எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 27, 2012

சுழிக்காற்றா? சுழல்காற்றா? 2

ராஜஸ்தானிலே சிறிய சுழல் காற்று என்ன? பெரிதாகவே வரும். அதுவும் கோடைக் காலத்தில் தான் வரும். ஆந்தி என்று சொல்வார்கள். மணல் வாரித் தூற்றும். ஒரு முறை நசிராபாத் ராணுவக் குடியிருப்புக்கு மாற்றலில் அப்போது தான் வந்தோம். அதற்கு முன்னர் இருந்திருந்தாலும் எங்க பையரும், பெண்ணும் விபரம் தெரிந்து அப்போது தான் வருகிறார்கள். ஒரு வாரம் கூட இருக்காது. இங்கே மாதிரி அங்கே அறிவிப்பெல்லாம் வராது. விண்ணைப் பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம். அது போல் அன்று காலையிலிருந்தே ஆகாயத்தில் ஆந்தி வரக்கூடிய சூழ்நிலை தெரிந்தது. இங்கே மாதிரி அங்கே வந்துவிட்டு உடனே எல்லாம் போகாது. ஒருமணி நேரமாவது ஆகும். எப்போ வருமோ எனத் தெரியாமல் இதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். எங்க பையர் அப்போது ரொம்ப போரடிக்குது; அதனால் கடைத்தெருவுக்குப் போய்க் கதைப்புத்தகம் வாங்கி வரேன்னு கிளம்பினார். வேண்டாம்னு நான் தடுத்தும் கேட்கவில்லை; என் கணவருக்கோ இப்படிக் குழந்தைகளை பயமுறுத்தக் கூடாது; எல்லாச் சூழ்நிலைக்கும் பழகணும்னு சொல்வார். ஆகவே அப்பாவோட அனுமதியோடக் கிளம்பியாச்சு.

கடைத்தெருவுக்கு அரைமணி நேர நடை தான் இருக்கும். பையர் சைகிளில் சென்றிருந்தார். சென்று பத்து நிமிஷம் தான் இருக்கும். ஆந்தி ஆரம்பித்துவிட்டது. மாலை நேரம். அங்கெல்லாம் மாலை எட்டுமணி வரை சூரியனார் மறைய மாட்டார். அப்போதோ மாலை நான்கிலிருந்து ஐந்து மணிக்குள்ளாகத் தான். பார்த்தால் மதியம் இரண்டு மணி போல் தோன்றும். செக்கச் சிவந்த வானிலிருந்து மேகங்கள் சூழ்ந்து கொண்டு சூரியனை மறைக்கச் சிவந்த நிறம் சூரியக் கதிர்களின்வழியே பூமியில் பிரதிபலிக்கக் காற்றுச் சுழன்று கொண்டு மணலை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தது. ரத்தம் போல் சிவந்த நிற மணலும் வாரிக் கொட்டிக் கொண்டிருந்தது. இப்போது இந்த ரசனையெல்லாம் தோன்றுகிறதே தவிர அப்போது என்ன தான் ஏற்கெனவே பழக்கமிருந்தாலும் மனதில் கலக்கமாகவே இருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே கும்மிருட்டு. அதிர்ந்து போனோம். மின்சாரம் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டு மின் விளக்கைப் போட்டோம். மின்விளக்கு எரியவில்லைதான்; மின்சாரத்தை நிறுத்தி இருந்தார்கள். ஆனால் இவ்வளவு இருட்டு எங்கே இருந்து வந்தது? அதுவும் மாலை நான்கு, ஐந்து மணிக்கு? என் கணவர் எங்கே இருக்கார்னே எனக்குத் தெரியலை. கண்ணுக்குத் தான் ஏதோ ஆச்சுனு கத்திட்டேன். அவரோ எனக்கும் அப்படித்தான் இருக்கு; நீ எங்கே இருக்கேனு தெரியலைனு சொல்ல, எங்க பொண்ணும் அதை ஆமோதித்தாள். உடனே போய் விளக்கை ஏத்துவோம்னு நினைச்சு சாமி அலமாரியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தால் போகும் வழி தெரியவில்லை. சுவற்றில் முட்டிக் கொண்டேன். முட்டிக்கொண்ட சப்தம் கேட்டு என் கணவர் என்னனு கேட்க வழி தெரியலைனு நான் சொல்ல; அப்போத் தான் எல்லாருக்கும் உறைத்தது. ஆஹா, பையர் கடைத்தெருவிலே மாட்டிக்கொண்டிருக்காரேனு. பொண்ணு, "என் தம்பி"னு கத்த, "ஆஹா," னு கணவர் சொல்ல, "அடடா, அவனுக்கு வழி தெரியுமா? இங்கே பேசற ஹிந்தியைப் புரிஞ்சுப்பானா?"னு எனக்கு ஒரே கவலை. ஹிந்தி நல்லாப் பழக்கம்னாலும் ராஜஸ்தானின் வட்டார வழக்குப் புரியுமானு சந்தேகம்.

எல்லாத்துக்கும் வெளிச்சம் இருந்தால் தான். ஒருத்தர் கையை ஒருத்தர் கெட்டியாப் பிடிச்சுண்டோம். தட்டுத் தடுமாறிப் பெண்ணும், கணவரும் குரலை வைத்து நான் இருக்கும் திசைக்கு வந்திருந்தனர். அப்படியே ஒவ்வொருத்தரா நகர்ந்தோம். கிட்டத்தட்ட சாமி அலமாரி வந்தாச்சுனு தோணினதும் தீப்பெட்டியைத் தேடினேன்; துளாவினேன்; சிறிது நேரத்தில் கிடைத்தது. தீக்குச்சியைக் கிழித்தேன்; எரிந்த வாசனை என்னமோ வந்தது. ஆனால் வெளிச்சமே தெரியலை. யாருக்குமே தெரியலை. ஒண்ணும் புரியாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. ஒரு யுகம் என்று தோன்றிய அரை மணிக்குப் பின்னர் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. மாலை மயங்கி அந்தியும், சந்தியும் கூடுமே; அது போலவா? அல்லது கருக்கிருட்டா? சொல்லத் தெரியலை. ஆனால் உள்ளங்கை தெரியுமளவுக்குத் தான் வெளிச்சம். அந்த வெளிச்சத்திலேயே என் கணவர் மெல்லப் பக்கத்துக் குடியிருப்புக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அங்கிருந்த அலுவலக நண்பரை அழைத்துக்கொண்டார். அப்போது என் கணவரிடம் வண்டி இல்லை; நண்பரிடம் வண்டி இருந்தது. ஆகவே இருவரும் வண்டியில் சென்றனர்.

செல்லும் வழி நெடுஞ்சாலை. ஆகவே வழியெல்லாம் வாகனப்போக்குவரத்து நின்றிருந்தது. திரும்ப நல்ல வெளிச்சம் வந்தால் தான் வாகனப் போக்குவரத்து ஆரம்பிக்கும். நல்லவேளையாகக் காவல்துறை பொறுப்பை எடுத்திருந்தது. இவர்களை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, இவர்களும் சொல்லி இருக்கிறார்கள். உடனே போக அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டாம் எனவும், கனரக வாகனங்கள் இருக்கும் என்பதால் குறைந்த வெளிச்சத்தில் சரியாய்த் தெரியாது என்பதால் பக்கத்திலுள்ள இன்னொரு உபசாலை மூலம் செல்லுமாறும் கூறி இருக்கிறார்கள். எங்கள் குடியிருப்பிலிருந்து நடந்தே போகக் குறுக்கு வழி உண்டு. இந்தச் சாலை அங்கே சென்று முடியும். குறுக்கு வழியில் இந்த இருட்டில் வண்டி செல்ல முடியாது என்பதாலேயே இவங்க நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவங்க அங்கே போகையிலேயே எதிரே உள்ளூர்க்காரர் ஒருத்தரோடு எங்க பையர் வருவதைப் பார்த்துவிட்டார்கள். பையர் கடைத்தெருவுக்குப் புத்தகக் கடையில் இருக்கையிலேயே ஆந்தி ஆரம்பித்து இருக்கிறது. கடைக்காரர் பையர் புதுசு எனப் புரிந்து கொண்டு அப்போது போகாதே எனத் தடுத்து நிறுத்திவிட்டுக் கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் கடைப்பையரைக் கூட அனுப்பிக் குடியிருப்பு வரை கொண்டு விடச் சொல்லி இருந்திருக்கிறார். இவங்க வழியிலேயே பார்த்துட்டாங்க.

அலுவலக நண்பரோடு பையர் வண்டியிலே வந்து சேர, என் கணவர் பின்னால் நடந்து வந்தார். அதுக்கப்புறமாப் பல ஆந்திகளைப் பார்த்தாச்சு. ஆனால் இந்தக் காலி ஆந்தி அங்கு இருக்கும்வரையிலும் அதன் பின்னர் வரவே இல்லை. மறுநாள் செய்தித் தாள்களில் அறுபது வருடத்திற்குப் பின்னர் அந்த வருடம் காலி ஆந்தி வந்ததாய்ப் போட்டிருந்தார்கள்.

24 comments:

  1. காலி ஆந்தி வரத்துக்கு முன்னாடி ப்யூட்டி:சூரியனும் வானத்து நிறமும் எத்தனை அழகு . ! அப்புறம் , வரச்சே லூட்டிதான் !! போனப்பறமோ லூட்டியோ லூட்டி!ஆனா கொளுத்தற வெய்யில் குளிர்ந்து கொஞ்சம் அடங்கி ஒரு ஓzoன் வாஸனை !! இப்ப அப்படி ஆந்தி வரதான்னு தெரியல்ல? துடைத்து பெருக்கித்தான் மாளாது, மூக்கு கண் வாய் எல்லாம் மண்தான் .கால் கீழ வைக்கமுடியாம நர நரன்னு .அந்த பொடி மண்ணு ஞ்யாபகம் இப்ப ஏர்த்க்வேக் ஸில்ட் பாத்து வந்தது.

    ReplyDelete
  2. ஆந்தி பத்தி எனக்கும் அனுபவம் உண்டு மத்ய பிரதேசத்தில் 5- வருஷம் இருந்தப்போ ஆந்தில மாட்டிண்டு இருக்கோம் உங்க பதிவு படிக்கும் போது அதுதான் நினைவில் வந்தது.

    ReplyDelete
  3. காலி ஆந்தி என்றால் கறுப்புப் புயலா....திகிலான அனுபவம்தான். கண் ஏன் அபபடி தெரியாமல் போனது என்று (தீக்குச்சி கிழித்த வெளிச்சம் கூடத் தெரியாமல்) சொல்லவில்லையே...ஆந்தி 'இஸ மோடுஸே ஜாத்தே ஹை' என்று போய் விட்டதாக்கும்!

    ReplyDelete
  4. அப்பா!! பயங்கரமான அனுபவம் மாமி.

    ReplyDelete
  5. வாங்க ஜெயஶ்ரீ, ப்ளாகர் அனுமதி கொடுத்துவிட்டதா? ஆமாம், மணலை வாரிப் பெருக்கிச் சுத்தம் செய்வது தான் பெரிய வேலை. நாங்க ரெண்டு பேருமா முகத்தில் மாஸ்க் போல துணியைக் கட்டிக்கொண்டு பெருக்கித் தள்ளுவோம்.

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, மத்தியப் பிரதேசத்தில் வருவதை விட இங்கே ராஜஸ்தான் பாலைவனம் அருகே என்பதால் வேகமும், அதன் தாக்கமும் மிகுதி.

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் சுலபமாப் போகலையே, அதன் சுவடுகளை விட்டுட்டுத் தான் போச்சு.

    கண் தெரியாமல் போனதுக்கு என்ன காரணம்னு புரியலை. இருட்டு, அதீத இருட்டு பழகக் கஷ்டமா இருந்திருக்குனு நினைக்கிறேன். சுத்தமாய் சூரிய ஒளியை மறைச்சிருக்கு. காற்று மேகங்களை நகர்த்த ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் வந்திருக்கணும். அதுவரை மணலும், மேகமும் குடை போல், (கோவர்த்தனத்தைக் கண்ணன் குடையாய்ப் பிடித்தது உண்மையாய்த் தான் இருக்கணும் என்பதையும் அப்போப் புரிந்து கொண்டோம்.) கவிந்து கொண்டது.

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, இதைவிட பயங்கரமான அனுபவங்களெல்லாம் ஸ்டாக் இருக்காக்கும். நவ பிருந்தாவனில் படகில் செல்கையில் துங்கபத்ரா நதியில் முதலை மடுவில் மாட்டிக்கொண்டோம். கைலை யாத்திரையில் திரும்பி வருகையில் வண்டி டயர் உருண்டு ஒருபக்கம் போக, வண்டி ஒரு பக்கம் போக....... ஹிஹிஹி, த்ரில்லிங்காக நிறைய இருக்கு.

    ReplyDelete
  9. சுவாரசியமா இருக்கு என்றாலும் அப்ப திடுக்னு இருந்திருக்கும் - நல்லா எழுதியிருக்கீங்க.
    //இப்போது இந்த ரசனையெல்லாம் தோன்றுகிறதே தவிர// நல்ல டச்!

    ReplyDelete
  10. //காலையிலிருந்தே ஆகாயத்தில் ஆந்தி வரக்கூடிய சூழ்நிலை தெரிந்தது. //

    :))))

    ReplyDelete
  11. ஆந்தி, காலி ஆந்தி, உங்க Narration எல்லாமே ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன.. மண்புயல், ஆந்தி, சூறாவளி, இங்கே (இப்போ இங்கே தான்) டொர்னாடோ என்று ஒன்றே எத்தனை எத்தனை சொரூபம் எடுத்திருக்கு பாருங்க!

    ReplyDelete
  12. வாங்க அப்பாதுரை, நீங்க சொல்வது சரி. அப்போதிருந்த மனநிலையே வேறுதான். ஆனால் சிவந்த அந்தச் சிவப்பும் ஒரு மாதிரி பயங்கரமா இருக்கும், மேகங்களுக்கு ஊடே தெரியும் சூரியக் கதிர்கள் அந்தச் சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்கையில் வெளிச்சமே என்னமோ சிவப்பு விளக்கைப் போட்டாப்போல!

    ஆனால் ஒண்ணு, இதெல்லாம் மரத்துவிட்டதுனு நினைக்கிறேன். நல்ல வெயிலிலே துங்கபத்திரா நதியிலே படகிலே முதலை மடுவிலே உட்கார்ந்திருக்கையிலே பதட்டமே இல்லாமல் ஜாலியாப் பேசிக் கொண்டு இருந்தோம்;( நாங்க முப்பது பேர்)சர்க்கரை நோயாளிகளுக்குத் தான் பசி வந்து! பாவம்! இருக்கிற சாப்பிடற பொருட்களை எல்லாம் திரட்டி அவங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தோம்.

    இதிலே படகு ஓட்டுபவர் வேறே உணவுப் பொருள் ஏதானும் துண்டு நதிநீரில் விழாமல் பார்த்துக்குங்க; முதலை வந்துடும்/ வாலைச் சுழட்டி அடிச்சதுன்னா படகு அம்பேல்னு பயமுறுத்துவார்! :)))) அப்புறமாப் பரிசல் காரப் பையர் ஒருத்தர், (பத்துப் பனிரண்டு வயசு இருக்கும்) அவரோட பரிசலில் இருந்து கயித்தைக் கட்டி எங்க படகிலே கோர்த்துப் பரிசலோடு சேர்த்து இழுத்து!!!!!!

    சேற்றிலே இருந்து வந்தாச்சு! அப்புறமா மோட்டார் ஓடலை! அது தனிக்கதை! இன்னொரு நாள் வச்சுப்போம். :)))

    ReplyDelete
  13. வாங்க ஜீவி சார், ஆகாயத்தைப் பார்த்தால் மேகங்கள் நிறம் மாறி இருக்கும்; காற்றில் வெப்பம் தெரியும்; சூரியன் ஒரு மாதிரி மங்கலாய்த் தெரிவான். காற்றே அடிக்காது; ஒரு பறவை கூடப் பறக்காது. எல்லாம் மரங்களில் அடைந்து கொண்டு தங்களுக்குள்ளாகக் கிளுகிளு என ரகசியமாய்ப் பேசிக்கும். பறவைக் கூச்சல் இல்லைனாலே ஏதோனு புரிஞ்சுடும். வெப்பநிலை சகஜமா இருந்தால் பறவைக்கூச்சல் தாங்காது!

    ReplyDelete
  14. இந்த டொர்னடோ நம்ம ஊர் ஆந்தியை விட வலுவானதுனு சொல்றாங்க. ஆனால் இங்கே மேகங்கள் தான் புனல் மாதிரிக் கடைந்து கொண்டு செல்கின்றன. நம்ம ஊரில் மணலும் சேர்ந்து பயணம் செய்யும். எது தேவலை?? :)))))

    ReplyDelete
  15. ஹா ஹா.. ஏரி/முதலை அனுபவம் எனக்கும் சின்ன வயசுல ஏற்பட்டது. எங்கம்மா வேலை பார்த்த கம்பெனியில் வருஷா வருஷம் டூர் போவாங்க. ஒரு தடவை அப்படித்தான் ஏர்காடோ இல்லை மெட்ராஸ் தாண்டி ஏதோ ஒரு ஏரியோ நினைவில்லை, ஓடக்காரருக்கு எங்க மேலே என்ன கடுப்போ தெரியலே திடீர்னு "ஸ்! கம்ம்ம்ம்னு இருங்க எல்லாரும்.. முதலைங்க வருது"னு சொன்னதும் மூச் பேச் காணோம். "மொதல்ல எங்களைக் கரைக்குக் கொண்டு விடுப்பா.. டூர் எல்லாம் போறும் போறும்"னு அந்த ஆளைக் கெஞ்சாத குறை. கரைக்குக் கொண்டு சேர்த்ததும் அவனுக்கு பத்து ரூபாயோ என்னவோ பக்ஷீஸ். இந்த ஏரில முதலை இருக்க சாத்தியமானு கூட யாரும் நினைக்கவில்லை.. பயப் பிராந்தி.. மறுநாள் டூர் மேனேஜரா இருந்தவரு சவடால் பேசினாரு.."எனக்குத் தெரியும் இங்கல்லாம் முதலைங்க கிடையாதுனுட்டு.. அவன் கூட சண்டை போட்டுட்டிருபானேன்?"

    ReplyDelete
  16. டொர்னேடோ சமவெளியில் தான் வலுப்பிடிக்கும். மத்திய அமெரிக்க சமவெளியில் மணல் கிடையாது. இன்னும் வடமேற்கே போனால் மணல் உண்டு, சமவெளி கிடையாது..:) டொர்னேடோவின் மிகச் சமீபத்திலோ அல்லது அதன் மையத்திலோ சிக்கினால் கய கய கயா தான். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு தடவை எங்கள் வீட்டிலிருந்து இருபது மைல் தொலைவில் டொர்னேடோ தரை தொட்டது. அன்றைக்கு எங்கள் வீட்டுக்கு வந்த சில நண்பர்கள் அதற்குப் பிறகு சிகாகோ பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. இதற்கு பூகம்பமே மேல்டா என்று தொலைவிலிருந்தே விசாரிப்பதோடு சரி,

    ReplyDelete
  17. ஆத்தீ, காலி ஆத்தீ!

    ReplyDelete
  18. வாங்க அப்பாதுரை, நீங்க சொல்றது சென்னையிலே நடந்ததா? சான்சே இல்லை அங்கெல்லாம் முதலை இருந்திருக்காது.

    ஆனால் ஒருமுறை கொள்ளிடம் வழியாக் காரில் கடக்கையில் கொள்ளிடக் கரையில் முதலை இருந்ததைக் கண்டோம். இப்போத் தான் சமீபத்தில் நான்கு வருடங்கள் முன்பு பார்த்தோம். குட்டினு சொன்னாங்க.

    ReplyDelete
  19. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு தடவை எங்கள் வீட்டிலிருந்து இருபது மைல் தொலைவில் டொர்னேடோ தரை தொட்டது. அன்றைக்கு எங்கள் வீட்டுக்கு வந்த சில நண்பர்கள் அதற்குப் பிறகு சிகாகோ பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. இதற்கு பூகம்பமே மேல்டா என்று தொலைவிலிருந்தே விசாரிப்பதோடு சரி,//

    உங்க ஊரு காத்தே ஆளைத் தூக்குதே! அது பத்தாதுனு டொர்னடோ வேறேயா! :)))))

    ReplyDelete
  20. வாங்க வா.தி. क्या लिखा है? आती? या आंधी?:)))))

    ReplyDelete
  21. அடடே !

    சுழி காற்று பற்றி படிக்கும் போதே

    அதன் பாதிப்பை ஓரளவு யூகிக்க முடிகிறது

    என்ன ஒரு அதிர்ச்சி அனுபவம் :(

    ReplyDelete
  22. வடநாட்டில் இந்த ஆந்தி சர்வ சகஜமா வந்துட்டுப் போகும் ப்ரியா. கோடைக்காலத்தில் தான் அதிகமா வரும்.

    ReplyDelete
  23. இவ்வளவு மோசமாக இருந்திருக்கிறதே.

    ReplyDelete
  24. டெல்லியில் நைஸ் மணலை அள்ளிக்கொண்டு வந்து வீட்டுக்குள் போடும் ஆந்தி கொஞ்சம் பயம் காட்டும் தான். என் முதல் ஆந்தி அனுபவம் பற்றி எழுத கை பரபரக்கிறது. பிறகு ஒரு சமயம் பதிவாகவே போட்டு விட வேண்டும்.
    உங்கள் ஆந்தி அத்தை அழகாய் வார்த்தையால் படம் பிடித்திருக்கிறீர்கள்.அந்த அன்பான கடைக்காரர்களை எங்கே இப்பொழுதெல்லாம் பார்க்க முடிகிறது சொல்லுங்கள்.

    ReplyDelete