எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 07, 2013

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு.  அடுத்து இதுக்குப் புடைவை எடுக்க வேண்டும்.  இதற்கும் நாள் பார்த்துத் தான் எடுப்பார்கள்.  அநேகமாய்க் கல்யாண ஜவுளி எடுக்கும் நல்ல நாளிலேயே நல்ல நேரத்தில் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவயும் எடுத்து விடுவார்கள்.  பிராமணர்களில் ஒன்பது கஜம் புடைவை தான் எடுக்க வேண்டும். இதற்கு அரக்கு, மஞ்சள், பச்சை,சிவப்பு, மெஜந்தா, ரோஜா நிறம் போன்ற கறுப்புக் கலக்காத வண்ணங்களிலேயே எடுப்பார்கள். கூடவே ரவிக்கைத் துணி எடுத்தாலும், புடைவையோடு சேர்த்து ரவிக்கைத் துணியை நனைத்து வைப்பதில்லை. ரவிக்கைத் துணியைத் தனியாகத் தான் கொடுப்பார்கள். பொதுவாக வீட்டில் பிறந்த பெண்களில் வயது முதிர்ந்த சுமங்கலியான அத்தைக்குத் தான் இது போய்ச் சேரும்.  கல்யாணப் பிள்ளையின் அல்லது கல்யாணப் பெண்ணின் இந்த அத்தையைத் தவிர வேறு மூத்த சகோதரிகள் திருமணம் ஆகி இருந்தாலும் அவர்கள் மணையில் சுமங்கலிகளுள் ஒருவராக அழைக்கப்படுவார். புடைவைக்கு எதிரே போடும் இலையைத் தவிர்த்த முதலாம் இலையில் அத்தையை உட்கார வைப்பார்கள்.  இரண்டாம் இலையில் வயது வாரியாக வீட்டில் பிறந்த மற்றப் பெண்களை உட்கார வைப்பார்கள்.  வீட்டில் பெண்கள் இல்லை எனில் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்மணிகளை அழைப்பது உண்டு.  ஆனால் புடைவை கொடுப்பது வீட்டுப் பெண்ணுக்கே அநேகமாய் கொடுப்பார்கள்.  அப்படி இல்லாமல் சிலர் அந்நியப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பதாய்ப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்நியப் பெண்ணுக்குக் கொடுக்கலாம்.

இதில் தஞ்சைப் பக்கம் ஒரே ஒரு புடைவை தான்.  புடைவை இலையும் ஒன்றே.  ஆனால் மதுரைப் பக்கம் இரண்டு இலை போடுவார்கள்.  அத்தைக்குப் புடைவை எடுத்திருக்கிற மாதிரி வீட்டில் பிறந்த அடுத்த தலைமுறைப் பெண்ணும் கல்யாணமாகி இருந்தால் அவளுக்கும் புடைவை எடுத்திருப்பார்கள்.  பெரியப்பா பெண், சித்தப்பா பெண் போன்றோருக்கும் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. கல்யாணம் ஆகாமல் இறந்த பெண்ணை நினைத்து ஆறு கஜம் புடைவையும், கன்யாக் குழந்தைக்குப் பாவாடை, சட்டையும் எடுப்பதும் உண்டு. திருநெல்வேலிக்காரர்கள் வீட்டில் பிறந்த பெண்களுக்குப் புடைவை வைத்துக் கொடுப்பதில்லை.  வீட்டின் மூத்த மாட்டுப் பெண்ணிற்கே அந்தப் புடைவை போய்ச் சேரும். 2, 3 மருமகள்கள் இருந்தால் அவர்களுக்கும் புடைவை வாங்கி நனைக்காமல் வழிபாட்டில் வைத்து எடுத்துக் கொள்வார்கள்.  புதிய மருமகள் கல்யாணம் ஆகி வந்திருந்தால் அவளுக்கு அந்தப் புடைவையைக் கொடுப்பதும் உண்டு. மேலும் திருநெல்வேலிக்காரர்களில் சிலர் பெண்ணின் கல்யாணம் என்றால் பெண் கல்யாணத்திற்கு முன்னாலும், பிள்ளையின் கல்யாணம் என்றால் மருமகள் வந்த பின்னரும் சுமங்கலிப் பிரார்த்தனை நடத்துவார்கள்.  மதுரை, தஞ்சைப் பக்கங்களில் இரண்டு கல்யாணங்களிலும் முன்னாடியே நடத்திவிடுவார்கள்.  தவிர்க்க முடியவில்லை எனில் தான் பின்னால் நடக்கும். அப்போது சுமங்கலிப் பிரார்த்தனைக்காக ஒரு ரூபாய்க் காசை முடிந்து வைப்பது வழக்கம்.

காலை எழுந்து குளித்துவிட்டு,  கால்படி அரிசி, ஒரு ரூபாய்க் காசு, ஒரு சின்ன உருண்டை வெல்லம், மட்டைத் தேங்காய் எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துவிட்டு, ஒரு வெள்ளைத் துணியை மஞ்சள் கலந்த நீரில் நனைத்துப் பிழிந்து சற்றே, உலர்த்தி அதில் ஒரு ரூபாய்க் காசை முடிந்து கட்டி அம்மன் படத்தருகே வைப்பார்கள்.  இது சுமங்கலிப் பிரார்த்தனை இன்னும் நடக்கவில்லை; நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவு கூர வைக்கும்.  சுமங்கலிப் பிரார்த்தனையின் போது அந்தக் காசை எடுத்துபுடைவைக் கலத்தோடு வைப்பார்கள்.  பிள்ளையாருக்கு வைப்பது எதற்கு எனில் எந்தக் காரியம் செய்தாலும் முதல் வழிபாடு அவருக்கே என்பது தான். அரிசி, வெல்லம் வைக்காமல் வெறும் ஒரு ரூபாய்க் காசைப் பிள்ளையாரிடம் வைத்துவிட்டும் முடிந்து வைப்பது உண்டு. அவரவர் செளகரியம்.

நேற்றைய பதிவில் பாலக்காட்டுத் தமிழர்களிடையே சுமங்கலிப் பிரார்த்தனை அவ்வளவு வழக்கம் இல்லை என்று சொன்னதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் நண்பர் திரு எஸ்.நீலகண்டன்.  குமரி மாவட்டத்துக்காரரான இவர் பாலக்காட்டுத் தமிழர்கள் தஞ்சை, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தான்.  ஆகவே அவர்களிலும் சுமங்கலிப் பிரார்த்தனை நிச்சயம் உண்டு என்றும் அவர் வீட்டிலேயே அவர் பாட்டி இருந்த காலத்தில் பூவாடைப் பொண்டுகள் எனப் பூவாடைப் பானை, "பாவுள்ளில்" வைத்திருந்ததாகவும் அதில் ஆறு பெண்களின் பெயர்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  அதை யாரும் சாதாரணமாகத் தொடக்கூடாது என்ற ஆசாரக் கட்டுப்பாடுகள் இருந்ததையும் நினைவு கூர்கிறார்.  அதிசயப்பொண்டுகள் பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாயும் நேரில் பார்த்ததாகவும் கூறுகிறார்.  மேலும் பொண்டுகள் இலையில் உட்கார்ந்து சாப்பிடுவதும் நான் ஏற்கெனவே இந்தப் பதிவில் கூறி இருப்பது போல் சில வீடுகளில் வீட்டுப் பெண்கள் தான் உட்காருவார்கள் எனவும் சில வீடுகளில் அது இல்லை என்பதையும் தெரிவிக்கிறார்.

புடைவை எடுத்தாச்சு. மற்றப் பெண்களுக்குக் கொடுக்க ரவிக்கைத்துணி, வளையல்கள், சீப்பு, கண்ணாடி, (முகம் பார்க்குமாறு இருத்தல் நலம்)மருதாணி, மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி பாக்கெட்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், இயன்றால் தேங்காய் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் இதை ஓலைப் பெட்டியில் போட்டு வைத்திருப்பார்கள்.  ரவிக்கைத் துணியோடு ஓலைப்பெட்டியை வைத்துக் கொடுப்பார்கள்.  சிலர் முறத்தில் வைத்துக்கொடுப்பார்கள்.  இப்போதைய ப்ளாஸ்டிக் யுகத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் தான். எல்லாம் தயாராக முன் கூட்டியே வாங்கி வைத்து இருக்கணும். அடுத்து எண்ணெய் கொடுப்பது.  சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்து  சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை எண்ணெய் கொடுப்பதே வழக்கம். ஒரு சிலர் இப்போதெல்லாம் அவரவர் வீட்டிலேயே குளித்துவிட்டு வருவதாய்ச் சொல்வதால் வீடுகளுக்குச் சென்று எண்ணெய் கொடுப்பார்கள்.  எண்ணெய், சீயக்காய், மஞ்சள் தூள் கொடுப்பார்கள்.  எல்லாம் கொடுத்துவிட்டுக் குங்குமம் கொடுத்து அழைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கும் வீட்டிலேயே இருந்தால் பெண்களை அமர வைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்து எண்ணெய் கொடுப்பார்கள்.ஆனால் அதற்கு முன்னால் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.

இவ்வளவு தேவையா என்பவர்களுக்கு!  இந்தக் காலத்தில் யாருக்கும் தாம்பூலம் கொடுக்கையில் என்ன வைப்பது என்றே தெரியவில்லை.  மேலும் ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நலம் என்பதற்காகவும் சொல்லி இருக்கேன்.  அதற்கு ஓலைப் பெட்டி கொடுக்கலாம். எவர்சில்வருக்குப் பித்தளை பரவாயில்லை. முன்பெல்லாம் எவர்சில்வரை இரும்போடு சேர்த்தி எனச் சொல்வார்கள்.  இப்போது ப்ளாஸ்டிக்கும், எவர்சில்வரும் தான்! அதோடு பலருக்கும் அவரவர் குடும்ப வழக்கம் தெரியறதில்லை. எந்த ஊரைச் சேர்ந்தவங்கனு தெரிஞ்சால் அந்த வழக்கத்தையும் பின்பற்றலாம். என்ன செய்யணும், எப்படிச் சமைக்கணும் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்டிருக்கின்றனர். எல்லாருக்காகவுமே இதைப் பதிவு செய்கிறேன்.

20 comments:

  1. ஆனந்தம் ஆரம்பம். சுமங்கலிகள் வந்தாச்சு.
    இரட்டை இலை என்று நீங்கள் சொன்னதால் மதுரைப் பாட்டிவழக்கம் என்று நினைக்கிறேன். அருமை!! கீதா.
    அத்தைகளுக்குக் கொடுப்பதுதான் வழக்கம்.
    அம்மாவீட்டிலும் ,புகுந்த வீட்டிலும் திருமணத்துக்கு முன்பேயே செய்துவிடுவார்கள். சுமங்கலிகளுக்குத் தனி சமையல்.
    மற்றவர்களுக்கும் கல்யாணகளை கட்டிவிடும்.
    அன்றே வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புடவை வேஷ்டி,குழந்தைகளுக்கும் துணிமணி எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். வெகு விள்க்கமாகச் சொல்லி வருகிறீர்கள் கீதா.

    ReplyDelete
  2. நல்ல விளக்கமான பதிவு.
    சுமங்கலி பிராத்தனை எப்படி செய்வது என்று தெரியதவர்களுக்கு பயன்படும்.
    எங்கள் வீடுகளிலும் உண்டு.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது போல் குடும்ப வழக்கத்தை யாரும் தொடருவதில்லை... (சிலரைத் தவிர)

    ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சொல்லும் விதம் அசர வைக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. இந்த விவரமெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை.. தேவையா இல்லையா என்பது வேறே விஷயம். தேவை என்று நினைப்பவர்களுக்கும் சும்மா தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் உதவும்.

    ReplyDelete
  5. இவற்றைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒன்றின் மாற்று அடுத்த விவரத்தில் என்று எதையும் விடாது எழுதி இருக்கிறீர்கள். அடுத்து சுமகளிப் பிரார்த்தனைச் சமையலா! அதற்கு என்று மெனு / கட்டுப் பாடு உண்டா?

    ReplyDelete
  6. 'சுமங்கலிப்...' என்று படிக்கவும் பப்ளிஷ் க்ளிக் செய்யும் தவறை நானே பார்த்து விட்டேன்! ஸோ நோ இம்போசிஷன்!

    ReplyDelete
  7. //சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!//

    ரொம்பவும் சந்தோஷம். நல்ல பகிர்வு.

    சூடான சுவையான போளி, வடை, திரட்டுப்பால், சுக்குவெல்லம் போன்ற ஸ்பெஷல் ஐட்டங்களை மட்டும் மறக்காமல் அனுப்பி வையுங்கோ.;)

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்... விவரங்களைச் சேமித்து வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, சுமங்கலிகளுக்குச் செய்யறதையே வந்திருக்கிறவங்களுக்கெல்லாமும் கொடுப்போம் வல்லி. வீட்டில் மத்தவங்களுக்குக் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் ஓதி விட்டுக் கொடுப்பார்கள்.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, நன்றிங்க.

    ReplyDelete
  11. வாங்க டிடி. பாராட்டுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. வாங்க அப்பாதுரை, பல வீடுகளிலும் வீட்டு வழக்கத்தை விடறதில்லை. அடிச்சுப் பிடிச்சுப் பண்ணிடறாங்க. என்ன ஒரு பிரச்னைனா சொல்லித் தர யாரும் இல்லை. இப்போ உள்ள தலைமுறைக்குத் தெரியறதில்லை.

    ReplyDelete
  13. வாங்க ஸ்ரீராம், எங்க வீட்டிலே எல்லாருமே இதை எல்லாம் எழுதி வைச்சுப்போம். அதிலும் பெயர்கள் முக்கியமாக.

    ReplyDelete
  14. அதெல்லாம் இம்பொசிஷன் கொடுக்காமல் விட்டுடுவோமா என்ன! ஹாஹாஹாஹா,ஹாஹாஹா

    பி.எஸ். வீரப்பா ஸ்டைலில் சிரித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  15. வாங்க வைகோ சார், சுக்கு,வெல்லம் நிச்சயமா உண்டு.வடையும் உண்டு, அதிரசமா, போளியானு தெரியலை. திரட்டுப்பால் கல்யாணத்தில் தான். அதுவும் சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு மட்டும்.:)))))

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  17. தகவல்களுக்கு நன்றி மாமி. சேமித்து வைத்துக் கொள்கிறேன். எங்காத்து பெண்ணுக்கே உபயோகப்படும் அல்லவா.....:)))

    இப்போ இருப்பவர்களுக்கு நிச்சயமாக சொல்லித் தரத் தான் யாரும் இல்லை..:)

    பொறந்தாத்துலயும், புக்காத்துலயும் திருமணத்துக்கு முன்பு தான் சுமங்கலி பிரார்த்தனை..

    அத்தைக்கு தான் புடவை.

    ReplyDelete
  18. தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.

    ReplyDelete
  19. வாங்க கொவை2தில்லி, உங்க மாமியார் கிட்டேயும் அவங்க வீட்டு வழக்கத்தைக் கேட்டு வைச்சுக்குங்க அப்படியே! :))))))

    ReplyDelete
  20. வாங்க ஜிஎம்பி சார், இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. இந்த மாதிரி ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திலே கல்யாணம் செய்து கொண்டதுக்கே கன்ஃப்யூஷன்னு சொன்னா எப்படி??

    எதையுமே கஷ்டமாக நினைச்சால் கஷ்டம் தான். இல்லைனு நினைச்சு துச்சமாய்க் கருதினால் அப்புறம் அதிலே ஒண்ணுமே இல்லை. :))))) பெண்கள் எந்த வீட்டிற்குத் திருமணம் ஆகிப் போறாங்களோ அந்த வீட்டின் வழக்கம், நடைமுறைகள் போன்றவை தான் இது போன்ற முக்கியமான விஷயங்களில் பின்பற்றப்படும்; பின்பற்றப் பட வேண்டும்.

    ReplyDelete