்து ரசிப்பதைக் கண்டு எட்டிப் பார்த்தாள். விளம்பரத்தைப் பார்த்ததுமே அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

"என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் விளம்பரம் கொடுக்கலாம்?" என ரவியைப் பார்த்து ஆத்திரமாய்க் கேட்டாள்.

"இதோ பார்! சாந்தி,  அந்தக் குழந்தை இங்கே இருப்பது நம் குடும்பத்துக்கு நல்லது இல்லை. "

"அதற்காக?  தூக்கிக் கொடுக்கச் சொல்றீங்களா?  தானாக வந்த செல்வம் அவள். என் கண்ணின் கருமணி.  அதோட இப்போ பாலு வேறே இல்லை; எனக்கும் பால் கட்டிக் கொண்டு விடும்.  அதனால் இவள் இருப்பது என் உடம்புக்கும் நல்லது தானே!  இதெல்லாம் ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க? நான் எங்காவது இந்தக் குழந்தை எனக்கு பாரம்னு சொன்னேனா?"

பேசிக் கொண்டே தொலைபேசியை எடுத்து அந்த தினசரி அலுவலகத்துக்குப் பேசினாள். குழந்தையைக் கொடுக்கப் போவதில்லை; என்றும் விளம்பரம் கொடுத்தது தப்பு என்றும் தெரிவித்துவிட்டு, உடனடியாக மறுப்பை அன்று மாலைக்குள் போடுமாறும் குழந்தை விஷயமாக யார் கேட்டாலும் எங்களுக்குத் தொலைபேசி இணைப்புக் கொடுக்க வேண்டாம் என்றும் குழந்தை அவர்கள் குழந்தை என்றும் கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.

"சாந்தி" என அதட்டினான் ரவி.  அவனை அலக்ஷியமாகப் பார்த்த சாந்தி வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.  ஒரு வாரம் போல் சென்றது.  எவ்வித நிகழ்வுகளும் இல்லை.  ரவிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் உள்ளூர உறுத்தல் குறையவில்லை.  இது ஏதோ பெரிய விஷயத்துக்கு அறிகுறி என நினைத்தான்.  நடு நடுவில் அந்தக் குழந்தையைப் பார்த்தான்.  இப்போது அதன் கண்களில் கட்டளை இடும் தொனி தெரிந்தது.  சிறிது நேரம் தொடர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்தால் அந்தக் கண்கள் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அன்று ரவி சிறிது நேரம் தொடர்ந்து அந்தக் குழந்தையையே உற்றுப் பார்த்தான்.  அது அவனைப் பார்த்துத் தன் வாயைக் குவித்த வண்ணம் இருந்தது.  ரவியின் மனதில் அது இப்போது தன்னைத் தூக்கச் சொல்கிறது என்னும் எண்ணம் தோன்றியது.  அவனையும் அறியாமல் அந்தக் குழந்தையைத் தூக்கினான்.  தூக்கிய அடுத்த நொடி அது பார்த்த பார்வையில்  அவன் நடுங்கிப் போனான்.  குழந்தையைக் கீழே விட எத்தனித்தான்.  ஆனால் அதுவோ அவன் தோளில் சாய்ந்தவண்ணம் இருந்தது.  அவன் குழந்தையை  எடுக்க முயற்சித்தான்.  ஆனால் எடுக்க  எடுக்க கனம் அதிகம் ஆனது.  ரவிக்கு  விட்டால் போதும் என்று ஆகிவிட்டது.  கிட்டத்தட்டக் குழந்தையைத் தன் தோளில் இருந்து பிடுங்கித் தொட்டிலில் போட்டான்.  அதன் முகத்தில் தெரிந்த சிரிப்பு அப்போது அவனுக்கு, "என்னை யாரென நினைத்தாய்!  என்னிடமா உன் வேலை! " என்று கேட்பதைப் போல் இருந்தது.  அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

மறுநாள் காலை பெரிய பையனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது.  ரவிதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.  சாதாரண ஜலதோஷக் காய்ச்சல் தான் என்றும் பயம் இல்லை என்றும் சொல்லிவிட்டு மருந்துகள் கொடுத்தார்.  காலை வேளை கொடுக்க வேண்டிய மருந்தை ரவியே கொடுத்துவிட்டு, சாந்தியிடம் பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அலுவலகம் சென்றான்.

Thursday, April 10, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?--3

ரவி அலுவலகத்திலிருந்து வரும்போது சாந்தி அந்தப் புதிய குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள்.  மற்ற மூன்று குழந்தைகளும் அவரவர் பள்ளிப் பாடங்களிலும், விளையாட்டிலும் லயித்திருக்க, அவனுடைய கடைசிக் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.  தூக்கத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போட்டது.  ரவி குழந்தைக்கு ஏதோ அதிர்ச்சி ஆகி இருக்கிறது என நினைத்தான்.  இதற்குள்ளாக சாந்தி அந்தப் புதிய குழந்தையை, (அதற்கு ஷோபா என்று பெயரிட்டிருந்தாள் இதற்குள்ளாக, ம்ஹ்ஹூம் இது ஷோபையைத் தரவா போகிறது என மனதில் நினைத்தான் ரவி.)தொட்டிலில் போட்டுத் தூங்க வைக்க வேண்டி அங்கே வந்தாள். அவளிடம் சாந்தி அந்தக் குழந்தையைக் கொடுத்துச் சற்றுப் பிடித்திருக்கச் சொல்லிக் கேட்க ரவி திட்டவட்டமாக மறுத்தான். கோபமாக அவனைப் பார்த்தாள் சாந்தி.  வேறு வழியில்லாமல் அதைக் கையில் வாங்கியவன் நெருப்பைத் தொட்டது போல் தவித்தான். கைகளையும், கால்களையும் உதைத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அவன் முகத்தில் மூக்கைப் பார்த்து விண்ணென ஓர் உதை விட்டது.  ரவியின் மூக்கில் ரத்தமே வந்துவிட்டது.

உடனே கோபமாக சாந்தியைப்பார்த்து, "இதோ பார், சாந்தி, உன் செல்லம் பண்ணி இருக்கும் காரியத்தை! இதைப் போய் நம்ம பாலு பக்கம் படுக்க வைக்கிறாயே!  வேண்டாம்.  ஆபத்து!  பாலுவுக்கு ஏற்கெனவே உடம்பு தூக்கித் தூக்கிப் போடுகிறது. இதைப் பக்கத்தில் விட்டாயானால் அவன் உருண்டு போய்த் தொட்டிலின் ஓரமாய்ப் படுக்கிறான்.  அப்புறமாக் கீழே விழுந்துவிடப் போகிறான். " என்று சற்றே கலக்கமாய்ச் சொல்ல, அவனைப் பார்த்த சாந்தி, அவன் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதைப் பார்த்துச் சிரித்தாள்.  "சின்னக் குழந்தை உதைத்ததிலா இப்படி ரத்தம் வடியுது? உங்க மூக்கில் உள்ளே புண்ணாகி இருந்திருக்கணும்.  குழந்தையின் கால் பட்டதும் அது உடைஞ்சிருக்கு." என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவன் சொன்னதே காதில் விழாதது போல் அந்த ஷோபாவையும், பாலுவையும் அருகருகே படுக்க வைத்தாள்.  இப்போது பிடித்தே பகிர்ந்து கொள்ள அவர்களைப் பழக்குகிறோம் என அவள் நினைப்பு.  பின்னர் ரவியும், அவளும் உணவருந்திவிட்டுப் படுக்கச் சென்றனர்.  குழந்தை பால் குடிப்பதால் இரவு நேரத்தில் சாந்தி குழந்தையை விட்டுக் கொண்டு தனியாகவே படுப்பாள். அது போல் அன்றும் படுத்தாள்.

என்றுமில்லாத அளவுக்கு அன்று அவளுக்குத் தூக்கம், தூக்கமாக வந்தது. தொட்டிலில் இரு குழந்தைகளும் பத்திரமாய்ப் படுத்திருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து தன் கட்டிலில் படுத்தாள்.  தூங்கிப் போனாள்.  நடு இரவில் திடீரெனக்  குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்த சாந்தி விளக்கைப் போட்டாள்.  தொட்டிலில் அவள் பக்கமாக பாலுவும், பாலுவுக்கு அந்தப் பக்கமாக ஷோபாவையும் படுக்க வைத்திருந்தாள்.  இப்போது பாலு அங்கே அவள் போட்ட இடத்தில் இல்லை. என்ன இது? ஆனால் அழுகுரல் கேட்டதே! ஷோபாவைப் பார்த்தாள்.  தூக்கத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். தொட்டிலைச் சுற்றி வந்து பார்த்த சாந்திக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அங்கே பாலு கீழே விழுந்து கிடந்தான். உடம்பெல்லாம் முறுக்கியவண்ணம், கண்கள் கோரமாகப் பிதுங்கிய வண்ணம் குழந்தை விழுந்து கிடந்தான். கைகள் நடுங்க அவனைத் தூக்கிய சாந்தி தூக்கும்போதே உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.  "ரவி"  "ரவி" என்று அவள் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.


நன்கு தூங்கிக் கொண்டிருந்த ரவிக்கு பாலு தொட்டிலில் இருந்து விழுவது போல் கனவு வர விழித்தான்.  விழித்தவனுக்கு, "ரவி, "ரவி" என்னும் சாந்தியின் அலறல் கேட்க, குழந்தைகள் படுத்திருக்கும் நர்சரிக்கு ஓடோடி வந்தான். அங்கே சாந்தி பாலுவைக் கைகளில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை மாலையாக அவள் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. ரவிக்கு எதுவுமே கேட்கவோ, பேசவோ தோன்றவில்லை.  என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட்டது அவனுக்கு.  அறைக்குள் மெல்ல மெல்ல வந்தவன் தள்ளாடும் கால்களுடன் தொட்டிலருகே வந்து நின்றான்.  தன்னிச்சையாக அவன் கண்கள் தொட்டிலைப் பார்க்க அந்த ஷோபா விழித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் கண்களில் அது என்ன உணர்வு?  இனம் தெரியாத திருப்தி? அல்லது தான் வென்றுவிட்டோம் என்னும் உற்சாகம்? அவனை ஜெயித்த உணர்வு? ரவிக்கு எல்லாம் கலந்து தெரிவது போல் இருந்தது.  தன் கைகளைத் தூக்கி அதன் கழுத்தை நெரிக்கப் போனான். அப்போது அந்தக் குழந்தை அவனைப் பார்த்த பார்வை.  ரவியின் உடம்பே சில்லிட்டது. செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றான்.

சாந்தியின் அழுகுரல் மட்டுமே தனித்துக் கேட்டது. 

Wednesday, April 09, 2014

காக்கைக்கூட்டில் குயிலா, கழுகா? --2

 அந்தப் பெண் அங்கே இல்லை; சென்றுவிட்டாள் என்பதைக் கேட்டதும் ரவிக்கு முதலில் நிம்மதியே வந்தது என்று சொல்லலாம்.  ஆனாலும் அவன் மனத்தில் ஏதோ முள் போலக் குத்திக் கொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இப்போது குழந்தை அழும் குரல் கேட்கவே திகைத்தே போனான் என்றால் மிகையில்லை. இருவரும் உடனேயே வாசலில் சென்று பார்த்தனர்.  கம்பளியில் சுற்றி இருந்த குழந்தையைத் தூக்குவதற்காகக் குனிந்த சாந்தியைத் தடுத்தான் ரவி.  "குழந்தையை விட்டுவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டாள். சற்றுப் பொறு, வந்துவிடுவாள்." என்றான்.  மேலும் தொடர்ந்து, "அவளைப் பார்த்தாலே ஏதோ ஜிப்சிக் கும்பல் போலத் தெரிந்தது.  நீ என்னமோ அவளை எல்லாம் உள்ளே கூப்பிட்டு உபசாரம் பண்ணி......." என்று இழுத்தான். இதற்குள்ளாகத் தோட்டத்தை ஒரு பார்வை பார்த்த சாந்தி, வெளியே செல்லும் கதவு திறந்திருந்ததைப் பார்த்தாள். இரவு பூட்டியது நினைவில் இருந்தது.  உடனே அருகில் சென்று பார்த்தால், ஒரு கல்லை வைத்துப் பூட்டு தகர்க்கப் பட்டிருந்தது.  மழை "சோ"வென்று கொட்டியதால் அவர்களுக்குச் சத்தம் கேட்கவில்லை போலும். ரவிக்குப் பூட்டை உடைக்கும்போது சப்தம் எப்படிக் கேட்காமல் இருந்தது என்பது விளங்கிக் கொள்ளவில்லை. மழைச் சத்தம் இருந்தாலும் பூட்டு உடைக்கப்படும் சப்தமும் கேட்டிருக்கணுமே என வாதித்தான்.

இருவரும் வராந்தாவுக்குத் திரும்பி வந்தனர்.  ஆக அந்தப் பெண் இரவுக்கிரவே குழந்தை பெற்றிருக்கிறாள்.  எங்கே பிறந்திருக்கும்?  அடையாளமே தெரியவில்லையே? மீண்டும் தேடினார்கள் இருவரும்.  அதற்குள்ளாகக் குழந்தை இன்னும் பலமாகக் கத்த ஆரம்பிக்க வேறு வழியின்றி சாந்தி அதைத் தூக்கிக் கொண்டாள்.  சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் என்னவோ குவியலாகத் தென்பட அங்கே சென்று பார்த்தால் குழந்தை பெற்றதற்கான அடையாளங்கள் மணலைப் போட்டு மறைக்கப்பட்டிருந்தன். அதற்குள்ளாக அந்தப் பெண் நடந்து சென்றுவிட்டாளா?  எப்போது குழந்தை பிறந்திருக்கும்?  இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  ரவி சொன்னான்: "இரு, வேலைக்காரி வந்துவிட்டாளா?  அவளிடம் குழந்தைகளை விட்டு விட்டு வா.  உடனே இந்தக் குழந்தையைப் போலீசில் ஒப்படைப்போம். "என்றான்.  சாந்தி அரை மனதாகக் குழந்தையைப் பார்த்தாள். பெண் குழந்தை என்பது தெரிந்தது.  அவள் பார்ப்பதைப் புரிந்து கொண்ட மாதிரியோ என்னவோ மோகனமாகச் சிரித்தது.  உடனே ரவியை அழைத்து, :"சிரிக்கிறாள், பாருங்க ரவி.  நேற்றுத் தானே நம்ம பாலுவுக்கு ஒரு தங்கை வேணும்னு சொன்னீங்க.  இறைவனாப் பார்த்துக் கொடுத்திருக்கான்.  இந்தக் குழந்தையைப் போய்ப் போலீசில் கொடுக்கச் சொல்றீங்களே!" என்றாள்.

அவளருகே வந்து குழந்தையைப் பார்த்தான் ரவி.  அப்போது அந்தக் குழந்தை அவனைப் பார்த்த பார்வை!  அவன் ஆயுளில் மறக்க முடியாது.  அந்தக் கண்கள் காட்டிய வெறுப்பும், கொடூரமும் இன்றுவரை அவன் யாரிடமும் பார்த்தது இல்லை. ஒரு சின்னக் குழந்தை; நேற்றிரவோ அல்லது இன்று அதிகாலையோ பிறந்திருக்கும்.  அதற்கு இவ்வளவு தெரியுமா என்னும் எண்ணம் உள்ளூர ஓட, மீண்டும் அந்தக் குழந்தையைப் பார்த்த ரவி அதன் கண்களின் கொடூரத்தில் உறைந்தே போனான்.  திக்கித் திணறி சாந்தியிடம், "சாந்தி, இது எப்படிப் பார்க்கிறது பாரேன். " என்றான்.  அதுவரை ரவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாந்தி குனிந்து குழந்தையைப் பார்க்க அது மீண்டும் மோகனமாய்ச் சிரித்தது. "என் பட்டு ரோஜாவுக்கு அதுக்குள்ளே என்னை யாருனு தெரிஞ்சு போச்சு!" என்ற சாந்தி அந்தக் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"சாந்தி, சாந்தி," என்றான் ரவி. "என்ன ரவி, மறுபடியும் என்ன?" என்று கேட்டவாறு குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள் சாந்தி.  பின்னர் உள்ளே சென்றாள்.  "இந்தக் குழந்தைக்குப் பால்...." என்று தயங்கின ரவியிடம், "இது ஒரு பெரிய விஷயமா?  நான் தான் பாலுவுக்குப் பாலூட்டுகிறேனே.  அவனுக்கும் ஊட்டி விட்டு இவளுக்கும் ஊட்டுவேன்." என்றாள். குழந்தையை பாலுவின் அருகிலேயே தொட்டிலில் போட்டுவிட்டு உள்ளே சென்றாள் சாந்தி. அங்கேயே நின்றுகொண்டு அந்தக் குழந்தையைப் பார்த்த ரவிக்கு மீண்டும் தூக்கிவாரிப் போட்டது.  குழந்தை அவனைக் கரைகாணா வெறுப்போடும், மிகக் கோபத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரவிக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது.  தன் குழந்தையைப் பார்த்தான்.  அதுவரை தொட்டிலின் நட்ட நடுவே கிடந்த அவன் குழந்தை இப்போது தொட்டிலின் ஓரமாகப் போய்ப் படுத்திருந்தது.  இது எப்படி சாத்தியம்?? நாலு மாதம் கூட ஆகாத குழந்தையை எவரானும் தூக்கி எடுத்து அங்கே போட்டால் தான் உண்டு.  இவன் எப்படி அங்கே போனான்?  சரி உருள ஆரம்பித்திருப்பான் போல என எண்ணிய ரவி மீண்டும் குழந்தையைத் தொட்டிலில் வழக்கமான இடத்தில் கிடத்தினான். திரும்பித் தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

அப்போது ஒரு அமாநுஷ்யமான சப்தம்.  ரவி திகைப்போடு மீண்டும் தொட்டிலருகே வரப் புதுக்குழந்தை அவனை வெறுப்புடன் பார்த்தது.  அவன் குழந்தை மறுபடி தொட்டிலின் கோடியில் ஒண்டிக் கொண்டு படுத்திருந்தது. ரவிக்கு அவனையும் அறியாமல் குயிலின் நினைவு வந்தது.  காக்கைகளின் கூட்டில் அதன் முட்டைகளோடு தன்னுடைய முட்டையையும் வைக்கவேண்டிக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளிவிடுமாம். அதுபோல் இந்தக் குழந்தையும்....ச்சேச்சே, அப்படி எல்லாம் நடைபெறாது. மறுபடி குழந்தையைத் தூக்கித் தொட்டிலில் கிடத்தினவன் சாந்தியை அழைத்து பாலு தொட்டிலின் ஓரத்துககு நகர்ந்து செல்வதாகக் கூறி பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.  அன்றைக்கும் வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியாது என்பதால் ரவி வேலைக்குச் செல்ல ஆயத்தமானான்.

செல்லும் முன் சாந்தியிடம் மறுபடி அந்தக் குழந்தையைப் போலீசில் ஒப்படைக்க வேண்டியதைக் குறித்துப் பேசினான்.  சாந்திக்குக் கோபம் வந்தது. அல்லது ஏதேனும் அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்கிறான்.  இந்தக் குழந்தையால் நமக்குள் பிரிவினை ஏற்படுமோ எனத் தான் அஞ்சுவதாகவும் தெரிவிக்கிறான். எல்லாவற்றையும் கேட்ட சாந்தி, கிண்டலாக அவனுடைய கற்பனை வளத்தைக் குறித்துப் பாராட்டிவிட்டு இந்தக் குழந்தைக்காகச் செலவு செய்ய அவனுக்கு இஷ்டமில்லை எனில் வேண்டாம் என்றும் தான் தன் சம்பாத்தியத்திலேயே பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறாள்.  உடனேயே ரவி, "பார்,பார், இப்போதே நமக்குள்ளாக இந்தப் பிரிவினைப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது." என்று வருந்த, " அது உங்களுடைய கற்பனா சக்தியால் ஏற்பட்டது.  ஒரு சின்னக்குழந்தை நம்மைப் பிரிக்குமா? நீங்கள் எடுக்கும் கற்பனைத் தொடர்களுக்காகக் கற்பனை செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்." என்று கேலி செய்கிறாள்.

அதோடு விட்டு விட்டு அலுவலகம் சென்ற ரவிக்கு அங்கே இருப்பே கொள்ளவில்லை. தன் சம்பந்தப்பட்ட வேலைகளைச் சீக்கிரமாய் முடித்துக் கொண்டு வீடு வந்து பாலுவுக்கு ஏதும் ஆகிவிடவில்லையே என்று பார்த்தான்.


(தொடருவேன்)  விடமாட்டோமுல்ல! :)

Tuesday, April 08, 2014

ஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே?



எங்க வீட்டிலே ஶ்ரீராமநவமிக்கு ராமர் பூ அலங்காரத்தோடு.  இடப்பக்கம் தவழ்ந்த கிருஷ்ணரும், வலப்பக்கம் நம்ம நண்பரும் வீற்றிருக்கிறார்கள்.  ராமர் மேலே பெரிய செந்தாமரைப் பூக்கள் இரண்டு வைச்சிருக்கு.  ஆனால் அது தெரியும்படிப் படம் எடுத்தால் கீழே கண்ணனும், நம்ம ஆளும் வரலை. அதனால் செந்தாமரையோடு தனியே எடுத்துக் கீழே போட்டிருக்கேன்.  பிள்ளையாருக்கு மேலே சலங்கை மாதிரி தெரியறது சிதம்பரம் நடராஜரின் காலில் அணிவிக்கப்படும் மகிழம்பூச் சரம்.  குஞ்சிதபாதம் என்று இதைத் தான் சொல்வாங்க.  எங்க வீட்டுக்கு தீக்ஷிதர் வருகை தரச்சே எல்லாம் புதுசா ஒண்ணு எடுத்து வந்து கொடுப்பார்.


ராமருக்குக் கீழே உள்ள விக்ரஹங்கள்.  



இன்னிக்குப் பண்ணிய நிவேதனங்கள்.  பாயசம், வடை, பயத்தம்பருப்புச் சுண்டல், சாதம், பருப்பு, பானகம், நீர்மோர், வெற்றிலை பாக்கு, பழங்கள், தேங்காயோடு. எங்க அம்மா வீட்டில் எல்லாம் வடைப்பருப்பு என்னும் ஊற வைத்த பாசிப்பருப்பில் வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய் தாளித்து உப்புச் சேர்த்துப் பண்ணுவாங்க.  அன்னிக்கு எல்லாருக்கும்விநியோகமும் ஆகும்.  சிலர் இதோடு சேர்த்துத் தென்னை ஓலை விசிறியும் கொடுப்பது உண்டு.  சிலர் புது வருஷத்தன்னிக்குக் கொடுப்பாங்க. தெருவிலே ஆங்காங்கே பெரிய பெரிய பானைகளில் நீர் மோர், பானகம் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வடைப்பருப்பும், சுண்டலும் வந்து கொண்டே இருக்கும். கொடுத்துட்டே இருப்பாங்க. அது ஒரு கனாக்காலம்.ஆங்காங்கே ஶ்ரீராமநவமி பஜனைகள் எல்லாம் நடைபெறும்.




மேலே உள்ள தாமரைப் பூ நல்லாத் தெரியுதா.  நல்லா கவனிச்சுக்கோங்க,  தாமரைப் பூவை. :))))))






கற்பூர ஹாரத்தி ஆனதும் எடுத்த படம். ஆச்சு ஶ்ரீராமநவமியும் வந்துட்டுப் போயாச்சு. இனி அடுத்த வாரம் புதுவருஷம், அப்புறமாக் கொஞ்ச நாட்களுக்கு வெயில் தான் கொளுத்தும். :))) ஏற்கெனவே இங்கே கொளுத்துது. அதோடு மின்வெட்டு, இணையச் சொதப்பல்னு ஒரே கல்யாணம் தான் போங்க! 

Monday, April 07, 2014

காக்கைக்கூட்டில் குயிலா? கழுகா? --1

மழை கொட்டிக்கொண்டிருந்தது. ரவி அன்று வேலைக்குச் செல்லவில்லை. காலையிலிருந்தே பெய்து கொண்டிருந்த மழையில் உடம்பில் சோம்பல். மனைவியோடு வீட்டில் இருக்க மனம் மிக விரும்பியது.  அதோடு அன்று ஏதோ முக்கியமான ஒரு நிகழ்வு நடக்கப் போவதாய் அவன் மனம் சொல்லியது. சாதாரணமாக இம்மாதிரி உள்ளுணர்வுகளை அவன் நம்பியதில்லை.  ஆனால் அன்று ஏதோ ஒரு பரபரப்பு; தவி தவிப்பு. தன் வீட்டு முன்னறையில் அமர்ந்து இரவு உணவுக்குப் பின்னரான காஃபியை ருசித்துக் கொண்டிருந்தான் ரவி.  உள்ளே குழந்தை அழும் சப்தம் கேட்டது.  உள்ளே திரும்பிப் பார்த்தான்.  அவன் எதிர்பார்த்தது போல் சற்று நேரத்தில் அவன் மனைவி கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடியில் கிடத்திய வண்ணம் அதற்குப்பாலூட்டத் தொடங்கினாள்.

"எங்கே மற்றதுகள்?" ரவி கேட்டான்.

"எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறாங்க!" மென்மையாகச் சிரித்த சாந்தி, பால் குடிக்கையில் குழந்தை கடித்தானோ என்று தோன்றும்படியாக லேசாக முகத்தைச் சுளித்தாள். அதைப் பார்த்த ரவி சிரித்த வண்ணம் கண்ணடித்தான். "இவனுக்கு நாலு மாசம் ஆகிவிட்டது போலிருக்கே?" என்று கேட்டான்.  "ஆமாம், அதுக்கு என்ன?" என்றாள் சாந்தி.  "ஒண்ணும் இல்லை;  இவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேண்டாமா?" என்றான்.

"வேலையில்லை உங்களுக்கு?" என்று பொய்க்கோபத்துடன் அதட்டின சாந்தி, கொஞ்சம் யோசித்த வண்ணம், "இத்தோடு நிறுத்திக் கொள்வோம்; ரவி. ஏற்கெனவே நான் ஆறுமாசமாய் வீட்டில் இருக்கிறேன்.  இன்னும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன.  அதிலே கடைசிக் குழந்தை பெண் குழந்தை வேறு. ஆக நமக்குக் குழந்தை பாக்கியம் அமோகமாகத் தானே இருக்கு! இது போதாதா! இப்போதைக்கு உங்க சம்பாத்தியத்தில் தானே சமாளிக்க வேண்டி இருக்கு! இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால் நானும் வீட்டில் இருந்தே என் வேலையை ஆரம்பிக்க எண்ணி இருக்கேன். " என்றாள்.

தன்னிரு கைகளையும் தூக்கி விரித்துக் காட்டிய ரவி, "அப்புறமா உன் இஷ்டம்! என்னைக் குறை சொல்லாதே! " என்று சொல்ல விளையாட்டாக அவன் மேல் சோஃபாவின் மெத்தையைத் தூக்கி எறிந்தாள் சாந்தி. அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.  இருவரும் திரும்பிப் பார்க்கையில் ஏதும் சப்தமே இல்லை.  மறுபடியும் அவர்கள் விளையாட்டைத் தொடரலாமா என ரவி யோசிக்கையில் இம்முறை அழுத்தமாகக் கதவு தட்டப்பட்டதோடு ஒரு பெண்குரல், "தயவு செய்து கதவைத் திறவுங்கள். " என்றும் சொன்னது.  ரவிக்கு என்னமோ சுருக்கென்று மனதில் தைத்தது.  இந்த நேரத்தில் இந்தக் கொட்டும் மழையில் யார் வரப் போகிறார்கள்?  தன் மனைவியைப் பார்த்து, "பேசாமல் இரு!  இந்த அத்வானத்தில் இந்தக் கொட்டும் மழையில் இங்கே யார் வரப் போறாங்க? ஏதேனும் பிரமையாக இருக்கலாம்.  இல்லைனா குழந்தைங்க உள்ளே கதவை மூடித் திறந்து விளையாடலாம்."  என்றான்.

உள்ளே சென்று குழந்தைகளைப் பார்த்தாள் சாந்தி.  அவர்களில் கடைசிக் குழந்தையான சுஜா விளையாடிக் கொண்டே தூங்கி இருக்கிறாள்.  நாலு வயதாகும் அவள் மேல் ரவிக்கு உயிர்.  அதற்காக மற்றக் குழந்தைகளிடம் பாசம் இல்லை என்றெல்லாம் இல்லை.  இவள் தன் அம்மாவைப் போல் இருப்பதாக அவன் எண்ணம். அதனாலேயும், மூத்த இரு ஆண் மகன்களுக்குப் பின்னர் பிறந்த ஒரே பெண் என்பதாலும் அவளை மிகவும் நேசித்தான். கடைசியாக  இப்போது பிறந்திருக்கும் குழந்தையும் ஆணாகப் போய்விட்டது. சாந்தி குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் அவள் கட்டிலில் படுக்க வைத்துப் போர்த்தி விட்டாள்.  மற்ற இருவரையும் கொஞ்சம் கொஞ்சி, கொஞ்சம் கெஞ்சிப் படுக்க வைத்தாள்.  இருவருக்கும் போர்த்திவிட்டுப் பின்னர் மீண்டும் முன்னறைக்கு வந்தாள்.

வரும்போதே முன்னறையிலிருக்கும் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் யாரோ நிற்பது போல் தெரிந்தது.  கூர்ந்து கவனித்தாள் சாந்தி.  யாரோ ஒரு பெண் நிற்கிறாள் போல!  அவள் பார்வை போகும் திக்கைக் கவனித்த ரவி, அதைத் தெரிந்து கொண்டு, "பேசாமல் விடு சாந்தி!  மழை நிற்கும் வரை வராந்தாவிலே தங்கிட்டுப் போகட்டும். உள்ளே எல்லாம் கூப்பிட்டு உபசாரம் பண்ணாதே.  எனக்கென்னமோ அதிலே ஆபத்து இருக்குனு உள்ளுணர்வு சொல்லுது!" என்றான்.  சாந்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  "எப்போதும் என்னைக் கேலி செய்வீர்களே ரவி!  இப்போ உங்களுக்கே உள்ளுணர்வு உறுத்தலா?" கேலி செய்தவண்ணம் வாசல் கதவுக்காகச் சென்ற சாந்தி கதவைத் திறந்தாள்.

வெளியே ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், பிரசவம் இப்போவோ, அப்போவோ என்னும்படியாக இருந்த நிலையில் அங்கே தரையில் அமர்ந்திருந்தாள்.  அவள் கையில் பையோ, வேறு பெட்டியோ எதுவுமே இல்லை என்பதை சாந்தி கவனிக்கவே இல்லை.  கர்ப்பிணிப் பெண் என்பது மட்டுமே தெரிந்தது.  அவளை உள்ளே அழைத்தாள்.  அந்தப் பெண்ணும் உள்ளே நுழைந்தாள்.  அவள் உள்ளே நுழைகையிலேயே ரவிக்கு உடம்பு சிலிர்த்தது. தன்னையும் அறியாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.  அவள் கண்களில் ஓர் வெற்றிப் பெருமிதம் ஒரு கணம், ஒரே கணம் தெரிந்த மாதிரி இருந்தது.  அடுத்த நொடியிலேயே அவள் சாதாரணமாக ஓர் அந்நியனைப் பார்ப்பது போலவே அவனைப் பார்த்தாள். இவளுக்கு நம் மனதில் உள்ளது எப்படித் தெரியும் என்ற வியப்பு மாறாமல் விரிந்த கண்களுடனேயே ரவி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் உள் மனது இவளை இங்கே அனுமதிப்பது சரியல்ல என்று கூவிக் கொண்டிருந்தது.

சாந்தி அந்தப் பெண்ணிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள்.  அவர்கள் வீட்டுக்குச் சுற்றும் முற்றும் அதிகம் வீடுகள் வரவில்லை.  ஏதேனும் அவசரம் எனில் இரண்டு மைல் வண்டியில் போய் முக்கியச் சாலை சென்று தான் நகரத்துக்குள் செல்ல வேண்டும்.  இந்தப் பெண் நகரத்துக்குப் போகிறாள் போல் இருக்கிறது.  காலை விடிந்தவுடன் செல்வதாய்க் கூறுகிறாள்.  அவளுக்கு முன்னறைக்குப் பக்கத்தில் இருந்த ஓர் அறையில் படுக்க ஏற்பாடு செய்துவிட்டு அவள் சாப்பிட்டாளா என்று கேட்டுக் கொண்டு அவளுக்குச் சூடான பால்கொடுத்து உபசரித்துவிட்டுப் படுக்கச் சென்றாள் சாந்தி. அரை மனதாக ரவியும் மனைவியைப் பின் தொடர்ந்தான்.  அன்றிரவெல்லாம் அவனுக்குச் சரியான தூக்கம் இல்லை.  ஆனால் நாளைக்காலை வேலைக்குச் சென்றே ஆகவேண்டும்.  முக்கியமான ஒளிப்பதிவு நாளைக்கு இருக்கிறது.  விடிகாலை வேளையில் தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தான் ரவி.

அந்தப் பெண் வந்து தன்னையும், சாந்தியையும் பிரித்து விடுவதாகக் கனவு கண்டு கொண்டிருந்த ரவியை யாரோ தட்டி எழுப்பினார்கள்.  வேறு யாரும் இல்லை; சாந்தி தான்.  காலை எழுந்து காஃபி போட்டுக் கொண்டு அந்தப் பெண் படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்தால் உள்ளே அவள் இல்லை; கழிவறை சென்றிருக்கலாம் எனச் சிறிது நேரம் சாந்தி பொறுத்துப் பார்த்தும் அவள் வரவில்லை.  வெளியே, தோட்டத்திலே, கொஞ்ச தூரம் சாலையிலே எனத் தேடிப் பார்த்தும் காணாமல் தான் வேறு வழியில்லாமல் தான் அவனை எழுப்பினாள் சாந்தி. எழுந்ததும் விஷயத்தைக் கேட்ட ரவிக்குக் கோபம் தன்னை மீறி வந்தது.

"இதுக்குத் தான் கண்டவர்களை உள்ளே விடாதேனு சொன்னேன், கேட்டியா! இப்போப் பார்!" என்று கோபமாக ஆரம்பித்தவனை இடைமறித்தது அந்த அழுகுரல்.  சின்னக் குழந்தையின் அழுகுரல்.  பிறந்த குழந்தையின் அழுகுரல். சாந்தியிடம்," குழந்தை அழுகிறது பார்!  பால் கொடுத்தாயா?" என்று கேட்க, அவளோ, "இது நம்ம குழந்தையோடு அழுகை இல்லைங்க.  அவனுக்கு இப்போத் தான் பால் கொடுத்துத் தூங்க வைத்தேன்.  தொட்டிலில் தூங்கறான். இந்தக் குரல் வெளியே இருந்து வருதே!" என்றாள்.  உடனே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெளியே சென்று பார்த்தால் வராந்தாவில் ஓர் ஓரமாகக் கம்பளிப் போர்வைக்குள் சுற்றியபடி ஒரு குழந்தை இருந்தது.

டிஸ்கி: இந்தக் கதையின் மூலம் ஒரு ஆங்கிலக் கதை. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்னர் படித்தேன். இதன் சுருக்கம் இரு வருடங்கள் முன்னரே கொடுத்திருந்ததால் ஏற்கெனவே படித்தவர்கள் முடிவைப் பகிரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். :))) இதைத் தமிழகச் சூழ்நிலைக்கு மாற்றிக் கதாநாயகன், நாயகி பெயரையும் மாற்றியுள்ளேன். கொஞ்சம் விரிவாகவும் எழுத எண்ணம்.