எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 17, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், குந்தியின் கலக்கம்! - பகுதி 10

வியாசர் யோசிக்கின்றார். தன் அன்னையையும், பீஷ்மரையும் தேற்றுகின்றார். குருவம்சம் அழியாது எனவும் பாண்டுவின் புத்திரர்கள் மூலம் அது வாழையடி வாழையாய்ப் பரவிப் பெரும் புகழடையும் எனத் தன் மனக்கண்ணால் கண்டு அறிந்ததாயும் சொல்லுகின்றார். தர்மத்தின் பாதுகாவலர்கள் ஆன குரு வம்சத்தினரின் அழிவுக்குத் தன் தாய் காரணம் ஆக மாட்டாள் எனவும் கூறிய வியாசர், குரு வம்சம் அழிந்தால், பூமியில் தர்மமும் அழிந்து விடும். ஆகவே குரு வம்சத்தைக் காக்கவேண்டிய கடமை தனக்கும் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். குந்தியைத் தான் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார். சத்தியவதி குந்தியை வியாசர் சந்திக்க ஏற்பாடு செய்கின்றாள். குந்தியின் அந்தப் புரத்தில் சந்திப்பு நடக்கின்றது. குந்தி வியாசரை நமஸ்கரித்து எழுந்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டதும், விம்மி, விம்மி அழுகின்றாள்.

“முனிவரே, நான் சாக வேண்டும், சாகவேண்டும், இருக்கக் கூடாது!” எனப் புலம்புகின்றாள். “குந்தி என்ன இது? நீ இவ்வாறு அழலாமா?” என வியாசர் கேட்கின்றார். பாண்டுவிற்கு நேரிட்ட சாபத்தைப் பற்றியும் தான் அறிந்ததாய்ச் சொல்லுகின்றார். குந்தியை அதன் பொருட்டு தைரியம் இழக்கவேண்டாம் எனவும் சொல்லுகின்றார். குந்தி கூறுகின்றாள்:” முனிவரே, எனக்குக் குழந்தைகளிடம் எவ்வளவு ஆசை என்பதைத் தாங்கள் அறிவீர்கள்! ஆஹா, அறியாப் பருவத்திலே பொக்கிஷம் போல் எனக்குக் கிடைத்த அந்தக் குழந்தை! அவன் மட்டும் இப்போது இங்கே இருக்கக் கூடாதா? நான் அவனை மீண்டும் பார்ப்பேனா? வாராது வந்த மாமணியைத் தவற விட்டேனே? என்னைப் போல கொடுமையான தாயும் இருப்பாளோ?? ஒவ்வொரு நாளும், மணியும், நிமிடங்களும் நான் அந்த என்னுடைய குழந்தைக்காகக் காத்திருக்கின்றேனே? இனி அதன் முகத்தையாவது காண்பேனா? எத்தனை அழகு? ஆசானே, நீங்கள் தானே அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றீர்கள்? இல்லை, இல்லை, நான் தவறு செய்கின்றேன், ஆசானே, என்னை மன்னியுங்கள், ஏதோ பிதற்றுகின்றேன். பிறந்த அந்தக் குழந்தையின் சிரிப்பை மட்டுமில்லாமல் இன்னும் எனக்குப் பிறக்க இருந்த குழந்தைகளின் சிரிப்பையும் காண முடியாமல் நான் தவிப்பது உங்களுக்குப் புரிகின்றதா? நான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டுமா? சாவது ஒன்றே வழி ஆசானே! எனக்கு அதற்கு வழி சொல்லுங்கள்.” வெடித்துச் சிதறுகின்றாள் குந்தி.

குந்தியின் தாபத்தையும், புலம்பல்களையும் பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டார் வியாசர். “குந்தி, பொறுமையுடனே இரு. உனக்குக் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணிற்குத் தாய்மை எய்துவது தான் பூரணத்துவம் கிட்டுவதாய் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கின்றனர். ஆகவே நீ நினைப்பதில் தவறில்லை. உனக்கும் குழந்தைகள் பிறக்கும். சற்றே பொறுமையுடனே நான் சொல்வதைக் கேட்பாயாக!” என வியாசர் சொல்ல, குந்தி அவரை ஆவலுடன் பார்க்கின்றாள். “குந்தி, நான் சொல்லும் விரதங்களை மேற்கொள்வாயாக, நான் சொல்லும் பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்லுவாயாக, நீ செய்யப் போகும் இந்தக் காரியத்தினால் உன்னுடைய பத்தினித் தன்மைக்குப் பங்கம் ஏதும் நேராது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் சம்மதிப்பார்கள். உன் கணவனுக்கும் இது சம்மதமாய் இருக்கும். நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்கின்றேன். இது கடவுளரை உனக்குக் காட்டிக் கொடுக்கும். இந்த மந்திரத்தை நீ ஜபித்து வந்தாயானால், ஒரே தியானத்தில் இருந்தாயானால் அந்தக் கடவுளரின் சக்தி உன்னிடம் வந்து சேரும். அவர்களின் ஆசிகளும் உன்னை வந்து சேரும், முறைப்படியான வழிபாடுகளை செய்துவிட்டு நீ உன்னுடைய கணவன் ஆன பாண்டுவைத் தவிர வேறு யாரையும் நீ நினையாமல் இருந்து வா. ஈசனின் அருளால் உனக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்களால் தர்மம் தழைக்கும். குரு வம்சமும் பெருமை பெறும். இது உறுதி ” எனச் சொல்லுகின்றார். குந்திக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

No comments:

Post a Comment