எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 20, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி -23

பூதனை இறந்த செய்தி கேட்டதும், கம்சன் மிகுந்த ஆத்திரத்தில் ஆழ்ந்தான். அவன் ஆத்திரம் அவனை மதியிழக்கச் செய்தது. தன்னுடைய ஆலோசகரும், மந்திரியும் ஆன பிரலம்பரைக் கூப்பிட்டு அனுப்பினான். நடந்ததாய்ச் சொல்லப் படும் அனைத்து விஷயங்களையும் மீண்டும் கேட்டு அறிந்தான். "ப்ரலம்பரே! ப்ரத்யோதா கோகுலத்தில் இருந்து வரட்டும். அவன் திரும்பியதும், நான் கோகுலத்தை அடியோடு அழித்து விடுகின்றேன். பூதனையின் மரணத்திற்கு நான் பழிவாங்க வேண்டும். என்னைப் பொறுத்த அளவில் பூதனையின் இழப்பு அளவிட முடியாத ஒன்று. அவள் மரணத்தின் துக்கமோ, அதன் தாக்கமோ என்னால் சகிக்கமுடியாத ஒன்றாகும். " என்று ஆத்திரத்துடன் சொல்லுகின்றான். ப்ரலம்பரோ, "அரசே! தங்கள் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும். எனினும் நான் என்னுடைய ஒரு சிறு ஆலோசனையை, ஆலோசனை கூட அல்ல, என்னுடைய கருத்தைக் கூற விரும்புகின்றேன்." என்று மிகப் பணிவுடன் சொன்னார்.

"ம்ம்ம்ம்ம்., சீக்கிரம் சொல்லுங்கள். உங்கள் கருத்து அறியத் தானே நான் கூப்பிட்டு அனுப்பினேன்? " என்றான் கம்பன். ப்ரலம்பர் சொல்கின்றார்:" அரசே! கோகுலத்தை இப்போது பூதனையின் மரணத்திற்குப் பழிவாங்கவென நீங்கள் அடியோடு அழித்தால், இந்த உலகம் முழுதுக்கும், தெரிந்து போகும், உங்கள் கட்டளைகளினாலேயே பூதனை அனைத்துக் குழந்தைகளையும் கொன்று வந்தாள் என்பது! கொஞ்சம் யோசியுங்கள்!" என்றார். "ஹாஹாஹாஹா! எனக்கு அது பற்றிய கவலை ஏதும் இல்லை!" என்று கம்சன் எக்காளமிட்டுச் சிரித்தான். "அப்படியா அரசே! தேவகியின் ஏழு குழந்தைகளைத் தாங்கள் அழித்தீர்கள். யாதவர்கள் யாருக்கும் அது பிடிக்கவில்லை என்றாலும், அவ்விஷயத்தில் உங்களுடைய பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருந்தது என்ற காரணம் இருந்தது. ஆனால் இங்கே பூதனையோ பல சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொன்று அழித்தாள். மக்கள் அனைவரும் அவளை வெறுத்து வந்தனர். அனைவராலும் வெறுத்து, ஒதுக்கப் பட்ட ஒரு கொலைகாரிக்காகப் பழிவாங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமே! யாதவக் குலமே இதைக் கண்டு வெறுக்கும்." என்றார் ப்ரலம்பர்.

"போகட்டுமே, நான் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டேன்." என்று கம்சன் சொல்ல, "மன்னா, நீங்கள் யாதவர்களுக்கு அஞ்சவில்லை என்றாலும், பாஞ்சால நாட்டு அரசன் ஆன துருபதனுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவனுக்கு ஏற்கெனவே மதுரா நகரின் மேல் ஒரு கண் இருக்கின்றது. தவிர, உங்களிடம் பிணக்குக் கொண்டு இங்கிருந்து சென்ற யாதவர்களில் பெரும்பாலோர் அவன் அரண்மனையில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர்." என்றார் ப்ரலம்பர். "இருக்கட்டுமே, துருபதன் போருக்கு வந்தால் நான் தயாராக இருக்கின்றேன். பல வருடங்களாக அவன் என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றான். இப்போது வந்தால் வரட்டும், ஒரு கை என்ன இரு கைகளாலும் பார்த்துவிடலாம்." என்று கம்சன் ஆக்ரோஷமாய்ச் சொன்னான்.

"இல்லை மன்னா! கோகுலத்தை இப்போது தாங்கள் அழிப்பது நல்லதில்லை. விருஷ்ணி குலத்து அக்ரூரரின் ஆட்களின் பலம் ஏற்கெனவே அதிகம். இப்போது இன்னும் அதிகமாகும். ஷூரர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வசுதேவர் மேல் கண்மூடித் தனமான அன்பும், பாசமும் கொண்டவர்கள். மேலும் வசுதேவரின் மூத்த சகோதரி, குந்தி என்பவள், குந்தி போஜனின் வளர்ப்புப் பெண்ணாய் வளர்ந்தாளே, அவள் குரு வம்சத்தில் திருமணம் செய்து கொண்டிருப்பதை மறக்கவேண்டாம். இப்போது ஷூரர்களின் கோகுலத்தை நீங்கள் அழித்தால், குந்தியின் வேண்டுதலின் பேரில் அந்தக் கிழவர், பீஷ்ம பிதாமகன் என அனைவரும் அழைப்பவர், அனைத்து யாதவர்களுக்கும் உதவி செய்கின்றேன் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு ஓடி வந்துவிடுவார். யாரைப் பகைத்துக் கொண்டாலும் குரு வம்சத்தினரின் பகைமை நமக்குத் தேவையா? யோசியுங்கள் மன்னா!" என்று ப்ரலம்பர் கெஞ்சினார்.

இப்போது கம்சனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் ஆழ்ந்த கவனத்துடன் யோசிக்கவேண்டிய ஒன்று. "ம்ம்ம்ம்ம்ம், சரி, கிழவா, உன் வார்த்தைகள் அநேகமாய்ச் சரியாகவே இருக்கின்றன சில சமயம். இப்போது நான் கோகுலத்தை அழிக்கவில்லை. நீ நிம்மதியாய்ச் செல்வாய்!" என்று கூறிவிட்டுக் கபடமாய்ச் சிரித்தான். அவன் மனதில் உள்ள எண்ணம் என்னவென்று புரியாமல் கலங்கிய உள்ளத்துடனேயே ப்ரலம்பர் அங்கிருந்து சென்றார். கம்சன் யோசனையில் ஆழ்ந்தான். நந்தனின் பிள்ளை ஒரு பயங்கரமானவனாய் இருப்பான் போல் உள்ளதே! எவ்வாறேனும் அவனை அழிக்கவேண்டும். ஆனால் அதனால் நம் பெயர் கெட்டுப் போகக் கூடாது. வெளிப்படையாகக் கோகுலத்தை அழித்தால் அதனால் அவப்பெயர் மிஞ்சுவதோடு, மக்கள் ஒரு பெரும் கலகமும் செய்வார்கள். என்ன செய்யலாம்?? ம்ம்ம்ம்ம்ம்??? யோசனையுடன் சாளரத்தின் அருகே வந்து நின்ற கம்சனின் கண்களில் யமுனைக் கரையில் பறவைகளைப் பிடித்து வியாபாரம் செய்யும், ஒரு வேடுவன் தென்பட்டான்.


அவனையே எந்தவித நோக்குமின்றிப் பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்த கம்சனுக்குத் திடீரென உபாயம் தோன்றியது. அவன் முகம் மலர்ந்தது. ஆஹா, நல்லதொரு வழி கிடைத்துவிட்டதே! தன் அந்தரங்க சேவகர்களை அழைத்து அந்தப் பறவை பிடிப்பவனைக் கூட்டிவரும்படி ஆணை இட்டான்.

4 comments:

  1. ம்ம்...அடுத்து ;)

    ReplyDelete
  2. நிறைய விஷயங்கள் இதுவரை எனக்கு தெரியாதது. நன்னி!

    ReplyDelete
  3. நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  4. வாங்க கோபி,

    @ரெங்க திவா, நிஜமாவா சொல்றீங்க??

    @நன்றி கவிநயா!

    ReplyDelete