எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 29, 2012

காதல் என்பது எது வரை!

நினைத்ததை எழுதுகிறேன்.  இன்று காலை தான் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்.  இது என்ன கொடுமை! இதன் பாதிப்பு அடங்கப் பல நாட்கள்/மாதங்கள் ஆகலாம்.  அந்த அளவுக்கு மக்கள் கொதித்துப் போயிருக்கின்றனர்.  இதிலே மத்திய அமைச்சர் ஒருத்தரும், வேறொரு பெண்மணியும் பெண்களை இரவிலே நண்பர்களோடு போக வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  இது இந்தக் காலகட்டத்தில் நடக்கக்கூடிய ஒன்றா? ம்ஹூம்! மருத்துவக் கல்லூரி மாணவி இரவு, பகல் பார்க்க முடியுமா?  ஐடியில் வேலையாக இருக்கும் பெண்ணால் இரவு, பகல் ஆண், பெண் என்ற பேதம் பார்க்க முடியுமா?   இதைக் குறித்து என்ன கருத்துகள் என்பதை எதிர்பார்க்கிறேன்.  அடுத்ததும் பெண்கள் சம்பந்தப் பட்டதே.


இப்போ அடுத்தது காதல் குறித்து.  சமீபத்தில் ஜீவி சார் எழுதின காதல் கதையில் கல்யாணம் செய்து கொண்டால் காதல் மறைந்துவிடும் என்ற ஒரு கருத்தைப் பின்னூட்டங்களில் படித்தேன்,  பொதுவாக அந்தக் காலங்களில் சிறு வயதில் கல்யாணம் செய்து விடுவார்கள். ஆகவே சின்ன வயதில் இருந்தே பழகிப் பழகி ஒரு பிடிப்பு வந்து விடும்.  இப்போவோ அப்படி இல்லை. குறைந்த பக்ஷ வயது 25 ஆகப் பெண்களுக்கு இருந்தது, இப்போது இன்னமும் கூடி விட்டது.  இப்போது கல்யாணம் என்பது பெற்றோர் பார்த்து நிச்சயம் என்பது மிகவும் குறைவே. அப்படியே ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணம் என்றாலும் நிச்சயம் ஆனதில் இருந்து தொலைபேசிப் பேச்சு, அடிக்கடி சந்தித்தல், எதிர்காலத் திட்டமிடுதல் என எல்லாமும் இருக்கிறது.  ஆக இதுவும் ஒரு காதல் கதையே.

இப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் அதன் பின்னர் காதலிப்பதில்லையா? காதல் கல்யாணங்கள் எல்லாம் ஜெயிக்கிறதா?  ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணங்கள் எல்லாமும் தோற்கிறதா?  உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன?  யார், யாருக்கு விட்டுக் கொடுக்கணும்?  அல்லது கொடுக்கக் கூடாது?  கல்யாணம் செய்து கொண்ட பின்னர் காதல் மலராதா? அல்லது அது காதல் இல்லையா?  காதலிக்கும் இருவர் மனமொப்பித் திருமணம் செய்து கொண்டால் அங்கே காதல் ஜெயிக்கிறதா?  தோற்கிறதா?  காதல் இருக்கிறதா?  அழிகிறதா?

ஒரே மண்டைக்குடைச்சல் தாங்கலைங்க! :))))))))))


25 வயதுக்கு மேல் பெண்கள் மனம் முதிர்ச்சி அடைந்துவிடும். அவர்களால் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப நடந்து கொள்ள முடியுமா?  ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் திண்டாடுகின்றனர்.  சிலர் வெளியே வருகின்றனர்.  சிலர் உள்ளுக்குள்ளேயே போராடுகின்றனர்.  சிலர் அழுகின்றனர்.  அங்கே வேறிடத்தில் அன்பு பிறக்கிறது.  அது உண்மையான அன்பா?  எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்துவது இந்தக் காலத்தில் முடியுமா? ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறது.  என்றாலும் இந்தக் காதல்ங்கறது என்னங்க?  ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்புத்தான் காதலா? அப்படின்னா அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டால் தப்பா? செய்து கொள்ளாமல் இருந்தால் தான் காதல் உயிர் வாழுமா?


உட்கார்ந்து யோசிப்போர் சங்கத் தலைவி!


பி.கு.  நாங்க ரெண்டு பேரும் தினம் ஒரு பத்துத் தரமாவது கத்திச் சண்டை போட்டுப்போம்! :)))))

24 comments:

  1. நாங்க ரெண்டு பேரும் தினம் ஒரு பத்துத் தரமாவது கத்திச் சண்டை போட்டுப்போம்! :)))))

    கத்தியோடா ..?????

    ReplyDelete
  2. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத பட்சத்தில் காதல் அங்க இருக்குமான்னு சந்தேகம்.

    சண்டை போட்டுக் கொண்ட்டால் என்ன,. அன்பு இருக்கறதனாலதான் அது வரும்.:)
    நாங்களும் அப்படியே!

    ReplyDelete


  3. இருபது வயதில் பிடித்தது எல்லாம்
    எழுபது வயதில் தளர்ந்து போய்விடும்.

    முப்பது வயதில் முகர்ந்ததெல்லாம்
    மூப்பு வந்தால் மறந்தே போகும்.

    நாற்பது வயதின் நாற்றமெல்லாம்
    நாலு கால் பாய்ச்சலில் ஓடியே ஒளியும்.

    ஐம்பதும் அறுபதும் பைய நடக்கும்.
    வைதாலும் திட்டாலும் அவளே என்றிருக்கும்.

    எழுபதிலே தான் எழுந்து வரும்.
    ஆசைக் கிழத்தியின் அருமை தெரியும்.

    எண்பதிலே பண்படும்.
    மணந்தவளின் மனம் புரியும்.

    உண்மை இதுவே உளம் சொல்லும்
    உவமை இல்லை இக்காதலுக்கே.
    இருமை இல்லை ஒருமை தான்.
    இருவரின் மனம் நுகர் ஒற்றுமைக்கே.

    சுப்பு தாத்தா.

    பி. கு: சங்கத்து அங்கத்தினர்களெல்லாம் எப்படி ?
    புதுவருடத்திற்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அது சரி. அந்த இளம் பெண்ணுக்காக
    ஒரு துளி நீர் உங்கள் கண்களிலிருந்து விழ்
    இங்கு வாருங்கள்.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  4. டெல்லி மாணவி மறைவு வருத்தமளிக்கும் செய்தி. குற்றவாளிகளை விசாரணை என்ற பெயரில் நேரம் கடத்தாமல் அவளுடன் சேர்ந்து கொளுத்த வேண்டும்.

    ReplyDelete
  5. இந்த சமயத்தில் சில நியாய விஷயங்கள் பேசினால் உணர்ச்சி வேகத்தில் தவறாகப் பார்க்கப் படும். ட்ரெஸ் கோட், கலாச்சார மீறல்கள் போன்றவை பற்றிப் பேசினாலும் நிறையக் கோபம் வருகிறது மக்களுக்கு. இரவுப் பனி ஆற்றும் ஐ தி மக்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பான வாகன வசதியைப் பெறுவதிலும் வேறு பாதுகாப்பான வசதிகளைப் பெறுவதிலும் என்ன சிக்கல், அலுப்பு? நடந்தபின் வருந்துவதை விட, தற்காப்பாக இருப்பது மேல். ஆனால் இப்படி பாதுகாப்பாகவோ, கண்ணுறுத்தும்படி உடையணிந்தாலோ இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா என்றால் கண்டிப்பாகத் தவறு. தண்டனைகள் குறைவாகவும், குற்றவாளிகளுக்குப் பேச ம.உ.காரர்கள் இருப்பதாலும்தான் இந்நிலை இந்தச் சம்பவத்துக்குப் பின்னும் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் இதர் போன்று எவ்வளவு சம்பவங்கள்? என்ன தைரியம்?

    ReplyDelete
  6. காதல் என்பது இக்காலத்தில் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஆகி விட்டது. pizza சூடு ஆரி டெலிவர் ஆனால் நிராகரிக்கும் சமுதாயத்தில் வாழும் நாம், காதலையும் அதே நிலையில் வைத்திருக்கிறோம். உணர்ந்த காதல்கள், மனம் முதிர்ந்த, குறை நிறைகளைச் சரியாய் உணர்ந்து இணையும் காதல்கள் உடையாது. வெளி மயக்கங்களும், அவசர உணர்ச்சிகளும் சேர்த்த காதல் நிலைக்காது.

    ReplyDelete
  7. வாங்க ராஜராஜேஸ்வரி, ஆமாம், கத்தியோட தான். காய் நறுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். அப்போக் கையிலே கத்தி தான் இருக்கும். அதோட அவரும் கத்திப் பேசுவார். நானும்!:))) ஆக மொத்தம் கத்திச் சண்டை தானே! :))))

    ReplyDelete
  8. வாங்க வல்லி, மனங்கள் பேசிக் கொள்ளுமாக இருக்கும். அப்போ அங்கே சொற்களுக்கு இடம் ஏது?

    //நாங்களும் அப்படியே!//

    நீங்களும் அப்படியேனு சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் மனசு சமாதானம் ஆகிறது! :))))

    ReplyDelete
  9. வாங்க சூரி சார், சங்கத்திலே அங்கத்தினர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் நானே. தலைவி, அங்கத்தினர், பொதுக்குழு, பொதுவில் இல்லாத குழுனு கொ.ப.செ. எல்லாமும்! :)))))


    உங்களோட கருத்துப் பாடல் அருமை, அனுபவப் பகிர்வும் கூட. நன்றி. உங்கள் பதிவில் வந்து பார்க்கிறேன். இதிலேயும் சில வரிகள் விட்டுப் போயிருக்கின்றன. தேடணும்.:))))

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், எங்கே, முதலமைச்சர் லெப்டினன்ட் கவர்னரைச் சொல்கிறார். அவரோ எங்க பேரிலே குத்தமே இல்லைங்கறார். இப்படி அவங்களுக்குள்ளேயே இன்னும் ஒரு முடிவுக்கு வரலை, இதுக்கு யார் பொறுப்புனு பொறுப்பு ஏத்துக்கறதிலே இருந்து நழுவறதிலேயே இருக்காங்க. இந்த நாட்டிலாவது, நீதியாவது, நேர்மையாவதுனு தான் தோணுது! ஆச்சு, புது வருஷம் பிறக்கப் போகுது.

    போராட்டக்காரர்களும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடப் போயிடுவாங்க. இது மறந்துடும்.:(

    ReplyDelete
  11. ட்ரெஸ் கோட், கலாச்சார மீறல்கள் போன்றவை பற்றிப் பேசினாலும் நிறையக் கோபம் வருகிறது //

    இதைக் குறித்து எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழ் ஹிந்துவில் அலுத்துப் போகும் அளவுக்கு எழுதியாச்சு! அதிலே ஒரு பெண்மணி என்னைப் பார்த்து, இப்போதைய பெண்கள் நன்கு படித்து நன்கு சம்பாதிப்பதில் எனக்குப் பொறாமை என்றும், ஏன் நீ இன்னும் சென்னையிலே உட்கார்ந்திருக்கிறாய்? கிராமத்தைப் பார்த்துப் போகவேண்டியது தானேனும் கேட்டார். :))))))

    எதிலே பொறாமைப் படுவது என்பது இல்லையா? அம்பத்தூரில் ஒரு நாள் வாழ்க்கை நடத்திப் பார்க்க வேண்டும் அந்தப் பெண்மணி. அப்புறமாச் சொல்வாங்க அது நகர வாழ்க்கையா, நரக வாழ்க்கையானு! :))))

    இப்போக் கிட்டத்தட்ட ஒரு பெரிய கிராம நகரத்துக்கும் வந்தாச்சு! :))))

    ReplyDelete
  12. இந்தக் காலத்துக் காதலைப் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இளைஞர்களுக்குக் கோபம் வரும். :)))) பொதுவாக கணவன், மனைவிக்குள்ளே ஐந்து வயதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்பது எங்க வீட்டிலே எல்லாருடைய தீர்மானமான அபிப்பிராயம். வயது வித்தியாசம் குறைந்து இருப்பவர்களிடையே தான் அதிகமாய் ஈகோ பிரச்னை, ஒத்துப் போகாமல் ஒருவரை ஒருவர் கேலி செய்தல் என்பதெல்லாம் நடக்கிறது. இதைப் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    பெண்ணுக்குச் சீக்கிரம் மன முதிர்ச்சி ஏற்படும். ஆணுக்குக் கொஞ்சம் தாமதமாகவே மன முதிர்ச்சி ஏற்படும். ஆகவே தான் இந்த வயது வித்தியாசம் முக்கியம் என்கிறேன். :))))) இது குறித்து இன்னும் விபரமாகப் பேசலாம்.

    ReplyDelete
  13. //சமீபத்தில் ஜீவி சார் எழுதின காதல் கதையில் கல்யாணம் செய்து கொண்டால் காதல் மறைந்துவிடும் என்ற ஒரு கருத்தைப் படித்தேன்..//

    இதுவே கதை சொன்ன கருத்து மாதிரி வார்த்தை அமைப்பு அமைந்து விட்டது, தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

    ReplyDelete
  14. பெண்ணுக்குச் சீக்கிரம் மன முதிர்ச்சி ஏற்படும். ஆணுக்குக் கொஞ்சம் தாமதமாகவே மன முதிர்ச்சி ஏற்படும். ஆகவே தான் இந்த வயது வித்தியாசம் முக்கியம் என்கிறேன். :)))))

    மன்னிக்கவும். துக்க வீட்டில் சிரிப்பை அடக்க முடியாமைக்கு.

    ஆங்காங்கே நிகழும் இத்தகைய வன்முறைகளுக்கு ஆணின் அகம்பாவம், மது அரக்கனின் கட்டற்ற பாய்ச்சல் , நவீன பெண்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், மனிதர்களின் அடங்காத செல்வம் சேர்க்கும் மற்றும் ஆடம்பரத்தின் மீதான மோகம் எனப் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். தண்டனைஎன்பது இருப்பவர்களுக்கான எச்சரிக்கை மட்டுமே . கடுமையான சட்டம் மட்டும் போதாது உறுதியாக கடைபிடிக்கும் மனஉறுதியும் அவசியம். காலதாமதம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்துவிடும்...வழமைபோல்.

    ReplyDelete
  15. ஜீவி சார், மன்னிக்கவும், இப்போத் தான் நீங்க சொன்னதும் பதிவைத் திரும்பப் படித்தேன். பின்னூட்டத்தில் படித்தேன்னு வந்திருக்கணும். விட்டுப் போயிருக்கு; திருத்திடறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. வாங்க நிலா மகள், கிட்டத்தட்ட உங்கள் கருத்தையே தான் நானும் கூறி வருகிறேன். ஆணுக்கு மன முதிர்ச்சி தாமதமாக ஏற்படும் என்பதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என எனக்குப் புரியவில்லை. நீங்கள் பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் என்ற தலைப்பில் நான் ஏற்கெனவே எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கவும். தமிழ் ஹிந்துவிலும் வெளிவந்துள்ளது.

    http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_3755.html

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete


  17. // பெண்ணுக்குச் சீக்கிரம் மன முதிர்ச்சி ஏற்படும். ஆணுக்குக் கொஞ்சம் தாமதமாகவே மன முதிர்ச்சி ஏற்படும். ஆகவே தான் இந்த வயது வித்தியாசம் முக்கியம் என்கிறேன். :)))))//

    மன முதிர்ச்சி என நீங்கள் சொல்வதன் பொருள் புரியவில்லை. மன முதிர்ச்சி என்னும் சொற்றொடரை அண்மையில் ஒரு எழுத்தாளருமே
    தனது கதையில் அல்லது அதன் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.

    தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாமே தன்னால் அல்ல. அதற்கு தான் காரணமாகவும் அல்ல. ஏதோ முன் வினைப்பயன். என்று சில சமூக
    சிந்தனைகளும் உள. அது தவிர பெண்ணாலே பிறந்திவிட்டாலே இப்புவியில் படுகின்ற துன்பங்களில் பெரும்பங்கு பெண்களுக்குத்தான்
    அவற்றினை ஓர் அளவிற்கு ஒப்புக்கொண்டு, பொறுமையின் சிகரமாக விளங்கவேண்டியது பெண்ணுக்கு அழகு என காலம் காலமாக
    நமது ஹிந்து சமூகங்களிலிடையே நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். வழி வழி வந்த கருத்து இது.

    இந்த ப்பொறுமையைக் காப்பது, குடும்பப்பொறுப்புகளை உணர்வது, அதற்கேற்றவாறு குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களையும் ( மாமியார், நாத்தனார் உட்பட ) அனுசரித்து அணைத்து அரவணைத்து செல்வது தான் மன முதிர்ச்சி என்று சொல்கிறீர்களா ? இல்லை...வேறு பொருளில் எழுதி இருக்கிறீர்களா ?

    மன முதிர்ச்சி என்று சொல்லுமுன்னே மனம் என்று நாம் நினைக்கிறோம் எனத் தெளிவு பெறுதல் தேவை. மனம் என்பதற்கு பொருள்
    உளவியலில் வேறு. நரம்பியலில் வேறு. ஆதி சங்கரர் மனம் என்று எதை சொல்லியிருக்கிறாரோ அதை மேலை நாட்டு உளவியல்
    காண்ட், விட்கின்ஸ்டன் போன்றவர்கள் சொல்லவில்லை.

    மனம், முதிர்ச்சி என்ற இருசொற்களை எவ்வாறு நாம் புரிந்துகொள்கிறோம் என்பதில் பற்பல கோணங்களும் அறிவு பூர்வமான வித்தியாசங்களும் உள்ளன.

    மனம், மன நிறைவு, மன வளம், மன முதிர்ச்சி இந்த சொற்றொடர்கள் எல்லாமே உலகில் வாழும் வெவ்வேறு சமூகத்தினர் வெவ்வேறு விதமாகப்புரிந்துகொள்கின்றனர்.



    ஆகவே பெண் ஒருத்தி மன முதிர்ச்சி நிலையை சீக்கிரம் அடைகிறாள் என்பதற்கு உளவியல், நரம்பியல் கோணங்களிலோ அல்லது மதச்சார்பற்ற அல்லது
    மதச்சார்புள்ள இலக்கியங்களிலோ ஏதேனும் மேற்கோள் காட்டினால், நன்றி உடையவனாக இருப்பேன்.

    அடுத்து, திருமதி கீதா சாம்பசிவம் சொல்லியது:

    //வயது வித்தியாசம் குறைந்து இருப்பவர்களிடையே தான் அதிகமாய் ஈகோ பிரச்னை, ஒத்துப் போகாமல் ஒருவரை ஒருவர் கேலி செய்தல் என்பதெல்லாம் நடக்கிறது. இதைப் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    பெண்ணுக்குச் சீக்கிரம் மன முதிர்ச்சி ஏற்படும். ஆணுக்குக் கொஞ்சம் தாமதமாகவே மன முதிர்ச்சி ஏற்படும். ஆகவே தான் இந்த வயது வித்தியாசம் முக்கியம் என்கிறேன். :)))//

    நான் சந்தித்த சூழ்னிலைகள் இதற்கு மாறானவையே. பல உதாரணங்களைச் சொல்ல முடியும் என்றாலும், பொதுவில் இதைச் சொல்ல இயலாது இருப்பதால், உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன் அல்லது உங்களுக்கு இ.மெயில் அனுப்புகிறேன்.

    வயதில் என்னை விட மிக மூத்தவர்கள் நீங்கள். ( நான் 71 ) உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நமஸ்காரங்கள். புது வருஷ வாழ்த்துக்கள்.
    நீங்கள் இப்பொழுது அம்பத்துரில் இல்லையா ?

    சுப்பு ரத்தினம் @ சுப்பு தாத்தா.


    ReplyDelete
  18. வயதில் என்னை விட மிக மூத்தவர்கள் நீங்கள். ( நான் 71 ) உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நமஸ்காரங்கள். புது வருஷ வாழ்த்துக்கள்.
    நீங்கள் இப்பொழுது அம்பத்துரில் இல்லையா ?//

    ஹிஹிஹி, சூரி சார், உங்களோட கமென்ட் முழுசும் படிக்கலை, இதைப் படிக்கிறச்சேயே சிரிப்பு வந்துடுத்து. இன்னும் என் கணவருக்கே 70 ஆகலை! :)))) எனக்கு 71 ஆக இன்னும் பத்து வருஷங்களாவது ஆகும். அப்போ நிச்சயமா நமஸ்காரங்களை ஏத்துக்கறேன். தப்பாய் நினைக்க மாட்டீங்க என்ற எண்ணத்துடன்!

    கீதா சாம்பசிவம், புத்தாண்டு வாழ்த்துகள். மத்ததுக்கு அப்புறமா வரேன். இப்போ மின்சாரம் போகும் நேரம். :))))

    ReplyDelete
  19. மனமுதிர்ச்சி என்பது இயல்பாக இல்லாமல் வலிய வரவழைத்துக் கொள்ளும் ஓர் உணர்வு. அதுவும் இதில் தன் விஷயங்களில், பிறர் விஷயங்களில் என்கிற பாகுபாடும் இருக்கிறது. வேறு வழியில்லை என்கிற ஞானோதய அடிப்படையில் கொள்ளும் உணர்வுகளும் மனமுதிர்ச்சி சார்ந்ததாகாது.

    ReplyDelete
  20. //மன முதிர்ச்சி என்று சொல்லுமுன்னே மனம் என்று நாம் நினைக்கிறோம் எனத் தெளிவு பெறுதல் தேவை. மனம் என்பதற்கு பொருள்
    உளவியலில் வேறு. நரம்பியலில் வேறு. ஆதி சங்கரர் மனம் என்று எதை சொல்லியிருக்கிறாரோ அதை மேலை நாட்டு உளவியல்
    காண்ட், விட்கின்ஸ்டன் போன்றவர்கள் சொல்லவில்லை. //


    @சூரி சார்,

    மனம் என்பதை நான் ஆதிசங்கரர் போலோ, மேலை நாட்டு அறிஞர்கள் போலவோக் கையாளவில்லை. இங்கே அதை விளக்கவும் தெரியவில்லை. மற்றபடி உங்கள் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  21. ஜீவி சார்,

    அப்படித் தனக்கு ஒண்ணு, பிறத்தியாருக்கு னா இன்னொண்ணு, வேறே வழியில்லைனா ஏத்துக்கறது எல்லாம் மன முதிர்ச்சி என நான் சொல்வதோடு சேராது. இதற்குத் தன்னலம் என்றே பெயரைச் சூட்டலாம். :)))))))))

    ReplyDelete
  22. நான் சொன்னது வேறே. மன முதிர்ச்சி என்று நாமெல்லாம் கொள்வது மனத்தின் சொந்த இயல்புக்கு மாறான ஒன்று. மனம் எப்பொழுதுமே குழந்தையிலிருந்து பெறும் அனுபவங்களின் அடிப்படையில், அந்த அதன் வளர்ச்சியின் வாக்கில் இயல்பான செயல்பாடு கொண்டது. மனசின் அந்த இயல்பான தன்மையை அறிவு கைவசப்படுத்தி தன் முடிவுகளுக்கு ஏற்ப மனசை வழிநடத்துவதை மனமுதிர்ச்சி என்று அழைக்கிறோம். ஆக, மனமுதிர்ச்சி என்று பெயரிடலே தவறான ஒன்று.

    மனமுதிர்ச்சி என்று நீங்கள் நினைக்கிற ஒரு செயலைச் சொல்லுங்கள். அதை விளக்க முயற்சிக்கிறேன்.




    ReplyDelete
  23. தில்லி சம்பவம் வேதனை தர, பின்னூட்டதில் உங்க வரிகள் (ஆண் பெண் திருமண வயது வித்தியாசம்)வருத்தம் மறந்து சிரிக்கச் செய்தது தோழி. கேலியாக அல்ல.

    இருப்பினும் உங்க முந்தைய கட்டுரைகளை இப்போது தான் வாசித்தேன். பல்வேறு தளங்களில் பல்வேறு விஷயங்களை ஆற அமர பேசும் உங்க பாணி கொஞ்சம் கவரத்தான் செய்தது என்னை.

    ReplyDelete
  24. நிலாமகள், நீண்ட நாட்கள் கழிந்தும், என் பழைய பதிவுகளைப் படித்துவிட்டு நீங்கள் இட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மிக்க நன்றி. நான் இதை அதாவது வயது, வித்தியாசத்தைச் சிரிப்பிற்காகச் சொல்லவில்லை. நம் சாஸ்திர, சம்பிரதாயங்களிலேயே காணப்படக் கூடிய ஒன்றே. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. குறைந்த பக்ஷமாக ஏழு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்பார்கள். நான்கிலிருந்து ஏழு வயதுக்குள் இருக்கலாம். திருமணம் குறித்த பல விஷயங்களையும் அலசும் வகையில் ஒரு தொடர் எழுத எண்ணம். தற்சமயம் உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. விரைவில் ஆரம்பிக்கிறேன். அப்போது அநேகமாக எல்லாருக்கும் புரியும் வண்ணம் இதைக் குறித்தும் எழுதறேன். மீள் வரவுக்கு மனமார்ந்த நன்றி. அடிக்கடி வாங்க.:)))))

    ReplyDelete