எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 31, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே!

விழுந்து எழுந்து போய் உட்கார்ந்தால், அந்த அரை அடி இடத்தில் உட்காரவே முடியலை.  காலை மடக்கி உட்காரணும்.  அங்கே தான் பிரச்னையே! அதுக்குள்ளே நாங்க இருந்த கிளி மண்டபத்தின் கிரில் கதவுகளை மூடிப் பூட்டுப் போட்டுவிட்டார்கள்.  உள்ளே வந்த மக்களின் எண்ணிக்கையால் இருக்கிற இடமும் பறி போயிடும்போல ஆயிடுச்சு.  இதற்குள் நம்ம ஆனையார் ஆண்டாளம்மாள் வந்து பிளிறவே, சரி, உம்மாச்சி வர நேரம் ஆயிடுச்சுனு நினைச்சேன்.  அதுக்கு ஏத்தாப்போல் வாத்தியங்கள் முழங்க ஆரம்பித்தன.  கூட்டம் இடி,பிடி, தள்ளு,முள்ளு.  அருகே உட்கார்ந்திருந்த ஒரு அம்மையார் என்ன செய்வதெனத் தெரியாமல் என்னைப் பிடித்துத் தள்ள, தூணில் முட்டிக்க இருந்தவள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டேன். அதைப் பார்த்துவிட்டு ரங்க்ஸ் தன் இடத்தை எனக்குக் கொடுக்க, அந்த அம்மாவுக்கு வந்ததே கோபம். நல்லவேளையாகச் சந்தனு மண்டபத்திற்கு ரங்கன் வந்தானோ, பிழைச்சேனோ!

இது தனிப்பட்ட முறையில் நடந்தது எனினும், சந்தனு மண்டபத்தில் ஸ்வாமி வரவும் எங்களுக்கு நான்கைந்து வரிசை முன்னால் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்து நிற்க பின்னால் இருந்தவர்களுக்கு தோளுக்கினியானின் உச்சி கூடத் தெரியவில்லை.  போததற்குக் கம்பிகள் கட்டி இருந்ததால் அதில் வேறு ஏறி நின்னு பார்க்க ஆரம்பித்தார்கள்.  நம்மால் முண்டி அடித்துக்கொண்டு பார்க்க இயலாது என்பதால் சும்மா இருந்தேன். சொல்லற விருந்தேன்.  சிறிது நேரத்தில் கீழே ரங்கன் இறங்கிப் பரமபத வாசல் நோக்கிப் போகிறான் என்பது அவனுடைய பாண்டியன் கொண்டையின் உச்சி தெரிந்ததில் இருந்து புரிந்தது.  அன்றைய தரிசனம் எனக்கு அந்தப் பாண்டியன் கொண்டையின் உச்சியைப்பார்க்க முடிந்தது தான்.  அதோடு 300 ரூ. போயாச்சு! :))) ரங்கன் பிராஹாரத்தில் வலப்பக்கம் திரும்பினதும் சந்தனு மண்டபத்தின் கூட்டம் ரங்கனோடு சென்றது.  எங்கள் பக்கம் கதவைத் திறக்கவே இல்லை.  ஆனால் பொறுமை இழந்த கூட்டத்தினர் கம்பி ஏறித் தாண்டிக் குதித்து, முத்தங்கி சேவை பார்க்கும் சீட்டுக்கான வரிசையில் நிற்க ஆரம்பிக்க, வெளியே யாரோ தர்ம தரிசன மக்களை உள்ளே அனுமதிக்க, சந்நிதிக்குள் நுழையும் குலசேகரன் படியருகே மீண்டும் மக்கள் வெள்ளம்.

நாங்கள் பின்னாலேயே நின்றிருந்தோம்.  கதவு திறந்தால் போனால் போதும் என.  ஏற்கெனவே தாறுமாறாகக் கூடி இருந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்திவிட்டு, எங்களுக்குக் கதவு திறக்க முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.  நாங்களும் முத்தங்கி சேவை பார்க்க வரிசையில் நின்றோம்.  அங்கிருந்து பரமபத வாசல் திறப்பும், ரங்கனின் பிரவேசமும் நன்றாகத் தெரிந்தது.  தொலைக்காட்சிப் பெட்டியும் நாங்கள் பார்க்கும் கோணத்தில் வசதியாக வைக்கப் பட்டிருக்கவே அதை நன்கு தரிசனம் செய்து கொண்டோம்லிதை வீட்டில் இருந்தே இன்னும் நன்றாகப் பார்த்திருக்கலாம் இல்லையா? :)))) மெல்ல மெல்லக் கூட்டம் நகர்ந்து சென்று கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் மணியளவில் நாங்கள் குலசேகரன் படியைக் கடந்து உள்ளே சென்றோம். நிறைய வட இந்தியர்கள் துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க இவ்வளவு கஷ்டம் இல்லை என்றும், காசியில் விஸ்வநாதரையோ, மதுராவின் கிருஷ்ண ஜன்ம பூமியிலோ இத்தனை சிரமம் இல்லை என்றோ சொல்லிக் கொண்டு வந்தார்கள்.  அதோடு ஒவ்வொரு இடத்திலும் படியை விழுந்து வணங்கிக் கொண்டும் வந்தார்கள்.  அதனால் ஏற்பட்ட தாமதம் காவல்துறையினரின் கோபத்தை அதிகப் படுத்தியது.

ஒரு வழியாகப் பெரிய பெருமாளின் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.  கிட்டே போறச்சேயே நன்கு கண்களைத் தீட்டி வைத்துக்கொண்டு முத்தங்கி சேவையை அடி முதல் முடி வரை நன்கு பார்த்துக் கண்கள் வழியாக மனதுக்குள் ஏற்றிக் கொண்டேன். அழகான முத்துக்களால் ஆன அங்கியை மார்பு முதல் கால் வரை அணிந்து கொண்டு பெரிய பெருமாள் சேவை சாதித்தார்.  ஒரு கணமே பார்க்க நேர்ந்தாலும் விடாமல் சிறிது விநாடி கூடவே நின்று பார்த்துவிட்டே நகர்ந்தேன்.  அந்தச் சமயம் அங்கே பட்டாசாரியார்கள் துரத்துவதை எல்லாம் கண்களோ, மனமோ பார்க்காமல் அதற்கு ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு நன்கு தரிசனம் செய்து கொண்டு வெளி வந்தோம்.  பின்னர் பரமபத வாசல் வழியே வெளிவர உள்ள வரிசைக்குப் போனோம்.  அங்கே வரிசையும் இல்லை;  எதுவும் இல்லை.  காவல்துறை கும்பலை அடக்குவதாக நினைத்துக்கொண்டு, மனிதச் சங்கிலி போட்டுத் தடுத்து ஒரு கும்பலை அனுப்பி வைத்துப் பின்னர் இன்னொரு கும்பலை அனுப்பினார்கள்.  அந்த இடத்தைக் கடக்கையில் எனக்கு மூச்சே திணற ஆரம்பித்து விட்டது.  கூட வந்த இன்னொரு அம்மாள் பார்த்து என்னை இழுத்து ஓரத்துக்குத் தள்ளினார்.  காவல்துறை நான்கு நான்கு  பேராக வரிசையில் விட்டால் கும்பலாக இருக்காது.  இந்த அழகில் எங்களை எல்லாம் சுற்றிக்கொண்டு வானு வெளியே வேறே அனுப்பினாங்க.  அப்புறமா இன்னொரு காவல்துறைக்காரர் பார்த்துக் கூப்பிட்டு இந்த வழியாகவே போங்கனு அனுப்பினார்.  எல்லாம் முடிந்து  வெளி வருகையில் தெற்கு கோபுர வாசலை மூடி விடவே எல்லாரும் கிழக்கு கோபுரம் வழியாகவே வெளி வரவேண்டி இருந்தது.  அதற்கு ஒரு கும்பல். கும்பலில் மாட்டிக் கொள்ளாமல் நாங்கள்  வீட்டுக்குத் தானே போகிறோம் என மெதுவாகவே வந்தோம்.  தெற்கு கோபுர வாசலில் கூட்டம் தாங்கவில்லை. தரிசனத்துக்கு வந்த மக்களை  உள்ளே செல்ல அந்த வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.  அதனாலேயே திரும்பிச் செல்லும் வழியை மாற்றி இருக்காங்க.



வெளி வருகையில் மணி ஆறரை ஆகி விட்டது.  பின்னர் வீட்டுக்கு ஆட்டோ பிடித்து வந்தால் அன்றைக்கு ஆட்டோக்காரருக்கு வந்த வாழ்வு, அத்தனை நாள் முப்பது ரூபாய் கொடுத்த இடத்தில் இன்று ஐம்பதோ, நாற்பதோ வேண்டுமாம். வண்டியை எடுத்து வந்தால் வைக்கச் சரியாத வசதி இல்லை என்பதாலும் ஏகக் கூட்டமாக இருப்பதால் வண்டியைத் திரும்ப எடுக்க நேரமாகும் என்பதாலும் வண்டியை எடுத்து வரவில்லை.  வேறு வழியில்லாமல் நாற்பது ரூபாய் கேட்டவரிடம் வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.  காஃபி போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தது தான் தெரியும். எட்டரை மணிக்கோ, ஒன்பது மணிக்கோ தான் எழுந்தேன்.  அதற்கப்புறமும் உடம்பு வலி சரியாக மேலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

14 comments:

  1. நன்கு கண்களைத் தீட்டி வைத்துக்கொண்டு முத்தங்கி சேவையை அடி முதல் முடி வரை நன்கு பார்த்துக் கண்கள் வழியாக மனதுக்குள் ஏற்றிக் கொண்டேன். அழகான முத்துக்களால் ஆன அங்கியை மார்பு முதல் கால் வரை அணிந்து கொண்டு பெரிய பெருமாள் சேவை சாதித்தார்.

    தரிசனப்பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. பாடம் : கூட்ட நாளில் தெய்வ தரிசனம் நேரில் வேண்டாம். தொல்லையில்லாமல் தொலைக் காட்சியில் பார்த்து விடலாம்! (எனக்கு சொல்லிக் கொண்டேன்!)

    ReplyDelete
  4. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இப்படி ஒழுங்கு முறையில்லாமல் அவதிப்பட வைத்துவிட்டார்களே கீதா.:(
    இத்தனை வேதனையிலும் அரங்கனைக் கண்நிறையக் கண்டு கொண்டதும் அவனும் உங்களைப் பார்த்திருப்பான்.

    நல் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதாம்மா!..

    ReplyDelete
  7. வாங்க ராஜராஜேஸ்வரி, மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் ஆஸ்தானம் இருக்கும் இடத்தில் வெளிச்சம் விளக்குகளுடையது மட்டுமே. வெளியே இருக்கும் செயற்கை வெளிச்சத்தில் இருந்து உள்ளே நுழைகையில் பெருமாளைச் சட்டெனக் காண முடியாது. நாம் கண்டு உணரும் முன்னர் அப்புறப் படுத்தப் படுவோம். ஆகையால் முன் கூட்டியே என் கண்களைத் தயார் செய்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த முறை ஆராவமுதனை (கும்பகோணம்) ஹார்த்தியின்போதுதான் அவனது முகத்தில் தவழும் புன்னகையைக் கண்டுகொள்ள முடிந்தது. அது இல்லாமல் முகத்தில் ஒன்றுமே தெரியாது.

      Delete
  8. ராஜராஜேஸ்வரி,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், தொல்லையில்லாமல் தொலைக்காட்சி தரிசனமே சரி.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்.

    ReplyDelete
  11. வாங்க வல்லி, நம்ம நாட்டில் எங்கே ஒழுங்கு முறை இருக்கு? எல்லா இடங்களும் இப்படித்தானே! :(((

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இனிமே வைகுண்ட ஏகாதசி தரிசனம் போகணும்னு நினைத்திருப்பவர்களுக்கு அது ரொம்ப கஷ்டம்னு சொல்ற மாதிரி பதிவு இருக்கே...

    ReplyDelete