எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 02, 2022

அக்ஷய திரிதியைக்கு என்ன வாங்கணும்? உப்பு வாங்கலையோ உப்பு! மீள் பதிவு

 உப்பு வாங்கலையோ உப்பு!


அன்னக்கொடி விழா



அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?


அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!


மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.


அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.


அன்ன தானம்

எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்

ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,

பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்

வந்திருந்தனர்.


குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்

உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான

பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து

கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து

வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.


பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய

சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.

மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்

வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்

செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய

தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து

இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்

வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்

அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.


2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். 


இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!





வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.



உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்




ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.




சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 

தண்ணீர் வைத்திருந்த பாத்திரம், நிவேதனம் ஆகியவற்றைக் குறித்த படங்கள் ஏனோ வரலை. பழைய பதிவுகளிலும் இல்லை. அநேகமாக அவை அழிந்திருக்க வாய்ப்பு உண்டு. :( மன்னிக்கவும்.

38 comments:

  1. மிகச் சிறந்த பதிவு. தானங்களில் சிறந்தது அன்னதானம்! அதை மிக அழகாய் உதாரணங்களுடன் எழுதியிருக்கிறீர்கள்! கர்ணன் பற்றிய தகவல் புதிது!
    இது தெரியாமலேயே இன்று காலையிலேயே அன்னதானம் செய்து விட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. அன்னதானம் எப்போ வேணாலும் பண்ணலாம் என்றாலும் அக்ஷய திரிதியை நாளைக்குத் தானே! இன்னிக்கு என்ன சிறப்பு அன்னதானமோ?

      Delete
  2. இந்த கருப்பு உளுந்து வடை, காரா வடையைவிட அழகாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, சாப்பிடவும் இந்தக் கறுப்பு உளுந்துவடை நன்றாக இருக்கும். மேலே பொசுபொசுவென முறுகலாயும் உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரியும் வரும். தோலோடு இருப்பதால் கரகரப்பும் கொடுக்கும். கிட்டத்தட்ட இதான் பெருமாள் வடை. இதுக்குக் காரத்துக்கு மிளகு, ஜீரகம் தான். நோ பெருங்காயம். கருகப்பிலை உண்டு.

      Delete
    2. ஆமாம் கறுஇப்பு உளுந்துவ்டை செம டேஸ்டா இருக்கும். நீங்க சொன்னாமாதிரி கர க்ர உள்ளே மெத்தென்று....பிறந்த வீட்டில் இந்த வடை அடிக்கடி செய்வாங்க. நாகர்கோவிலில் வீட்டில் கறுப்பு உளுந்துதான் வாங்குவாங்க. இட்லி தோசை எல்லாத்துக்கும் அதுதான். சென்னை வந்துதான் தோல் நீக்கிய வெள்ளை முழு உளுந்து பார்த்தேன்!!!

      கீதா

      Delete
  3. இராமர் படம் நல்லா எடுத்திருக்கீங்க. சித்திரமும் கைப்பழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா பழசோ பழசு. ஐந்து வருஷம் இருக்குமோ?

      Delete
  4. பால்பாயசம்... ஆஹா... இரண்டு மூன்று நாட்களாக வெல்லப்பாயசம் பண்ணச் சொல்லணும்னு நினைத்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சாதம் வடிச்சதிலே இருந்து எடுத்து நெய்யோடு சேர்த்து மசித்துப்பாலும் சர்க்கரையும் சேர்த்துடுவேன். நன்றாகவே இருக்கும்.

      Delete
    2. சாப்பாடு விஷயத்தில் எங்க மாமனாரை அடிச்சுக்க ஆளே இல்லை. வத்தக்குழம்பு பண்ணினால் கல்சட்டி நிறைய மாங்காய்ப் பச்சடி. நினைச்சால் அடிக்கடி பாசிப்பருப்புக் கஞ்சி என்னும் பெயரில் பாயசம். வெல்லம் நிறையப் போட்டுப் பாலும் நிறையச் சேர்க்கணும். மத்தியானம் தாகத்துக்குக் குடிக்க தினம் தினம் பானகம். இப்படி ஒரே தித்திப்பாகச் சாப்பிட்டு விட்டுக் காஃபிக்குச் சர்க்கரை போடலையா என்பார். நாலு ஸ்பூனாவது போட்டிருப்பேன். ஆனால் கடைசி வரையிலும் அவங்கல்லாம் உணவைக் குறைக்கலை. கொட்டினதில்லை. இனிப்புத் தடையில்லாமல் சாப்பிட்டார்கள். எல்லா உறுப்புக்களும் நன்றாகச் செயல்படுவதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

      Delete
    3. என் மனைவிகிட்ட கேட்டேன்னா அரிசிப் பாயசம் உடனே வராது, அல்லது கொஞ்சமா (அதாவது எனக்கு போதும்னு சொல்ற அளவு பண்ணமாட்டா) பண்ணிடுவா. அதனால நான் தோசைப் பச்சரிசி, கொஞ்சம் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, 3/4 ஆழாக்கு தளிகைப்பண்ணி வச்சிடுவேன். அவளுக்கு வேற வழியில்லாமல் பண்ணிடுவா.

      Delete
    4. ம்ம்ம்ம் இப்போல்லாம் ஸ்பூனில் தான் பாயசம்.

      Delete
  5. என்னதான் சொன்னாலும் பாஸ் கூட கடைக்கு சென்று குண்டுமணி (குன்றுமணி?) தங்கமாவது வாங்கி விடுவார்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கெல்லாம் இந்தத் தங்கம் வாங்கணும்னு விஷயமே கடந்த 20/25 வருடங்களாகத் தான் தெரியும் ஶ்ரீராம். சின்ன வயசில் அக்கம்பக்கம் பெரியவங்க இருக்கும் வீடுகளில் வைதிக பிராமணர்களை அழைத்து வாயனம்னு கொடுப்பாங்க. அதில் குடை, செருப்பு, போர்வை, வேஷ்டி, துண்டு அல்லது அங்கவஸ்திரம், ரவிக்கைத்துணி, தயிர்சாதம், சுண்டல், வடை, பானகம் நீர்மோர்னு தானம் கொடுப்பாங்க. வீட்டுக்கு வீடு வசதியானவங்க வாசலில் பெரிய அடுக்கில் அல்லது பானையில் நீர் மோரும்/பானகமும் கரைத்து வைத்திருப்பாங்க. சுண்டல் கொடுப்பவர்களும் உண்டு. அவ்வளவு தான் அக்ஷய திரிதியை பற்றிய அறிவு. இப்போத்தான் எல்லாமும் புதுசா இருக்கு. நான் இன்றுவரை ஒரு பொட்டுத் தங்கம் கூட அக்ஷய திரிதியை அன்னிக்கு வாங்கினது இல்லை. சொல்லப் போனால் அன்று கூட்டம் இருக்கும் என்பதால் கடைகளுக்கே போக மாட்டேன்.

      Delete
  6. மீள் மீள் பதிவா?  இந்த வருடம் நாளைதானே அட்சய திருதியை?   அப்போல்லாம் படங்கள் தெளிவாக எடுத்திருக்கிறீர்கள் போல.. (கிர்ர்ர் சொல்லக்கூடாது)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுமார் 10/12 வருடங்களாக விட்டு விட்டுப் போட்டுக்கொண்டு இருக்கேன். அப்போ இன்னும் வயசு ஜாஸ்தி இல்லையா? அதான் படங்கள் நல்லா வந்திருக்கும். :)))))

      Delete
  7. பால் பாயசம் ஏன் வெண்ணிறமாக இல்லாமல் மங்கி இருக்கிறது?  தயிர் சாதம் ஓகே, ஆனால் ரொம்ப இளக்கமாக இருக்கிறது!  கொஞ்ச நேரத்தில் கெட்டியாகி விடும்!  ராமர் படம் தெளிவு, அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஒரு அரை லிட்டர் பாலில் கொஞ்சம் அரைக்கரண்டி போலப் பச்சரிசியைக் களைந்து நெய்யில் வறுத்துக் கொண்டு அரிசியைக் குழைய வேக வைத்துப் பின்னர் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்றாக சேர்ந்து வரும் வரை கொதிக்க விடுவேன். கன்டென்ஸ்ட் மில்க் எல்லாம் சேர்ப்பதில்லை. முதல் நாளில் இருந்தே பாலைச் சேர்த்து வைத்துக் காய்ச்சி எடுத்து வைச்சுப்பேன். அது கொஞ்சம் லேசாகச் சிவந்த நிறமாகவே பால் வாசனையுடன் ஜாதிபத்திரி வாசனை எல்லாம் சேர்ந்து இருக்கும்.

      Delete
    2. ஸ்ரீராம்... அது வெல்லப் பாயசம்தான். வயசு குறைஞ்சு குறைஞ்சு இப்போ குழந்தையாயிட்டதனால, வெல்லப் பாயசம் எப்படி இருக்கும் பால் பாயசம் எப்படி இருக்கும்னு மறந்துபோச்சு குழந்தைக்கு

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதிலிருந்து தெரிவது என்னவெனில் நீங்க சுத்தமான பால் பாயசமே சாப்பிட்டதில்லை என்பது புரிந்து விட்டது. பாலைச் சுண்டக் காய்ச்சக் காய்ச்ச நிறம் கொஞ்சம் மாறத்தான் செய்யும்.

      Delete
    4. எனக்கு, குருவாயூரில் தெய்வ அருளால் கிடைத்த பால்பாயசம் மறக்க முடியாது. சென்றமுறை போயிருந்த போதும் என்னால் வாங்கமுடிந்தது.

      உண்மையைச் சொல்லுங்க. எனக்கு வெல்லம் போட்ட மாதிரியே தெரியுது. அல்லது போட்டோ எடுக்கும்போது கொஞ்சம் நிழல் விழுந்ததால் இருக்குமாயிருக்கும். இருந்தாலும் நெய்யில் வறுத்த முந்திரி, நெய்லாம் நல்லாவே தெரியுது

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் பால்பாயாசம் வெள்ளையாக இருந்தால் அது பால் சாதம்!!!! பால் பாயாசம் பால் நல்லா சுண்டி ஒரு க்ரீம் கலந்த கொஞ்சம் பழுப்பு கலரில் இருக்க வேண்டும் . நான் சொல்வது வெள்ளைச் சர்க்கரை போட்டுச் செய்வதே கூட...அப்போதான் அது பால் பாயாசம் அந்த சுவை இருக்கும்.

      கீதா

      Delete
    6. கீதாக்கா உங்க கருத்துக்கு ஹைஃபைவ் அதைப் பார்க்கும் முன்னரே ஸ்ரீராம் கருத்திற்கு நான் சொன்ன பதிலும் உங்கள் பதிலும் சேம் சேம்!!!!

      கீதா

      Delete
    7. நானும் கண்டெஸ்ட் மில்க் சேர்ப்பதில்லை கீதாக்கா...

      கீதா

      Delete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அக்ஷய திரிதியை பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். அன்னதானத்தின் பலனைப் பற்றி விவரித்து கூறியதும் நன்றாக உள்ளது. நானும் இதுவரை அன்றைய தினம் எதுவும் வாங்கியதில்லை. நானும் இப்போதுதான் ஒரு இருபது வருடங்களாக அந்த நாளின் சிறப்புகளை அனைவரின் வாயிலாக கேள்விப்படுகிறேன். அன்றைய தினம் இறைவனுக்கு பூ பழங்கள் அளித்து பாயாசம் செய்து அனைவரின் நலத்துக்காக வேண்டிக் கொள்வதோடு சரி.

    நீங்கள் செய்த உணவு வகைகள் நன்றாக உள்ளது. வடைகள் நன்றாக பெரிதாக உள்ளன. இட்லிக்கும் கருப்பு உளுந்து போட்டு அரைத்தெடுத்தால் மிருதுவாக வருகிறது. கொஞ்சம் கலர் மாறித் தெரியுமென்றாலும் அதன் தோல் அகற்றாமலிருப்பது உடலுக்கு நல்லதில்லையா ? எங்கள் மன்னி இப்போது எப்போதும் அப்படியேதான் பயன்படுத்துகிறார்கள். எங்கள் பாட்டி அம்மா காலத்தில், பாதி உடைத்த கருப்பு உளுந்தை களைந்து ஒரு தோல் இல்லாமல் எடுத்து அந்த கழனியை அருகில் குடியிருப்பவர்கள் வீட்டின் மாட்டுக்கு கொடுத்து விட்டு பதிலுக்கு பண்டமாற்றாக மறுநாள் வாசல் தெளிக்க, சாப்பிட்டவுடன் எச்சிலிட, விறகடுப்பு மொழுக என்று மாட்டின் சாணத்தை வாங்கி வருவது நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த காலங்கள் நிறையவே மாறி விட்டது.

    ராமர் படம் நல்ல தெளிவாக உள்ளது. மற்ற ஸ்வாமி படங்களும் அழகாக உள்ளது. நாளைய அக்ஷய திரிதியைக்கு இன்றே ஸ்ரீ ராமரை மனதாற நமஸ்கரித்துக் கொண்டேன். பிற நைவேத்திய படங்கள் அதனுடன் வரவில்லை எனச் சொல்லியுள்ளீர்கள். நாளைய தினம் பொறுமையாக எல்லாவற்றையும் படமெடுத்துப் போடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நாளைக்கு என்ன செய்வது என்பது பிச்சைக்காரனுக்குப் பிழைத்து எழுந்தால் தான் தெரியும். இறை அருளில் அனைத்தும் நல்லபடியா நடந்தேறப் பிரார்த்திப்போம். அப்போப் பக்கத்தில் உள்ள விளக்கைப் போடாமல் ராமரைப் படம் எடுத்திருப்பேன் போல! ஆனால் பக்கத்தில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரியும் ராமர் படத்தின் மேல் சாத்திய குஞ்சிதபாதத்திலும் வெளிச்சப் பிரதிபலிப்பு இருக்கு. ஆகையால் விளக்கு இருந்தும் ராமர் படத்தின் மேல் பிரதிபலிக்கவில்லை போல! நாங்களும் கறுப்பு உளுந்து போட்டுத் தான் இட்லி, தோசைக்கு அரைப்போம். சாணமெல்லாம் நிறையவே கிடைத்து வந்தது. இப்போது தான் வரட்டி கூட அமேசான் மூலம் வரவழைக்கிறாங்க. நாங்க அமேசானிலும் எதுவும் வாங்கினது இல்லை. குழந்தைகள் ஏதானும் வாங்கி அனுப்பினால் உண்டு. அதுவும் யு.எஸ். அமேசான் எனில் இந்திய ரூபாயை ஒத்துக்காது. ஆகவே அவங்க இந்திய அமேசான் மூலம் அனுப்பணும்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      ஆமாம்.. நானும் அமேசானில் வரட்டி கூட வாங்கலாம் என எங்கோ படித்தேன். இங்கு குழந்தைகளும் பல பொருட்கள் அதில்தான் வாங்குகிறார்கள். (இப்போது இந்த தொற்று வந்த பிற்பாடு சமயங்களில் மளிகை சாமான்களும் காய்கறிகளும் அதில்தான்.) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அமோகமான அக்ஷய திரிதியை வாழ்த்துகள்.
    எல்லோரும் நன்றாக உண்டு உடுத்தி, பக்தி மற்றும் தானம்
    செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அருமையான பதிவு அன்பு கீதா.

    மகளிடம் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அக்ஷய த்ரிதியை கொண்டாடி இருப்பீங்கனு நம்பறேன்.

      Delete
  10. அருமையான பதிவு.
    முன்பும் படித்து இருக்கிறேன்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. ஆமாம், 2,3 முறை மீள் பதிவாகப் போட்டேன்.

      Delete
  11. அட்சய திரிதியை அன்று எல்லாம் வெள்ளையாக இருக்கவேண்டாமோ? தயிற்சாதம் ஓகே, பால் பாயசம் ஓகே. ஆனால் கருப்பு உளுந்தில் வடை? நாட் ஓகே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லப்பா சார், நிவேதனத்துக்கு, ச்ராத்தம் போன்ற முக்கிய விசேஷங்களுக்குத் தோல் நீக்காத உளுந்தே பயன்படுத்தணும். அதோடு அதில் மி.வத்தல், பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மிளகு, ஜீரகம், உப்பு, கருகப்பிலை/

      Delete
  12. நல்ல விஷயங்களுடன் அழகான பதிவு.. அக்ஷய திரிதியை நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. ஆஹா உங்கள் பதிவை மிஸ் பண்ணியிருக்கிறேன். எங்கள் வலையில் அப்டேட் ஆகவே இல்லை.....உங்களைக் காணலியேனு கேட்டப்பதான் வல்லிம்மா சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.

    நல்ல தகவல்கள் கீதாக்கா. ஆனால் இந்த நாள் ஒரு பிஸினஸ் நாளாகிவிட்டது.

    இந்த நாளில் உலக இயற்கையும், நீர்வளமும் பெருக வேண்டும் என்று பிரார்த்திப்போம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி/கீதா! டன் கணக்கில் தங்கம் வாங்கி இருப்பதாகத் தொலைக்காட்சிச் செய்திகள் கூறுகின்றன. இந்த அழகில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாம். அவங்களை யாருமே கவனிப்பதில்லையாம்! சொல்றாங்க!

      Delete
  14. நல்ல பகிர்வு முன்பும் படித்த ஞாபகம்.

    நகை கடைக்காரர்களின் ஏமாற்று வேலையில் சனங்களும் விழுந்து ஏமாறுகிறார்கள்.

    ReplyDelete