எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 23, 2012

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??



ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். ஆனால் இந்த வருடம் ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் மல மாதம் என்றும், அப்போது சுப காரியங்களைச் செய்யக் கூடாது என்றும், புரட்டாசி மாதமும் ஸங்க்ரமண தோஷ மாசமாகி விட்டதால், இந்துக்களின் காலண்டர்படி(பஞ்சாங்கப்படி) இப்போது சிரவண மாதம் என்பதால் (தமிழ் ஆடியாக இருந்தாலும்)  நர்மதைக்குத் தெற்கே உள்ள சாம வேதிகளுக்கு இந்த மாதம் உபாகர்மா  ஆடி மாதம் அமாவாசை கழிந்த ஹஸ்த நக்ஷத்திரம், பஞ்சமி திதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி  ஸாமவேதிகளின் உபாகர்மா.

நன்றி:தெய்வத்தின் குரல்! 

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  மூன்றாம் முறையாக இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  யஜுர் வேதிகளுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியும், ரிக் வேதிகளுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் அன்றே காயத்ரி ஜபமும் வருகிறது.

7 comments:

  1. // இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.//

    எங்கே மாத்தி இருக்கீங்க? அது அப்படியேதான் இருக்கு!

    ReplyDelete
  2. வ. வி.யை விட்டுட்டு அதுக்குள்ள உபாகர்மாவுக்குப் போய் விட்டீர்களே....! எல்லாமே கடனாகவும், கடமையாகவும் போய் விட்ட இந்நாளில் அந்தந்த சம்பிரதாயங்களை அந்தந்த நாளில் யோசிக்காமல் ஒரு பயத்தோடு செய்து விடுவது வழக்கமாகி விட்டது!!

    ReplyDelete
  3. வா.தி. அவசரக்குடுக்கையா பப்ளிஷ் ஆகி இருக்கு! என்ன பண்ணறது? நாளைக்குக் காலம்பர பப்ளிஷ் ஆக ஷெட்யூல் பண்ணினா இன்னிக்கே வந்திருக்கு! :P

    பதிவைப் போட்ட முத வருஷம் சாமவேத உபாகர்மா அன்னிக்கு வெளியாச்சு. அந்த வரியை நீக்கினேன். இந்த வருஷம் முன்னாடி வந்திருக்கிறதாலே கடைசியிலே குறிப்பிட்டேன்.

    வி.எ. கொஞ்சமா ஊத்திக்கிறது தானே? :P:P:P:P:P

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், உபநயனம் பதிவுகள் தயாரா இருக்கு. அதுக்குள்ளே கோயிலுக்குப் போனதாலே அதைப் பகிர்ந்தாச்சு! அப்புறம் நாளைக்கு எங்க ஆவணி அவிட்டம்னு அதுக்கு போஸ்ட் போட்டாச்சு, இனிமே உபநயனம் முடிஞ்சு தான் கல்யாணம். :))))) உபநயனம் 2,3 பதிவுகள் வரும். எழுதி வைச்சிருக்கேன். அதோட எங்க மாமியார் வீட்டிலே வ.வி. கிடையாது. அம்மா வீட்டிலே தான் உண்டு. அது ரொம்ப வருத்தம். :(((((

    ReplyDelete
  5. உபா கர்மாபற்றிய தெளிவான விளக்கங்கள் ந்ல்லா இருக்கு.

    ReplyDelete
  6. நல்ல விளக்கங்கள்.

    ReplyDelete
  7. மாமி
    ஆவணி அவிட்டம் வருதே - உங்களோட வருஷாந்திர பதிவு வருமேன்னு யோசிச்சிண்டு இருந்தேன். :) ரெண்டு வருஷம் முன்னாடி இதில் தான் உங்கள் பதிவு அறிமுகம் கிடைத்தது. உங்கள் ஆவணி அவிட்டம் நன்றாக நடந்ததா?

    இங்கே சாம வேத உபாகர்மா செப்டெம்பரில் தானாம்.

    ReplyDelete