எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 05, 2012

எங்கே பயிர் செய்வோம்? நிலத்திலா, கான்க்ரீட் காட்டிலா?

அப்பாதுரையின் பின்னூட்டம்:

நான் பொதுவாகச் சொன்னேன். கரென்ட் கட் தமிழ்நாட்டில தானே? குஜராத் போனா இதையெல்லாம் பயன்படுத்தாம இருப்பீங்களா? மக்கள் இருப்பாங்களா? நான் சொல்ல வந்தது - வசதிக்கேற்றபடி நம் மனநிலைகள் மாறுகிறது என்பதை. மாற்றத்தை மாற்றமாகப் பார்க்காமல், தன்னிலைப் படுத்திப் பார்க்கையில் சில மாற்றங்களை ஏற்க முடியாது போகிறது. சுய கண்ணோட்டத்தை விடுத்த புறப்பார்வையில் மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. குடியிருக்க வீடு தானே தேவை - வாடகை வீட்டில் இருக்கலாமே? வானமே கூரை என்று கூட தேவைப்படும் பொழுது சொல்கிறோமே? கதை என்ற வகையில் உணர்வுகளைத் தட்டிச்செல்கிறது. ஆனால் இதை யதார்த்தப் பார்வையில் பார்க்கையில் பிள்ளையின் செயலில் தவறே இல்லை - பெரியவரின் பார்வையில் சுயநலமே தெரிகிறது.





அப்பாதுரை, மின் தடை இல்லாத மாநிலமே இந்தியாவிலே இல்லைனு சொல்லணும்.  சமீபத்தில் டெல்லி போயிருந்தேனே.  மைத்துனன் வீடு ஹரியானா-டெல்லி பார்டரில் இருக்கும் குர்காம் என்னும் நகரம். சாடிலைட் சிடி என்ற பெயர் தான்.  ஆனால் மின்சாரம் வந்தாத் தான் நிச்சயம்.  வீட்டுக்கு வீடு ஜெனரேட்டரும், ஹை பவர் இன்வெர்டரும் ஓடிக்கொண்டே இருக்கும்.  மஹாராஷ்ட்ராவின் உள் நாட்டுப் பகுதியிலும் ஜெனரேட்டர் இல்லாத வீடே இருக்காது.  மின்சாரத்தில் தன்னிறைவு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இல்லை.  குஜராத் விதி விலக்கு. அங்கே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது காங்கிரஸாக இருந்தாலும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும் மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் தலைவர்கள்.  ஒத்துழைக்கும் மக்களும் கூட.  குஜராத் கலவரம் தான் ஒரு கறுப்புப் புள்ளி.  மற்றபடி என்றுமே குஜராத் முன்னணியில் தான்.  தாய்மொழியில் பாடம், பெண்களுக்கு இலவசக் கல்வி, பெண்களுக்கு முன்னுரிமை என எல்லாவற்றிலும் ஒரு உதாரண மாநிலம்.  ஐந்து வருடங்கள் குஜராத் வாழ்க்கையில் இரவு பத்து மணிக்குக் கூடத் தன்னந்தனியாக நவராத்திரிக்குப் போயிட்டுத் திரும்பி இருக்கேன்.  எங்க பெண்ணும் அம்மாதிரியே தனியாகவே போவாள்.  எந்தவிதமான பயமும் இருக்காது. குஜராத்தில் இருக்கறச்சேயும் அம்மி, கல்லுரல் என்னோட இருந்தது.  குஜராத் என்ன, ராஜஸ்தான் போனப்போவும் அம்மி, கல்லுரல் என்னோடத் தான் வந்தது.  மற்ற மக்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்.  அவரவர் விருப்பம், செளகரியம்.

 //மாற்றத்தை மாற்றமாகப் பார்க்காமல், தன்னிலைப் படுத்திப் பார்க்கையில் சில மாற்றங்களை ஏற்க முடியாது போகிறது. சுய கண்ணோட்டத்தை விடுத்த புறப்பார்வையில் மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.// 

மாற்றம் என்பது ஒன்றைச் சுத்தமாய் அடையாளமே இல்லாமல் அழிப்பது இல்லை. இப்போது எங்காவது இரண்டு கட்டு வீடு, மூன்று கட்டு வீடுனு பார்க்க முடியுமா?  முடியாது.  ஆனால் அதன் பின்னர் வந்த வீடுகளும் அந்த அளவுக்குப் பாரம்பரிய முறையில் கட்டப்படாவிட்டாலும், வெராந்தா, ஹால், சாப்பாடு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறைனு இருந்தது.  இப்போது அதுவும் போய் எல்லாமும் ஐநூறு சதுர அடிக்குள்ளாகப் பறவைக் கூண்டில் இருப்பது போல் இருக்கிறார்கள்.  இம்மாதிரிப் பாரம்பரிய வீடுகளை மேல்நாட்டில் அடியோடு இடித்துத் தள்ள முடியுமா?  இதிலே சுய கண்ணோட்டமோ, தன்னிலைப் படுத்துதலோ எதுவும் இல்லை. பணம் ஒன்'றே பேசுகிறது.  அது கொடுக்கும் செளகரியங்கள் மக்களை மாற்றுகிறது.  பின்னர் உணவுக்கும் குடிநீருக்கும் எங்கே போவார்கள்? ஐந்து, ஆறு பேர் இருந்த வீட்டில் அது அடுக்குமாடிக் குடியிருப்பாக ஆனதும் குறைந்தது நாற்பது பேர் குழந்தைகளும், பெரியவர்களுமாக வசிக்கையில் எல்லாவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்படுமே!  அவங்க கழிவுநீருக்கு என்ன ஏற்பாடுகள் செய்கிறார்கள்?  பக்கத்து வீடுகளுக்குத் திருப்பி விடுவது ஒன்றே அவர்கள் செய்வது.  மாடியில் இருந்து குப்பையை வீசுவார்கள்.  பக்கத்து வீட்டில் போய் விழுமே;  அங்கேயும் மனிதர்கள் தானே வசிக்கிறார்கள் என்ற எண்ணமே இருக்காது.  மாற்றம் ஏற்படுத்திய தன்னிலைப்படுத்துதலும், சுய கண்ணோட்டமும் இங்கே தான் இருக்கிறது.  இது மாறவில்லையே? 


குடியிருக்க வீடு தானே தேவை - வாடகை வீட்டில் இருக்கலாமே? வானமே கூரை என்று கூட தேவைப்படும் பொழுது சொல்கிறோமே? 


ஆனால் வாடகைக்குக் கிடைக்கும் வீடும் வசதியானதாய் இருக்குமா? சொந்த வீட்டில் கிடைக்கும் சுதந்திர உணர்வு வாடகை வீட்டில் கிடைக்குமா? பார்த்த்ப் பார்த்துக் கட்டிய வீட்டை இடிப்பது என்றால் எவ்வளவு கஷ்டம்னு புரியுமா?  வெறும் சிமென்டாலும், கல்லாலும், மணலாலும் ஆனவை அல்ல சொந்த வீட்டுக் கட்டிடங்கள்.  அவரவர் உழைப்பு.  ரத்தம் சிந்திச் சேர்த்த பணத்தில் கட்டியவை.  எல்லாத்துக்கும் மேலே பெற்ற குழந்தைகளைப் போல வளர்த்த மரங்கள்?? செடிகொடிகள்??? காற்றிலே ஒரு கருகப்பிலைச் செடி விழுந்துவிட்டது.  அதைத் தூக்கிக் கட்ட என்னால் முடியலை.  அலுவலகம் கிளம்பிட்டு இருந்த என் கணவர் முதல்லே அதைத் தூக்கிக் கட்டிவிட்டுப் பின்னரே அலுவலகம் செல்ல வண்டியை எடுத்தார்.  எங்க வீட்டு வேப்பமரத்தடியில் தெருவில் போறவங்க வரவங்க எல்லாம் இளைப்பாறுவாங்க. ஒரு சிலர் கொண்டு வந்த சாப்பாட்டைப் பிரித்துச் சாப்பிடுவதும் உண்டு.  குப்பையைப் போடாதீங்கனு மட்டும் நாங்க அறிவுறுத்துவோம்.  தண்ணீர் எங்களையே கேட்டு வாங்கி இடத்தைச் சுத்தம் செய்துட்டுப் போனவங்க உண்டு.  அந்த மரம் இப்போ என்ன கதியில் இருக்கோ. குழந்தையாய் வளர்த்த செடிகொடிகளை வெட்டுவது என்பது சுலபம் இல்லை. அவற்றைப் பிரிவதும் துக்கமான ஒரு நிகழ்வே. பக்கத்திலே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டறவங்க ஆட்கள் போடும் சிமென்டினால் எங்க மாமரம் பட்டுப் போனப்போ எங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு வருத்தம்னு புரிஞ்சுக்க முடியுமா?  எங்க அருமைச் செல்லம் மோதி இறந்தப்போ ஏற்பட்ட அதே வருத்தம் இப்போதும் ஏற்பட்டது.  எல்லாருமே இப்படி அடுக்குமாடி கட்டக் கொடுத்துட்டா மரம் செடி கொடிகளுக்கு எங்கே போறது?  பறவைங்க வாழ வாழி என்ன? மழை பெய்ய வழி என்ன?

யு.எஸ்ஸில் பழைய கட்டிடங்களை அவ்வளவு எளிதில் இடித்துவிட முடியுமா? அவ்வளவு ஏன்? ஐரோப்பியக் கண்டங்களிலே கூட தொன்மையான கட்டிடங்களுக்கும் அவற்றின் பழைய மாதிரிகளுக்கும் முன்னுரிமை உண்டு.  இடிக்க மாட்டார்கள்.  மரங்களை நினைத்த வண்ணம் வெட்ட முடியுமா?  அதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்?  தெரியாமல் ஒரு கிளை முறிந்ததுக்கு அபராதம் கட்டின ஒரு நண்பரை ஹூஸ்டனில் எங்க பையர் காட்டி இருக்கார். கார் பார்க் செய்கையில் மரக்கிளை முறிந்துவிட்டது.  அவருக்கு அபராதம் மட்டுமின்றி ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி நட்டுக் குறிப்பிட்ட வருடங்கள் வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்றும் கட்டளை. இங்கே?  ஏற்கெனவே விலைவாசிகள் உச்சத்துக்கு இருக்கின்றன.  இதிலே நெல்லே விளையலைனா என்ன கதி?  விளைநிலங்களெல்லாம் குடியிருப்புக் கட்டிடங்கள் ஆனால் சாப்பாடு எங்கிருந்து வரும்?  மழை எப்படிப் பொழியும்? சுற்றுச் சூழலில் சமநிலை எப்படி ஏற்படும்?  காடுகளை அழிப்பதாலும், மிருகங்களின் வாழ்வாதாரங்களையும், நீராதாரங்களையும் அழிப்பதாலுமே மிருகங்கள் நாட்டுக்குள் உணவையும், நீரையும் தேடி வருகின்றன.  அந்த மிருகங்களைப் போலவே நாமும் மாறப்போகிறோமோ?  ஒருவரை ஒருவர் கடித்துத் தின்னும் நிலைக்கு வந்துவிடுவோமோ என்றெல்லாம் எண்ணிப் பயப்படுகிறேன்.  அந்த நிலைக்கு வராமல் மக்கள் விரைவில் விழித்துக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

இதிலே பெரியவங்களோட சுயநலம் எங்கிருந்து வந்தது?  பணத்துக்காகப் பெத்தவங்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் அடைத்து வைக்கும் மகனின் சுயநலம் தான் பெரிசாத் தெரிகிறது.  மகனுக்கு நவீன மாறுதல் ஒன்றே குறி. என் சிநேகிதி ஒருத்தியின் குடும்பம் அண்ணா நகரில் தனிவீடு கட்டிக் குடியிருந்தாங்க.  அந்த வீட்டைப் பையர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கொடுக்கணும்னு பெற்றோரை வற்புறுத்த அங்கேயே ஒரு குடியிருப்பு இவங்களுக்கும் கேட்க, பையரோ, தான் டில்லியிலேயே இருக்கப் போவதால், இங்கே வேண்டாம் பணத்தை வாங்கிக்கலாம்னு சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு டில்லியில் வீடு வாங்கிக் கொண்டார் அவர் பெயரிலே. அப்பா, அம்மாவும் பிள்ளை கூப்பிடுவார் எனக் காத்திருந்து பார்த்துவிட்டுப் பின்னர் அவங்களாவே டில்லிக்குப் போனால் அங்கே வரவேற்பு சரியில்லை. மருமகளுக்கு மாமனார், மாமியாருக்குச் செய்ய இஷ்டமில்லை.  பிள்ளையும் வாய் திறக்கவில்லை.  கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்த பெற்றோர் பின்னர் வீடு சென்னையிலும் வாங்கலை, நாங்க இன்னும் பணி ஓய்வு பெறும்வரைக்கும் அங்கே தான் இருக்கணும்.  ஆகவே நீயாவது ஒரு வீடு வாங்கிக் கொடுனு பிள்ளையை வாய் திறந்து கேட்க, வந்ததே தகராறு.

பெற்றோர் சென்னைக்குத் திரும்பி விட்டனர்.  நல்லவேளையா வேலைனு ஒண்ணு இருந்ததாலே பிள்ளை கிட்டே சாப்பாட்டுக்கு இருக்கும்படியா இல்லை.  பின்னர் பணி ஓய்வு கிடைத்ததும் கிடைத்த பணத்திலே கொஞ்சம் நகைகளையும் விற்று மிக மிகச்  சின்னதாக ஒரு (அடுக்கு மாடி தான்)வீடு  வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  இங்கே வந்தால் செளகரியம் போதவில்லைனு பிள்ளை அலட்டலாம். ஏன் பெரிய வீடு வாங்கலைனு கேட்கிறாராம்.  எப்படி மனசு வருது இப்படியெல்லாம்னு நான் அசந்து போயிருக்கேன். இப்படி எத்தனை பேர் வேணும்?  மின்சாரம் இல்லாமல் இருக்கலாம். ப்ரிஜ், ஏசி, ஃபான் இல்லாமல் இருக்கலாம்.  மிக்சி, கிரைண்டர் இல்லாமல் அரைத்துச் சாப்பிட முடியும்.  ஆனால் வீடு?  அதில் விளையும் பொருட்கள்? நிலம்? அரிசி? காய்கறிகள் ? பழங்கள்?  தோட்டங்கள், தோப்புகள் அனைத்தையும் அழித்துக்கொண்டே வந்தால் எங்கே பயிர் செய்வது?  கான்க்ரீட் காடுகளிலா?  அதையானும் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்களா எனில் அதுவும் இல்லை.  சென்னையே ஒரு குப்பைத்தொட்டி;  தமிழ்நாடே ஒரு குப்பைக் கிடங்குனு தான் சொல்ல வேண்டி இருக்கு.


இன்னிக்கு மின்சாரம் படுத்திய பாட்டில் ஒண்ணும் எழுத முடியலை.  ஆஃப்லைனில் கூட எழுத முடியலை.  நாலைந்து நாளா இந்தப் பாடுதான்.  அப்பாதுரைக்கு எழுதின பதிலையே பதிவாக்கிட்டேன். தண்டனை அனுபவிங்க எல்லாரும்.  ஃபாலோயர்ஸ் என்னமோ நிறையக் காட்டுது;  ஓவர் வியூவிலும் ட்ராஃபிக் இருக்கு.இப்போக் கொஞ்ச நாட்களா என்னோட பதிவை நான் பார்க்கிறது குறைஞ்சிருக்குமே.  அதனால் அது கணக்கில் வராது. :))))  ஆனால் பின்னூட்டம் னு பார்த்தா குறைச்சலாத் தான் வருது.  அதான் எப்படினு தெரியலை! :))))))  ஏதோ வந்தாச் சரி!

26 comments:

  1. ம்ம்ம்ம்...

    என்னத்த சொல்ல... இங்கே தில்லியை அடுத்த காசியாபாத் பகுதிகளி, குடிநீர், மின்சாரம் இருக்கோ இல்லையோ, பல அடுக்கு மாடிகள் கொண்ட வீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. பத்து நாட்கள் முன் ஒரு புதுமனை புகுவிழாவிற்குச் சென்றிருந்தேன். 21 மாடிக் கட்டிடம், அதில் நண்பரின் வீடு 13-ஆவது மாடி! குடி தண்ணீர் மோட்டார் போட்டால் வரும் - ஆனால் உப்புத் தண்ணீர் -ஆர்.ஓ., ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் என எல்லாவற்றிற்கும் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும்!

    கான்க்ரீட் காடுகள் தான் எங்கெங்கும்...

    ReplyDelete
  2. கார் பார்க் செய்கையில் மரக்கிளை முறிந்துவிட்டது. அவருக்கு அபராதம் மட்டுமின்றி ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி நட்டுக் குறிப்பிட்ட வருடங்கள் வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்றும் கட்டளை. /

    பரவாயில்லை ..
    அதனால்தான் பெய்யெனப் பெய்கிறதோ மழை !

    ReplyDelete
  3. ஆதங்கமும் கவலையும் புரிகிறது. எங்கள் ஊரிலும் இதே கதை தான்.

    சுயநலமும் , அளவுக்கு மீறி தேவைகளும் ஆட்டு படைக்கின்றன. சுற்று சூழலை பற்றி எந்த உணர்வும் இல்லாமல் , வெறி வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த ஆடம்பரமும், ஆர்பாட்டங்களும் , கொஞ்சம் கொஞ்சமாக , இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.

    பயமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. ரொம்ப அருமையா, sincereஆ எழுதியிருக்கீங்க.. இன்னும் ஒண்ணிரண்டு தடவை படிச்சு என் கருத்தைச் சொல்றேன். அவசரத்துக்கு இந்தக் கருத்து: தன்னிலைப் படுத்துறதுனால தான் பெரியவருக்கு வலியே.

    ஆமாம்.. பவர் கட்டிலேயே இபப்டி எழுதினீங்கன்னா full பவர்ல எவ்வளவு பவர் fullஆ எழுதுவீங்கனு நெனச்சுப் பார்க்கிறேன்.. :)

    ReplyDelete
  5. வாங்க வெங்கட், குர்காமிலும் இதே கதை தான். ஆனால் ஒண்ணு. குடியிருப்பு வளாகத்தில் திறந்தவெளி அமைக்கின்றதோடு அதிலே மரங்களையும் வளர்க்கின்றனர். எங்க மைத்துனர் வீட்டில் பக்கவாட்டில் ஜன்னல்களே கிடையாது. இருபக்கத்துச் சுவரும் பக்கத்துவீடுகளுக்கும் நமக்கும் பொது. வீட்டின் முன்னால் இருந்தும், பின்னால் இருந்தும் வருவதே காற்றும், வெளிச்சமும். எங்களுக்கு என்னமோ ஜெயிலில் இருக்கிறாப்போல் ஒரு எண்ணம். :))))

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, தமிழநாட்டில் மழைக்குக் குறையே இல்லை. ஆனால் சேமிப்புத்திட்டங்களுக்குத் தான் குறை. மழை நீர் சேமிப்பு என்பது பாதியில் நின்றுவிட்டது. :(

    ReplyDelete
  7. வாங்க வெற்றி மகள், ரொம்ப நாளாச்சு வந்து! :))) இயற்கையை நாம் அழிப்பதாலேயே அது நம்மை சீற்றத்துடன், புயலாக, சுநாமியாக, எரிமலை வெடிப்பாக வந்து அழிக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் பிழைப்போம். எங்கே! :((

    ReplyDelete
  8. வாங்க அப்பாதுரை, பவர் கட்டிலே இருந்ததினால் தான் உத்வேகமே வந்தது. இயற்கையை அழிக்கலைனால் மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காதுனு தோன்றியது. நெய்வேலியிலே பாருங்க மழை காரணமாக் கரியை வெட்டி எடுக்க முடியலையாம். அதனால் மின் உற்பத்தி பாதிப்பு.

    மழைக்காலம் வரப் போகுதுனு ஏற்கெனவே தெரியும். தமிழ்நாட்டு மழை குறித்தும் தெரியும். வருமுன் காக்க வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை தான்! :(

    ReplyDelete
  9. நீங்க எழுதியிருக்கறது இப்ப நடக்கற நடப்புத்தான் . ரொம்ப நன்னாவே எழுதியிருக்கேள் மிசஸ் சிவம். ஆனா அப்பாதுரை அவர்களோட comment ஓட context அது இல்லைன்னு எனக்கு படறது .அவர் சொன்ன மாதிரி அந்த பெரியவரோட எழுத்துக்களை படித்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோணித்து. என்ன அப்படி தப்பா சொல்லிட்டார் அவரோட பிள்ளை நு. அவருக்கு (மகனுக்கு) தெரிஞ்சதை தோணினதை தானே சொன்னார்நு.

    அப்பாதுரை அவங்களும் கிரிடிகல் ஆ சொல்லற மாதிரி எனக்கு தோனல . அவர் சொல்லறத நான் புரிஞ்சிண்ட விதம் - நம்பள சுத்தி இப்படித்தான் இருக்கு. அதுல நல்லதும் நிறைய இருக்கு. நம்ப belief system தான் right மத்தது தப்புங்கறது இல்லை. எந்த மாற்றத்திலும் நமக்கு ஆதாயமா இருக்கறதை நாம் எடுத்து உபயோகிக்கத்தானே செய்யறோம்னு ..

    அப்படி பண்ணறதும் தப்பு என்பதில்லையே!. அதுவும் அநுபவமே ! வேத காலம், நம் முன்னோர் வாழ்க்கை, இல்ல, 15/ 20 வருஷத்துக்கு முந்தின வாழ்க்கை superior ஆகவே இருந்திருக்கட்டும் ஆனா அது இப்ப நம்ப வாழ்க்கையில் இல்லை. அப்படி ஆகணும் உடனே ங்கறது realistic க்கும் இல்லை. ஏன்னா கால சக்கரம் வாழ்க்கை முறைகள் மாறிண்டே இருக்கு. முந்தைய வாழ்க்கை முறையோட இப்ப compare பண்ண முடியாது - அட் லீஸ்ட் என் அளவுல. .
    நம் முன்னோர்கள் மாதிரி நம்மளும் கிராமத்துல போய் இப்ப வசிக்க முடியறது கஷ்ட்டம். ஏன்னா மாடர்ன் வசதிகள் நமக்கும் பழக்கப்பட்டு விட்டது ஒரு விதத்துல காரணம். வீடு கான்க்ரீட் சிமெண்ட் இல்லாம கட்ட முடியல்ல, மின்சாரம் அதை ஒட்டின வசதி , தொலை பேசி, கணினி வேலைக்கு ஆள், கார், அல்லது வாகனம், சொந்தமா இருந்தாலும் சரி வாடகைக்கு எடுத்ததானாலும் சரி இல்லாம நாம இருக்கறது இல்லை.
    ஏன்னா அது தான் available unfortunately :( cities ல இருக்கறதுல நாமும் ஆதாயம் பார்க்கிறோம் தான்னு எனக்கு பட்டது . ஏர்போர்ட், contacts , majority சொந்த பந்தம் இருக்குமிடம் இதெல்லாம் ஒரு சௌகரியமா தானே பாக்கறோம். குழந்தைகள் வெளிநாடுகளில் :( அவா வர 2 வாரத்துக்கு அவாளுக்கு உபயோக பட்ட சௌகரியத்துக்கு ஏத்த மாதிரி நம்ப வசதிகளும் நாம மாத்தி அமைச்சுக்கறோம். நம்ப குழந்தைகளை விட பேரக் குழந்தைகளுக்கு இங்கே பழக்கப்படாத சூழ்நிலைகள். இந்த மாதிரிதானே எல்லாருக்கும் தோணறது இல்லையா .ஜனம், அதன் தொகை , மனம், எண்ணங்கள் ஆசைகள் செயல்கள் ஈடு கொடுக்க முடியாம போறது :(((

    நானும் 30 வயசுல பண்ணைக்காடுல நிலம் வாங்கிண்டு குடிசை போதும் அதை போட்டுண்டு நீ வசதி இல்லதவாளுக்கு பாடம் சொல்லித்தா நான் வைத்தியம் பண்ணறேன்னு இவர் கிட்ட சொன்னவ தான். பள்ளிக்கூ டம் நடத்தலாம்னு ஆசைப்பட்டவதான். வந்து பாத்தா எல்லாருக்கும்!" வேண்டியதை" கொடுத்தபின் மிஞ்சற காசுக்கும் ஆசைக்கும் காணியா...வேலி கூட வாங்க முடியாது போல இருந்தது !! அதனால என்ன? நமக்கு வேற எப்படி அந்த உதவியை செய்ய முடியுமோ அப்படி செஞ்சுண்டு தான் இருக்கோம். நம்ப நல்ல எண்ணம் ஆசை compromise ஆகாம பாத்துக்கறது. இப்படித்தான் செயனும்னு இல்லையே! இது இல்லைனா இன்னும் ஒண்ணை "அவன்" உண்டாக்குவான் :)என்ன செய்யரோம்ன்கறது முக்கியம் இல்லையே எப்படி செய்யறோம்ங்கறது தானே?

    நன்றும் தீதும் பிறர் தர வாரா! ன்னு பெரியவா சொல்லி இருக்கா.அவா சொன்னது நம்மளுக்கு எவ்வளவு தூரம் apply ஆறது , நம்ப contribution இதுல எவ்வளவு சின்னதாகவே இருந்தாலும் என்னனு பாத்துண் டு போறதும் ஒரு வித ஸெல்ப் inquiry தான்னுதான் நான் இப்பல்லாம் பாக்கறேன் அப்படி பாக்கறச்சே பிறத்தியார் மேல projections இல்லாம, judgmental இல்லாம மனசுல ஒரு acceptance வருகிறது .

    past is gone !! future .. என்ன கொண்டு வரப்போறதுன்னு தெரியாது. இருக்கறது இப்போதைய நிலை ஒண்ணுதான், அதுல நமக்கு இருக்கறதை வைத்து நாம செஞ்சுண்டு போயிண்டே இருக்க வேண்டியது தான். எல்லா அனுபவமும் அனுபவிக்கவேண்டியதே!! இப்ப நடக்கறதும் ஒரு அனுபவமே. தவிர்த்தாலும் அந்த அனுபவத்துக்காக திரும்ப வர வேண்டியிருக்கும்னு தோனும் எனக்கு.

    ReplyDelete
  10. ஷ்.... அப்பாடா ! மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது! அண்ணா நகர்க் குடும்பம் - தமிழ்ப்படம் பார்ப்பது போல இருக்கு. இப்படிப்பட்ட பையர்கள் இருப்பதால்தான் மழை தொடர்ந்து பெய்வதில்லையோ?!

    //ஆமாம்.. பவர் கட்டிலேயே இபப்டி எழுதினீங்கன்னா full பவர்ல எவ்வளவு பவர் fullஆ எழுதுவீங்கனு நெனச்சுப் பார்க்கிறேன்.. :)//

    அதானே! :)))

    ReplyDelete
  11. கொங்கிரீட் கட்டிடக் காடுகள் எல்லோருக்கும் உள்ள கவலைதான்.

    தலைநகரைப் பொறுத்தவரை சனப் பெருக்கத்தில் தவிர்க்கவும் முடியாதுள்ளது. இருக்கும் மரங்களை அழித்து கட்டடங்களை கட்டுகிறார்கள் மீண்டும் மரம் நட நினைப்பதில்லை அதுதான் குறை.

    ReplyDelete
  12. ஜெயஶ்ரீ, அப்பாதுரை சொன்னதை நானும் புரிந்து கொண்டேன்; நான் புரிந்து கொண்டேன் என்பது அவருக்கும் தெரியும் னு நினைக்கிறேன். :))))

    என்னோட/எங்களோட கவலை எல்லாம் எதிர்காலத்துக்கு வரப்போகிற சமுதாயத்துக்கு கான்க்ரீட் காடுகளையா விட்டுட்டுப் போகப்போறோம்? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?

    எங்க தாயாதி ஒருத்தர் வங்கி வேலை; நகரங்களில் இருந்தவர் இப்போ பரவாக்கரை கிராமத்தில் தான் வசிக்கிறார். மின்சாரம் தேவை தான்; இல்லைனு சொல்லலை. ஆனால் அதுக்கும் மற்றத் தேவைகளுக்கும்வித்தியாசம் இருக்கே. இப்போ இங்கே ஸ்ரீரங்கத்திலும் பல தோப்புகளும், பல நிலங்களும் ட்ரஸ்டில் இருப்பதால் பிழைத்திருக்கிறது எனலாம். இல்லைனா இங்கேயும் இத்தனை மரங்களைச் செடி, கொடிகளைப் பார்க்க முடியாது. ஒரு வீடு இருந்த இடத்தில் பத்து மனிதர்கள் இருந்த இடத்தில் நூறு பேர் இருப்பதென்றால்?? கொஞ்சம் யோசிங்க.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா; உண்மை. அந்தத் தீதை நாம பண்ணாமல் இருக்கலாமே என்பது தான் என் கருத்து.

    நேத்திக்கு ஒரு குட்டிக்கதை படித்தேன். ஒரு மனிதன் இறைவனிடம் கேட்கிறான். நீ நல்லவன்னு சொல்றாங்களே எல்லாரும், அப்புறமா ஏன் புயல், மழை, எரிமலை வெடிப்புனு உண்டாக்கி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துகிறாய்னு!

    அதுக்குக் கடவுள், முட்டாளே, அதெல்லாம் நான் பண்ணியதில்லை; உனக்கு நீயே விளைவித்துக் கொண்டது. நான் நல்ல பூமியாக, வளமான நிலங்களாக எல்லாரும் வாழ வசதியாத் தான் கொடுக்கிறேன். இயற்கையை நீங்க தான் மீறிச் செல்வதால் இப்படி எல்லாம் நடக்கிறதுனு பதில் சொன்னாராம். எதிலே படிச்ச்சேன்னு நினைவில் இல்லை. :)))))

    ReplyDelete
  13. அண்ணாநகர்க் குடும்பம் இப்போவும் அண்ணா நகரிலே இருக்கு. :((( அவங்க அவ்வப்போது புலம்புவாங்க. பாவமா இருக்கும். :((((

    ReplyDelete
  14. வாங்க மாதேவி, எல்லாரும் தலைநகரிலே கூடுவது தான் கான்க்ரீட் காடாகத் தலைநகரம் மாறுவதன் காரணம். வேலை வாய்ப்புகளை மற்ற நகரங்களுக்கும் பரவலாக்கினால் தலைநகரில் ஜனப்பெருக்கமும் குறையும். மின்சாரச் செலவும் குறையும். இதெல்லாம் யார் கேட்கிறாங்க?

    ReplyDelete
  15. நல்ல கேள்விகள்... நல்ல பதில்கள்...(கருத்துரைகளும்)

    ReplyDelete
  16. அருமையன பதிவு கீதா.எல்லோர் மனத்திலும் ஓடும் எண்ணங்களை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். நம் நாட்டின் அவலங்களை இதை விட யாராலும் அழுத்தமாகப் பதிய முடியாது.
    சுரண்டல் முதலைகள் பூமித்தாயைத் துன்புறுத்தினால் அவள் பகவானிடம் முறையிடுவாள் என்பது வழக்கம். இப்போது பகவானே மனம் வைத்தால் தான் நிலைமை மாறும்.

    ReplyDelete
  17. எலகசன்லே நின்னா எனக்கு ஒரு ஓட்டு விழும் போலிருக்கே? ரொம்ப நன்றி Jayashree.
    // கால சக்கரம் வாழ்க்கை முறைகள் மாறிண்டே இருக்கு. முந்தைய வாழ்க்கை முறையோட இப்ப compare பண்ண முடியாது
    மிகச் சரியான கணிப்பு.

    அது மட்டுமில்லை. முந்தைய வாழ்க்கை முறை நன்றாக இருப்பது போல் தோன்றுவது மாயை. அது உண்மையும் அல்ல. எனக்குத் தெரிஞ்சு ஒரு மூத்தவர் கூட வசதிகளைப் பயன்படுத்தவோ அடுத்த தலைமுறையைப் பற்றி புலம்புவதையோ நிறுத்தவில்லை. இன்றைக்கு அல்ல, நேற்றைக்கும் அப்படித்தான். நான் ஐந்தாவது பாஸ் பண்ணி வீட்ட்டுக்கு வந்தால் உடனே ஒருவர் "நான் அந்தக்காலத்து மூணாவது - இந்தக் காலத்து பி.ஏவுக்கு சமம்" என்பார்கள். "ஓகே.. அப்ப அந்தக்காலத்து ஐந்தாவது இந்தக் காலத்து எம்.ஏவுக்கு சமம்" என்று நான் நினைத்து அடங்குவேன். ஒரு சில சமயம் ஐந்தாவதோடு நிறுத்திக் கொண்டு முப்பது வருடங்கள் கழித்து எம்.ஏ படித்ததாகப் பீற்றிக் கொள்ளவும் தோன்றும். இன்றைக்கு இதையே நான் வேறு விதத்தில் சொல்கிறேன், அவ்வளவு தான். என் பிள்ளைகள் கேல்குலேடரை பயன்படுத்தும் பொழுது நான் பனிரெண்டாம் வாய்ப்பாட்டைப் பெருமையாகச் சொல்லி என் நாளில் மரத்தடியில் படித்த பெருமையைச் சொல்கிறேன். நல்ல வேளையாக என் பிள்ளைகள் என்னைப் போலில்லாமல் உடனடியாக என் முகத்தில் கேலியாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

    எதற்குச் சொல்கிறேன் என்றால் பழம்பெருமையில் ஒரு பெருமையும் இல்லை. வேதம், சாத்திரம், கலாசாரம், பண்பாடு என்று சும்மா சொல்லிக் கொண்டிருக்கலாம். கறிக்குதவாது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை தறிகெட்டுப் போவதைப் பற்றியே பேசுகிறார்கள். சமீபத்தில் உவேசா அவர்களின் "என் சரிதம்" படித்தேன். அதில் அவருடைய மூத்த தலைமுறை காலத்தைப் பற்றி எழுதியிருப்பார். படிக்கும் பொழுது எனக்கு இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று தோன்றியது உண்மை - அதன் எளிமையை வியந்தாலும்.

    கதையில் கூட 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்' செய்தி அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும். கதையில் பிள்ளையின் சொல்/செயல் இரண்டுமே யதார்த்தமானவை. இந்த நாளின் வசதிக்கேற்ப தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள நினைக்கும் பாங்கு பாராட்டவேண்டியது கூட.

    கான்க்ரீட் காட்டில் ஒரு தவறும் இல்லை. தவறென்றால் அது நம்முடையதாகும். நாம் தான் இங்கே கொண்டுவந்தோம் அடுத்த தலைமுறையை. நாம் பிழைத்தது போலவே நம்முடைய வரும் தலைமுறைகளும் பிழைக்கும். சிட்டுக்குருவி சாகுதே என்று வருத்தப்படுவது romantic, ஆனால் part of life.

    ReplyDelete
  18. வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படுத்துது. இந்த வாட்டி டேன்ஸ் இல்லே பாட்டு. "மாமா.. தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க.. ஆனா அந்தத் தெய்வமே.. ப்லா ப்லா ப்லா" தானாடவில்லையம்மா சதையாடுது..

    ஏற்கனவே கரண்டு இல்லாம தூக்கம் வராது, இதுல சிவாஜி சதையாடுறதெல்லாம் ஞாபகப்படுத்தணுமா?

    ReplyDelete
  19. வாங்க டிடி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  20. வாங்க வல்லி, நீங்க சொல்றது உண்மையே, அப்பாதுரை என்னதான் கிண்டல் பண்ணினாலும், அவர் நம்முடைய உள்ளார்ந்த கவலையைப் புரிந்து கொள்ளவில்லை. :(

    ReplyDelete
  21. அப்பாதுரை, பழைய வாழ்க்கையைப் பற்றிய பெருமையோ, கவலையோ இல்லை. அது மாயையும் இல்லை. உண்மை. அது மாயைனா இப்போது நடப்பதும் மாயை தானே. கடைசியில் நீங்களும் ஆன்மீகப் பாதைக்கு வந்துடுவீங்க போல. :)))))

    அடிப்படையானவற்றை விட்டுவிட்டு தேவையில்லாதவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வேதம் சொல்லாத விஷயங்கள் இல்லை. நம்முடைய கலாசாரம் சீரழிந்து வருகிறது. மேல் நாடுகளில் நம் கலாசாரம் பின்பற்றப் படுகிறது. இங்கே நேர் எதிராக நடக்கிறது. இதிலெல்லாம் எதுவும் இல்லைனு சொல்ல முடியாது. இப்போ இதுக்குப் பதில் இங்கே சொன்னால் நீண்டு போகும். ஆனால் விரைவில் சொல்கிறேன்.

    ReplyDelete
  22. மற்றபடி நீங்க எலக்‌ஷனில் நின்னால் கட்டாயம் ஜெயிப்பீர்கள். சந்தேகமே இல்லை. உங்களுக்கு ரசிகர் மன்றமே இருக்கே!

    முந்தைய வாழ்க்கை முறையோட கம்பேரிசனும் இல்லை. அதன் தொடர்ச்சியே.

    ReplyDelete
  23. வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படுத்துது. இந்த வாட்டி டேன்ஸ் இல்லே பாட்டு. "மாமா.. தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க.. ஆனா அந்தத் தெய்வமே.. ப்லா ப்லா ப்லா" தானாடவில்லையம்மா சதையாடுது..

    ஏற்கனவே கரண்டு இல்லாம தூக்கம் வராது, இதுல சிவாஜி சதையாடுறதெல்லாம் ஞாபகப்படுத்தணுமா?//

    ஹிஹிஹி, அப்பாதுரை, வி.வி.சி.

    சிவாஜி சதையாடறதை நினைச்சு நினைச்சு சிரிப்புத் தாங்கலை. :))))))

    ReplyDelete
  24. அப்படியெல்லாம் இல்லிங்க. நீங்க சொல்றது நல்லாப் புரியுது. மாற்றத்தை எதிர்கொள்வது அவங்கவங்க மனப்பாங்கையும் toleranceஐயும் பொருத்ததோ?

    என் ஒரு பாட்டி அடிக்கடிப் புலம்புவார்: "பிள்ளைகளுக்கு மூத்தவங்க மேலே அன்பே இல்லை.. மதிப்பே இல்லை..". இன்னொரு பாட்டி "நாம தான் அவங்க மேலே அன்பா இருக்கணும், அவங்க நம்ம மேலே அன்பா இருக்கணும்னு அவசியமே இல்லை" என்பார்.

    மாற்றம் என்பது முன்னோக்கிய ஒரு வழிப்பாதை என்பது என் கருத்து. திரும்பிப் பார்த்தால் சங்கடம்.

    ReplyDelete
  25. actually, சொல்ல நினைச்சதை சரியாகச் சொல்லாமல் போனேன். என்னதான் எனக்குப் புரிந்தாலும் நீங்கள் உணரும் அதே உணர்வை என்னால் உணர முடியாது, உண்மை தான்.

    ReplyDelete
  26. மாற்றம் என்பது முன்னோக்கிய ஒரு வழிப்பாதை என்பது என் கருத்து. திரும்பிப் பார்த்தால் சங்கடம்.//


    சரிதான் அப்பாதுரை, ஆனால் அது ஒருவழிப் பாதையாக இருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. இல்லையா! :))))

    முன்னோக்கிச் செல்வதிலே கவனம் இருந்தால் நல்லதுதான். ஆனால் அது நல்ல பாதையாக இருக்கணும். சுற்றுப் புறத்தைச் சீரழித்துக்கொண்டு செல்லும் பாதை சரியானதில்லை.:(

    ReplyDelete