எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 13, 2012

அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு! :))))


மறுநாள் வரப் போவது யார் எனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள் ராதா.  ரம்யா அங்கே வந்து என்ன விஷயம் எனக் கேட்க, மறுநாள் அகிலாண்டத்தைச் சந்திக்க எவரோ வரப் போவதாய்ச் சந்துரு கூறியதையும், மற்ற விபரங்களையும் தெரிவித்தாள் ராதா.  ரம்யாவின் முகம் ஒரே கணம் கலங்கினாற்போல் மாறினாலும் சுதாரித்துக் கொண்டாள் அவள்.  அப்படியா என்ற வண்ணம் சித்தப்பா வீட்டுக்குப் போவதாய்க் கூறிவிட்டுக் கிளம்பினாள்.  அடுத்த நாள் காலை வந்தவர் வேறு யாரும் இல்லை.  கிருஷ்ணமூர்த்தியே தான்.  எனினும் ரம்யா மட்டுமே அவரைப் பார்த்திருந்ததால் சந்துருவுக்கும் அவரை முதல்முறையாகப் பார்ப்பதால் முதலில் புரியவில்லை.  ரம்யாவே அவரை வரவேற்றாள்.  பின்னர் தன் அண்ணாவான சந்துருவிடம், என் மாமியாரின் அக்கா புருஷர் என அறிமுகம் செய்தாள்.

ராதாவுக்குக் குழப்பம் தான் இன்னமும் மேலோங்கியது.  என்ன கேட்க அல்லது என்ன சொல்லப் போகிறார் இவர்!  இதற்குள்ளாக அகிலாண்டத்தை எங்கே என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.  அகிலாண்டம் வர மறுப்பதாயும், அவள் வித்யாவிடமோ, லதாவிடமோ செல்ல வேண்டும் எனக் கிளம்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் ரம்யா கூறினாள்.  "அப்படியா!  சந்துரு, நீ உடனே போய் அவளை இங்கே அழைத்து வா!  அதற்குள் ராதாவுக்கு நான் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்."  என்றார் கிருஷ்ணமூர்த்தி.  தம்பி வீட்டுக்குச் சென்ற சந்துரு அங்கே ஊருக்குக் கிளம்பாமல் உடல் நலம் சரியில்லை எனச் சொல்லிப் படுத்திருந்த அகிலாண்டத்தையே கண்டான்.  பின்னர் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.  கூடவே தன் இரண்டாவது பிள்ளையையும், நாட்டுப்பெண்ணையும் அழைத்தாள் அகிலாண்டம்.  சந்துரு திட்டமாக மறுத்துவிட்டான்.  "நீ மட்டும் வந்தால் போதும்!"  தீர்மானமாய்க் கூறினான்.  தயங்கித் தயங்கி வந்தாள் அகிலாண்டம்.  வீட்டு வாசற்படி ஏறவே அவளுக்குக் கூச்சமாக இருந்தது.  எப்போதும் போல் இவளைக் கண்ட ரம்யா உள்ளே செல்ல யத்தனிக்க, கிருஷ்ணமூர்த்தி தடுத்தார்.

ராதாவின் முகத்தில் காணப்பட்ட புதுப் பொலிவு அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதைக் காட்டியது.  அகிலாண்டம் நிற்க முடியாமல் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சரிந்து அமர்ந்தாள்.  கிருஷ்ணமூர்த்தி, அவளைப் பார்த்து, "இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள்கிறாயா?  இல்லை எனில் நான் ஆதாரங்களோடு  ரம்யா சந்துருவின்/ ராதாவின் குழந்தை இல்லை என நிரூபிக்கவா?" என்று கேட்டார்.  அகிலாண்டம் வாயையே திறக்கவில்லை.  சற்று நேரம் மெளனம் காத்த கிருஷ்ணமூர்த்தி, "சந்துரு, நான் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து சத்தமாய்ப் படி!" என்றார்.  சந்துருவுக்குக் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதினாரா?  எப்போது? சந்துரு ஏன் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை!  ராதா மட்டுமில்லாமல் அகிலாண்டமும் கலங்கினாள்.  சந்துரு உள்ளே போய்க் கடிதத்தைக் கொண்டு வந்தான்.  ரம்யாவின் கல்யாணத்துக்குச் சில நாட்கள் முன்னர் இந்தக் கடிதம் வந்ததாகவும், படித்ததில் இருந்து தான் எப்படி ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என நினைத்து மிகவும் வருந்தியதாகவும் அகிலாண்டத்தைப் பார்த்துச் சொன்னான்.   கடிதத்தில்:

"அன்புள்ள சந்துரு,

உன் அருமைத் தாய்மாமன் கிருஷ்ணமூர்த்தி ஆசிகளுடன் எழுதுவது.  இப்பவும் உன் பெண் ரம்யாவை பாஸ்கருக்குக் கொடுக்கப் போவதாய்ச் செய்திருக்கும் ஏற்பாடுகளும், கல்யாணப் பத்திரிகையும் எனக்குக் கிடைத்தது.  என்னடா, இது யார் புதுசா தாய் மாமன்?  அகிலாண்டத்துக்கு நமக்கும் தெரியாமல் கிருஷ்ணமூர்த்தினு ஒரு அண்ணாவா? என நினைக்கிறாய் இல்லையா?  இல்லை, குழந்தை, இல்லை.  நான் அகிலாண்டத்தின் அண்ணனோ, தம்பியோ இல்லை.  அந்தப் பாவியால் தான் நான் இத்தனை வருடமாக ஊர்ப்பக்கமே வராமல் இருந்தேன்.  ஆனால் இப்போது உன் குழந்தைக்குக் கல்யாணம்னு தெரிந்து எப்படி வராமல் இருப்பது!  எப்படி உனக்குச் சேர வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பது!  அதுதான் என்னை இந்தக் கடிதம் எழுதத் தூண்டியது.

அப்பா சந்துரு, நீ பிறந்தபோதே உன் அருமைத் தாயும் என் தங்கையுமான மீனாக்ஷி இறந்துவிட்டாள்.  பிரசவமே சிக்கலாகத் தான் இருந்தது.  என்றாலும் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உன்னை மட்டும் காப்பாற்றி விட்டார்கள்.  அவர்களின் பலத்த முயற்சியாலும் உன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த  அகிலாண்டம் உன் தாய்க்கு உதவி செய்ய வேண்டி சம்பளத்துக்கு வந்தவள்.  புண்யாஹவசனம் வந்த உன் அப்பா குழந்தையைக் கொஞ்ச நாட்கள் வைத்துக்கொள்ளும்படியும், தனக்கு மனம் கலங்கி இருப்பதால் நாங்கள் தான் குழந்தையை வளர்க்கும்படி இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.  ஆனால்  உன் அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்து உன் தாய் இறந்த ஒரே மாசத்துக்குள்ளே அவரைக் கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள், இந்த அகிலாண்டம்.  நாங்கள் குழந்தையோடு தவித்துக் கொண்டிருக்கையிலேயே, இங்கே கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. பின்னரும் குழந்தையான உன்னை அவள் கைகளில் ஒப்படைக்க எங்களுக்குச் சம்மதம் இல்லை.  ஆனால் உன் அப்பாவோ வக்கீல் மூலம் தான் குழந்தைக்காகவே இன்னொரு கல்யாணம் செய்து கொண்டிருப்பதாய்க் காட்டிக் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டார்.  சந்துரு, நீ அப்போது மூன்று மாதக் குழந்தை. பூர்வீகச் சொத்துக்களில் உன் தாய்க்கு எனத் தனிப்படச் சொத்துக்கள் உண்டு.  அவற்றுக்காகவே இந்த அகிலாண்டம் திட்டம் போடுகிறாள் என்பது எங்களுக்குப் புரிந்தது.  நல்லவேளையாகச் சொத்துக்களை உன் தாயின் பேரில் என் அப்பா இன்னமும் மாற்றாமல் இருந்தார்.  அகிலாண்டம் இதை எதிர்பார்க்கவில்லை.  சொத்துக்கள் உன் தாய் பெயரில் இருக்கும் எனவும் குழந்தையைக் காரணம் காட்டி அதை வளர்க்க வேண்டும் என உன் தந்தையை கார்டியனாகப் போட்டுச் சொத்துக்களைத் தன் வசம் கொண்டு வர நினைத்திருந்தாள்.  அது நடக்கவில்லை.

ஆனால் அகிலாண்டம் விடுவாளா?  குழந்தையைத் தாங்களே வளர்க்கப் போவதால் அதற்குச் சேர வேண்டிய தாய்வழிச் சொத்துக்களைக் கேட்டு வாங்கும்படி உன் அப்பாவை நச்சரித்தாள்.  உன் அப்பாவும் வந்து வந்து கேட்டான்.  ஆனால் என் அப்பா மசியவே இல்லை.  சொத்துக்களை உன் பெயரில் எழுதி வைத்தால் கூட ஆபத்து என்பதைப் புரிந்து கொண்ட அவர் உனக்குப் பிறக்கும் குழந்தை பெயரில் எழுதி வைத்தார்.  அந்தக் குழந்தைக்கும் கல்யாணம் என்னும்போது உண்மையைத் தெரிவிக்கும்படியும், சொத்துக்களைக் கொடுக்கும்படியும் எழுதி வைத்துவிட்டார்.  அதனாலேயே இப்போது உன் பெண்ணுக்குக் கல்யாணம் எனத் தெரிந்து கொண்டு இந்தக் கடிதம் எழுதுகிறேன்.  உன் பெண் கல்யாணத்தில் பாட்டி வீட்டுச் சீதனமாக அந்தச் சொத்துக்களை அளிக்கிறேன்.  இந்த ஒரே பெண் தானாமே உனக்கு!  ஏனப்பா மேலே குழந்தைகள் வேண்டாம் என இருந்துவிட்டாய்!  இந்தக் காலத்து இளைஞர்களே இப்படித்தான்.  ஒன்றிரண்டோடு நிறுத்தி விடுகின்றனர்.  நீயும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டாய்/  உனக்கும், உன் மனைவி ராதாவுக்கும் என் ஆசிகள்.  தற்சமயம் அகிலாண்டத்திடம் எதையும் சொல்ல வேண்டாம்.  மறுபடி ஏதேனும் பிரச்னை பண்ணுவாள். "

என முடித்திருந்தார்.  இதைப் படித்த சந்துருவுக்குத் தான் ஏமாற்றப் பட்டதை நினைத்து வருந்தினாலும் அகிலாண்டம் தன் தாய் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது எனலாம்.  ஆனாலும் தன் தாயின் நினைவாகக் கொடுக்கப் படும் சொத்துக்கள் தன் வயிற்றில் பிறந்த வாரிசு இருந்திருந்தால் அந்தக் குழந்தைக்குச்  சேருவதே  நல்லது என நினைத்தாலும் இனி என்ன!  அவற்றை ரம்யாதான் அனுபவிக்கட்டுமே என நினைத்தான். அவன், மாமாவுக்கு, ரம்யா தங்கள் வயிற்றில் பிறந்த பெண் இல்லை என்பதையும், (ஆனால் அகிலாண்டத்தின் பெண் அவள் என்பதைச் சந்துரு கூறவில்லை.) எனினும் வயிற்றில் பிறந்த பெண்ணாகவே பாவித்து அவளை வளர்த்து வந்ததாகவும், கூறிவிட்டுக் கல்யாணத்தில் அவரை எதிர்பார்ப்பதாகவும், ரம்யாவுக்கு அவர் அளிக்கப் போகும் பரிசுக்கு நன்றி எனவும் எழுதினான்.  சந்துருவின் பதிலைப் படித்த கிருஷ்ணமூர்த்திக்கோ, சந்துருவின் வயிற்றில் பிறக்காத ஒரு பெண்ணுக்கு ஏன் தங்கள் பூர்வீக சொத்தைத் தர வேண்டும் என்றே தோன்றியது.  சந்துரு அளவுக்கு அவரிடம் பெருந்தன்மை இல்லை.  ஆகையால் கல்யாணத்துக்குப் போகாமல் தட்டிக் கழித்தார்.  பின்னர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆசையுடன் தன் மைத்துனி வீட்டுக்கு வந்தவருக்கு ரம்யாவைப் பார்த்ததுமே அகிலாண்டத்தின் திட்டம் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்து விட்டது.  சந்துரு ஏன் அகிலாண்டத்தின் பெண் தான் ரம்யா எனச் சொல்லாமல் விட்டான் என்பதும் அவன் பெரிய மனதும் புரிந்தது. ஆனாலும் விடாமல் ரம்யாவிடமும் உண்மையைக் கூறினார்.

இந்தக் காலத்துப் பெண்ணான ரம்யாவுக்குத் தன் தாய் செய்தவற்றில் சம்மதம் இல்லை.  அவளைத் தன் தாய் என்று சொல்லவே மனம் கூசினாள்.  தன் சொந்த அண்ணா என நினைத்த சந்துருவும், தன் தாயின் மூத்தாள் மகன் ஆகிவிட்டான். ஆனால், தன் சொந்த அண்ணா தனக்கென ஒரு துரும்பைக் கூடத் தராமல் இருப்பதும் மூத்தாள் மகனான சந்துரு தன்னைப் பெற்ற பெண் போல் வளர்த்ததும், ராதா அநாவசியமாக அகிலாண்டத்தினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதும் அவள் நினைவில் மோதி அவளை அவள் மனசாட்சியே  வாளாக அறுத்தது.  ஆகவே அவளே கிருஷ்ணமூர்த்தியை நேரில் தன் பிறந்த வீட்டுக்கு வந்து அகிலாண்டத்தின் உண்மை முகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாள்.   எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் தவித்த அவள் இப்போது உண்மை வெளிவந்ததும், ஆறுதலே அடைந்தாள்.

அகிலாண்டமோ குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.   தான் போட்ட திட்டம் தவிடுபொடியாகித் தன் வயிற்றில் பிறந்த பெண்ணே தனக்கு எதிரியாகத் திட்டம் போட்டதும் அவள் மனதை அறுத்தது.  கிருஷ்ணமூர்த்தி அகிலாண்டத்தைப் பார்த்து, " இந்த வயசில் ராமா, கிருஷ்ணா எனச் சொல்லிக் கொண்டு போகும் காலத்துக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள் அகிலாண்டம்.  இனீயாவது திருந்து!" என்றார்.  ரம்யாவோ, "மாமா, அண்ணாவுக்கும், மன்னிக்கும் குழந்தை பிறக்கும்.  கட்டாயம் பிறக்கும்.  இந்தப் பாவி மட்டும் அதற்கும் தடை சொல்லாமல் இருக்க வேண்டும்."  என்றாள்.

"இனி அவளால் ஒன்றும் செய்ய முடியாது அம்மா;  அகிலாண்டத்தின் வயிற்றில் பிறந்தும் உன்னிடம் இவ்வளவு பெருந்தன்மை இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.  சந்துருவுக்கும், ராதாவுக்கும் குழந்தை பிறக்கட்டும்;  நிச்சயம் நான் உயிலைக் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன். அது வரை இந்த அகிலாண்டத்தை நம்ப முடியாது. "  என்றார் கிருஷ்ணமூர்த்தி.


இவ்வளவுக்கும் அகிலாண்டம் வாயையே திறக்கவில்லை.

முடிந்தது.

********************************************************************************

சந்துருவுக்கும், ராதாவுக்கும் அடுத்த ஒன்றரை வருடங்களில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பதைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். ரம்யாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது.

28 comments:

  1. குழந்தைகளுக்கு எங்கள் ஆசிகள்!
    நல்லபடியா முடிச்சிட்டீங்க... இது ஏற்கெனவே எழுதி வைத்த/ யோசித்து வைத்த முடிவா, இப்போது தோன்றியதா என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், ஏற்கெனவே எல்லாம் யோசிச்சு வைக்கலை. நான் நினைச்சது வேறே. ஒரிஜினல் வேறே. இரண்டிலே எதுனு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பயணங்கள். ஜீவி சாரா, அகிலாண்டத்தை நல்லவளாய்த் தான் காட்டி முடிக்கணும்; தியாகினு சொல்லணும்னு ஒரே பிடிவாதம். என்ன பண்ணலாம்னு குழப்பம். திடீர்னு ரெண்டு நாள் முன்னே ராத்திரி தோன்றிய ஐடியா. அப்போ அப்போ எழுதினது தான். ஆன்லைனிலேயே தான் எழுதினேன்.

    ReplyDelete
  3. கதையைக் கதையாக ஆரம்பிக்கிறது கஷ்டம்னா, அதை நல்லபடியா முடிக்கிறது ரொம்பக் கஷ்டம். இந்தக் கதை கடைசி அத்தியாயங்கள் தானே எழுதிக் கொண்டன. ஹிஹிஹி, நானும் பிரபல எழுத்தாளி ஆயிட்டேனாக்கும்! :))))))))

    ReplyDelete
  4. பிரபல எழுத்தாளி ஆனதுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. 'அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு'லே ஒரு நிம்மதி தெரியறது. :))))

    நிறைய இருக்கு, இல்லையா?.. அதுனாலே நிதானமா படிக்க முடியாது;
    நிதானமா படிக்கறத்தே தான் நிறையத் தோணும். நிறைய சைட் டிராக் கிடைக்கும். அப்படி நிதானமா படிச்சிட்டு வர்றேன். இது பாத்துட்டேன்னு சொல்றத்துக்காகத் தான்.

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள், கீதாம்மா.

    ReplyDelete
  6. அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு! :))))

    நல்லமுடிவாக அமைந்ததற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. //நானும் பிரபல எழுத்தாளி ஆயிட்டேனாக்கும்!//
    அப்படி போடுங்க! :))))

    கதையை அழகான திருப்பங்களோட பிரமாதமா முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. எல்லாப்பாகங்களையும் ஓசைப்படாமல் வாசிச்சுட்டு வந்தேன். நல்லவிதமா முடிச்சிருக்கீங்க கீத்தாம்மா.

    தலைப்பே போடாம ஒரு நாவலையே எழுதி முடிச்சீருக்கீங்க. நீங்க பிரபல எழுத்தாளியேதான். இதில் சந்தேகமென்ன :-)

    ReplyDelete
  9. முடிவு நல்லா இருக்கு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, சும்மா என்னை நானே கிண்டலடிச்சுண்டேன். :)))))

    உண்மைக்கதையை எழுதப்போய்க் கற்பனை பண்ண வேண்டியதாப் போச்சு என்பதே நிஜம். :)))))

    ReplyDelete
  11. ஜீவி சார், ரெண்டாப் பிரிச்சுத் தான் போட்டேன். அது என்னமோ பிடிவாதமா ஒரே பதிவாத் தான் வருவேன்னு அடம். :)))))

    ஆனா இதிலேருந்து இன்னும் நிறையக் கருப்பொருள் உருவாகி இருப்பது என்னமோ நிஜம். :))))

    ReplyDelete
  12. மெதுவா வாங்க ஜீவி சார், அவசரம் ஒண்ணும் இல்லை. :)

    ReplyDelete
  13. வாங்க ராஜராஜேஸ்வரி, தொடர்ந்து படித்ததுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. வாங்க மீனாக்ஷி, உங்களுக்குப் பிடிச்சிருக்கிறதிலே சந்தோஷம் தான். எதிர்பாரா திருப்பத்தை நானே எதிர்பார்க்கலை என்பது தான் உண்மை. திடீர்னு தோன்றிய ஒரு முடிவு.:)))))

    ReplyDelete
  15. அமைதி, வாங்க, வாங்க, பேருக்கேத்தாப்போல் அமைதியாப் படிச்சிருக்கீங்க. எனக்கே தெரியாமல் ரசிகைகள் இருக்கிறதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு. நன்றிம்மா. :))))

    ReplyDelete
  16. வாங்க புதுகை, நீங்களும் படிச்சது சந்தோஷம்.

    ReplyDelete
  17. //ஜீவி சாரா, அகிலாண்டத்தை நல்லவளாய்த் தான் காட்டி முடிக்கணும்; தியாகினு சொல்லணும்னு ஒரே பிடிவாதம்.. //

    புது கேரக்டர் மீனாஷியை நுழைத்து என் பிடிவாதத்தைத் தகர்த்திருக்கிறீர் கள் என்று தெரிகிறது. பழைய கதைப்படி, பழைய அகிலாண்டம் என்றால் நான் சொன்னது நன்றாகவே எடுபட்டிருக்கும்.

    புதுக் கேரக்டர் மட்டுமில்லை, ரம்யாவுக்கும் ஒரு புதுத்தாய் கிடைத்து விட்டாள். ஆக, ஒரு வழியா கதையை முடிக்கறததும் ஈஸியாயிட்டுத்து. ரொம்பத் தான் மெனக்கெட்டிருக்கிறீர்கள்.

    //ஆனால் உன் அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்து உன் தாய் இறந்த ஒரே மாசத்துக்குள்ளே அவரைக் கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள்.. //

    கற்பனை பண்ண வேண்டியதாகப் போன இடங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. போதாக்குறைக்கு சொத்து, அது யாருக்குப் போய்ச் சேரணும், அதன் பரிமாற்றல்கள் என்று உரிமை உணர்வுகள் வேறு சேர்ந்து விட்டதா, கதை களைகட்டியது கண் கொள்ளாக் காட்சி!

    சினிமாக்கெல்லாம் இப்படித்தான் கதை சொல்வார்கள். ஆக, இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் நீங்கள் மிகச்சிறந்த கதைசொல்லி தான். வாழ்த்துக்கள்.




    ReplyDelete
  18. முடிச்சாச்சு. அதுவும் மங்களமா முடிச்சாச்சு. பிறந்த குழந்தைக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். அதெப்படி இவ்வளவு ட்விஸ்ட் கொண்டு வந்தீர்கள் கீதா!!அகிலாண்டம் விலகி மீனாட்சி வந்தது ஊர்ர்ப்பாசமோ:) நல்ல கதை. வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  19. வாங்க வல்லி, மீனாக்ஷி என்ற பெயர் தானாக வந்தது. ஊர்ப்பாசம் இல்லை! :))))) மீனாக்ஷி என்றொரு மாமி எல்லாரிடமும் அன்பாய்ப் பழகுவார். நம் வலை உலக மீனாக்ஷி பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கையில் அவங்க நினைப்பு வரும். அந்த நினைவில் அந்தப் பெயர் தானாய் வந்தது. :))))) மற்றபடி திட்டமிடாமல் திடீர்னு ஆன்லைனிலே எழுதும்போதே வந்த மாற்றங்களே. யோசிச்சு எல்லாம் மாத்தலை. :))))))

    ReplyDelete
  20. துணிச்சலான கதை - எல்லாவற்றுக்கும் மேலே இதைச் சொல்ல வேண்டும். சுலபமாகக் கையாள முடியாத கரு.

    க்ருஷ்ணமூர்த்தி பற்றி லேசா ஒரு க்ளூ சேர்த்திருந்தால் பிரமிப்பு கூடியிருக்கும். ஆனா நீங்க சொல்லியிருப்பது போல நிறைய மாற்றங்கள் போகிற போக்கில் செஞ்சிருக்கீங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு. கிடைக்கிற இடத்தைப் பிடிச்சிக்கிட்டு ஓடுற ஓடையை போல.

    அகிலாண்டம் கேரக்டர் பெஸ்ட். கடைசி வரைக்கும் தன் கொள்கையை, சரியோ தவறோ, விட்டுக் கொடுக்காத கேரக்டர். பிரமாதமா செதுக்கியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

    திருப்பி எழுதினா edit செஞ்சு, period & setup clues சேர்த்து ஒரு நெடுங்கதையா மாத்தினா அருமையா இருக்கும்.

    (ஹிஹி.. பழசையும் சேத்து படிக்க வேண்டியதாச்சு.. யார் யாரு என்னென்ன செஞ்சாங்கனு மறந்து போச்.)

    ReplyDelete
  21. வல்லிம்மா...உறுமீன் வருமளவு பொறுத்திருந்து கதையைச் சிறப்பாக முடித்து விட்டார்கள் கீதா மேடம். முடித்த இடத்தில் முதல் மனைவி, சொத்து விவரங்கள் கற்பனைகள் அபாரம்.

    அகிலாண்டம் என்று பெயர் வந்தால் வில்லியாகத்தான் இருக்க முடியும்!! அகிலாம்மா என்று எழுதினால் நல்ல மனம் கொண்டவராக இருக்கப் போகிறார் என்பதற்குக் கட்டியம்!!!!

    ReplyDelete
  22. //மீனாக்ஷி என்றொரு மாமி எல்லாரிடமும் அன்பாய்ப் பழகுவார். நம் வலை உலக மீனாக்ஷி பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கையில் அவங்க நினைப்பு வரும். அந்த நினைவில் அந்தப் பெயர் தானாய் வந்தது. :)))))//

    ஆஹா! இப்படி ஒரு பில்ட் அப் வந்திருக்கா என் மேல உங்களுக்கு. சர்தான்! அதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்குவோம். ;))))

    ReplyDelete
  23. அகிலாண்டம்-வில்லி connection புரியலியே ஸ்ரீராம்? இதென்ன நம்பியார் மாதிரி பீடர், தாமு ஸ்டைலா?

    ReplyDelete
  24. வாங்க அப்பாதுரை, நீங்க சொன்னாப்போல் மெருகேற்றப் பார்க்கிறேன். முடிந்த அளவுக்குச் செய்யலாம். என்றாலும் உங்கள் அளவுக்கு வராது. :)))))

    ReplyDelete
  25. //அகிலாண்டம் கேரக்டர் பெஸ்ட். கடைசி வரைக்கும் தன் கொள்கையை, சரியோ தவறோ, விட்டுக் கொடுக்காத கேரக்டர். பிரமாதமா செதுக்கியிருக்கீங்க. பாராட்டுக்கள்.//

    நிஜ வாழ்க்கையில் இப்படியான மனுஷங்களைப் பார்த்ததன் விளைவு தான் அப்பாதுரை. என் அப்பாவே அப்படித்தான். கடைசிவரையிலும் அவரோட எந்தக் கொள்கையையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. நினைவில்லாமல் இருந்தப்போக் கூட, செத்துப் போனப்புறமும் கூட கொஞ்ச நாட்களுக்கு எங்கள் காதுகளில் அவர் குரல் கேட்டுட்டே இருக்கும். அந்த அளவுக்கு ஆக்கிரமிப்புத் தன்மை உண்டு.

    ReplyDelete
  26. //வல்லிம்மா...உறுமீன் வருமளவு பொறுத்திருந்து கதையைச் சிறப்பாக முடித்து விட்டார்கள் கீதா மேடம். முடித்த இடத்தில் முதல் மனைவி, சொத்து விவரங்கள் கற்பனைகள் அபாரம்.//

    ஸ்ரீராம், பாராட்டுக்கு நன்றி. மாற்றங்கள் தானாக வந்தவையே. உண்மையில் நிஜமான முடிவையே கொடுக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். அது பெரும் சோகமாக இருந்திருக்கும். :(((((

    //அகிலாண்டம் என்று பெயர் வந்தால் வில்லியாகத்தான் இருக்க முடியும்!! அகிலாம்மா என்று எழுதினால் நல்ல மனம் கொண்டவராக இருக்கப் போகிறார் என்பதற்குக் கட்டியம்!!!!//

    அகிலாண்டேஸ்வரி பெயரை வைச்சுட்டு இப்படி ஒரு காரக்டரானு யாரானும் கேட்கப் போறாங்கனு நினைச்சா! :))))) ஹிஹிஹி,உங்க விளக்கம் புதுமையா இருந்தாலும் அதற்கான காரணம் புரியவில்லை.

    ReplyDelete
  27. ஹிஹிஹி, மீனாக்ஷி, நன்றி.


    அப்பாதுரை,ஸ்ரீராமை நான் கேட்டதையே வேறுவிதமாக் கேட்டிருக்கார். :)))))

    ReplyDelete
  28. நல்ல முடிவாக வந்திருக்கின்றது. வாழ்த்துகள்.

    ReplyDelete