எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 19, 2016

எல்லாம் ரங்குவின் கிருபை தான்!

நேற்று ஒருநாள் பயணமாகச் சென்னை சென்றிருந்தோம். போகும்போது காலை பல்லவனில் சென்றோம். பயணம் சுகமாகவே இருந்தது.  இப்போ பான்ட்ரி கார் மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. என்றாலும் நாங்க வீட்டில் இருந்தே சாப்பாடு எடுத்துச் சென்று விட்டோம்.

 என்ன ஒரு கஷ்டம்னால் எனக்கு 54 ஜன்னல் பக்கத்து இருக்கையும், ரங்க்ஸுக்கு 55 ஜன்னல் பக்கத்து இருக்கை என பின்னாலேயும் தனித்தனியாக் கொடுத்துட்டாங்க. டிக்கெட்டும் தனித்தனியா! இவங்க எப்படி நம்மளை இப்படிப் பிரிக்கலாம்னு பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியில் ஏறினால் 54 ஆம் நம்பர் இருக்கை காலியாக இருக்க 55 ஆம் இருக்கையில் ஒரு வட இந்தியப் பெண்மணி. பக்கத்தில் 56 இல் அவர் கணவர். இருவரும் அங்கிருந்து எழுந்திருக்க மறுக்கின்றனர். அவருக்கு 57 ஆம் எண் இருக்கையாம். அது இந்தப் பக்கம் மூன்று நபர் உட்காரும் இருக்கைகளில் ஒன்று. அவங்க அமர்ந்திருந்தது இரு நபர் மட்டுமே அமரும் இருக்கை. ஆகவே அந்த சுகத்தை விட்டுக் கொடுக்க அவங்களுக்கு மனமில்லை!


 பேசாமல் சுரேஷ் பிரபுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் என நினைக்கையில் 58 ஆம் இருக்கைக்கு உரிய இளம்பெண் ஒருவர் வந்தார். அவரிடம் என்னோட ஜன்னல் இருக்கையை முழு மனதோடு தியாகம் செய்துட்டு அந்த 58 ஆம் இருக்கை நட்ட நடுவே ரங்க்ஸை உட்காரச் சொல்லிட்டு 57 ஆம் இருக்கை (அந்த வட இந்தியரோடது) அதில் நானும் உட்கார்ந்து கொண்டோம். 59 ஆம் எண் இருக்கை ஜன்னல் ஓரம் மும்பை ஐஐடி பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஐஐடி பற்றிய பல கருத்துகளையும் பரிமாறிக் கொண்டார். சாதாரணமாக விழுப்புரம் தாண்டியதும் வண்டி வேகம் குறையும். நேத்திக்கு அதிசயத்திலும் அதிசயமாகப் பதினொன்றே முக்காலுக்கே மாம்பலம் போய் விட்டது.

 அதோடு பல்லவனில் சுத்தமும் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னே எல்லாம் சி1 சி2 ஆகிய இரு பெட்டிகள் மட்டுமே இருந்தன. இப்போ சி3 இன்னொரு பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்களுக்கு என ஒரு சில வசதிகள் ரயில்வேயில் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு போலீஸ்காரர்களும் ரயிலில் கூடப் பயணிப்பதோடு பெட்டிகளில் அங்குமிங்கும் உலா வந்து சந்தேகத்துக்கு இடமான நபர்கள், வஸ்துகள் எனப் பார்க்கின்றனர்.  வண்டிகள் எல்லாம் நேரக்கட்டுப்பாடுக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகின்றன. அதோடு விழுப்புரம்--திருச்சி இரட்டை இணை ரயில்பாதை வேலைகள் வேறே இந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகத் துரிதமாக முடிக்கப்பட்டு வருவதும் ஒரு காரணம். மாம்பலம் போய் இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு தேனாம்பேட்டையில் ரங்க்ஸில் அலுவலகம் சென்றோம்.


அங்கிருந்து ரங்க்ஸின் அலுவலகம் போய் வேலைகளை முடித்துக் கொண்டு அம்பத்தூர் வீட்டைப் பார்த்து ஒருவருஷம் ஆகிவிட்டதால் நேரே அம்பத்தூர் சென்றோம். கால் டாக்சி பார்த்தால் கிடைக்கலை. ஆட்டோவில் தான் சென்றோம். ஆட்டோக்காரர் மீட்டர் போட்டார். மீட்டருக்கு மேல் 10 ரூ. கொடுத்தால் போதும்னு சொன்னார். அப்படியே செய்தார். :) வெயில் தகித்தது என்பதோடு போக்குவரத்துப் பாதிப்பில் ஆங்காங்கே நின்று நின்று போக வேண்டி இருந்தது இந்த வெயிலில் எரிச்சலைக் கிளப்பியது. வெயில் யாரையும் பாதித்ததாகத் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் போய்க் கொண்டிருந்தனர்.

அண்ணா வீட்டிற்குப் போய் இறங்கிக் கொண்டோம். சுமார் ஐந்து மணி அளவில் எங்க வீட்டைப் பார்க்கப் போனோம். நாங்க இருக்கும்போதே வீட்டு வாசலில் வரிசைகட்டி வண்டிகள் நிற்கும். இப்போ யாருமே இல்லையா, கேட்கவே வேண்டாம். வாயில் கதவு அருகே போய்த் திறக்கவே முடியாமல் வண்டிகளைக் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி இருந்தாங்க. போதாததுக்கு வீட்டினுள்ளே குப்பைன்னா குப்பை! அவ்வளவு குப்பை! உள்ளே நுழையவே முடியலை. படம் எடுக்கக் காமிரா கொண்டு போயிருந்தேன். படம் எடுக்க மனசு வரலை! ரொம்பவே வேதனையா இருந்தது. என்ன செய்ய முடியும்! பரிதாபமாக வேப்பமரம் நின்றிருந்தது. அதையானும் ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சுட்டுப் பின்னாடி பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.  ரங்க்ஸ் மட்டும் உள்ளே போனார். பின்னர் நான் கிளம்பி வந்துட்டேன். அதுக்கப்புறமா வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிட்டோம். மலைக்கோட்டை விரைவு வண்டியில் டிக்கெட் முன்பதிவு ஆகியிருந்தது.  எப்போதும் பாண்டியன் கிளம்பின உடனேயே வண்டி நடைமேடைக்கு வந்துடும். ஆனால் நேற்று வண்டி நடைமேடைக்கு வரவேப் பத்து மணி ஆயிடுச்சு! :( நல்லவேளையா ஏசி பெட்டிக்கு எதிரேயே உட்கார்ந்திருந்தோம்.  வண்டியைத் திறக்கவும் பத்து நிமிஷம் ஆச்சு!  வண்டிக்குள் நுழைந்தால் ஒரே சூடு! தாங்கலை! ஏசி போடலையோனு நினைச்சால் போட்டிருக்காங்களாம். இரவு முழுவதும் சூடு தாங்காமல் வியர்த்து வியர்த்து ஊற்றிக் கொண்டு தூக்கமே வரலை! மேலே இருக்கும் மின் விசிறியைப் போட்டால் மேல் படுக்கை இருக்கைக்காரங்க அணைக்கிறாங்க! ஒரு வழியாப் பனிரண்டுக்கு அப்புறமாத் தூங்கினேன் போல! யாரிடமானும் புகார் கொடுக்கலாம்னு பார்த்தா யாருமே அங்கே கிடைக்கலை! :( ஏற்கெனவே முன்னர் இரு முறை இதே மலைக்கோட்டை விரைவு வண்டிப் பயணத்தில் ஏசி சரியாக வேலை செய்யாமல் அவதிப் பட்டிருக்கோம். இப்போ கடுமையான வெயிலிலும் இப்படி வறுத்தெடுத்து விட்டது!

ஏனெனில் கடைசியா மணி என்னனு பார்த்தேன். 00-37 என்று காட்டியது என்னுடைய அலைபேசி. சரி, இந்த வண்டி காலை ஐந்து மணிக்குத் தானே ஶ்ரீரங்கம் போகும், நேரம் இருக்கேனு மறுபடி படுத்தேன்.  படுத்துக் கொஞ்ச நேரம் தான் ஆகி இருக்கும்போலத் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் திடீர்னு எழுந்தவர் என்னை எழுப்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சுனு சொன்னார். என்ன? என்று அதிசயமாக் கேட்டுட்டே மணியே ஆகலைனு சொல்லிட்டே அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். மணி 4-17 காலை ஆகி இருந்தது. அலறிப் புடைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினோம். மேலே இருந்தவங்க, பக்கத்துப் பெட்டிகளில் தூங்கிட்டு இருந்தவங்க எல்லோரும் எங்க குரலைக் கேட்டுட்டு எழுந்தாங்க. நான் மெதுவாக ஒரு பையைத்தூக்கிக் கொண்டு வண்டியின் வாயிலுக்கு வந்தேன். ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் (?) ஒரு நடைமேடையில் வண்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்துட்டுத் தூக்கம் கலையாமலேயே அங்கே நடைமேடையில் எங்கோசென்று கொண்டிருந்த ஒரு நபரிடம் என்ன ஸ்டேஷன் என்று கேட்டேன். ஶ்ரீரங்கம்னு சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது. ஆஹா, வர வர மாமியார் கதையாயிடுச்சானு நினைச்சுட்டுச் சரினு கையிலே இருந்த பையை அந்த மனிதரிடமே கொடுத்துக் கீழே வைக்கச் சொல்லிட்டு நான் மெதுவாக இறங்கினேன். எப்படி அந்த அரைத்தூக்கத்தில் இறங்கினேன் என்பது ரங்கநாதருக்கே வெளிச்சம்! :)

அதற்குள்ளாக மிச்சச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு ரங்க்ஸும் இறங்கினார். அவரிடமிருந்தும் சாமான்களை வாங்கி அந்த மனிதர் நடைமேடையில் கீழே வைத்தார். பின்னர் அவரும்  இறங்கியதும் பின்னால் வந்தவர்கள் அனைவரும் இறங்க ஆரம்பிக்க அத்தனை நேரமாய் நின்றிருந்த வண்டி கிளம்பி விட்டது.  எல்லோருமே வண்டி ஒரு தூங்குமூஞ்சினு நினைச்சுட்டுத் தூங்கி இருக்காங்க! அதில் ஒரு மாமி வண்டி கொஞ்சம் வேகமெடுக்கையில் இறங்க முற்பட மயிரிழையில் தப்பித்தார். எங்களுக்கு உதவி செய்த நபரே அங்கேயும் போய் இறங்கினவர்களுக்கு உதவி செய்து இறக்கி விட்டார்.  இதிலே ஒருத்தருக்குக் கை சரியில்லாமல் கைக்கட்டு வேறே! இன்னொருத்தர் வாக்கர் வைச்சுட்டு நடந்தார்! பின்னர் வண்டி கிளம்பி வேகமெடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது இன்னும் சிலர் இறங்கினர்.  உள்ளூர்க்காரர்கள் சிலர் அவர்களுக்குக் கை கொடுத்து இறக்கி விட்டு உதவி செய்தனர். நடைமேடையில் எங்கேயோ நாங்க பயணம் செய்த பெட்டி இருக்க முழு தூரமும் நடந்து வெளியே வந்தோம். ஆட்டோக்கள் எல்லாம் முன்னாடியே இறங்கிட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு போய்விட்டன போலும்! ஆட்டோவே இல்லை.

என்னடா இது சோதனைனு நினைச்சால் ஒரு ஆட்டோக்காரர் படபடவென வந்தார். பத்து ரூபாய் அதிகம் கேட்டார். ஆனால் அந்த அதிகாலையிலேயே ஆட்டோவில் அவருடன் பயணித்த சின்னக் குழந்தையைப் பார்த்ததும் ஒண்ணும் பேசாமல் ஏறிக்கொண்டோம். வீடும் வந்து சேர்ந்தோம். பையருக்கும், பெண்ணுக்கும் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுக் காஃபி போட்டுப் பால் வந்தவுடன் காஃபி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தால் வரிசையாய்த் தொலைபேசி அழைப்பு! இப்படியாகத் தானே எங்கள் ஒரு நாள் பயணம் இனிதாக முடிவடைந்தது.  நல்லபடியாக வண்டியில் இருந்து இறங்க முடிஞ்சதே! எல்லாம் ரங்குவின் கிருபை தான்!

24 comments:

  1. உடம்பு ரொம்ப நல்லா இருக்காக்கும்? எதுக்கு இந்த பயணம்? ரங்கருக்கு வேலைன்னா அவர் மட்டும் போய் வந்திருக்கலாமே? கர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வேலை அவருக்கு மட்டும் தான். ஆனாலும் நானும் போனேனே! :)))))

      Delete
  2. நானும் சென்ற வாரம் ஒரு நாள் பயணமாக மதுரை வந்து திரும்பியபோது துரந்தோவில் வந்தோம். செம ஏஸி! எங்கள் பகுதி ஆறு பெர்த்தில் நாங்கள் மட்டுமே. நாலு காலி!

    ஶ்ரீரங்கம் வந்த உடன் தகவல் தரச்சொன்னால் ஊர் வரும் முன் உங்ஙளுக்கு செல்லில் அலார்ம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதுக்கு ஏதோ நம்பர் இருக்கு. அந்த நம்பர் நினைவிலும் இல்லை. சேமிப்பிலும் இல்லை! அதோடு நான் பொதுவா ஆழ்ந்து உறங்க மாட்டேன் என்னும் (அசட்டு) நம்பிக்கை! :)

      Delete
  3. உங்கள் விவரணைகளைப் படித்துக் கொண்டு வரும்போது என் நண்பரின் மனைவி வண்டி நின்று விட்டது என்று நினைத்து இறங்கி விபத்தில் சிக்கியது நினைவில் ஓடியது அதிகாலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கும்போது எச்சரிக்கை தேவை

    ReplyDelete
    Replies
    1. என்னமோ தெரியலை, இம்முறை இப்படித் தூங்கிட்டோம். நாகர்கோயிலில் இருந்து வரச்சே நட்ட நடு இரவு 2-15 க்கு வண்டி திருச்சி வந்தது. அப்போவும் கவனமா இருந்தோம். இப்போ சமீபத்திய ஒடிஷா பயணத்தின் போதும் திரும்பி வரச்சே ஶ்ரீரங்கத்துக்கு 3-15 மணிக்கு வரணும். நாலு மணிக்கு வந்தது. அப்போவும் முழிச்சிட்டு இருந்து இறங்கினோம். இம்முறை என்னமோ முடியாமல் போச்சு! நல்லவேளையா நாங்க இறங்கினதும் தான் வண்டி கிளம்பியது.

      Delete
  4. ரங்குவின் கிருபையால் நல்லபடியாக வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ரங்குவின் கிருபை தான்! வேறே எதுவுமே இல்லை நிச்சயமா!

      Delete
  5. பயண அனபவத்தை எழுதிக் கொண்டே போவீர்களா ? இல்லை வந்து ஞாபகப்படுத்தி எழுதுவீர்களா ? ஒன்றும் மிஸ் ஆகவில்லையே ம்ம்.... இதுவும் நல்லாத்தான் இருக்கு நாளைக்கு நானும் பக்கத்துல துபாய்க்குப் போயிட்டு வந்து எழுதுறேன்

    ReplyDelete
    Replies
    1. குறிப்பெல்லாம் எடுத்துக்கறதில்லை. முழுக்க முழுக்க நினைவுகளில் வருபவையே எழுதுவேன். இம்முறை எழுதுவதாக இல்லை. ஆனால் காலையில் நடந்த கலாட்டா மற்றப் பலருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்னு எழுதினேன்.

      Delete
  6. @ஸ்ரீராம்
    யாரிடம் தகவல் தரச் சொல்லவேண்டும்? தொலைபேசி எண் ஏதாவது இருக்கிறதா? இங்கே சொன்னால் பலருக்கும் பயன்படுமே.
    ஒருமுறை யாத்திரை சென்றிருந்தபோது இறங்கும் போது ஏறுபவர்களும் முட்டி மோதிக் கொண்டு ஏறியதில் கனார் இறங்கிய பின்னும் நான் இறங்கத் தாமதமாகிவ்ட்டது. நான் இறங்க முயற்சிக்கும்போது ரயில் நகரத் தொடங்கிவிட்டது. கீழே நின்றிருந்த ஒருவர் சட்டென்று என்னைப் பிடித்து இறக்கிவிட்டார். ஒருநிமிடம் கதி கலங்கிவிட்டது!
    ஒவ்வொரு பயணத்தின் போதும் ரங்குவின் கருணை இருக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ரயில்வேக்குத் தான் தகவல் தரணும். எனக்கு எஸ்.எம்.எஸ்ஸே வந்திருக்கு. நம்பரைச் சேமிக்க மறந்துட்டேன். நாம எங்கே தூங்கப் போறோம் அப்படினு குருட்டு நம்பிக்கை! இம்முறை நல்ல பாடம் கிடைத்துவிட்டது. இனி கவனமாக இருக்கணும். :)

      Delete
    2. //கணவர் இறங்கிய பின்னும் // என்று இருக்க வேண்டும். பிழையாகிவிட்டது!

      Delete
  7. கடவுளே. சென்னை வெய்யிலைப் பார்த்து அனுபவிச்சிட்டு
    வந்தாச்சா, வீட்டை நினைக்கையில் வருத்தமா இருக்கு. பாவம் அசதி உங்களையும் அசத்திவிட்டதோ. நல்ல வேளை கைகொடுத்தவர் ரங்கனின் பிரதி நிதிதான்.
    கவனம் கீதா. நடுக்கமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சென்னை வெயிலை நாம் பார்க்காததா! வீடு பாவமாக நின்று கொண்டிருக்கு! என்ன செய்வது! :( உண்மையிலேயே தக்க சமயம் கை கொடுத்தவர் அந்த சாக்ஷாத் ரங்கனே தான்!

      Delete
  8. பயணங்கள் என்றாலே சுவாரசியம் தான்
    என்று நான் நினைக்கிறேன்....
    நடந்தவற்றை அற்புதமாக
    ஞாபகப்படுத்தி அருமையா
    எழுதிருக்கீங்க சகோ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜய் சுனில்கர்!

      Delete
  9. சென்னைக்குப்போய் திரும்பியதை ஏதோ லடாக்குக்குப்போய் திரும்பியதுபோல் எழுதியிருக்கிறீர்கள்! பொதுவாக, எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் போனாலும், ரயில் பயணங்கள் சுவாரஸ்யமாக அமைந்து விடுகின்றன. அவ்வப்போது ஆபத்பாந்தவர்கள் தென்பட்டாலும், பயணத்தின் போதும், இறங்குகையிலும் முன்னெச்சரிக்கை தேவைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெ, நமக்குச் சென்னைப் பயணமே இப்போ இமாலயப் பயணம் போல ஆயிடுச்சு! உங்கள் தகவலுக்காக! கடுமையான கயிலை--மானசரோவர் யாத்திரையே போயிட்டு வந்திருக்கோம். பத்ரிநாத், அஹோபிலம் போன்ற கடுமையான பயணங்களும் போயிருக்கோம். இப்போ சென்னை போறதே பெரிய விஷயமா இருக்கு! ஹிஹிஹி, காலம் செய்யும் கோலம்! :)

      Delete
  10. கடுமையான, நீண்ட பயணங்களை, ஒரு ஆன்மிக யாத்ரிகராக நல்லாரோக்யம் இருந்தபோதே செய்துமுடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். டெல்லிக்கு வடக்கே (இந்தியாவிற்குள்) இன்னும் நான் செல்லவில்லை. ஆசை உண்டு. பெரும்பாலான ஆன்மிக ஸ்தலங்களில் காணப்படும் அபரிமிதமான கூட்டம், ஒரு அயர்வைக் கொடுக்கிறது. கூட்ட நெருக்கடியில்லாத, காற்றோட்டமான இடங்கள்தான் மனம் கவருகின்றன. இது நம்ப கதை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், ஆரோக்கியமெல்லாம் இல்லை. நான் ஒரு நாள்பட்ட/வருஷங்களாக அவதிப்படும் ஆஸ்த்மா நோயாளி! :) அதோடு தான் போனோம். பத்ரிநாத் போனப்போ அங்கேயே மலைமேலேயே ஆயுர்வேத மருத்துவரிடம் காட்டும்படி ஆச்சு! கயிலை போனப்போவும் பிரச்னை இருக்கத் தான் செய்தது. அதோடு அப்போத் தான் கடும் ஆஸ்த்மா தாக்குதலில் இருந்து மீண்டிருந்தேன். என்றாலும் சமாளிக்க முடிந்தது. இப்போத் தான் இப்படி ஆயிடுச்சு! அதுவும் டிசம்பரில் ஒடிஷா, கொல்கத்தா போனதிலிருந்து ரயில் பயணம் மீண்டும் பிரச்னை கொடுக்க ஆரம்பிச்சிருக்கு! :) நேரம் சரியில்லை என நினைக்கிறேன்.

      Delete
    2. எனக்கும் கூட்டம்னால் அலர்ஜி தான்! ஆனாலும் வட இந்தியக் கோயில்களில் தரிசனம் எளிதாகவே இருக்கிறது! கூட்டம் இருந்தாலும், வரிசையில் நின்றாலும் பண்டர்பூர், க்ருஹ்ணேஷ்வர்(மஹாராஷ்ட்ரா) போன்ற இடங்களில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் கிடைத்தது. இப்போது பண்டர்பூருக்கு ஆன்லைனில் தரிசன நேரம் பதிவு செய்து கொண்டு செல்ல முடியும். நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

      Delete
  11. நான்கூட நாளை மும்பை போகிறேன். அங்கு போன பின்தான் ஒழுங்காக எல்லாம் முடியுமா பார்க்கணும். பின்னூட்டங்களே எழுத முடிவதில்லை. பிரயாணம் சென்னை அவ்வளவு கஷ்டமா? சென்னை வெயில் கஷ்டம்தான்.ஸ்ரீரங்கம் வரவேற்பு ஸமயத்தில் தூக்கம் கொடுக்கும் பரிசு. சமத்தாக இறங்கியாயிற்று. பகிர்ந்தும் ஆயிற்று. விழிப்புணர்வுக் கட்டுரை. நன்றாக இருந்தது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் மும்பை போய் அங்கே இருந்து எல்லாவற்றையும் பாருங்க அம்மா! ஒண்ணும் அவசரமே இல்லை. சென்னைப் பிரயாணம் அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லை. இம்முறை இப்படி ஆகிவிட்டது. வெயில் வழக்கம் போல் தாங்கமுடியவில்லை! எப்படியோ அசந்திருந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பலத்தை ரங்கன் அருளினான். என் கணவர் இப்போவும் அதைத் தான் சொல்லிட்டு இருக்கார். ஏனென்றால் அவர் அரைமணிநேரமா முழிச்சிட்டு இருந்திருக்கார். நான் தான் தூங்கிட்டேன். தூங்கினாலும் எழுந்ததும் சுதாரித்துக் கொண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார். :)

      Delete