எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 04, 2012

தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!


இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம். தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர். அதிலும் அவரின் கதையும் அனைவரும் அறிந்ததே. மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார். அப்போது தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம்(மனதிற்குள்ளாகவே ஜபித்தல், இதன் மேலதிக விளக்கம் இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் மன்னிக்கவும்) ஜபித்ததையும் கூறத் தானும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது அனைவரும் அறிவோம். சிதம்பர ரகசியம் தொடருக்காக வேண்டிப் பல புத்தகங்களைப் படித்தபோதும், பல குறிப்புகளைத் தேடியபோதும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் கீழ்க்கண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பெருமாள் திருமொழியைப் பல்வேறு சமயங்களில் படிக்க நேர்ந்தபோதும் தில்லை விளாகம் ஶ்ரீராமரைப் பற்றித் தெரிய வந்தபோதும் இதுதான் சரியானதாய் இருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டேன். பலநாட்களாய் மனதில் உருப்போட்டு வைத்திருந்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.



ஆனால் குலசேகராழ்வாரோ எல்லாக் கோயில்களிலும் உள்ள பெருமாளை ஶ்ரீராமராகவே கண்டார் என்பார்கள். உதாரணமாகத் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளைக் கூட


மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கண்மணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.”


என்ற தாலாட்டால் துதிக்கிறார். ஆனால் இதே குலசேகராழ்வார் திருச்சித்ரகூடம் குறித்த பாடலில்,


“தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்

திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை.”


என்று பாடி இருக்கிறார். ஶ்ரீராமன் எங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறானோ அங்கெல்லாம் மாருதியும் கட்டாயமாய் இருப்பான். ஆனால் சிதம்பரம் கோயிலில் மாருதி இல்லை. ஆனால் குலசேகராழ்வார் அதே திருச்சித்ரகூடம் குறித்த பாடல் தொகுப்பில் வேறொரு இடத்தில்


“தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த”


என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பிட்ட வரிகள் குழப்பத்தைக் கொடுக்கும். தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் என்பார்கள் அல்லவா? ஆகவே மூவாயிரம் அந்தணர்கள் ஏத்திப் பாடிய காரணத்தால் தில்லைச் சிதம்பரத்தையே திருச்சித்ரகூடம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்பதே தமிழ்த்தாத்தாவின் கூற்று. அவர் சொல்லும் காரணம் வருமாறு:


தமிழ்த்தாத்தா வாழ்ந்த காலத்துக்கு சுமார் நூறாண்டுகள் முன்னர் பழைய தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தில்லை விளாகம் என்னும் ஊரில் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, அநுமத் சமேத ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் விக்ரஹங்களோடு, ஶ்ரீநடராஜர், சிவகாமி அம்மையின் விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கேள்விப்பட்ட தமிழ்த்தாத்தா செய்த ஆய்வில் இந்தத் தில்லை விளாகமே உண்மையான திருச்சித்ரகூடம் என்று கண்டறிந்திருக்கிறார். ஏனெனில் இந்த ஊரின் பெயரே தில்லை விளாகம் என்று இப்போது கூறுகிறார்கள். தில்லை சம்பந்தப்பட்டிருப்பதால் நடராஜர் இங்கே இருந்திருப்பதும் நிச்சயமாகிறது. அதோடு ஶ்ரீராமரும் இங்கே இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள் எனில் ஶ்ரீராமரும், நடராஜரும் சேர்ந்தே இங்கிருந்திருக்க வேண்டும். ஆகவே இதைத் தான் தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் தில்லை விளாகம் என மாறி இருக்கலாம்.



அதிலும் ஶ்ரீநடராஜர் விக்ரஹம் அம்பல ஊருணி என்னும் குளத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அம்பலம் ஒன்று இங்கே இருந்திருக்கிறது. ஆகவே திருவெண்காட்டை ஆதி சிதம்பரம் எனச் சொல்வதைப் போல் இதையும் இரண்டாவது சிதம்பரமாகச் சொல்லி இருக்கலாம். சிதம்பரம் தீக்ஷிதர்களில் சிலர் இங்கே இருந்து வழிபாடுகள் நடத்தி இருக்கலாம். மேலும் ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மண, அநுமத் சமேதராய்க் காட்சி கொடுக்கும் சந்நிதிகளையே சித்ரகூடம் என்பார்கள். எப்படிப் பெருமாள் சந்நிதிகளில் கருடாழ்வார் முக்கியமோ அதைவிட முக்கியமாய் ஶ்ரீராமர் சந்நிதியில் அநுமன் இல்லாமல் இருக்கமாட்டார். ஆகவே தில்லை விளாகம் ஶ்ரீராமர் கோயிலையே தில்லைத் திருச்சித்ரகூடம், என்று அழைத்திருக்கவேண்டும். இந்தக் கோயில் விக்ரஹங்கள் அந்நியப்படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்டுப் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுக்கப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. முதலில் ராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களே கண்டெடுக்கப்பட்டாலும் இதற்குச் சுமார் 30 ஆண்டுகளிலேயே நடராஜர் விக்ரஹமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 1862-ஆம் ஆண்டு ஶ்ரீராமர் குடும்பமும், 1892-இல் ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஶ்ரீராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களின் அமைப்பும், ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும் இவை இரண்டும் ஒரு காலத்தில் ஒருசேரக் கோயில் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் தாத்தா அவர்களின் தீர்மானமான கருத்து. ஆகவே தில்லைத் திருச்சித்ரகூடம் என்பது தில்லை விளாகமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் சீதா, லக்ஷ்மணரோடு மட்டும் ஶ்ரீராமர் இருந்து அருள்பாலிக்கும் தலங்களையே திருச்சித்ரகூடம் என்பார்கள். பட்டாபிஷேஹ ராமர் என்றால் சகலமான உறவினர்கள், நட்பு வட்டங்கள் சூழ அமர்ந்திருப்பார். ஶ்ரீராமர் தனித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும் இருந்தது பஞ்சவடியும், சித்ரகூடமும் மட்டுமே. இதிலே பஞ்சவடியிலே ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் சென்ற துக்கமான சம்பவம் நடந்ததால் சித்ரகூடத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சீதை, ராமர், லக்ஷ்மணர் மூவர் மட்டும் அநுமனோடு காட்சி கொடுக்கும் தலங்களே சித்ரகூடம் எனப்படும். தில்லைவிளாகம் ராமர் மிகவும் பிரபலமானவர். ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். நாங்கள் இன்னமும் இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. சென்று வந்ததும் மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.


அதீதம்

19 comments:

  1. அருமையான ஆராய்ச்சி தகவல்,நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. த்ரிந்திராத அறிய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி

    ReplyDelete
  3. ஜனவரி இருபத்தொன்பது, முப்பது தேதிகளில் ஒரு தென்னகச் சுற்றுலா சென்று வர திட்டமிட்டுள்ளேன். அப்பொழுது, இந்தத் தலங்களுக்கும் சென்று தரிசிக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  4. ஆஹா!...அடுத்த 'தானே' வரும் போலிருக்கிறதே :)

    ReplyDelete
  5. வாங்க ராம்வி, படித்ததுக்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, நன்றிம்மா.

    ReplyDelete
  7. வாங்க கெளதம், போயிட்டு வாங்க, வந்து விபரமாப் படங்களோடு எழுதுங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாங்க மதுரையம்பதி, வரவுக்கு முதல்லே நன்றி. அதெல்லாம் தானேயும் வராது. கூப்பிட்டாலும் வராது. சரியா? :)))))))))

    ReplyDelete
  9. தில்லைனா எந்த ஊரு? (ஹிஹி.. சத்யமா தெரியாதுங்க)

    ReplyDelete
  10. நல்ல பல தகவல்கள்...இடையில் வந்த 'மன்னுபுகழ் கோசலைதன்' பாடலை பி வி ராமன் பி வி லக்ஷமணன் பாடிக் கேட்டிருக்கிறேன். ரொம்ப நாள் தேடிக் கொண்டிருந்த மிக அருமையான பாடல்.

    ReplyDelete
  11. வாங்க அப்பாதுரை, தில்லைனா தெரியாதா?? சரி, சரி! :)))))

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், அந்த "மன்னு புகழ் கோசலை தன்"பாட்டு ராம, லக்ஷ்மணர்களின் மாஸ்டர் பீஸ்னு சொல்லலாமா?? மத்தவங்க பாடறதை விட இவங்க பாடறது ரொம்ப சுகம்! :)))))

    ReplyDelete
  13. Fantastic article.
    A place called "thillai valagam" is very nearby to chidhambaram.
    i will also send comments soon. Due to "thane" no power, no internet.

    ReplyDelete
  14. வாங்க தீக்ஷிதரே, உங்க விளக்கமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். நெய்வேலியிலேயே மின்சாரம் இல்லைனா என்ன செய்யறது? :(((((
    விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. என்னங்க இது.. சொல்லுவீங்கன்னு பாத்தா..

    ReplyDelete
  16. ஒரு யூகம் உண்டு.. அதை வச்சே இத்தனை நாளா சமாளிச்சாச்சு. ஆனா தில்லைனு சொல்வானேன்?
    இது மாதிரி நிறைய தமிழ்நாட்டு ஊர்களுக்கு nickname இருப்பது தெரியும். யாராவது match the following மாதிரி எந்த ஊருக்கு எது nicknameனு சொன்னா பரவாயில்லை. பிரமாத பிஎஸ்ஆர்பி பரீட்சை எல்லாம் எழுதப் போறதில்லை.. சும்மா தெரிஞ்சுக்கத்தான்.. ஹிஹி. (அந்த நாளிலே பிஎஸ்ஆர்பினு ஒரு தேர்வு - இப்பல்லாம் இருக்கா தெரியலிங்க)

    ReplyDelete
  17. அதீதத்தில் படிச்சு அங்கே பின்னூட்டமும் போட்டாச்சு ;
    இங்கேயும் பார்த்து பதிவுக்கு நன்றி சொல்லியாச்சு :))

    ReplyDelete
  18. அப்பாதுரை, உங்களுக்கு நான் சொல்லணுமா என்ன??

    பிஎஸ் ஆர்பி பரிக்ஷை இப்போ இருக்கிறதா எனக்கும் தெரியலை. ஹிஹிஹி, நான் எழுதி இருக்கேன் பிஎஸ் ஆர்பி. வேறே பெயரிலே! :)))))

    இப்போ ரொம்ப ஆபத்தான விஷயம், மீனாக்ஷி அநியாயத்துக்கு ஓட்டு வாங்கி எல்லாரையும் டெபாசிட் இழக்க வைச்சுடுவாங்க போலிருக்கே. இலவசம் அறிவிச்சு விபரமா மெயிலினேன் எங்கள் ப்ளாகுக்கு; ம்ஹும் கண்டுக்கவே இல்லை. இதிலே ஏதோ சதி இருக்குனு நினைக்கிறேன். போராட்டம் நடத்தணும்; இல்லைனா தேர்தலை நிறுத்தணும்; இல்லைனா மறு வாக்குப் பதிவு கேட்கணும். என்ன சொல்றீங்க? :)))))

    ReplyDelete
  19. கண்டு கொள்ளவில்லையா...என்ன வார்த்தை சொன்னீர்கள்....ஆஹா....கண்கள் கலங்கி விட்டனவே....நீங்கள் உங்கள் பக்கமான நம்ம ஏரியா பார்க்கலையா....

    http://engalcreations.blogspot.com/2012/01/blog-post.html

    ReplyDelete