எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 15, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 8


திருப்பட்டூரில் கைலாசநாதர் கோயிலும் ஒன்றிருப்பதாய் இன்றே அறிந்தேன்.  இங்கே ஆறு அடி உயரம், ஆறு அடி சுற்றளவில் நான்கு தலைகளுடன் பத்மாசனக் கோலத்தில் காட்சி அளிக்கும் பிரம்மாவிற்கு எனத் தனிக்கதை உண்டு என்பதைப் போன பதிவில் பார்த்தோம். அது:

ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்ததைக் கேள்விப் பட்டிருப்போம்.  ஈசனைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்ட பிரம்மா தனக்குப் படைக்கும் சக்தி இருப்பதால் தானே அனைவரிலும் பெரியவன் என்ற எண்ணமும் கொண்டார். தேவி தனக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.  பிரம்மாவின் எண்ணங்களைப்புரிந்து கொண்ட ஈசன் அவர் அகந்தையை அடக்க எண்ணினார்.  அவரின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். மேலும் படைக்கும் ஆற்றலையும் பறித்துவிட்டார்.  படைப்பாற்றலை இழந்த பிரம்மாவுக்குத் தன் தவறு புரிந்தது. ஈசனைப் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.  எந்தத் தலங்களில் எல்லாம் பிரம்மாவால் ஈசன் வழிபடப்பட்டாரோ அந்தத் தலங்களின் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காணப்படுவார்.

இவ்வூருக்கு வந்த பிரம்மா இங்கே துவாதச லிங்கங்கள் அமைத்து வழிபட்டு வந்தார்.  அவரின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த ஈசன் அவருக்குப் படைப்பாற்றலை மீண்டும் வழங்கினார்.   மேலும் பிரம்மாவை இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோருக்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருளும் சக்தியையும் கொடுத்தார். ஆகவே திருப்பட்டூரில் பிரம்மாவைத் தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும், அதன் மூலம் அவர்களின் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் பெருகவும் அருள் புரிந்து வருவதாக ஐதீகம்.  இவரை வழிபடுவோர் வாழ்வில் சிறந்த நற்பலன்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.  ஈசனை பிரம்மபுரீஸ்வரர் என அழைப்பது போல் அம்பிகையும் பிரம்ம சம்பத் கெளரி என அழைக்கப்படுகிறாள்.  பக்தர்களால் அரைத்து வழங்கப்படும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பிரம்மா காணப்படுகிறார்.

பிரம்மாவின் சந்நிதிக்கு அருகே பதஞ்சலி சித்தரின் ஜீவசமாதி உள்ளது.  ஜீவ சமாதியில் அமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.  பதஞ்சலி ஐந்து இடங்களில் ஜீவசமாதி அடைந்த்தாய்க் கூறப்படுகிறது.  இதில் அது முக்கியமான ஒன்று.  சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே காணப்படும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி இங்கேயும் காணப்படுகிறது.  வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் அருகே இது உள்ளது.  அம்மன் சந்நிதிக்கு அருகே தாயுமானவர், பிரம்மதீர்த்தம், பகுள தீர்த்தம் ஆகியன உள்ளன.  ஆலயத்தின் தல விருக்ஷம் மகிழ மரம்.  இங்குள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களில் தட்டினால் இசை எழும்பும் நாத லயத்தோடு கட்டப்பட்டுள்ளதாக அறிந்தோம். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  குரு பார்க்கக் கோடி நன்மை என்னும் வழக்கிற்கு ஏற்ப குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்கள் தங்களுக்குக் கோடானு கோடி நன்மை கிடைக்கும் என நம்புகின்றனர்.


இந்தக் கோயிலிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது காசி விசுவநாதர் கோயில்.


இங்கே வியாக்ரபாதரின் ஜீவ சமாதி உள்ளது.  கோயில் குறித்த விபரங்களைத் திரட்ட முடியவில்லை.  கோயிலுக்குப் போனபோதும் அங்கு விசாரிக்க யாரும் இல்லை.  கூகிளாரும் கைவிட்டுவிட்டார்.  மீண்டும் நேரில் செல்கையில் விசாரிக்கணும்.  ஊருக்குள் நுழையும்போதே ஐயனார் கோயிலைப் பார்க்கலாம்.


இவர் சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய உலாவை அரங்கேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.  இவரை மாசாத்தனார் எனவும் அழைக்கின்றனர்.  இவர் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது,  கோயிலுக்குள் நுழைந்ததும் நேரே செல்லாமல் பக்கவாட்டிலேயே செல்ல வேண்டும்.  ஐயனாரின் பார்வை நேரே நம் மேல் படாமல் பக்கவாட்டில் சென்றே ஐயனார் தரிசனம் செய்ய வேண்டும்.  இதற்குச் செவி வழியாக ஒரு கதையைச் சொல்கின்றனர்.  ராஜகோபுரத்திலிருந்து நேரே தெரிவது ஒன்பது துளைகள் கொண்டதொரு ஜன்னல் ஆகும்.

இந்த ஐயனார் பலருக்கும் குல தெய்வம் எனவும் அக்கம்பக்கத்துக் கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இங்கே பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்வார்கள் எனவும் சொல்கின்றனர்.  ஒரு சமயம் அப்படி வந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.  செல்கையில் பாதி தூரம் சென்றதும், எந்தக் குழந்தைக்காகப்பிரார்த்தனை செலுத்த வந்தனரோ அந்தக் குழந்தையைக் காணோம்.  அக்கம்பக்கம் எல்லாம் நன்கு தேடிவிட்டுப் பின்னர் கோயிலிலேயோ, அல்லது கோயில் வாசலிலேயோ குழந்தையை விட்டிருக்க வேண்டும் எனத் தேடிக் கொண்டு திரும்பக் கோயிலுக்கு வந்தனர். கோயிலை அடைந்ததும், குழந்தையைத் தேடத் தொடங்கியவர்களுக்கு உள்ளே குழந்தையின் குரலும் குழந்தையோடு யாரோ விளையாடும் சப்தமும் கேட்கக் கதவைத் திறக்க முயல்கின்றனர்.  அசரீரியாக ஒரு குரல் கதவைத் திறக்க வேண்டாம் என எச்சரிக்க அதையும் மீறிக் கதவைத் திறக்க, உள்ளே குழந்தை தலை வேறு உடல்வேறாகக் கிடக்கிறது.  அப்போது ஒரு குரல் இந்தக் குழந்தை இந்தக் கோயிலைச் சார்ந்தது.  அதனாலேயே அதன் ஆன்மா ஐயனாரிடம் ஐக்கியம் ஆகிவிட்டது.  நீங்கள் கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் குழந்தையே நாளை உங்களோடு வரமாட்டேன் எனச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  இனி இம்மாதிரி செய்யாதீர்கள். என்று சொல்லி விட்டு இனி என்னை நேரே பார்க்க வேண்டாம், பக்கவாட்டில் வந்தே தரிசனம் செய்யுங்கள் என்றும் கூறுகிறது.  அதைக் கேட்ட கிராமத்தார்கள் குழந்தையின் நிலை கண்டு மனம் வருந்தினாலும் இறைவன் திருவுளம் அது எனத் தங்களைச் சமாதானம் செய்து கொண்டு செல்கிறார்கள்.  அன்று முதல் ஐயனாரை யாருமே நேரில் பார்ப்பதில்லை என்கின்றனர்.  இது அந்தக் கோயில் வாசலில் படுத்திருந்த ஒரு பெரியவரை எழுப்பிக் கேட்டபோது அவர் சொன்னது.  செவிவழிச் செய்தி தான்.  கோயில் குருக்கள் இல்லை;  இருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம்.  எப்படியும் இதன் காரணம் விரைவில் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.  இதை அடுத்து நாங்கள் சென்றது திருவெள்ளறை.

21 comments:

  1. அருமையான திருத்தல உலா..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    எமது பதிவுகள் தங்களின் மேலான பார்வைக்கு ......

    http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_20.html

    தலை எழுத்தை மாற்றும் பிரம்மா
    திருப்பட்டூர்

    http://jaghamani.blogspot.com/2012/06/blog-post_06.html

    ""ஞான உலா''

    http://jaghamani.blogspot.com/2012/06/blog-post_14.html

    மதுரமாய் அருளும் மதுர காளிஅம்மன்

    ReplyDelete
  2. திருப்பட்டூர் நானும் செல்ல நினைத்திருக்குமிடம்....


    பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறதென.

    ReplyDelete
  3. தொடர்கோவில் விஜயம்? படங்களுடன் பதிவு நன்றாக இருக்கிறது. பிரம்மாவிடம் வரம் வாங்க 'விதி இருந்தால்' நல்ல கொக்கி. ஐயனார்ககதை பயத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  4. திருத்தல உலா சுவாரசியமா இருக்கு. தொடரவும் கூடவே வரேன்

    ReplyDelete
  5. thiruppattu ... sari namba list la vassukkalaam next.

    ReplyDelete
  6. இதென்ன ஒரே க்ஷேத்ராடனமா இருக்கே?

    ReplyDelete
  7. திருப்பட்டூர் - அழகான பெயர். இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
  8. அதானே... இராஜராஜேஸ்வரி எழுதாம விட்டிருப்பாங்களானு பாத்தா மொதல் பின்னூட்டம்.. :)

    ReplyDelete
  9. நான் க்ஷேத்ராடனமானு கேட்டா இவர் தொடர் கோவிலானு முந்திக்கிட்டாரே?

    ReplyDelete
  10. திருப்பட்டூர் நாங்களும் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் இடம். பார்க்கலாம்.

    ReplyDelete


  11. திருப்பத்தூர் வேறதான.... ? திருப்பட்டூர் என்று இருக்கிறதே...! முதலிலேயே கேட்டிருப்பேன். அப்புறமா கேக்கலாம்னுதான்...!!!

    ReplyDelete
  12. வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்களும் எழுதி இருக்கீங்களா? வந்து பார்க்கிறேன். நன்றிங்க சுட்டிக்கு.

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், விரைவில் போயிட்டு வருவீங்க; கவலை வேண்டாம்.

    ReplyDelete
  14. வாங்க ஸ்ரீராம், படங்கள் இங்கே எல்லாம் கொஞ்சமானும் எடுக்க முடிஞ்சதேனு நினைச்சேன். மற்றக் கோயில்களிலே காமிராவையே வெளியே எடுக்க முடியலை. கூட்டம் மொய்க்க ஆரம்பிச்சுடுச்சு! :(

    ம்ம்ம்ம்ம்?? ஐயனார் கதையை குருக்களிடம் கேட்டால் தான் சரியாகத் தெரியும். இன்னொரு முறை போனால் குருக்களைப் பார்த்தோ அல்லது மற்றக் கோயிலின் சிவாசாரியார்களையோ விசாரிக்கிறேன். இம்மாதிரிக் கதைகளை நான் நம்புவதில்லை. :))))

    ReplyDelete
  15. கடவுள் நம்மைக் காத்து ரக்ஷிக்கத் தானே தவிர இம்மாதிரி பயமுறுத்த இல்லை என்பது என் திடமான கருத்து. அதனால் இம்மாதிரிக் கதைகளைக் கேட்டுப்பேன்; அவ்வளவு தான்.

    ReplyDelete
  16. வாங்க லக்ஷ்மி, சென்னை வந்ததைச் சொல்லவே இல்லை. இங்கேயும் வந்திருக்கலாமே! வாங்க தொடர்ந்து.

    ReplyDelete
  17. ஜெயஸ்ரீ, திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூர். வாங்க உங்க லிஸ்ட்லே சேர்த்துக்குங்க.

    ReplyDelete
  18. அப்பாதுரை, இங்கே சுத்திக் கோயில்கள் தான். திருமயம் கோட்டைக்கும், புதுக்கோட்டைக்கும் போகணும். எப்போனு புரியலை. :)))

    ReplyDelete
  19. கோவை2தில்லி, கட்டாயமாய்ப் போவீங்க.

    ReplyDelete
  20. ஸ்ரீராம், திருப்பத்தூர் இரண்டு இருக்கிறது. ஒண்ணு வேலூர் கிட்டக்க, இன்னொண்ணு, மதுரை பக்கத்திலே.

    இது திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூர். ரங்க்ஸ் சக்தி விகடனில் இந்தக் கோயிலின் அதிசயங்கள் குறித்து வரதாகச் சொன்னார். வாங்கறோம்; ஆனால் நான் இன்னமும் படிக்கலை. சேர்த்து வைச்சுப்படிக்கணும். :(

    ReplyDelete
  21. எத்தனை ஊருக்குச் சென்று வந்தீர்கள் கீதா. அதிசயமா இருக்கே. இனிமேல் ஸ்ரீரங்கள் இன்னும் பெரிய புண்ணிய க்ஷேத்ரம் ஆகிடும்.
    கீதாசாம்பசிவ விலாஸ் ஆரம்பித்திருகிறார்கள்:)
    சாப்பாடும் இடமும் கொடுத்து கோவில் மகிமைகளையும் சொன்னால் கூட்டம் வராமல இருக்குமா. நன்றி கீதாமா.

    ReplyDelete