எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 18, 2007

212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா?

தியாக ராஜனுக்கு ஒரே கோபம். நந்தனாரைத் தடுத்தது வேதியர் யாரும்
இல்லை என்று நான் சொன்னதற்கு. அப்புறம் இன்று தற்செயலாகச் சக்தி
விகடன் படித்தபோது அதிலும் இந்தச் செய்தி (எனக்காகவே வந்தாற்போல்)
வந்திருந்தது. இருந்தாலும் நானும் பெரிய புராணம் புத்தகத்தை (ஓசி தான்) வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போ எழுதப் போறது என்னோட சொந்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதினதை அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.

திருஆதனூரையும், அதன் செழுமையையும் வர்ணிக்கும் சேக்கிழார் அங்கிருக்கும் புலைப்பாடியைப் பற்றியும் வர்ணித்து விட்டு இத்தகைய புலைப்பாடியில் முன் ஜென்ம வாசனையால் இறைவனான சிவனை நினைந்த வண்ணம் ஒருத்தர் இருந்தார் என்றும் அவர் பெயர் "நந்தனார்"
என்றும் கூறுகிறார். அதற்கான செய்யுள் பெரிய புராணத்தில் 1051-ம் எண்ணில் வருகிறது.

"இப்படித்தாகிய கடைஞர் இருப்பின்வரைப் பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வோடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளரானார்."

என்று நந்தனாரைப் பற்றிக் கூறும் சேக்கிழார் நந்தனார் உணர்வு தெரிந்த நாள் முதலாய்ப் பிறைமதியான கண்ணி மாலை சூடிய பெருந்தகையான சிவனிடத்தில் சிந்தை செலுத்தித் தன் மனதைக் கட்டுப்படுத்தி மறந்தும் தீத் தொழில் செய்யாமல் சிவனின் கீழ் தான் அடிமை என்னும் நினைப்புடன் வாழ்ந்து வந்தார்.அவருடைய தொழில் ஊருக்காக வெட்டிமைத் தொழில் செய்வது. அதற்காக ஊரார் கொடுத்த மானிய நிலத்தின் வருவாயில் வாழ்ந்தார். அதைக் குறிக்கும் செய்யுள்

"ஊரில் விடும் பறைத்துடவை உணவுரிமையாக் கொண்டு
சார்பில் வருந் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்."

-1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே (தன்னுடைய குலத் தொழிலின் காண் இயல்பாக விளைந்த அச்சத்தினால்) போகாமல் வெளியே நின்றே தொழுது ஆடிப்பாடி வந்தவர். இவருக்கு ஒரு முறை "திருப்புன்கூர்" என்னும் ஊரில் உள்ள சிவனைத் தரிசிக்கும் ஆவல் மேலிட்டது. கோயில் வாயிலில் நின்று இறைவனைக் குறித்த துதிகள் செய்து ஆடிப் பாடிய நந்தனாருக்கு இறைவனைக் காண தனக்கு நேரே காண ஆசை வந்தது. அப்போதெல்லாம் கோயிலில் வாயிலுக்கு நேரே நந்தியைத் தவிர ஏதும் மறைக்காமல் கோயிலைக் கட்டினார்கள் போலும். நந்தனாரின் ஆசையை உணர்ந்த இறைவன் அவருக்கு அருள் செய்ய விரும்பித்
தனக்கு எதிரே இருந்த நந்தியை விலகி இருக்குமாறு பணித்தது தான் இன்று
ரொம்பவே பிரசித்தி அடைந்து இருக்கும் "சற்றே விலகி இரும் பிள்ளாய்!" என்னும் சொற்றொடர். சேக்கிழார் இதைக் குறிப்பிடுகையில் சொல்கிறார்:

"சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும்பிட வேண்டும் என நினைத்தார்கது நேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்."
-1057-ம் பாடல்என்று கூறுகிறார்.

இனி நந்தனாரின் தில்லைப் பயணம் பற்றிப் பார்ப்போம்.நந்தனார் சிவபதிகள் பலவற்றுக்கும் போய் வணங்கி உண்மையான திருத் தொண்டைச்
செய்து வாழ்ந்திருக்கும் வேளையில் தில்லைக்குச் செல்ல வேண்டும் என்ற
பேராவல் அவர் உள்ளத்தே எழுந்தது. கோயில் என்றால் சைவர்களுக்குச்
"சிதம்பரம்" என்று தற்காலத்தில் அழைக்கப்படும் தில்லை தான். தில்லைவனம் சூழ்ந்த தில்லைச் சிதம்பரத்தில் ஆடும் நடராஜரின் திருவடி
தரிசனத்திற்காக நந்தனார் தில்லை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தாலும் "நம் குலத்துக்குப் பொருந்துமோ?" என எண்ணி வருந்தி "நாளைப் போவேன்!" எனக் கூறுகிறார். யாரும் அவரைத் தடுக்க வில்லை. அவராகவே தானே தனியாக எடுத்த முடிவு தான். அதைக் குறிக்கும் பாடல்

"அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிய அணை தருதன்மை உறுகுலதோடிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான் ஏவல் எனப்போக்கொழிவார்
நன்றுமெழுங்காதல் மிக நாளைப்போவேன் என்பார்."
-1061-ம் பாடல்

இப்படிச் சொன்னவர் ஒருநாள் தில்லைப் பயணம் மேற்கொண்டார். அங்கே தில்லை வாழ் அந்தணரின் ஒழுக்கத்தாலும், தவ நெறியாலும் கவரப்பட்டு,வேதங்கள் ஓதுகிற மடங்கள் இருப்பதையும் பார்த்து
யோசிக்கிறார் மேலே செல்லலாமா என. அதற்குரிய பாடல்:

"செல்கின்ற போழ்தந்த திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந்தீவளர்த்து பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெருங் கிடையோது மடங்கள் நெருங்கினவுங் கண்டு
அல்குந்தம் குலநினைத்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்." -1063-ம் பாடல்

இவ்வாறு மூவாயிரம் ஆகுதிகள் இருக்கும் வேதிகைகள் நிறைந்த இவ்வூருக்கு உள்ளே நான் போகலாமா என யோசித்தவாறே நகர் வலம் வருகிறார். இரவும் வந்தது. எவ்வாறு நடராஜப் பெருமானின் ஆனந்தக்
கூத்தைக் காண்பது என்ற நினைப்புடனே உறங்கும் நந்தனாரின் கனவில் பிறைசூடிய பெருமான் தோன்றி அருள் செய்கிறார். முக்கண்ணனார் கூறியதாக சேக்கிழார் எழுதுகிறார்:

"இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் என்ன மொழிந்து
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளானார் அருளி அம்பலத்தே மேவினார்." -1068-ம் பாடல்

நந்தனாரைத் தீக்குள் இறங்கிப் புனிதராக மாறி பூநூல் அணிந்த தில்லைவாழ்
அந்தணருடன் நீ கோயிலுக்குள் வருவாயாக எனக் கூறிய இறைவனார்
தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் அவ்வாறே தோன்றி நந்தனார் மூழ்கத்
தீஅமைத்துக் கொடுக்கும்படிக் கட்டளை இடுகிறார். அச்சத்துடன் நந்தனாரைத்
தேடிப் போகும் தில்லைவாழ் அந்தணரைத் தீமூட்டித் தருமாறு நந்தனார் வேண்ட அவர்களும் இறைவனைத் துதித்து அவ்வாறே செய்கிறார்கள். தீயில் மூழ்கிய நந்தனார் புதுப் பிறவி எடுத்தாற்போல் மீண்டு வந்து தில்லை வாழ்
அந்தணர்களுடன் அம்பலத்து ஆடுவானின் சன்னதிக்குச் சென்று இறைவனுடன் ஐக்கியம் ஆகிறார். அதற்குரிய பாடல்கள்;

"செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந்துபி நாதம்
வந்தெழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள்பொழிந்தார்." -1073-ம் பாடல்

திருவுடைய தில்லை வாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அருமறைசூழ் திருமன்றி ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாராம் மறை முனிவர்" -1074-ம் பாடல்

"தில்லைவாழ் அந்த்ணரும் உடன் செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்." -1075-ம் பாடல்

இது தான் பெரியபுராணத்தில் நாம் காணும் நந்தனாரின் சரித்திரம். தவிர, பெரிய புராணத்தில் சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். அவர்களின் தவநெறியைப் பற்றியும், சீலத்தையும், ஒழுக்கத்தையும், சிவனையன்றி சிந்தையில் எவரையும் கொள்ளாத பாங்கையும் போற்றித் தான் பாடி இருக்கிறார். அந்தப் பகுதி நான்
சிதம்பரம் தீட்சிதர் வரலாறு எழுத எண்ணி உள்ளேன். அப்போது விரிவாக
எழுதுகிறேன். இதைத் தவிர தேவாரம் பாடுவதைப் பற்றியும் கேட்டிருந்தார்.
தேவாரம் அங்கே தினமும் பாடப் படுகிறது, குறிப்பிட்ட நேரங்களில் தேவாரம் பாடாமல் ஆரத்தி எடுக்கப் பட மாட்டாது. தவிர மார்கழி மாதம் நடராஜர் திரு உலா வரும்போது தேவாரம் ஓதுவோர் முன் சென்று தேவாரம் ஓதிக் கொண்டு போக, பின்னே நடராஜர் அதைக் கேட்டுக்
கொண்டு போக அவர் பின்னே வேதம் ஓதுவோர் வேதம் ஓதிக் கொண்டு வரும் காட்சியை இன்றும் திருவாதிரைத் திருநாளில் காணலாம்.

பத்திரிகையில் வந்த செய்திகளின் படி தில்லைச் சிதம்பரத்தில் தேவாரம் பாட வந்தவரின் நோக்கம், பாட நினைத்த நேரம், முறை இவைகளைப்
பற்றிய உண்மை தெரிந்திருந்தாலும் அதைப் பற்றிக் குறிப்பிட விரும்பவில்லை.

14 comments:

  1. அம்மணி நல்லாத்தேன் எழுதிக்கிறீக ஆனா நந்தனாரை தீயில் தள்ளி கொன்றுவிட்டு அந்தப் பழி போக்க இப்படி ஒரு கதை உருவாக்கிய தில்லைவாழ் அந்தணர்களையும் அவர்களுக்காக பரிந்து பாடிய சேக்கிழாரையும் ஆதாரம் வைத்து நன்றாகவே கதை விடுகிறீர்கள். இறைவனை தரிசிக்க அந்தணராக இருக்க வேண்டும் அல்லது புனிதராகத்தான் இருக்க வேண்டும் என்ற மனுதர்மத்தை இப்போதும் தூக்கிப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களை என்ன சொல்ல என்றே தெரியவில்லை. தீயில் இருந்து எழுந்து வந்து உடனே இறைவனுடன் ஐக்கியமாகிறாராம். தீயில் தள்ளப்பட்டு செத்துப் போனதை எப்படி நயமாகத் திரிக்கிறீர்கள். தில்லையில் இருந்த நந்தனார் சிலை எப்படி மறைந்தது. எல்லாவற்றையும் வசதியாக மறந்து (மறைத்து) விட்டு கதை விடுகிற சாமர்த்தியம் யாருக்கு வரும்.

    ReplyDelete
  2. @ஆலஞ்சோலை
    @கீரன், இருவருக்கும் நன்றி. உங்களோட கருத்துக்களுக்கு.

    ReplyDelete
  3. அப்புறம் 63 நாயன்மாரில் ஒருத்தராக நந்தனார் சிலையும் இருக்கிறது. எங்கேயும் போகவில்லை.

    ReplyDelete
  4. "இவ்வாறாகப் பல நாட்கள் கழிந்தன. நந்தனார் உள்ளத்து ஒருநாள் காதல் வெள்ளம் கரையின்றிப் பெருகியது. தம் ஊரினின்றும் புறப்பட்டுத் தில்லைச் சிதம்பரத்தின் அருகில் வந்தார். தில்லையின் எல்லையை வலம் வந்து பணிந்து எழுந்தார். வேள்விப்புகையும் வேதவோசையும் மிகுந்த அத்திருத்தில்லைக்குள் நுழைவதற்கு அஞ்சினார்.
    "அந்தோ! புலைக் குலத்திற் பிறந்த எளியேன் எவ்வாறு தில்லைக்குள் சிற்சபையைச் சேவிப்பேன்?" என்று கண்ணீர் வடித்துக் கீழேவிழுந்து புரண்டார். தில்லை நகரை வலம் வந்த வண்ணமாகவே இருந்த அவர், கரையில்லாத காதலுடன், தென்மதில் வாயிலையடைந்ததும் உள்ளே நுழையாது அகங் குழைந்து முகமெல்லாம் கண்ணீரினால் நனைய அழுதார்.
    "அம்பலவாணா! அருட்பெருங் கடலே! தில்லை மேவுந் தேவதேவா! ஞானமூர்த்தி! நாயினேன், உனது மணிமன்றம் வந்து கண்டுகளிக்கும் பேறு பெற்றேனில்லையே! என் செய்வேன்? என்பெருமானே! கருணாநிதி! உம்மைக் காணவும், தூக்கிய திருவடி கண்டு வணங்கவும், ஏழையின் உள்ளம் துடிக்கின்றதே! உம்மைச் சேவிக்கும் பேறு பெறாத என் பிறப்பு மிகவும் இழிந்தது. உன்னைக் காணாது அடியேன் எவ்வாறு வாழ்வேன்?" என்று துதித்துத் தொழுவார்; அழுவார். இவ்வாறு இரவு பகலாகத் தில்லை மாநகரை வலம் வந்து கொண்டிருந்தார்."

    இது வாரியாரின் 'சிவனருட்செல்வர்' எனுநூலில், திருநாளைப்போவார்' வரலாற்றில் வருவது.

    சேக்கிழார், சைவக்குலத்தில் பிறந்து பெரியபுராணம் எழுதிய, சேக்கிழார் தில்லை அந்தணரால் திரித்த ஒரு வரலாற்றை எழுதினார் எனச் சொல்வது நல்ல நகைமுரண்!

    ReplyDelete
  5. உண்மைக்கு இதுகாலமல்ல கீதா மேடம்,

    போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....

    ReplyDelete
  6. வேதா, நந்தனாரைத் தடுத்தது பற்றியப்பல்வேறு கருத்துக்களுக்கு இடமே இல்லை. ஏனெனில் அவர் யாரிடமும் அடிமையாக இருந்தது இல்லை. "நந்தனார்" என்ற ஒரு திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சி அமைக்கப் பட்டிருந்ததாய் முத்தமிழில் ஒருத்தர் எழுதி இருக்கிறார். அதன் தாக்கமாய் இருக்கவேண்டும். மற்றபடி அவர் ஜாதியினால் அவர் ஒதுக்கப் பட்டதாய் எங்கேயும் வரவில்லை. ஆழ்வார்களிலும் சரி, நாயன்மார்களிலும் சரி எல்லாருமே கலந்து தான் இருக்கிறார்கள். எல்லாரையுமே போற்றும்போது ஜாதி எங்கிருந்து வந்தது?

    @மதுரையம்பதி, இன்னிக்குத் தான் காணவில்லை விளம்பரம் கொடுக்க நினைச்சேன். :D வந்துட்டீங்க.
    உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. எஸ்.கே.சார், உங்களோட நீண்ட விளக்கத்துக்கும் நன்றிகள் பல. திருவருட்செல்வர் புத்தகம் படித்திருக்கிறேன். இருந்தாலும் பெரிய புராணத்திலேயே இருப்பதை எழுதலாம் என்று எழுதினேன்.

    ReplyDelete
  8. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    சனிக்கிழமைதான் பத்மா சுப்ரமண்யத்தின் நடன நிகழ்ச்சியில் வேதியர் பற்றி பெரியபுராணத்தில் இல்லை என்றூ கேள்விப்பட்டேன்.

    எங்கே சென்று தேடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சிவசித்தம் உங்களையே பதிவு போட வைத்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  9. /அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.//

    பெரிய புராண புத்தகத்தை வாங்கிய பிறகு, அதை நான் இங்கே வரும் வரை திறந்து பார்க்கவே இல்லை. உங்க புண்ணியத்துல வாவது படிக்கிறேன்.. போடுங்க மேடம்!

    ReplyDelete
  10. //1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே //


    //-1061-ம் பாடல்//

    அட அட அட! எங்க எங்க இருந்தோ இப்படி எல்லாம் ஆதாரத்தை அள்ளி வைக்கிறீங்களே மேடம்!

    தமிழை ரொம்ப நாளுக்கு பிறகு சுவைத்தது போன்று இருந்தது உங்கள் பதிவு மேடம்!

    ReplyDelete
  11. ராமநாதன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையில் முத்தமிழில் நடந்த ஒரு விவாதத்துக்கான பதிலே இது. அதையே இதிலும் போட்டேன்.

    ReplyDelete
  12. கார்த்திக், நான் எழுதியது எல்லாம் சேக்கிழார் சொன்னது தான். என்னோட தமிழ் இல்லை. :D
    அப்புறம் பெரிய புராணம் உரையோடு தானே வாங்கினீங்க? இன்னுமா படிக்கலை? சீக்கிரமாப் படிங்க. தினமும் ஒரு பக்கம்னு படிச்சாக் கூடப் போதும்.

    ReplyDelete
  13. கீதா,

    பெரியபுராணம் மூலத்தைத் தேடிச் சென்று பாடல்களைப் படித்து இது பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள். சில விஷயங்கள் -

    1) இந்த "ஆண்டை" என்கிற நந்தனாரைத் தடுத்த வேதியர் பாத்திரம், 18-ஆம் நூற்றாண்டில் நந்தன் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியின் கற்பனையில் உருவானது தான். தன் காலத்து சமூக மதிப்பீடுகளை வைத்து பழைய கதை ஒன்றைச் சொல்லும் போக்கு தான் இது. மேலும் வேதியர் தடுக்கும் இந்த விஷயம் கோ.கி.பாரதி எழுதிய நாடகத்திற்கு மெத்தவும் தேவைப்படும் dramatic effect தருவதாக இருந்ததால் அதிகம் பிரபலமாகி விட்டது. மக்களுக்கு மூலக் கதையே மறக்கும் அளவுக்கு!

    2) சேக்கிழார் நந்தனார் பிறந்த குலம் பற்றி இழிவாக எங்குமே எழுதவில்லை. சொல்லப் போனால், ஒரு வேதியர் வீதியை வர்ணிக்கும் அதே பக்தி உணர்வோடு தான் புலைப்பாடியையும் வர்ணிக்கிறார், கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேடுவர் வாழ்க்கையை வர்ணிக்கும்போதும் அதே பக்தி பாவம் தான்! இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் தொடக்கத்தில் "சூத்திர நற்குலம்" என்றே பாடுகிறார். அவர் ஒரு மகாகவி, மகாஞானி என்பதை இது தெளிவாக்குகிறது.

    3) மேலும், சிவனுடன் ஐக்கியமானார் என்று சொல்லும்போது உண்மையிலேயே அவர்கள் உடலுடன் முக்தியடைந்தார்களா அல்லது உடல் மரணமடைந்ததா என்பதெல்லாம் பற்றி பல ஊகங்கள் இருக்க சாத்தியம் உள்ளது. நந்தனார் புராணத்தில் "யாவரும் கண்டிலர்" என்பதால் உடல் கண்களில் இருந்து மறைந்தது என்பது புலனாகிறது.

    சொல்லப் போனால் எல்லா நாயன்மார் புராணங்களிலும் இறுதியில் அவர் சிவனுடன் ஐக்கியமானார் என்பதாகவே முடிவு வருகிறது! சிறுத்தொண்டர் புராணத்தில் ".. என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டேகினார்" என்று வருகிறது. இயற்பகை நயனார், இளையான்குடி மாற நாயனார் எல்லாப் புராணங்களிலும் இறுதியில் இப்படித் தான் வரும். இதற்கு என்ன பொருள்?

    சிவனுக்குத் தொண்டு செய்தவர்கள், சிவதரிசனம் பெற்றவர்கள் எல்லாரும் உடனே மரணமடைந்து விட்டார்கள் என்று பொருளா? பிறவியிலிருந்து விடுபடுதல் என்பது சும்மா அகாலத்தில் மரணமடைதல் அல்ல!

    சிவனோடு ஐக்கியம் அடைதல் என்றால் சிவனோடு வாழ்தல்.
    இதை ஆன்மிக நோக்கில் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பாரருங்கள்.. சிவனருளால் தெளிவு ஏற்படும்!

    ReplyDelete
  14. எனக்குச் சந்தேகமே இல்லை திரு ஜடாயு அவர்களே! உண்மையில் சந்தேகம் திரு கீரனுக்கும், ஆலஞ்சோலை போன்றவர்களுக்கும் தான். உங்களைப் போல் எளிதில் விளக்கி இருப்பேன். ஆனால் முன்னர் ஒருமுறை ஞானசம்மந்தர் பற்றிக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவில் வந்து பேசாமல் இருக்கிறேன். உங்களோட ஆழமான கருத்துக்களுக்கு ரொம்பவே நன்றி.

    ReplyDelete