எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 13, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 10

யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக்கொண்டாள் அகிலாண்டம்.  ஏற்கெனவே ராதாவின் அம்மா, அப்பா கோபத்தில் இருப்பதால் அவளைப் பிறந்தகம் அனுப்பப் போவதில்லை என்றும், தானே பிரசவம் பார்க்கப் போவதாகவும் அக்கம்பக்கத்தை நம்ப வைத்தாள். எல்லாருமே அகிலாண்டத்தின் பரந்த மனதைப் பாராட்டினார்கள்.  அகிலாண்டமும் தான் முன்னாலே சென்று ராதாவைப் பார்த்துக்கொள்ளப் போவதாய்ச் சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.  ராதாவுக்கு வேலை அதிகமாயிற்று.  நாள் ஆக, ஆக, உள்ளூர ஒரு பயமும் வந்தது.  அகிலாண்டத்துக்கு ஏதாவது ஆயிற்றென்றால் உண்மையைச் சொன்னால் யார் நம்புவார்கள்? ராதாவின் பாடு தான் இன்னமும் ஆபத்து.  வித்யா மாசமாக இருப்பதாகவும், மசக்கைக்குப் பிறந்தகம் வர ஆசைப்படுவதாகவும், அம்மாவை உடனே அனுப்பி வைக்கும்படியும் கடிதம் வேறு வந்திருந்தது.  அகிலாண்டத்துக்கோ இன்னமும் பிரசவம் ஆகவில்லை.  ராதா எப்படியோ சமாளித்து பதில் போட்டாள்.  போதாக்குறைக்கு மாமனார் வேறே வந்து உட்கார்ந்துவிட்டார்.  அவருக்கு வேளா வேளைக்கு மனம் கோணாமல் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டி இருந்தது.  வித்யா கன்னாபின்னாவென்று ராதாவைத் திட்டி எழுதி இருந்தாள்.  ராதா அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டவில்லை.

அந்த நாளும் வந்தது.  அகிலாண்டத்துக்குப் பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவளுடைய, அவள் கணவருடைய முழுச் சம்மதத்துடன் குழந்தையை தன் சொந்தப் பிள்ளை , மருமகளிடம் பிறந்த உடனேயே ஒப்படைப்பதாக எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தனர் இருவரும்.  இந்த விஷயம் வெளியே தெரியாமல் ரகசியமாக இருக்கட்டும் எனவும், வெளி உலகுக்கு ராதாவும், சந்துருவுமே பெற்றோராக இருக்கட்டும் என்றும் மருத்துவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.  அந்த மருத்துவரோ,"அதெல்லாம் சரி, அம்மா, இதுக்காக ராதாவைக் குழந்தை பெற்றுக்கக் கூடாதுனு எல்லாம் சொல்லிடாதீங்க.  அவளுக்கென அவள்குழந்தை ஒன்று வேண்டாமா?" என்றாள்.  அகிலாண்டமும் தான் அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என உறுதியளிக்க எல்லாமும் சுமுகமாக நடந்தது.  நல்லவேளையாக அகிலாண்டம் பிரசவத்தைத் தாங்கிக் கொண்டாள்.  இயல்பான மன உறுதி மட்டுமில்லாமல், நன்றாக வஞ்சனையில்லாமல் உண்டு, உறங்கி வேலை செய்து வளர்ந்த உடம்பாகையால் வலி எடுத்த ஒரே மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது.  ஆண் குழந்தையாய் இருக்குமோ என ஒரு நப்பாசை அகிலாண்டத்துக்கு.  ஒருவேளை ஆண் குழந்தையாக இருந்திருந்தால் கொடுத்திருக்கவும் மறுத்திருப்பாளோ என்னவோ!  பிறந்தது பெண்ணாக இருந்தது.  அகிலாண்டம் அப்படியே தூக்கி ராதாவின் கைகளில் கொடுத்து, "இனி இவள் உன் பெண்.  உன் வாழ்க்கையை நீ இவளுக்காக வாழவேண்டும்." என்றாள்.

என்ன இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையை யாரால் வெறுக்க முடியும்.  ராதா குழந்தையை அள்ளிக் கொண்டாள்.  ஆனால் அது பிறந்ததுமே தன் தாய் இவள் இல்லை என்பதைப் புரிந்தது போல் ராதா தூக்கினால் கத்த ஆரம்பித்தது.  சந்துருவோ, அகிலாண்டமோ தூக்கினால் பேசாமல் இருந்தது.  அகிலாண்டத்தின் கணவர் மெல்ல அகிலாண்டத்திடம், குழந்தையை நாமே வளர்ப்போமே எனச் சொல்லிப் பார்த்தார்.  ஆனால் அவர் சொல் ஏறவில்லை.  அகிலாண்டம் பிடிவாதமாகக் குழந்தையை எடுத்துச் சமாதனம் செய்யவோ, பால் கொடுக்கவோ மறுத்தாள். எப்போதாவது ராதா வேலை மும்முரத்தில் இருந்தால் தூக்கிச் சமாதானம் செய்வதோடு சரி. சந்துருவோ சுத்தமாய்த் தாயிடம் முகம் பார்த்துப் பேசுவதை நிறுத்திவிட்டான்.  ஆனால் அகிலாண்டத்துக்கு இது இன்னமும் உறைக்கவில்லை. வேலைத் தொந்திரவினாலும், அடுத்தடுத்த பிரச்னைகளாலும் சந்துருவுக்குப் பேச நேரமில்லை என நினைத்தாள்.

ஆயிற்று; குழந்தைக்குப் பெயரும் வைத்தாகிவிட்டது.  அகிலாண்டமும் அதுவரை இருந்தது போதும் என ஊருக்குக் கிளம்பிவிட்டாள். ராதாவைத் தனியாக அழைத்து, "நீ பெற்ற உன் குழந்தை போலவே பார்த்துக்கொள்ள வேண்டும்.  தற்போதைக்கு இன்னொரு குழந்தை பற்றி நினைக்கக்கூடாது." என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.  இன்னமும் லதா கல்யாணம் இருக்கிறது;  அதோடு மேலும் இரண்டு பேரும் படித்து முன்னுக்கு வரணும்;  அதையே லட்சியமாய்க் கொண்டு இருக்க வேண்டும் எனப் படித்துப் படித்துச் சொன்னாள்.  லதாவைக் கொஞ்ச நாட்கள் துணைக்கு அனுப்பும்படி ராதா கேட்டதற்கு ஊருக்குப் போய்ப் பேசிப் பார்ப்பதாகச் சொன்னாள்.  ஊரில் போய் லதாவிடம் கேட்டதற்கு, "அவள் பெற்றதுக்கு நானா பிணை!  அவளை யாரு பெத்துக்கச் சொன்னா?  நானெல்லாம் போய் உதவி செய்ய மாட்டேன்." என்று திட்டமாக மறுத்தாள் லதா. அகிலாண்டமும் வற்புறுத்தவில்லை.  பேச்சு வாக்கில் பெண்ணுக்கு உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்யறது என்ற பயம் தான்.  எப்படியோ நாட்கள் ஓடின.  ஒரு பிடிவாதக்காரியாகவே ரம்யா வளர்ந்தாள்.   ராதா எவ்வளவு முயன்றும் அவள் பக்கம் ரம்யா திரும்ப மறுத்தாள்.  அதோடு அவ்வப்போது வந்து போகும் அகிலாண்டம் பேச்சு வாக்கில் ரம்யாவை ராதா ரொம்பவே கொடுமைப்படுத்துவதாக ஜாடை மாடையாகச் சொல்லிச் சொல்லி ரம்யாவின்மனதில் அது ஆழப் பதிந்தது.

அம்மாவிற்குத் தன்னைக் கண்டால் பிடிக்கவில்லை என்பதே ரம்யாவின் மனதில் இருந்தது.  அதோடு பார்க்கிறபேர் எல்லாருமே ராதாவின் ஜாடையோ, குணமோ கொஞ்சம் கூட இல்லையே என்றும் ஆச்சரியப் பட்டனர்.  ரம்யாவுக்கும் இயல்பாகவே பாட்டி என நினைத்த அகிலாண்டத்திடமும், அவள் பெற்ற தன் சகோதர, சகோதரிகளிடமுமே பாசம் இருந்தது.  ராதாவை எவ்வளவு அலக்ஷியம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தாள். இது உள்ளூர அகிலாண்டத்துக்கு சந்தோஷத்தையே அளித்தது.  சந்துரு மட்டும் அவளைப்புரிந்து கொள்ள வில்லை என்றால் ராதாவுக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்.  சந்துரு வாய் திறந்து ரம்யாவைக் கண்டிக்கவில்லை.  அதே சமயம் ராதா அவளைக் கண்டித்து வளர்ப்பது சரி என்றே எண்ணினான்.  தன் மற்றத் தங்கைகள் போலில்லாமல் இவளாவது கொஞ்சம் ஒழுங்காய் வளரட்டுமே என்ற எண்ணமும் இருந்தது.  இதற்கு நடுவில் லதாவின் கல்யாணமும் நிச்சயம் ஆனது.

பி.கு: திடீர்னு வந்த ஒரு அதிர்ச்சிச் செய்தியில் கொஞ்சம் தடுமாற்றம்;  மனவருத்தம்.  :(((( இதை எழுதி மூன்று நாட்களாகியும் போடலாமா வேண்டாமா, மேலே தொடரலாமா  என்ற குழப்பம்.  அப்புறமாச் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டிருக்கிறேன்.  விரைவில் முடிக்கப் பார்க்கிறேன்.


இது தனிக் குறிப்பு:

ஶ்ரீரங்கம் குறித்த தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.  எழுத ஆரம்பிச்சாச்சு.  பத்துப் பக்கங்கள் தயார் நிலையில்.  நேற்று இங்கே குடியிருப்பில் இருப்பவர்கள் மூலம் சில தகவல்கள் கிட்டின.  இப்படிப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறேன்.  சிதம்பர ரகசியம் அளவுக்கு எழுத முடியாவிட்டாலும், ஓரளவுக்கு ஶ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆசை.  அதை "எண்ணங்கள்" பதிவில் போடுவதா, "ஆன்மீகப் பயணம்" பக்கம் போடுவதா என்ற யோசனை.  இன்னமும் முடிவு செய்யவில்லை.  அநேகமாய் "ஆன்மீகப் பயணம்" பக்கத்தில் தான் போடலாம்.


5 comments:

  1. அகிலாண்டம் போன்றவர்கள் மரணப் படுக்கைக்கு முன்னரே மனம் திருந்தும் சந்தர்ப்பங்கள் வாய்க்காதா? யாராவது நன்றாய் வெளிப்படையாய்க் கேட்பவர்கள் இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் பக்க மனிதர்களிடமிருந்தே அபபடி கேள்விகள் வர வேண்டும்.

    பி. கு வில் சொல்லியிருப்பது குழப்புகிறது. என்ன அதிர்ச்சி தரும் செய்தி? சொந்த விஷயமா? ஸ்ரீரங்கம் பற்றியா?

    ReplyDelete
  2. விறுவிறுப்பா நல்லா இருக்கு கதை. தொடர்ந்து படிச்சுகிட்டு வந்தாலும் இன்னைக்குத்தான் கமெண்ட் போடுறேன். அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  3. சொந்த விஷயம் எல்லாம் இல்லை ஶ்ரீராம், அநேகமாய் கணினி உலகுக்கே தெரிந்த விஷயம் தான். ஆன்டோ பீட்டரின் திடீர் மறைவினால் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டே முறைதான் பார்த்திருந்தாலும் கணவனும், மனைவியும் பல்லாண்டுகள் பழகியவர்கள் போல் பேசினார்கள். அதுவும் என்னோட பதிவுகளுக்கு முக்கியமாய்ப் பின்னூட்டங்களுக்கு மெளன ரசிகர்களாக இருந்திருக்கின்றனர். எனக்கு இன்னமும் இதை ஜீரணிக்க முடியவில்லை. அதான் குழப்பம்! என்னதான் யாக்கை நிலையாமை என்றெல்லாம் தெரிந்து கொண்டாலும், ஆன்மாவுக்கு ஏது சாந்தி என வாதாடினாலும்.........

    முடியலை! :((((((((((((

    ReplyDelete
  4. புதுகை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. இது கதைதானா உண்மையில் நடந்த சம்பவமா. எழுத்து நடை அப்படி நினைக்க வைக்குது.

    ReplyDelete