எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 13, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 7 அக்ரூரர்

எல்லாரும் மாயை பற்றியும், பிரம்மம் பற்றியும், கீதை பற்றியும், தத்துவங்களாய் எழுத நான் மட்டும் கதை எழுதுவது பற்றிச் சிலர் கேட்கின்றனர். இது தான் ஆன்மீகமா என்றும் சிலருக்குச் சந்தேகம். இது ஆன்மீகம் இல்லைதான். நானும் ஆன்மீகம் எழுதறேன்னு சொல்லிக்கவும் இல்லை, சொல்லவும் முடியாது. பக்திக் கதைகளே இவை. ஆரம்ப நிலையில் இருக்கிறவங்களுக்கும், அதைத் தாண்டினவங்களுக்கும், இன்னும் சொல்லப் போனால் வேதாந்திகளுக்கும் அனைவருக்குமே எளிமையாகப் புரியக் கூடியது இது ஒன்றே. பலராலும் திரும்பத் திரும்பச் சொல்லப் படுவதும் இந்த இதிகாசப் புராணக் கதைகளே. ஏனெனில் அவற்றின் தாக்கம் நம்மிடையே ஏற்படுத்தும் விளைவுகள். அரிச்சந்திர புராணத்தால் ஒரு காந்தி மாறினாற்போல் இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலமும், கேட்பதன் மூலமும் நம்மில் பலருக்கும் இறை தத்துவத்தின் உண்மையும், எளிமையும், ஆழமும் புரியவரும். பலருக்கும் புரிய வேண்டும் என்பதாலேயே தமிழையும் எளிமைப் படுத்தியே எழுதணும்னு விருப்பம். திரும்பத் திரும்பப் படிச்சால் கண்ணன் அவதாரத்தின் தத்துவம் முழுமையாய்ப் புரியும். தர்மத்தை நிலை நாட்ட அவன் பட்ட பாடு புரியும். நாமும் அதர்மத்தின் வழி செல்லாமல் இருக்கும் மன உறுதியையும் பெறுவோம். நாம் செய்த, செய்யும், செய்யப் போகும் அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்யும் திடமும் பெறுவோம். அதன் பலாபலன்களையும் எண்ணாமல் இருப்போம். எல்லாம் அவன் செயல். இனி அடுத்த பகுதி:-
*************************************************************************************

யாதவ சமூகத்தின் ஒரு பிரிவான வ்ருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஆன அக்ரூரர் எப்போதும், தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல், தனக்கென விதிக்கப் பட்ட கர்மாக்களை முறையாகச் செய்து வருபவர். அதனாலேயே அனைத்து யாதவ குலத் தலைவர்களால் கூடப் பெரிதும் மதிக்கப் படுபவர். அவர் ஒரு கருத்துச் சொன்னால் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அனைவரும் அவருக்குக் கட்டுப் படுவார்கள். ஆகவே இப்போது தேவகிக்குக் குழந்தை பிறந்திருக்கும் விஷயம் தெரிந்து அனைத்து யாதவ சமூகத் தலைவர்களும் அக்ரூரரைத் தேடி வந்தனர். அவரிடம் தேவகியையும், ஒன்றுமறியா அந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் காப்பாற்ற வேண்டிப் பிரார்த்தித்தனர். அக்ரூரரும் ஒத்துக் கொண்டு, தன்னுடன் யாதவத் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு கம்சனைப் பார்க்க அவன் மாளிகைக்கு வந்தார். அப்போது தனக்குப் பிறந்த பச்சிளம் குழந்தையோடு வசுதேவரும் கம்சனைக் கண்டு அந்தக் குழந்தையை ஒப்படைக்க வந்தார். தான் சொன்ன சொல் தவறாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்ட பிறகாவது கம்சன் மனம் இளகுமோ என்ற எண்ணம் வசுதேவருக்கு.

அக்ரூரரும் கம்சனை வேண்டுகின்றார். மன்னன் என்பவன் சாட்சாத் அந்த மகாவிஷ்ணுவுக்கு ஒப்பானவன். குடிமக்களைக் காக்கவேண்டிய கடமை உண்டு அவனுக்கு. இங்கேயே உனக்கு நானும், தேவகியும் சொந்தமும் கூட, ஆகவே எங்களையும் இந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் விட்டுவிடு." என்று பலவாறாய் வேண்டுகின்றார் வசுதேவர். அக்ரூரரும் வேண்டுகின்றார். பலவிதங்களில் அவனுக்கு எடுத்து உரைக்கின்றார். ஆனால் கம்சனோ முரட்டுத் தனமாய் அந்தக் குழந்தையை வசுதேவரின் கைகளில் இருந்து பிடுங்கித் தரையில் ஓங்கி அடிக்கின்றான் தன் கைகளாலேயே. குழந்தை, குழந்தை....... :((((( பெண்கள் ஓவென்று மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலற, மனோதைரியம் மிக்க ஆண்கள் பலருமே திகைத்துச் செய்வதறியாது திகைக்க, சிலர் கம்சனின் தந்தையான உக்ரசேனரிடம் சென்று தகவலைச் சொல்ல, அவரும் கம்சனைக் கண்டு அவனுக்குப் புத்தி புகட்டவேண்டும் என்று ஓடி வருகின்றார். கம்சன் அவரைத் தன் மாளிகையில் சந்திக்கின்றான். என்ன நடந்தது என யாருக்குமே புரியவில்லை. ஆனால் அதன் பின்னர் உக்ரசேனரைக் கண்டவர் எவரும் இல்லை.

கம்சனின் மாளிகையிலேயே சிறை வைக்கப் பட்ட உக்ரசேனரை அவரின் அந்தரங்க மெய்க்காப்பாளர்கள் தவிர, அவரின் மனைவியர் மட்டுமே பார்க்க முடிந்தது. அக்ரூரர் வசுதேவர், தேவகியோடு சேர்த்து அதே மாளிகையில் சிறை வைக்கப் பட்டார். அக்ரூரரின் மாளிகையும், அவரை ஆதரித்து அவருடன் கூட வந்தவர்களின் வீடுகளும், மாளிகைகளும் கம்சனின் ஆட்களால் எரிக்கப் பட்டது. மதுரா நகரம் முழுதும் இதே பேச்சாய் இருந்தது. வீரம் செறிந்த ஆண்கள் கூட இத்தகைய கொடூரத்தை எதிர்கொள்ள வழி தெரியாமல் தங்களைத் தாங்களே வீட்டில் அடைத்துக் கொண்டனர். அக்ரூரர் அழுது கொண்டிருக்கும் தேவகியையும், அவளையும் தேற்ற முடியாமல், தானும் துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் வசுதேவரையும் தேற்றுகின்றார். "பொறுமையாய் இரு வசுதேவா, நகரத்தில் நான் இருந்தபோது இன்னும் சில நாட்களில் இங்கு ஆசாரியர் கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர் இந்திரப் பிரஸ்தம் செல்லும் வழியில் இங்கு வரப் போவதாய்த் தெரிகின்றது. அவர் வந்து உங்களைக் காண விரும்பினால் கம்சனால் அதைத் தடுக்க இயலாது. ஆசாரியரை அவன் விரோதித்துக் கொள்ள விரும்ப மாட்டான். ஆசாரியர் ஏதேனும் வழிகாட்டுவார்." என்று ஆறுதல் கூறுகின்றார்.

இங்கே கம்சனோ செய்வதறியாது விழிக்கின்றான். ஒரு பக்கம் ஆசாரியர் வியாசரின் வருகை பற்றிய செய்தி, மற்றொரு பக்கம் அஸ்தினாபுரத்தில் இருந்து பிதாமகர் என அனைவராலும் அழைக்கப் படும் பீஷ்மர் நடந்திருக்கும் விஷயம் எதையும் அறியாதவர் போல, வசுதேவரையும், தேவகியையும் அஸ்தினாபுரத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். இதில் என்ன உள் நோக்கம் எனப் புரியவில்லை. ஆனால் வலிமையும், பலமும், செல்வமும், தவத்தினால் விளைந்த மனோபலமும், பரசுராமரின் சீடரும் ஆன பீஷ்ம பிதாமகரைப் பகைக்க முடியாது. அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் நேரடியாக அவர் உட்கார்ந்து ஆட்சி புரியவில்லை என்றாலும் அவரின் செல்வாக்கு பிரபலம் ஆனது. அக்ரூரரும் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே. ஆகவே அவரைச் சிறையில் இருந்து தாற்காலிகமாயாவது விடுதலை செய்து விடவேண்டும், என எண்ணிய கம்சன் அக்ரூரை மட்டும் விடுவித்தான்.

அக்ரூரர் சிறையில் இருந்து வந்ததும் முதல் வேலையாகத் தன் குடும்பத்தை யமுனைக்கு அக்கரையில் உள்ள கோகுலத்துக்கு அனுப்பி வைத்தார். தான் மட்டும் மதுரா நகரில் தங்கிக் கொண்டு, முடிந்தவரையில் வீடு, வீடாய்ச் சென்று கம்சனுக்கு எதிராய் ஆட்களைத் திரட்டும் வேலையை ரகசியமாய்ச் செய்யத் தொடங்கினார். கம்சனோ வசுதேவரை பீஷ்மர் அழைத்திருப்பதை எண்ணிக் கலங்கி அக்ரூரரிடம் யோசனை கேட்கின்றான். இதில் ஏதோ சூது இருப்பதாயும், வசுதேவரைத் தான் அனுப்பப் போவதில்லை எனவும் கூறுகின்றான். அதே சமயம் அஸ்தினாபுரத்துக் குருவம்சத்தாரைப் பகைத்துக் கொள்ளவும் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அக்ரூரர் ஏளனச் சிரிப்போடு உண்மையைச் சொல்லும்படி கம்சனிடம் சொல்ல கம்சனுக்கு ஆத்திரம் எல்லை கடக்கின்றது.

வசுதேவர் தானாகவே அஸ்தினாபுரம் செல்லுவதில் இருந்து மறுக்கவேண்டும் என அவன் எண்ணுகின்றான். அதை அக்ரூரரிடம் கூறவும் செய்கின்றான். தேவகியைத் தன்னந்தனியே விட்டுச் செல்ல வசுதேவர் சம்மதிக்க மாட்டார் என்பதால், தேவகியின் தந்தையும் கம்சனின் சித்தப்பாவும் ஆன தேவகனை அனுப்பலாமா அல்லது அக்ரூரரே சென்று வரட்டுமா என அவன் குழம்ப, அக்ரூரர் வேத வியாசர் வரட்டும் அவர் நீ சொல்லுவதை ஒத்துக் கொண்டால் நான் செல்கின்றேன் எனக் கூற "என்னிடம் இருந்து நீர் தப்ப நினைத்தால் அது முடியாது அக்ரூரரே!" என்று கம்சன் உரத்த குரலில் கூவிவிட்டுச் சிரிக்கின்றான். "என்னை நீ கொல்ல வேண்டும் என நினைத்தாலும் எனக்கு உன் கையால் தான் இறப்பு என்றால் ஒழிய நான் சாகமாட்டேன் இளவரசே! முனிவர் வரட்டும்!" என்கின்றார் அக்ரூரர். வியாசரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் கம்சன் வேட்டைக்குச் செல்லப் போவதாய்க் கூறிவிட்டுச் செல்கின்றான்.

மறுநாள் வியாசர் வருகின்றார். வசுதேவரையும், தேவகியையும் பார்க்க மாளிகைக்கு வருகின்றார்.

3 comments:

  1. இந்தக் கதையெல்லாம் எனக்கு இதுவரை தெரியாது :) நன்றி அம்மா.

    ReplyDelete
  2. // நான் மட்டும் கதை எழுதுவது பற்றிச் சிலர் கேட்கின்றனர். இது தான் ஆன்மீகமா என்றும் சிலருக்குச் சந்தேகம்.//

    இதுதான் ஆன்மீகம்ன்னு இல்லை. இதுவௌம் ஆன்மீகம்தான். அதில் என்ன சந்தேகம்?

    // இது ஆன்மீகம் இல்லைதான்.//

    கடுமையாக ஆட்சேபிக்கிறேன். :)

    // நானும் ஆன்மீகம் எழுதறேன்னு சொல்லிக்கவும் இல்லை,//

    நீங்க சொல்லாட்டா? அது ஆன்மீகம் இல்லாம போயிடுமா? அது ஆன்மீகம்ன்னு மத்தவங்க சொல்லறாங்களே!
    :-)

    ReplyDelete
  3. @கவிநயா, ரொம்ப சந்தோஷமா இருக்கு நிஜமாவே, பலருக்கும் தெரியாததை எழுதணும் என்றே என்னுடைய எண்ணம். அது போல் நீங்களும் சொல்லி இருப்பதில் சந்தோஷமாவே இருக்கு,

    @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete