எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 16, 2012

வசந்த கால நினைவுகளே! (nostalgia?) :D

மின் தமிழில் நண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றும் சொல்லி இருந்தார்.  அவர் மனைவி திருநெல்வேலியாம்.  அவங்க அந்தப் பக்கத்துப் பாடல்களைக் கொடுப்பார் என்றார்.  உடனே எனக்கு நினைவில் வந்த பாடல்.
 ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள்.  அவங்க பெயர் மறந்து போச்சாம்.  அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.

கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??

ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.

இது சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லப் பட்டது.  ஒரு சில குழுமங்களில் இது விவாதிக்கப் பட்டது.

இன்னொண்ணு எலியைப் பற்றிய வர்ணனை.  ஒரு கதையாகச் சொல்லப் படும்.

அதிலே எலிக்குக் கால்கள், கண்கள், வால் உள்ளன என்பதை ஒரு பாட்டாகச் சொல்வாங்க.

அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள்.  குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது.  ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது.  வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?
 இப்படிப் போகும்.

 பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
இரண்டு குடம் தண்ணி ஊத்தி 2 பூ பூத்தது எனப் பத்து வரைக்கும் வரும்.

அப்புறமாப்
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்

என ஆரம்பித்து பூக்களின் பெயர்கள் வரிசையாக வரும்.
சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூவைப் பறிக்கிறோம், சாமந்திப் பூவைப் பறிக்கிறோம்.
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??

திரு சந்தானம் கொடுத்த பாடல்களும் மற்றும் இருவர் கொடுத்த பாடல்களும் அடுத்த பதிவில் காணலாம். :D  அவங்க அவங்க நினைவில் இருக்கும் பாடல்களை அளிக்கலாம்.  இவை அவரவர் பெயர், ஊரோடுமரபு விக்கியில் சேர்க்கப் பட்டுச் சுட்டியை அளிப்போம். நிரந்தரமாய் அங்கே பதிவாகி இருக்கும்.

11 comments:

  1. ஆஹா, அருமை. கொழுகொழு கன்னே நன்றாக நினைவு இருக்கிறது. அத்தெரிமாக்கு கதையப் போல:)அதே போல கொழுக்கட்டைப் பாட்டும். தான்க்ஸ் கீதாம்மா.

    ReplyDelete
  2. பூப்பறிக்க வருகிறோம் - விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிப் பார்த்திருக்கின்றேன். கொழுக்கட்டைக்கு கண்ணு உண்டோடி - இதுவும் கேட்டிருக்கின்றேன். அதுவும் சமீபகாலமாக.
    இன்னும் எங்கள் (சிதம்பரம்) பக்கத்தில் பல்லாங்குழி, கழக்கோடிக்காய் போன்ற பெண்கள் விளையாட்டுக்கள் - வழக்கத்தில் உள்ளன.
    அம்மானை போன்ற விளையாட்டுக்கள் வழக்கொழிந்தே போயின.
    இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டுமே.
    ஆயினும் உங்கள் பதிவு, குழந்தைகள் அடையும் குதூகலத்தைத் தந்தது. எவ்வளவு இனிமையான குழந்தை நாட்கள்?

    ReplyDelete
  3. இது இப்படி வராது.
    //கொழு கொழு கன்னே என் பேரென்ன?
    எனக்குத்தெரியாது என் அம்மாவ கேளு
    கொழு கொழு கன்னே, கன்னின் தாயே என் பேரென்ன?
    எனக்குத்தெரியாது, என்னை மேய்கிற ஆயனை கேளு...//
    இப்படியே பில்ட் ஆகணும்.
    கூட சொல்லச்சொல்ல நல்ல மெமெரி ட்ரெய்னிங்க், டெஸ்ட்!

    ReplyDelete
  4. ஆஹா குழந்தை பருவத்துக்கே போயிட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
  5. வாங்க வல்லி, முதல்லே வந்து ரசிச்சதுக்கு நன்னி. அத்தெரிமாக்கை எங்க வீட்டிலே அத்திரிபச்சானு சொல்வாங்க. அது தனிக்கதை! :)))))

    ReplyDelete
  6. வாங்க தீக்ஷிதரே, நெய்வேலி, சிதம்பரம் போன்ற ஊர்களிலாவது இவை இருப்பது குறித்து சந்தோஷமே. பல்லாங்குழி விளையாட இப்போதெல்லாம் ஆட்களே இல்லை. தாயக் கட்டை வைத்துக்கொண்டு சில வருடங்கள் முன் வரை விளையாடி இருக்கோம்.

    ReplyDelete
  7. வாங்க வா.தி. நீங்க சொல்றதும் சரியே. ஆனால் அப்போ அதெல்லாம் தோணலை. உடனே போடணும்னு தோணித்து! :)))))

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, எல்லாருமே குழந்தைங்க தானே! :)))

    ReplyDelete
  9. இவை எல்லாமே (பாட்டு, ஆட்டம்) எங்கள் தஞ்சாவூர் ஜில்லாவிலும் உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  10. இதுவும் தேறுமா பாருங்கள் !

    பூனைக்கும் பூனைக்கும் கலியாணம்
    பூலோகமெல்லாம் கொண்டாட்டம்
    ஆனை மீதே ஊர்வலமாம்
    ஒட்டகசிவங்கி நாட்டியமாம்
    பூம் பூம் குரங்கின் பின்பாட்டாம்
    பூட்டிய குதிரையில் சீர்வரிசாம்
    தாலிகட்டும் வேளையிலே மாப்பிள்ளை பூனையைக் காணோமாம்
    வந்தவரெல்லாம் தேடினராம்
    அடுக்களை யதனில் கண்டனராம்
    விருந்துக்கு வைத்த பாலையெல்லாம் தானே எல்லாம் குடித்தாராம்
    திருட்டு பூனைக்கு என் பெண்ணை திருமணம் செய்ய முடியாது வேண்டாம் இந்த சம்பந்தம்
    வெட்கக்கேடு போய்வாரும்


    [நினைவிலிருந்து எழுதப்பட்டது. சில வரிகள் மாறி இருக்கலாம் :) ]

    ReplyDelete
  11. அய்யோ, அப்பிடியே இழுத்துண்டு போயாச்சு , சின்ன வயசுக்கு. அந்த தோழிகளை பற்றி, தோழர்களை பற்றியும் தான்!
    முதல் பாட்டு தெரியாது, 2ம் 3ம் பாடின நினைவு ;-)

    அப்பிடியே நேரம்
    இருந்தால் நம்ம பக்கத்தையும் பாத்து கருத்து சொன்னால் , மகிழ்ச்சி அடைவேன்!

    நன்றி!

    ReplyDelete