ஐயப்பனைக் காண வாருங்கள், பதிவு இன்னும் முடியலை, சில எதிர்பாராத காரணங்களினால் உடனே தொடர முடியலை, பதினெட்டாம்படிக் கருப்பைப் பற்றி எழுதப் போறேன்னு சொன்னேன், 2 நாள் தகவல் தேடினேன், அதுக்குள்ளே, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் "பொதிகை" மூலமா அற்புதமான தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையிலே தான் எழுதப் போறேன், மேலும் ஐயப்பன் கல்யாணம் பத்தியும், மதுரை செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர்கள் அதை நடத்துவாங்கன்னும் நான் சொன்னதைக் கூடல் குமரன் உறுதி செய்துள்ளதோடு மேலதிகத் தகவல்களும், படங்களும் இருப்பதாய் லிங்க் கொடுத்துள்ளார். இன்னும் போய்ப் பார்க்க முடியலை, போகணும், கண்ணபிரான் கேட்ட "திருவாபரணங்கள்" பத்தியும், மதுரையம்பதியின் பதிவிலே உள்ள "சத்யகா" பத்தியும் தகவல்கள் கேட்டுட்டு இருக்கேன், கிடைச்சதும் அதையும் இணைக்கணும், ஆகவே இன்னும் அது முடியலை, வெயிட்டீஸ் ப்ளீஸ், அதுவரை, மெகா தொடருக்கு நடுவே, தொலைக்காட்சிச் சானல்களில் விளம்பர இடைவேளை மாதிரி நம்ம வலைப்பதிவில் மொக்கைப் பதிவுகள் வரும், எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்த வேண்டாமா? அதுவும் பெருவாரியான குண்டர்கள், சீச்சீ, சிஷ்யகேடிகள், சீச்சீ, என்னமோ தப்பாவே வருதே, சிஷ்யகோடிகள்னு வரணும் இல்லை? அவங்களுக்கு எல்லாம் மொக்கையே போதும்னு இருக்கும்போது, சிறிது அவங்களையும் திருப்தி செய்து மொக்கை போடவேணாமா?
நேத்துப் பூராப் பொதிகையிலே பாரதியார் பாட்டு, பாரதியார் பட்டிமன்றத் தொகுப்பு நிகழ்ச்சிகள், பாரதி பாட்டை ராஜ்குமார் பாரதி பாடிய பழைய? மறு ஒளிபரப்பு?, அப்புறம் பாரதி பாட்டுக்களில் "சக்திப்பாட்டுக்கள்" தேர்ந்தெடுத்து மெல்லிசை, பாரதி விழா என ஒரே பாரதியாகவே இருந்தது. என்றாலும் பொதிகைத் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பாரதியை நினைவு கூர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று பொதிகையே அதிகம் பார்க்கும் என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். ஆனால் தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று எதிலுமே வரலைனு நினைக்கிறேன். அதாவது நான் பார்க்கும்போது, மற்ற நேரங்களில் காட்டினாங்களா தெரியாது. ஆனால் நேற்று சாயந்திரம், சன்ஸ்கார் சானலில் கங்கை ஆரத்தி முடிஞ்சு, பொழுது போகாமல் சானல் மாற்றிக் கொண்டிருந்த போது, "ராஜ்" தொலைக்காட்சியில் "சுப்பிரமணிய பாரதி" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. என்ன அதிசயம் எனப் பார்க்க ஆரம்பித்தேன். நிஜமாகவே அற்புதமான ஒரு தொகுப்பு. முதல் பகுதி, அதாவது பாரதி பிறந்ததும், அவர் அம்மா இறந்து,தந்தையின் மறுதிருமணம் எல்லாம் போய்விட்டது. நான் பார்க்கும்போது 11-ம் வயதில் பாரதி எழுதிய முதல் கவிதையில் இருந்து சில வரிகள் கைஎழுத்துப் பிரதியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தக் கவிதைக்கு அவருக்குக் கிடைத்த "பாரதி" பட்டமும், பேரும், புகழும் என்று, பின்னர் தந்தை நடத்திய ஜின்னிங் பாக்டரியை மூட வேண்டிய கட்டாயமும், அதை மூடக் காரணம் ஆங்கிலேயர் விதித்த வரிகள் எனவும், அந்த வரிகளைக் கட்ட முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மூடவேண்டிய நிர்ப்பந்தமும், அந்த பாக்டரியின் இடிந்த சின்னங்களும் எனக்காட்டினார்கள், பாரதியின் திருமணமும், பின்னர் தந்தை மரணம், திருநெல்வேலி இந்துப் பள்ளியில் படித்த பாரதி, படிப்பை நிறுத்த வேண்டி வந்ததும், மனதை நெகிழ வைத்தது. பள்ளியின் பாரதிக்கு நினைவுச் சின்னம் எழுப்பி இருப்பதையும் காட்டினார்கள்.
பின்னர் அத்தை குப்பம்மாளிடம் போனது, காசியில் படித்தது, அங்கே ஆங்கிலம், வடமொழி, என கற்றுத் தேர்ந்தது, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது எனக்காட்டினார்கள். படித்த பள்ளியையும், அத்தை குப்பம்மாளின் இல்லமும் இடம் பெற்ற இந்தக் காட்சிக்குப் பின்னர் காசிக்கு வந்த எட்டயபுரம் மன்னர் அழைப்பின் பேரில் திரும்ப எட்டயபுரம் போய் அரசவைக் கவிஞனாக இருக்க முயன்றதும், 6 மாதங்கள் கூட நீடிக்க முடியாமல் போனதும், பின்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரையில் தமிழாசிரியராக வந்தது, அங்கேயும் 3 மாதங்களுக்குள், ஜி.சுப்பிரமணிய ஐயரால் "சுதேசமித்திரன்"பத்திரிகைக்கு அழைக்கப் பட்டுச் சென்னை வந்தது, தேசீய எழுச்சியின் தாக்கத்தால் எழுந்த பாடல்கள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், திலகரிடம் கொண்ட பக்தி, வ.உ.சி. நண்பரானது, அவரும் சுப்பிரமணிய சிவாவும், ஆங்கிலேயரின் தந்திரத்தால் கைது செய்யப்ப்பட்டது, அவர்களை மீட்கப் போராடினது, சாட்சி சொன்னது என்றும் காட்டினார்கள். விஞ்ச் துரையுடன் வ.உ.சி. நிகழ்த்திய பேச்சுப் பற்றிய பாடலும் இடம் பெற்றது.
இந்தச் சமயம் தான் "இந்தியா" பத்திரிக்கைக்கும் அழைப்பு வருகிறது பாரதிக்கு. அதை நடத்திய திருமலாச்சாரியார், பாரதியை ஆசிரியர் என்று போட்டால் ஏற்படக் கூடிய நிகழ்வுகளை நினைத்து, திரு ஸ்ரீநிவாசன் என்பவரை ஆசிரியராக வெளிப்படையாகப் போட்டு அதை நடத்துகிறார். இந்தப் பத்திரிகையில் பாரதி முதல்முதலாகக் கேலிச்சித்திரங்கள், என்னும் கார்ட்டூன்களை வைத்து அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வதை ஆரம்பித்து வைக்கிறார். பத்திரிகையின் சூடு தாங்கவில்லை ஆங்கில அரசுக்கு. பாரதி கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாகப் போகிறார். பின்னர் 1907-ல் நடந்த சூரத் காங்கிரஸில், மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகள் எனச் சொல்லப் பட்ட திலகர் குழுவுக்கும் நடந்த வாக்குவாதம் கலவரத்தில் முடிகிறது. விபின் சந்திரபால் கைது செய்யப் படுகிறார். சற்று முன்பின்னாக இருக்கோன்னு நினைக்கிறேன். குறிச்சு வச்சுக்கலை, ஓரளவு நினைவில் இருந்து எழுதறேன். இந்தியா பத்திரிகை "யங் இந்தியா" என பாரத இளைஞர்களுக்காகவும் ஒன்று ஆரம்பிக்க அதன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப் பட பாரதியும் கைது செய்யப் படும் சூழ்நிலை தெரிகிறது. விபின்சந்திரபால், திலகர் இவர்களின் கோஷங்களை எழுதிய பத்திரிகைகளையோ, அல்லது நோட்டிஸ்களையோ திருவல்லிக்கேணித் தெருக்களில் பாரதி விநியோகித்ததாயும், அன்று மாலை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவ்ர் பேச்சு ஆவேசம் நிரம்பியும் இருந்ததாயும் இந்தியா பத்திரிகையில் வர பாரதி தேடப் படுகின்றார். ஆகவே பத்திரிகை நடத்திவரும் திருமலாச்சாரியாரே பாரதியைப் புதுச்சேரிக்கு அனுப்பி அங்கே இருந்த தம் நண்பர் ஒருவர் உதவியுடன் பத்திரிகையை அங்கிருந்தே வெளியிட ஏற்பாடு செய்கின்றார். இந்த இடத்தில் தான் ஒரு ஆச்சரியமான விஷயம் பகிரப் பட்டது. அயர்லாந்தும், இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெறப் போராடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளிவந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை "ஜர்னல் அமெரிக்கா" என்றோ என்னமோ, நினைவில் இல்லை, ஆனால் அமெரிக்கா என முடிகிறது. இந்தப் பத்திரிகை, அயர்லாந்தின் விடுதலையை முற்றிலும் ஆதரித்ததோடு அல்லாமல், அங்கே இருந்து அமெரிக்கா சென்றவர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றது. அந்தப் பத்திரிகையை அன்றைய நாட்களில், அதாவது 1906, 07, 08-ம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியில் மொத்தம் 13 பேர் மட்டுமே சந்தா கட்டி வரவழைத்திருக்கின்றார்கள், அவர்களில் பாரதியும் ஒருவர், இதுதான் ஆங்கிலேயர் அவரிடம் வெறுப்பும், கோபமும் கொள்ள அடிப்படைக் காரணம் என்று இந்தப் பதிவில் காட்டப் படுகிறது. மிச்சம் இன்னிக்குச் சாயங்காலம்னு சொல்லிட்டாங்க, அதுக்குள்ளே பொதிகையில் "வேளுக்குடி"யும் ஆரம்பிச்சுட்டார்.
இன்று காலை நம்ம வல்லி சிம்ஹன் ஊரைக் காட்டினாங்க பொதிகையிலே. அருமையா இருக்கு ஊர், மரங்களும், செடி, கொடிகளும் ஒரே பச்சைப் பசேல் என்று. நாங்க என்னமோ திருநெல்வேலி போனப்போ எப்படி இந்த ஊரை விட்டோம்னு தெரியலை, அந்த வட்டப்பாறையும், அதைத் தொடர்ந்த ராமானுஜர் கதையும், அவர் திருவனந்தபுரம் சென்றதும், அங்கிருந்த பெருமாளைக் கொண்டு வர நினைத்ததும் பெருமானுக்கு வர இஷ்டம் இல்லாததும், ராமானுஜருக்குத் தூக்கம் வரவைத்து, அவரைத் தூக்கத்திலேயே அங்கிருந்து திருக்குறுங்குடி அனுப்பி விடுகின்றார் எம்பெருமான். ஆனால் ராமானுஜரின் அணுக்கத் தொண்டர், அவருக்குச் சகலத்திலும் உதவுவர் வந்து சேரவில்லை. ராமானுஜரோ, அது புரியாமல் தம் தொண்டரைக் கூப்பிட, அங்கே கோயிலில் குடி கொண்டிருக்கும் திருக்குறுங்குடி நம்பியான எம்பெருமானே தொண்டராக வந்து ராமானுஜருக்குத் தொண்டு செய்ததும், அதை ஒட்டிய புடைப்புச் சிற்பங்களுமாக அற்புதமாய் இருந்தது. ஒரு தனிப்பதிவே போடலாம். இதிலே எழுத ஆரம்பிச்சுட்டேன், அதான் சுருக்கமாய்ப் போச்சு, வல்லி இது பத்தி விரிவாய் ஒரு பதிவு போடுவாங்கனு எதிர்பார்க்கலாம்.