எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 09, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது?


ரம்யாவுக்குப் புகுந்த வீடு சொர்க்கமாகவே இருந்தது.  அன்பான கணவன்,  அவளை மதித்து அவள் ஆசைகளைக் கேட்டறியும் மாமனார், மாமியார்கள்,  அவளைத் தங்கள் சகோதரி போல் நடத்தும் நாத்தனார்கள் என அவளுக்கு இது நிச்சயமாய் ஒரு புது உலகம் தான்.  பிறந்த வீட்டில் எந்நேரமும் ராதாவை ஏதாவது ஒரு காரணத்துக்காகக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கும் வித்யாவின் நினைவு வந்தது அவளுக்கு.  இத்தனைக்கும் தப்பெல்லாம் ராதா மேல் இருக்காது.  இந்தச் சந்துரு அண்ணா கொஞ்சம் கண்டித்திருக்கலாமோ?  ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.  என்ன இருந்தாலும் தன் மனைவியை விட்டுக் கொடுத்திருக்கலாமோ?  ரம்யாவுக்குச் சந்துருவின் மேலும் தப்பு எனத் தோன்றியது.  இங்குள்ளவர்களுக்கு இவள் சந்துருவின் பெண் அல்ல எனத் தெரியாது.  அவ்வளவு ஏன்?  அவள் பிறந்த வீட்டிலேயே ரம்யா, அகிலாண்டம், ராதா, சந்துரு இவர்களைத் தவிர ராதாவின் சிநேகிதி ஒருத்திக்கு மட்டும் தான் ஓரளவு உண்மைகள் தெரியும்.  

வித்யாவுக்கெல்லாம்  எந்த விஷயமும் தெரியாது.  இது கொஞ்சம் கஷ்டமான  சூழ்நிலை.  முள் மேல் போட்ட சேலையை, சேலையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் எடுக்க வேண்டும்.  முதலில் நம் கணவன் பாஸ்கரிடம் சொல்லிவிட வேண்டும்.  ஏனெனில் ராதாவுக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்குத் தான் சந்துருவின் சொத்துக்கள் சேர வேண்டும்.  நாம் வாங்கிக் கொண்டால் அதைவிடப் பெரிய கொடுமை வேறு இல்லை.  உண்மை தெரியாமல் இவங்கல்லாம் எல்லாச் சொத்தும் எனக்கும் பங்கு இருக்குனு நினைச்சுப்பாங்க.  அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.   ரம்யாவின் எண்ணங்களில் மாமியாரின் அழைப்பு குறுக்கிட்டது.

"இதோ, அம்மா வந்துவிட்டேன்."  என ஓடினாள் ரம்யா.  "மெல்ல, பார்த்து வா அம்மா, அவசரம் ஒண்ணுமில்லை.  என்னோட அக்கா வீட்டுக்காரர் உன்னைப் பார்க்க வரப் போறார்.  கூடவே அக்காவும் வராங்க.  அவங்க  வட நாட்டிலேயே இருக்கிறாங்க.  இங்கே அக்கா வீட்டுக்காரர் அத்திம்பேரின் ஒரே தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாங்க.  அந்தத் தங்கைக்காரி பிரசவத்திலே போயிட்டாளாம்.  மனசு வெறுத்துப் போன அவர் அதுக்கப்புறமா இங்கே வரதே இல்லை. அக்கா மட்டும் தான் வந்துட்டுப் போவாதங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்த இடமும் உங்க ஊர் தான். மத்த விபரங்களெல்லாம் நான் கேட்டுக்கலை.  தங்கை குழந்தையும் போய், தங்கையும் போனப்புறம் அவங்க உறவு எதுக்குனு இருந்துட்டார். இப்போ என்னமோ திடீர்னு மனசு மாறி இருக்காப்போல இருக்கு.  வயசாச்சு இல்லையா?  பழைய சொந்தங்களை எல்லாம் பார்க்க ஆசை வந்திருக்கும்.  அதான் வரார். " என்று முடித்தாள்.

"சரி அம்மா.  அவங்க கிட்டே நான் எப்படி நடந்துக்கணும்?"  ரம்யா கேட்க, "என் கண்ணே, நீ எப்போவும் போல் இருந்தாலே போதும்டி அம்மா.  உனக்கு என்ன குறை!  அதான் உன் அம்மாவும்,அப்பாவும் உன்னை நல்ல குணங்களோடும், பெரியவங்க கிட்டே மரியாதை காட்டறாப்போலயும் வளர்த்திருக்காங்களே.  இந்த ராதா ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் நிபுணி போல!  எனக்குக் கூடத் தெரியலை; உனக்கு எல்லாமும் சொல்லிக் கொடுத்திருக்காளே!"  என்றாள் அவள் மாமியார்.  ரம்யாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது.  இந்த ராதாவைத் தான் எப்படி எல்லாம் நடத்தி இருக்கோம் என நினைத்து மனம் வருந்தியது.  வெட்கமாகவும் வந்தது.  இன்னிக்கு அவள் வளர்ப்பினாலே தானே நாம இங்கே நல்ல பெயர் வாங்கிக்க முடியுது என எண்ணி அவள் மனம் நன்றியினால் நிறைந்தது.  உடனே ராதாவைப் பார்க்க வேண்டும் போலவும் இருக்க, தன் கைபேசியை எடுத்து ராதாவை அழைத்தாள்.

மறுமுனையில் ராதா எடுக்க, " என்ன அம்மா மன்னி? மன்னி அம்மா?  நான் சொல்லி இருந்தேனே,  அந்தக் கட்டளையை நிறைவேற்றினீங்களா ரெண்டு பேரும்?" எனக் கேட்டாள் ரம்யா.  ராதா சிரித்தாள்.  அவள் சிரிப்பில் தெரிந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தாள் ரம்யா.  " என்ன ரிசல்ட்?" என்று கேட்க, "அவசரக்குடுக்கை,  அரசமரத்தைச் சுத்திட்டு அடிவயித்தைத் தடவினால் குழந்தை வந்துடுமா? கொஞ்சம் பொறு.  இன்னும் உங்க பாட்டியம்மா மனதை மாத்த முடியலை.  அவங்க இங்கேயே டேரா போட்டுக் கொண்டு நாங்க ரெண்டு பேரும் தனியாச் சந்திக்கிறதைக் கூடிய வரை தவிர்க்கிறாங்க. "  ராதா சொல்லிக் கொண்டு போக அப்போது அகிலாண்டத்தின் குரல் அங்கே கேட்டது.  "யாரோட பேசறே போனிலே?"

"ரம்யா தான் கூப்பிட்டாள்."  ராதா மென்று விழுங்க, "நகரு, பெரிசாப் பேச வந்துட்டா, பெத்து வளர்த்தாப்போல.  நான் பேசறேன் குழந்தை கிட்டே.  எப்படி இருக்காளாம்? எப்படி வைச்சுக்கிறாங்களாம்?  குழந்தை கண்கலங்காம வைச்சுக்கிறாங்களாமா?' என்றெல்லாம் கேட்டபடி ராதாவிடமிருந்த கைபேசியைத் தான் வாங்கினாள் அகிலாண்டம்.  "குழந்தை, எப்படிடி இருக்கே?"

மறுமுனையில் அமைதி.  விஷயம் புரிந்து கொண்ட  ரம்யா அகிலாண்டத்தோடு பேச விரும்பாமல் போனை வைத்துவிட்டாள்.  ரம்யா மாமியாரின் அக்கா  பார்வதியும் அவள் கணவர் கிருஷ்ணமூர்த்தியும் இரண்டு நாட்களில் வந்துவிட்டார்கள்.  அவர்கள் வந்து அவங்க சொந்தக்காரங்க வீட்டிலே இறங்கிட்டு பின்னரே இங்கே வந்தார்கள்.  வந்தப்போ ரம்யாவும், பாஸ்கரும் வெளியே போயிருந்தார்கள்.  ஆகவே அவர்கள் வரும்வரை காத்திருந்தார்கள் இருவரும்.  வெளியே சென்ற இருவரும் திரும்பி வருகையில் கிருஷ்ணமூர்த்தி மட்டும் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க, அக்காவும், தங்கையும் உள்ளறையில் பேசிக் கொண்டிருந்தனர். ரம்யாவின் மாமனார் ஷட்டகர் அருகே அமர்ந்து கொண்டு அவ்வப்போது ஏதானும் பேசுவதும் திரும்பித் தொலைக்காட்சியைப் பார்ப்பதுமாக இருந்தார்.  ரம்யாவும், பாஸ்கரும் உள்ளே நுழைவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, ரம்யாவை ஏற, இறங்கப் பார்த்தார்.

"நீ அகிலாண்டத்தின் பெண்ணா?  அவள் ஜாடையை உரிச்சு வைச்சிருக்கே?" என்று கேட்டார்.

ரம்யாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இவருக்கு அகிலாண்டத்தை எப்படித் தெரியும்?  இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "நான் சந்துருவின் பெண்.  என் அம்மா ராதா."  என்றாள்  ரம்யா.  அவளையே கூர்ந்து கவனித்த கிருஷ்ணமூர்த்தி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்.  அவர் முகத்தில் அவள் சொன்னதில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

ரம்யாவின் அடி வயிறு கலங்கியது.  தான் ஒன்று நினைக்க இப்போது வேறொன்று கிளம்புகிறதே.  இது என்னவாக இருக்கும்?   உடனே ராதாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது ரம்யாவுக்கு.


சீக்கிரம் முடிஞ்சுடும்;  கவலைப்படாதீங்க. :))))))))

21 comments:

  1. தான் ஒன்று நினைக்க இப்போது வேறொன்று கிளம்புகிறதே. இது என்னவாக இருக்கும்?



    என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  2. // என்ன அம்மா மன்னி? மன்னி அம்மா? //

    நல்ல முடிவு தான்! அம்மா என்று அழைப்பதா, இல்லை மன்னி என்று அழைப்பதா?.. ரெண்டையும் சேர்த்து அழைச்சுட்டா போச்சு! :}}}

    ReplyDelete
  3. வாங்க ராஜராஜேஸ்வரி, என்னவாய் இருக்கும்? ம்ம்ம்ம்ம்ம்ம்????? :))))))

    ReplyDelete
  4. ஜீவி சார், ரம்யாவுக்குள் குழப்பம் எப்படி அழைப்பதுனு. அதுவும் அவள் இருப்பது புகுந்த வீடு. அங்கே இன்னும் உண்மை தெரியாது. ஆகவே தைரியமா மன்னினு கூப்பிட முடியலை. :))))

    எனக்குத் தெரிந்து அப்பாவை அண்ணானு அழைச்சதையும், மாமானு அழைச்சதையும், (நானும் என் அண்ணாவுமே எங்க அப்பாவை மாமானு தான் கூப்பிட்டுட்டு இருந்தோம் நினைவு தெரியும் வரை! அப்புறம் அதுக்காக எங்க அப்பா எங்களுக்கு எஸ் சிசி வாங்கிக் கொடுத்தது தனிக்கதை!) :))))

    ReplyDelete
  5. பழசைப் புரட்டிப் பார்த்தா இந்த கிருஷ்ண மூர்த்தி யார்ன்னு ஓரளவு தெரிஞ்சிடும். ஆனா, போகற வேகத்தைப் பார்த்தா புரட்டிப் பார்க்கறதுக்குள்ளே நீங்க முடிச்சிடு...

    //சீக்கிரம் முடிஞ்சுடும்; கவலைப்படாதீங்க. :)))))))) //

    'இந்தக் கதையை எப்படி முடிக்கிறது?'ன்னு நீங்க கேட்ட கேள்விக்கு யாரானும் தகுந்த பதிலைத் தர வரைக்கும் முடிக்கவே முடிக்காதீங்க..

    ReplyDelete
  6. //எனக்குத் தெரிந்து அப்பாவை அண்ணானு அழைச்சதையும், மாமானு அழைச்சதையும்..//

    தங்கைகளும், தம்பிகளும் நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் பெரியண்ணாவை அண்ணா என்றும், மன்னி என்று அழைத்து அழைத்து அதுவே பழக்கமாகி, பாவம் அந்த பெரியண்ணாவின் குழந்தைகள் கூட 'அப்பா.. அம்மா..' என்று தங்கள் பெற்றோரை அழைக்க வாய் வராமல்,
    அவர்களும் பெற்றவர்களை அண்ணா, மன்னி என்று அழைத்ததை பார்த்தும், அனுபவப்பட்டும் இருக்கிறேன்.

    ReplyDelete
  7. வந்தவர் அகிலாண்டத்தைத் தெரிஞ்சவர் போல... சில உண்மைகள் நாம் சொல்வதை விட வேறு யார் மூலமாவது வெளி வந்து விடுவது ஒரு நிம்மதி, ரிலீஃப்... காதலிப்பது உட்பட!

    ReplyDelete
  8. ம்ஹூம், ஜீவி சார், பழசைப் புரட்டினாலும் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டே பிடிக்க முடியாது!:))) ஏன்னா அவர் ஜனிச்சதே இன்னிக்குத் தான்.

    //இந்தக் கதையை எப்படி முடிக்கிறது?'ன்னு நீங்க கேட்ட கேள்விக்கு யாரானும் தகுந்த பதிலைத் தர வரைக்கும் முடிக்கவே முடிக்காதீங்க//

    ஜீவி சார், முதல்லே ஆரம்பிக்கிறச்சே நான் நினைச்சது இதான். யாரையானும் முடிக்கச் சொல்லணும்னு இருந்தேன். ஆனால் என்னமோ தெரியலை. நானே எழுதிடலாம்னு இருக்கேன். :)))))

    ReplyDelete
  9. ஆமாம் ஜீவி சார், எங்க அம்மாவழிப் பாட்டியை நாங்க "தாத்தா அம்மா" னு கூப்பிடுவோம். :))))

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், வந்தவருக்கு அகிலாண்டத்தை நல்லாவே தெரியும் போலிருக்கு.
    அதென்ன இத்தனை வயசுக்கு மேலே காதல் விஷயத்தை யார் மூலமானும் தெரியப் படுத்த நினைக்கறீங்க??

    நினைச்சதை உங்க "பாஸ்" கிட்டே நேரடியாச் சொல்லிடுங்க. அதான் சரி. :)))))))

    ReplyDelete
  11. அதாவது இத்தனை வருஷம் ஆகியும் உங்க "பாஸ்"மேலே உள்ள காதல் உங்களுக்கு மறையலைங்கற விஷயத்தை. பூரா முடிக்கிறதுக்குள்ளே அவசரம் கூகிளுக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. மன்னி அம்மா....நல்லா இருக்கே...

    எனக்கு ஐந்து மாமிகள். பெரிய மாமி எல்லோருக்கும் மன்னியானதால் எனக்கும், என் தம்பிக்கும் மன்னியாகி விட்டார்...:))

    இப்போ அவர் பொடிசு முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் செல்லமாக ”மன்னிம்மா” ஆகி விட்டார். என் கணவர் கூட அவருடன் பேசும் போது மன்னிம்மா எப்படி இருக்கீங்க என்று தான் கேட்பார்...:))

    கதை எப்படி செல்லப் போகிறதோ...த்ரில்லிங்....

    ReplyDelete
  13. எல்லாத்துக்கும் ஒரு ஈசி முடிவு இருக்கு :)

    ReplyDelete
  14. வாங்க அப்பாதுரை, என்ன ஈசி முடிவு? சுபம்னு போடறதா? :)))))

    ReplyDelete
  15. வாங்க கோவை2தில்லி, என்னோட மன்னி என் குழந்தைகளுக்கும் மன்னி தான். மாமி இல்லை. அதே என் தம்பி மனைவி என்றால் மாமினு தான் சொல்வாங்க. :)))))

    ReplyDelete
  16. //நினைச்சதை உங்க "பாஸ்" கிட்டே நேரடியாச் சொல்லிடுங்க. அதான் சரி.//

    ஹலோ மேடம்... இத்தனை நாள் கழித்து எனக்கென்ன பயம்... சொல்லிடுவோம்ல... நான் பொதுவாச் சொன்னேன்..!

    //. யாரையானும் முடிக்கச் சொல்லணும்னு இருந்தேன்.//

    இது ரொம்ப ஈசியாச்சே...

    ....."திடுக்கிட்டுக் கண் விழித்தாள் ராதா. படித்துக் கொண்டிருந்த புத்தகம் கைகளில் சிக்கி மடிமேல் கிடைந்தது. படித்துக் கொண்டே தூங்கி விட்டதும் அதனால் கண்ட கனவும்தான் இது என்று புரிந்தது. தலையை ஒரு உலுக்கு உலுக்கி நிகழ்காலத்துக்கு மீண்டவள் மணியைப் பார்த்தாள். " ஐயோ.. மணி ஏழரை... இப்பக் கிளம்பினால்தான் டயத்துக்குக் காலேஜ் போக முடியும்..."

    எழுந்து கிளம்ப ஆயத்தமானாள்.

    :))))))))))))))))))))))))

    ReplyDelete
  17. ஹாஹா ஸ்ரீராம், சொல்லுங்க, சொல்லுங்க. :)))
    அப்புறமா நீங்க எழுதி இருக்காப்போல எல்லாம் முடிவு எழுதப் போறதில்லை. :))))

    ReplyDelete
  18. சீக்கிரம் முடிய கூடாதேன்னுதான் நான் கவலைபடறேன். :) ஏன்னா, ராதாக்கு குழந்தை பிறக்கணும். ரம்யா அகிலாண்டத்தை பழி வாங்கணும். அப்பறம் அவளுக்கு குழந்தை பிறக்கணும். அந்த குழந்தை தன்னை பாட்டின்னே கூப்பிட மாடேங்கறது, தன்கிட்ட ஒட்டவே மாட்டேங்கறதேன்னு அகிலாண்டம் அம்மா வருந்தணும். கடைசில எல்லாம் நான் பண்ணின பாவத்தாலேன்னு உணர்ந்து ராதா கிட்ட மன்னிப்பு கேக்கணும். இப்படி எவ்வளவு இருக்கு. நீங்க என்னவோ அதுக்குள்ள சீக்கிரம் முடிஞ்சுடும்னு சொல்றீங்களே? :)

    அக்கா வீட்டுக்காரர் வந்து ஆசீர்வாதம் பண்றேன் பேர்வழின்னு சீக்கிரம் இந்த வீட்ல ஒரு குழந்தை சத்தம் கேக்கனும்னு டயலாக் எல்லாம் விடுவார்னு எதிர் பாத்தா இப்படி ஒரு குண்டை தூக்கி போடறாரே. இது எதிர் பாக்காத ட்விஸ்ட். கதையை இனி எப்படி கொண்டு போக போறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.

    ReplyDelete
  19. மாமி மன்னி ஆவதும், அம்மா மன்னி ஆவதும், அப்பா அண்ணா ஆவதும் பல குடும்பத்தில் இருக்கு போல.:)
    புகுந்த வீட்டில் அத்தைகள் சித்திகளாகவும் அத்திம்பேர்கள் சித்தியாக்கள் ஆவதும் சகஜம்.
    எங்க மாமியாரே மாமனாரை மாமா என்று அழைப்பார். திருமணமான புதிதில் எனக்கு விளங்கவே ஒரு வாரம் பிடித்தது:)

    ReplyDelete
  20. வாங்க மீனாக்ஷி,கதை சீக்கிரமாய் முடிஞ்சுடும்னு தான் நினைக்கிறேன். :))))) ஹிஹிஹி, இது நானே எதிர்பாராத ட்விஸ்ட்! என்ன சொல்றீங்க! :)))))

    ReplyDelete
  21. வாங்க வல்லி, கொஞ்சம்போல உண்மையான நிகழ்வு ஒன்றைக் கண், காது, மூக்கு வைச்சு எழுதப் போனால் அது என்னை எங்கேயோ இழுத்துட்டுப் போகுது!

    ஹிஹிஹி,என்னோட ரசிகர் கூட்டம் பெருகிட்டே போகுதோ! :P :P :P

    ReplyDelete