புரியில் தரிசனம் முடிந்து திரும்பினோம். அதே ஆட்டோக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார். வரும்போது கேட்ட தொகையைவிட இப்போது அதிகம் கேட்டார். அங்கே வேறே ஆட்டோக்களும் இல்லை. ஆட்டோ வேறே பிடிக்க வேண்டுமெனில் அரை கிலோ மீட்டராவது நடக்க வேண்டும். ஏற்கெனவே கோயிலில் உள்ளே நுழைகையில் ஏறியது இறங்கியது, அந்தப் பெரிய பிரகாரத்தில் நடந்தது என அதீதக் களைப்பு! ஆகவே பேரம் பேசியும் படியாமல் அவர் சொன்ன தொகைக்கே அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு மட்டும் தனியாக, "ரிஜர்வ்" என்றும் சொல்லி விட்டோம். எங்கள் கார் நிற்கும் இடத்திற்குக் கொண்டு விட்டார். மணி பனிரண்டு போல் ஆகி இருந்தபடியால் சாப்பிடவேண்டுமா என வண்டி ஓட்டுநர் கேட்க, வேண்டாம் நேரே கோனார்க் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டோம். கடற்கரை ஓரமாகவே வண்டி சென்றது. புரியில் இருந்து மிக அருகே 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இது உள்ளது.
செல்லும் வழியில் சந்திபாகா என்னும் அழகான கடற்கரை வருகிறது. வண்டியை மெதுவாக ஓட்டச் சொல்லி வண்டியில் இருந்தே அதைப் பார்த்துக் கொண்டோம். பின்னர் கோனார்க் சென்று அடைந்தோம். இங்கேயும் மேலே படிகளில் ஏற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருந்தோம். சொல்லலைனாலும் நான் ஏறுவதாக இல்லை. தூரத்திலிருந்தே படிகளைப் பார்த்த நம்ம ரங்க்ஸுக்கும் ஏறுவது கடினம் எனத் தோன்றி விட்டது. மேலும் அவ்வளவு பெரிய கோயிலைக் கீழே இருந்தே சுற்றிப் பார்ப்பதும் இயலாது எனத் தோன்றியது. அதற்கேற்றாற்போல் அங்கே சக்கர நாற்காலிகளும் கிடைத்தன. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்த உடனே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வருவார்கள். வேண்டாம்னு சொல்லிட்டுப் போவேன். ஆனால் இன்று இன்னும் சில இடங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. அலைச்சல் இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்தேன். அவருக்கும் அதுவே சிறப்பு எனத் தோன்ற அவரும் சக்கர நாற்காலியைத் தேர்ந்தெடுத்தார்.
இருவருமே சக்கர நாற்காலியில் சென்றோம். என்னோட சக்கரநாற்காலியைத் தள்ளியவர் வெறுமனே தரதரவென இழுத்துக் கொண்டு போய் நிறுத்தியதோடு சரி. விளக்கங்கள் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் ரங்க்ஸின் சக்கரநாற்காலியைத் தள்ளியவர் விளக்கங்கள் கொடுத்தார். ஆகவே எனக்கு ஓட்டியவரிடம் அவர் வந்ததும் சேர்ந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.
இந்தக் கோயிலின் பெயர் கோனார்க் என்பது கோனா+அர்க் என்னும் இரு சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. கோனா என்றால் மூலை அல்லது கோணம் என்னும் பொருள். அர்க் என்பது சூரியனைக் குறிக்கும் வார்த்தை. அர்க்கா என்றால் சூரியன். இது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் எனத் தெரிய வருகிறது. எப்போது எனச் சொல்ல முடியாக் காலத்திலிருந்து இருப்பதாய்ச் சொல்லப்பட்டாலும் இப்போதைய கோயிலைக் கட்டியவன் கீழைக் கங்க அரசன் நரசிம்ம தேவன் காலத்தில் கி.பி.1250 ஆம் ஆண்டில் என்று சொல்கின்றனர்.
சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் நாளடைவில் நதி பின் வாங்கியதால் காணப்படவில்லை என்கின்றனர். கோயிலும் பெரும்பாலும் சிதைந்தும், அழிந்தும், காற்றில் கரைந்தும் வருகிறது. சூரியனுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் ரதமாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் சௌர வழிபாடு செய்பவர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதைக் கறுப்பு பகோடா என ஐரோப்பிய மாலுமியர் அழைக்கின்றனர். புரி கோயில் வெள்ளை பகோடா என அழைக்கப்படுகிறது. 12 ஜோடிக் கல்லால் ஆன சக்கரங்களைக் கொண்டும் (ஒவ்வொன்றும் மூன்று மீட்டர் என்கின்றனர்) ஏழு குதிரைகள் இழுப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வலப்பக்கம் நான்கு குதிரைகள், இடப்பக்கம் மூன்று குதிரைகள்.
கலிங்க நாட்டுச் சிற்ப முறைப்படி வடிக்கப்பட்ட இந்தச் சக்கரங்கள் 24 ம், ஒரு நாளின் 24 மணி நேரத்தைக் குறிப்பதாகவும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் சொல்கின்றனர். கொன்டாலைட் என்னும் மலைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கே பார்த்து இருப்பதால், சூரியனின் முதல் கதிர்கள் நேரே கோயிலின் பிரதான மூலஸ்தானத்தில் விழும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைக்கற்கள் சிவப்பு மணற்பாறைகளாலும், கறுப்பு கிரானைட் கற்களாலும் ஆகியவை என்கின்றனர். நரசிம்ம தேவனின் பனிரண்டு ஆண்டு கால வருமானம் செலவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
தொடரும்.
கோயிலின் முழுத் தோற்றம், நன்றி விக்கி பீடியா