எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 18, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 12, கம்சனின் கலக்கம்

நந்தன் வசுதேவரையும், தேவகியையும் பார்க்க அவர்கள் சிறை வைக்கப் பட்டிருந்த மாளிகைக்குச் செல்லுகின்றான். அவனுடன் கூடவே அக்ரூரரும், கர்காசாரியாரும், செல்லுகின்றனர். அங்கே வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியும் இருக்கின்றாள் அவர்களுடன். ரோகிணியின் முகத்தில் ஒரு தெளிவான தீர்மானமும்,உறுதியும் பளிச்சிடுகின்றது. ஏதோ ஒரு திட்டமான முடிவில் இருக்கின்றாள் என்பது புலனாயிற்று. நிறை கர்ப்பிணியாக இருக்கும் ரோகிணியையும், தேவகியையும் பார்க்கப் பார்க்க அவர்கள் இருவரின் நிலையை நினைந்து அனைவர் மனதிலும் பெரும் துக்கம் சூழ்ந்தது. சிறிது நேரம் அனைவரும் கம்சன் பிடியில் இருந்து இந்தக் குழந்தையைத் தப்புவிக்க என்ன வழி என யோசித்து, யோசித்துக் குழம்பிப் போனார்கள். இதுவும் கம்சன் பிடியில் அகப்பட்டுச் சாவது ஒன்றுதான் அதன் விதியா என நினைந்து தேவகி மனம் தாளாமல் அழத் துவங்க, ரோகிணி பேசத் துவங்கினாள். மெல்ல, மெல்ல அவள் பேசப் பேச அனைவரும் உற்றுக் கேட்டனர். அவள் தான் தீர்மானம் செய்துவிட்டதாயும், யாரும் தன்னைத் தடுக்க வேண்டாம் எனவும் சொல்லுகின்றாள். அனைவரும் அவளை மிகுந்த மரியாதையுடனும், மனதில் அவள் பால் கொண்ட பெருமையுடனும் பார்க்கின்றனர். கண்கள் கண்ணீரை மழையென வர்ஷிக்க ரோகிணி, பேசி முடிக்கின்றாள்.

மறுநாள் கோகுலம் திரும்பும் நந்தனோடு ரோகிணியும் திரும்பச் செல்கின்றாள். ஆனால் நந்தனுடன் கூட வந்த பணியாட்களில் சிலரும், அவனுடன் கூட வந்த வண்டிகளில் சிலவும் கோகுலம் செல்லும் வழியில் குறிப்பிட்ட இடங்களில் நின்று கொள்கின்றன. நந்தன் பிரயாணம் செய்த வண்டி மட்டும், ரோகிணியையும் அழைத்துக் கொண்டு கோகுலம் சென்றடைகின்றது. இங்கே கம்சன் மாளிகையில் இரவு தூங்கும்போது பயங்கரக் கனவு கண்டு விழிக்கின்றான். கனவா? நனவா? அவனால் தெளிவாய்ச் சொல்ல முடியாமல் மனக் குழப்பம் சூழ்கின்றது அவனை. தேவகி பிரசவித்திருக்கும் அறையினுள் கம்சன் தன் வாளைத் தூக்கிக் கொண்டு செல்கின்றான். இரு ஆண் குழந்தைகளை அங்கே அவன் காண்கின்றான். அதோ! அந்த நீலமேகம் போல் பிரகாசிப்பவன் தான் எட்டாவது குழந்தையா?? அடடா? என்ன அழகு? என்ன ஜ்வலிப்பு? தக தகவென நீலத் தாமரை போல அல்லவா இருக்கின்றான்? நீலமா? கருமையா? புரியாத ஒரு பள பளப்பு! பார்க்கும்போதே குழந்தை வளர்ந்து பெரியவன் ஆகிவிடுகின்றான். இது என்ன? இவன் தலையில் ஒரு அழகான கிரீடம்? இதோ சங்கு, சக்கரம்?? கம்சன அனைத்தையும் பார்த்துப் பிரமித்த வண்ணம் நிற்க அந்தப் பையன் தன் கையில் இருந்த சக்கரத்தைக் கம்சன் மீது ஏவ, சக்கரம் பறந்து வந்து கம்சன் தலையை இரு துண்டாக்கியதை அவனே தன் கண்ணால் பார்க்கவும் நேர்ந்தது. ஆனால் அந்தப் பையனோ?? சிரித்துக் கொண்டல்லவா இருக்கின்றான்? இங்கே மாமன் தலை ரத்த வெள்ளத்தில் மிதக்க அங்கே அந்தப் பையன் சிரிப்பு??? யார் இவன்???

கம்சன் குழப்பத்தோடு ஒரு முடிவுக்கும் வந்தான் தன் அந்தரங்கத் தளபதியான ப்ரத்யோதாவின் மனைவியான பூதனையைக் கூப்பிட்டு அனுப்பினான். அவனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்த பூதனையிடம் அவன் தன்னுடைய கனவைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவளை தேவகியிடம் அனுப்பி தேவகிக்கு எப்போது பிரசவம் நடக்கும் என்பதைக் கண்டறிந்து வரச் சொன்னான். பூதனையே தேவகியைக் காவலும் காத்து வருவதால் பிரச்னை ஒன்றுமில்லாமல் பூதனை தேவகியையும், மற்றவர்களையும் விசாரித்து அறிந்து தேவகிக்குப் பிரசவம் நடக்கக் குறைந்த பட்சம் முப்பது நாட்களாவது ஆகலாம் எனக் கண்டறிகின்றாள். அதைக் கம்சனிடம் சொல்ல அவனும் நிம்மதி அடைகின்றான். நாட்கள் நகர்கின்றன.

1 comment:

  1. ம்? அப்புறம்? ரோகிணி பற்றியும் அவ்வளவாத் தெரியாது.

    ReplyDelete