எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 08, 2006

My thoughts

My thoughts எனக்குப் பிடித்த புத்தகம்

நான் படித்த புத்தகங்கள் என்று பார்த்தால் எதை விடுவது எதைச் சொல்வது என்று புரியவில்லை. அநேகமாக முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் எல்லாருடைய எழுத்தும் படித்து இருக்கிறேன். சின்ன வயதில் தாத்தா வீட்டிற்க்குப் போகும்போது எப்போது பொவோம் என ஆர்வமாக இருக்கும். அங்கே போனால் குமுதம் படிக்கலாம். அந்தக் காலங்களில் குமுதம் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. ஆனால் தாத்தா வீட்டில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. மேலும் என் தாத்தா(அம்மாவின் அப்பா) தன் சேமிப்பான அந்தக் கால வினோத ரஸ மஞ்சரியில் இருந்து, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர் வரை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் செய்வார்.

Friday, April 07, 2006

எனக்குப் பிடித்த எழுத்து

நான் முதல் முதல் புத்தகம் படிக்க ஆரம்பித்தது என்னுடைய 5வது வயதில் என்று நினைக்கிறேன். அப்போது எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் அப்போது டாக்டர் கீதா என்ற பெயரில் ஒரு சித்திரத் தொடர் வந்து கொண்டு இருந்தது. அன்றைய நாட்களில் என்னுடைய ஆசையும் கனவும் ஒரு டாக்டர் ஆவதாகவே இருந்தது. மேலும் என் அம்மாவின் அடுத்த தங்கை கணவர் ஒரு டாக்டராக இருந்து வந்தார்.அந்தக் கதையும் நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தைப் பற்றி இருந்ததாக ஞாபகம்.கதா நாயகியும் என் பெயரில் இருந்தாள். அதற்குப் பிறகு தான்"துப்பறியும் சாம்பு" சித்திரத் தொடராக வந்தது.அந்த நாட்களில் ஆனந்த விகடன் படிப்பது ஒரு கெளரவமாகவே இருந்தது. இன்றைய விகடனைப் பார்க்கும்போது இன்றைய வாசகர்கள் தரம் குறைந்து விட்டதா? அல்லது விகடன் வாசிக்கும் எனக்கு ஏற்றுக் கொள்ள முடிய வில்லையா தெரியவில்லை.அந்தச் சமயம் தான் விகடனில் "தில்லானா மோகனாம்பாள்" ஆரம்பித்தது என்றும் நினைக்கிறேன். என் தமிழை வளர்த்தது விகடன் தான் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஒவ்வொரு வார விகடனிலும் "சிறுவர் வண்ண மலர்" என்ற பகுதி தனிப்பக்கங்களாக வெளி வந்தது. அதை முதலில் படிக்க எனக்கும் அண்ணாவிற்கும் போட்டி வரும். ஆனால் அண்ணா கடையில் போய்ப் புத்தகம் வாங்கி வருவார். ஆதலால் முதலில் வரும் வழியில் படித்து விடுவார். வீட்டிற்கு வந்து அந்த வாரக் கதையை என்னிடம் சொல்லி வெறுப்பு ஏற்றுவார். இரண்டு பேரும் சண்டை ஆரம்பிப்போம். இது எல்லாம் நடக்கும்போது அப்பா வீட்டில் இருக்க மாட்டார்.

Thursday, April 06, 2006

My thoughts

My thoughtsஇன்று அரக்கோணம் சென்றது என் மகளின் தோழி மெம்பிஸிலிருந்து வந்திருக்கிறாள்.அவள் திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கொள்ளுப்பேத்தி ஆவாள். நேற்று திரு விடாது கருப்புவின் பதிவில் கள்ளர்கள் அரச பரம்பரை என்று எழுதி இருந்ததைப்படித்ததுமே நினைத்தேன். அது போலவே இவர்கள் முன்னோர்கள் புதுக்கோட்டையில் இருந்து பிரிந்து போன் மூன்று சகோதரர்கள் பரம்பரை என்று எழுதி உள்ளார்கள். இன்னும் முழு புத்தகமும் படிக்கவில்லை. புத்தகம் வாங்கி வந்துள்ளேன். படித்ததில் பிடித்தது பிறகு.எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்றால் திரு தேவன் அவர்கள்தான். துப்பறியும் சாம்பு ஒன்று போதுமே.அதை பீட் அடிக்க இன்று வரை வேறு எதுவும் என் அபிப்பிராயத்தில் இல்லை.
என்னுடைய மூன்றாவது பதிவு
இன்று காலையிலேயே அரக்கோணம் போய் அங்கிருந்து திருவாலங்காடு கோவிலுக்குப் போனோம்.பல வருடங்களாகப் பார்க்க நினைத்திருந்த கோவில். தற்சமயம் பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்.கோவிலைச் சுற்றி வர முடியவில்லை வெயில் காரணம். பிரஹாரங்களில் மிகவும் அழகாக திருமுறைப் பாடல்கள் எழுதப் பட்டிருந்தது.காரைக்கால் அம்மையார் நடராஜர் பக்கத்தில் பேய்க் கோலத்தில் வீற்றிருந்தார்.எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடராஜர் உருவம் மிக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.அய்யன் காலைத் தூக்கி நின்றாடும் கோலம் பார்க்க மிக ஆனந்தமாக இருக்கிறது.இது வரை பல கோவில்களுக்குப் போயிருந்தாலும் நம் தமிழ் நாட்டுக் கோவில் களில் உள்ள சிலைகளும் சிற்பங்களும் போல் வட இந்தியக் கோவில்களில் இருப்பது இல்லை.துவாரகா மற்றும் சோம்நாத் கோவில்கள், காசி விஸ்வநாதர் கோயில் கொஞ்சம் பரவாயில்லை.ஆனால் பக்தி விஷயத்தில் வட இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை.இப்போது உள்ள இளைஞர்கள் எல்லாம் மிகவும் பக்தியுடன் இருப்பதைப் பார்த்தால் மிக சந்தோஷமாக இருக்கிறது.இன்னும் எழுத நிறைய இருக்கிறது.இன்று முடியவில்லை.

Wednesday, April 05, 2006

My thoughts

My thoughtsவணக்கம்.பலருடைய உதவியாலும் நான் ஒரு வழியாகத் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். தமிழ் தட்டச்சு தெரிந்த எனக்கு இது புது மாதிரியாக உள்ளது. என் பிளாகிற்கு முதலில் வருகை தந்து உதவிய திரு டோண்டு, ஜீவ்ஸ்,சூப்பர் சுப்ரா, ஜிசாயி மற்றும் முத்தமிழ் குழுமத்தில் என்னைச் சேர்த்தும் தமிழ் எழுதவும் ஜி மெயில் மற்றும் சாட் மூலமும் உதவிய திரு மஞ்ஜூர் ராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வேகம் வந்ததும் நிறைய எழுதி உங்களை எல்லாம் பயமுறுத்த எண்ணம். இப்போதைக்கு இது போதும்.

Tuesday, April 04, 2006

My thoughts

நான் இன்னும் கொஞ்ச நாள் ஆக வேண்டும். பார்த்தால் தெரியாது.
வார்த்தை மாறி வருகிறது.
ஒவ்வொரு முறையும் தப்புத்தப்பாக
வருகிறது,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.