எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 23, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 14 கண்ணன் வருவானா?

கோகுலத்தில் இருந்து படகில் வந்திருந்த அந்தண இளைஞன் மிகவும் சாமர்த்தியமும், திறமையும் வாய்ந்ததொரு மருத்துவன். குழந்தையை அவன் தூக்கிச் செல்லும்போது திடீரென அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்க, தேனில் நனைத்த பஞ்சைக் குழந்தையின் வாயில் சொட்டவிட, அதைச் சப்பிய குழந்தை உடனேயே தூங்கிப் போனது. என்றாலும் இந்தக் குழந்தைக்குப் பசி அதிகம் இருக்கும் என எண்ணிய அவன் வேகமாய்ப் போய்ப் படகில் ஏறிக் கொண்டான். அதுவே தேவகியும், வசுதேவரும், தங்கள் ஏழாவது குழந்தையின் குரலைக் கடைசியாய்க் கேட்டது. விடிவதற்குள்ளாக கோகுலம் சென்றடைந்த அவர்கள், அந்தக் குழந்தையை ரோஹிணியிடம் கொடுக்கத் தன் கணவனின் முகத்தையே அந்தக் குழந்தையின் முகத்தில் கண்டு ஆனந்தித்த ரோஹிணி குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். வார்த்தைகளால் விவரிக்க முடியாததொரு உணர்வோடு அதற்குப் பாலூட்டித் தாலாட்டினாள் ரோஹிணி. குழந்தையும் தூங்கியது, ரோஹிணியும். திடீரென தூக்கத்திலிருந்து விழித்த ரோஹிணி, குழந்தையின் தொட்டிலில் தொங்கிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த சர்ப்பராஜனைக் கண்டு திடுக்கிட்டாள்.

தான் கத்தினாலோ, அல்லது அந்தப் பாம்பை அடித்து விரட்ட எத்தனித்தாலோ, குழந்தையைக் கடித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து ரோஹிணி பொறுத்திருந்தாள். நிமிடங்கள் ஓட, பாம்பும் அசையவில்லை, ரோஹிணியும். பின்னர் இவளை நம்மால் பயமுறுத்த முடியாது என நினைத்தாற்போல பாம்பு தன்னைச் சுருட்டிக் கொண்டு தொட்டிலில் இருந்து கீழே இறங்கி சென்று மறைந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் தொட்டிலைக் கவனித்த ரோஹிணி, குழந்தை "களுக்" என்ற ஒரு சிரிப்புடன் சிரித்துக் கொண்டு தூங்கியதைக் கவனித்து அமைதி அடைந்தாள். இப்போ மதுராவில் என்ன நடந்தது பார்ப்போமா??
*************************************************************************************

தேவகிக்குக் குழந்தை பிறந்த விஷயம் கம்சனுக்குச் சொல்லப் பட்டது. தூங்கிக் கொண்டிருந்த கம்சன் திடுக்கிட்டு விழித்துச் செய்தியைக் கேட்டான். உடனேயே அவனுக்குத் தான் சில நாட்கள் முன்னர் கண்ட துர்சொப்பனம் நினைவில் மோதியது. என்ன காரணத்தாலோ, இம்முறை தேவகிக்கு இரட்டைக் குழந்தைகளாய்ப் பிறந்திருக்கும் என்றே அவன் நினைத்தான். தேவகியைக் காணச் சென்றபோது உடன் அங்கே காவலாளிகளின் தலைவனாய் இருந்த ப்ரத்யோதாவையும், அவன் மனைவியான பூதனையையும் உடன் அழைத்துக் கொண்டான். வாயிலிலேயே வசுதேவரும், கர்காசாரியாரும் நின்றிருந்தனர். "எங்கே குழந்தைகள்?" எனக் கம்சன் கேட்க, "குழந்தைகளா?? அப்படி ஒன்றுமே இல்லையே? பிறந்தது ஒரு பெண் குழந்தைதான், ஆண் இல்லை" என்று கர்காசாரியார் சொல்ல கம்சன் நம்பவில்லை. தேவகி படுத்திருக்குமிடம் நோக்கிப் போக நினைத்தவன், பின்னர் மாற்றிக் கொண்டு பூதனையை அங்கே சென்று சோதனை போடச் சொல்ல தேவகிக்கு அருகே இருந்த துணிமூட்டையை எடுத்து வந்த பூதனை, குழந்தை செத்துப் பிறந்திருக்கிறதை கம்சனுக்குத் தெரிவித்தாள்.

சந்தேகம் நீங்காத கம்சன் மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் விடாமல் தேடிப் பார்த்துவிட்டு அலுத்துப் போய் மாளிகைக்குத் திரும்பினான். அவன் மனதில் நிம்மதி இல்லை. ஏதோ ஒரு மாயவலை தன்னைச் சுற்றிப் பின்னப் பட்டிருப்பதாய் உணர்ந்தான். இந்த தேவகி, சிறு பெண், பலஹீனமானவள், எந்தவித சக்தியுமில்லாதவள், நம்மை இந்த அளவுக்குப் பயப்படுத்தி இருக்கின்றாளே? இருக்கட்டும், இவளைக் கொல்லுவது மிக எளிதான காரியமே, என்றாலும் நம் தந்தை, சித்தப்பன் போன்றோர் போராட்டம் நடத்துவார்கள். மேலும் யாதவகுலமே வெளிப்படையாக அவர்கள் பக்கம் சேர்ந்து திரண்டு நம்மை எதிர்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க முடியாது. சற்றுப்பொறுக்கலாம், எட்டாவது குழந்தைதானே, நமக்கு எமனாக வரப் போவது? வரட்டும், பார்க்கலாம்.
*************************************************************************************

தேவகி எட்டாவது முறையாகக் கர்ப்பம் அடைந்தாள். மற்ற ஏழு தடவைகள் போல அல்லாமல் இம்முறை அவள் மனம் மிக மிக உற்சாகமாய் இருந்தது. சொல்லத் தெரியாத ஒரு ஆனந்தம் அவளை ஆட்கொண்டிருந்தது. வசுதேவர் கண்களுக்கு தேவகியிடம் பொலிவோடு மட்டுமில்லாமல், உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்திருப்பது தெரிந்தது. இவ்வளவு பலஹீனமான தன் மனைவி செய்திருந்த வீரச் செயலால் ஏற்கெனவே அவள் பால் அன்பு மீதூறிக் கொண்டிருந்த மனம் இப்போது இன்னும் நெகிழ்ந்தது. சற்றேனும் அவளைப் பிரியாமல், யமுனை கண்களுக்குத் தெரியும் வண்ணம் ஆசனங்களை அமைத்துக் கொண்டு, பழைய காலத்து வீரர்கள் பற்றியும், மற்ற சந்தோஷமான விஷயங்கள் பற்றியுமே அவளிடம் பேசினார். தேவகிக்கோ, ஆனந்தம் பொங்கிக் கொண்டு வந்ததோடு அல்லாமல், சதா தன் கண் முன்னே சாட்சாத் அந்தப் பரம்பொருளே நின்று காவல் காத்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. கண்களை மூடினாலும், திறந்தாலும், நின்றாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும், எழுந்திருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும், தூங்கினாலும், விழித்தாலும் எந்நேரமும் பரம்பொருளின் தாக்கமும், அதன் உணர்வுமே அவளிடம் மிகுந்திருந்தது.

கம்சனோ எனில் பெரும் கலவரத்தில் ஆழ்ந்தான். குழந்தை பிறக்கப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். தன் நம்பிக்கைக்கு உரிய ப்ரத்யோதாவையும், அவன் மனைவியான பூதனையையும் தவிர, வேறு யாருமே வசுதேவரும், தேவகியும் வசித்த மாளிகையை அண்டாமல் பார்த்துக் கொண்டான். தேவகிக்கு உதவி வந்த மருத்துவப் பெண்மணி நிறுத்தப் பட்டாள். பதிலாக பூதனையையே அவள் உதவிக்கு எல்லாம் அனுப்பினான். தேவகிக்குப் பூதனையைக் கண்டாலே பிடிக்கவில்லை. எனினும் பிறக்கப் போகும் குழந்தையையும், அதனால் யாதவகுலத்துக்கு ஏற்படப்போகும் நன்மைகளையும் உத்தேசித்துப் பொறுத்துக் கொண்டாள்.

மதுராபுரி மக்களுக்கும் விஷயம் தெரிந்துவிட்டிருந்தது. அங்கங்கே அரசல் புரசலாய் மக்கள் பேசிக் கொண்டனர். வந்துவிட்டான், நம் ரட்சகன், நம் ஆண்டவன், நம்மைக் காக்கப்போகின்றவன் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டனர். இன்னும் ஆறு மாதங்கள், 5 மாதங்கள், 4 மாதங்கள், 3 மாதங்கள், 1 மாதம் தான், ஆஹா, இன்னும் பத்து நாட்களே உள்ளனவாமே?? கம்சனோ பயம் அதிகமாகி என்ன செய்வதெனப் புரியாமல் கலங்கிக் கொண்டிருந்தான். ஏற்கெனவேயே நிறைய யாதவத் தலைவர்கள் அவன் போக்குப் பிடிக்காமல் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். தூக்கமிழந்து தவித்தான் கம்சன். தூங்கினாலோ பயங்கரக் கனவுகள். தூங்க முடியாமலும், தூக்கம் இல்லாமலும் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்.

பூதனையை தேவகியோடு தங்குமாறு சொன்னான். கர்காசாரியாரைத் தவிர, மற்ற யாருமே வசுதேவரையோ, தேவகியையோ பார்க்க அனுமதி மறுக்கப் பட்டது. தினமும் காவல்காக்கும் காவலாளிகள் மாற்றப் பட்டனர். தேவகியின் எட்டாவது குழந்தையைத் தான் கொல்லும்போது மக்கள் எதிர்ப்பு இல்லாமல் இருக்க யாதவப் படை வீரர்களை நம்பாமல் தன் மாமனாரின் ஆட்களான மகத வீரர்களை நியமித்தான் முக்கிய இடங்களில். மெல்ல, மெல்ல அந்த நாளும் நெருங்கியது. சிராவண மாதத்து கிருஷ்ணபக்ஷம் ஆரம்பித்த எட்டாம் நாள். இருட்டு நேரம், ஏற்கெனவே மழையினால் இருட்டுக் கவிந்த பூமி அன்றைக்கென இன்னும் இருட்டாய் இருந்தது. காலையில் இருந்தே இடியோடும், மின்னலோடும் கூடிய மழை கொட்டிக் கொண்டிருந்தது. அன்று மதியவேளையில் தினசரி வழிபாட்டுக்காக வந்த கர்காசாரியார் அது முடிந்ததும், வசுதேவரைக் கட்டிக் கொண்டார். மெல்ல அவர் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படியாக ஏதோ ஒரு செய்தியைச் சொன்னார்.

கொட்டும் மழையில் காலையில் தன் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு வருவதற்காகச் சென்ற பூதனை இன்னும் மாளிகைக் காவலுக்குத் திரும்ப முடியவில்லை. மழை அத்தனை உக்கிரமாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. எந்நேரமானாலும் திரும்பிவிடுவதாய்ச் சொல்லிச் சென்றிருந்த பூதனையை எதிர்பார்த்து மாளிகையின் வாயில் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. அன்றைய காவலுக்கு வந்த ஆட்களோ எலும்பை உலுக்கும் குளிருடன், வெளியே வரமுடியாமல் தங்களுக்கென ஒதுக்கி இருந்த அறைக்குள்ளேயே , இந்த மழையில் என்ன நடக்கமுடியும் என்ற நினைப்பிலும் தூங்க ஆரம்பித்தனர். மெல்ல, மெல்ல இருட்டுக் கவிந்து விளக்குகள் தந்த வெளிச்சமும் குறைய ஆரம்பித்தது. தேவகி அமர்ந்திருந்த இடத்தில் மட்டுமே மிக மிக மெல்லிய வெளிச்சம் பரவிக் கிடந்தது. வசுதேவர் அவளருகில் அமர்ந்திருந்தார். திடீரென ஒரு பேரோசை, அண்ட பகிரண்டமும் அதிரும்படிக் கேட்டது. அதைத் தொடர்ந்த ஒரு வெளிச்சம், மாபெரும் வெளிச்சம், ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடிச் சூரியப்பிரகாசம்போல் தெரிந்த அந்த வெளிச்சத்தில் தேவகி தன் பல்லைக் கடித்துக் கொண்டு வலியை அனுபவிப்பதை வசுதேவர் கண்டார். "பிரபோ, என் ஆண்டவன் வருகின்றான். இதோ அவன் வரும் நேரம் வந்துவிட்டது." என்று மிக மிக மெல்லிய குரலில் வசுதேவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் தேவகி கூற, தன் அருமை மனைவியைத் தன் இருகைகளாலும் அணைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்ளே சென்றார் வசுதேவர். தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். குழந்தை பிறந்தது. நீலமா?? கரு நீலமா? கருமையா? ஜோதியான பிரகாசமா?? குழந்தை பிறந்ததும் அதன் நிறமும், அதைச் சுற்றிப் படர்ந்த ஒளியும் கண்ணைக் கூசியது. வசுதேவருக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. கெட்டது குடி! இப்போ மயங்கினால் என்னாவது?

2 comments:

  1. தலைவி ;))

    பின்னூட்டம் போட நேரம் இல்லை...அதான் போட முடியல...கூடவே தான் வந்துக்கிட்டு இருக்கேன் ;)

    ReplyDelete
  2. அருமையா எழுதறீங்க அம்மா. காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.

    கண்ணன் பிறந்தான்; எங்கள் கண்ணன் பிறந்தான் :)

    ReplyDelete