எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 31, 2014

சீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு!

இன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது.  ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில் சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல.  நான் போட நினைச்சது.  ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம்.  ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம்.  சான்ஸ் போச்சு!  நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க.  ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன்.  இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு!  யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே! :))))


இங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி.  சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன்.  அங்கே போய்ப் பார்த்துக்குங்க.   வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம்.  சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு  சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும்.  எண்ணெயும் அதிகம் தேவைப்படாது.  இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும்.  சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.

பழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.

வெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி

Thursday, January 30, 2014

நைமிசாரண்யம் படப்பதிவு--தொடர்ச்சி

சக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம்.


இங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும்,  பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர்.  இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர்.   ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்திலும் இதே கதையைச் சொல்கின்றனர்.  இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு.  பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர்.  அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும்.  அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது.  ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள். 



வியாசருக்கு உதவின பிள்ளையார். 


தன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.




சுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது.  மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.



ஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.

உலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.




 ஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.


Saturday, January 25, 2014

நாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல!


சில மாதங்களாக ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் கணினியைக் கட்டாயமாய் மூடிடுவதால் (அந்த நேரம் இரவுச் சாப்பாடு தயார் செய்து சாப்பிடும் நேரம் வேறே) வேறே வழியில்லாமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறேன்.  எட்டரைக்கு அப்புறமா அவசியம் இருந்தால் தான் கணினியைத் திறப்பதுனு வைச்சிருக்கேன்.  ஆகையால் சாப்பாடு முடிஞ்சதும் உடனே படுத்துக்கக் கூடாது என்பதால் இதிலே உட்காரும்படி ஆயிருக்கு.  :))))

எட்டு மணிக்கு "தெய்வமகள்" என்ற பெயரிலே ஒரு தொடர் வருது.  அதிலே கதாநாயகியாக நடிக்கும் பெண்  சத்யப்ரியா என்ற பெயரில் வருகிறார். அவரைத் தான் தெய்வமகள்னு ஏகத்துக்கு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்காங்க.  ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் தான் உண்மையில் வெளுத்துக்கட்டுகிறார். இந்த சத்யப்ரியா ஆரம்பத்தில் கதாநாயகனை எதிர்ப்பதற்காக ஏதோ கொஞ்சம் சாமர்த்தியத்தைக் காட்டறாப்போல் இருந்ததோடு சரி.  அவ்வளவு தான்.  அதுக்கப்புறமா எப்போப் பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வித விதமான உடையில் வந்து போகிறார்.

முரட்டுத் தனம் நிறைந்தவனாகச் சொல்லப்படும் கதாநாயகனைத் திருத்த ஒண்ணும் செய்யலை (இனிமேல் வருமோ?) என்பதோடு மாமனார், மாமியாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யறமாதிரித் தெரியலை.  ஒரே ஒருநாள் அவங்க படுக்கை அறையைச் சுத்தம் செய்து கொடுத்ததோடு சரி. கணவனின் அண்ணியின் சுயரூபம் தெரிஞ்சே தங்கையைக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்ன சத்யப்ரியாவுக்கு இப்போ தானே அந்த இடத்துக்கு வந்தப்புறமும் அந்த அண்ணி காரக்டரின் சுயரூபம் பத்திப் புரியாமல் போனது ஏன்?

அதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு முயற்சியும் எடுக்கலை என்பதோடு சிறிதளவு சந்தேகமும் படாமல் மண்ணாந்தையாக இருப்பதோடு அந்த அண்ணியிடமே போய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதே அந்த அண்ணியின் குறிக்கோள் என்பது தெரிந்தும் அதை எல்லாம் புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சத்தமாகக் கணவனோடு வாக்குவாதம் பண்ணுவதும், வெளியே கேட்பாங்களோ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததும், வீட்டில் நடப்பது குறித்த கவனமே இல்லாததும் ஹிஹிஹிஹி! சகிக்கலை! :)))))))))  இப்படி ஒரு அசடான காரக்டரைக் கதாநாயகியாப் போட்டிருக்காங்களேனு நினைச்சு சிப்புச் சிப்பா வருது.

அதே அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் ஒவ்வொரு முறையும் மாமியாரை சாமர்த்தியமாக மடக்குவதோடு இல்லாமல் அக்கா பட்ட கடனையும் தீர்த்து விடுகிறார்.  தங்கைக்குப் பள்ளிக்குக் கட்டணம் கட்டுகிறார். உண்மையில் குடும்பத்துக்காகப் பாடுபடுவது லூஸு காரக்டராக இருந்த இவர் தான்.   இவர் தான் தெய்வ மகள். அம்மா, அக்கா, தங்கை ஒதுக்கியும் தன் பிறந்த வீட்டுக்காகச் செய்வது இவர் தான். சத்யப்ரியா இல்லை. சத்யப்ரியாவுக்குச்  சம்பளமும் இல்லையே; அம்மாவும் தங்கையும் என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அதைக் குறித்து நினைக்கக் கூட இல்லாமல் அவர் பாட்டுக்குக் கணவன் வீட்டில் தன் ஓரகத்தியிடம் தன்மானத்தை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இவரா தெய்வ மகள்? ஒண்ணு தொடரின் தலைப்பை மாத்தணும், இல்லையானா கதாநாயகி தாரிணியாக நடிக்கும் பெண் தான்னு மாத்தணும்.  இவர் எப்போ எல்லாத்தையும் கவனிச்சுக் கணவனைத் திருத்தி, குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, கணவனின் அண்ணியையும் ஜெயிச்சு............

கடவுளே, இருக்கிற இருப்பைப் பார்த்தால் இந்த சீரியல் இன்னும் மூணு வருஷமாவது வரும் போலிருக்கே!!!  என்னத்தைச் சொல்றது! மறந்துட்டேனே.  டிஆர்பியிலே இது ஹிட் லிஸ்டிலே இருக்கிறதாச் சொன்ன ஹரன் பிரசன்னாவுக்குத் தான் இது பிடிக்கும்னு நினைக்கிறேன்! :P :P :P  :))))))))))))

Thursday, January 23, 2014

நைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு


சக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள்.  மஹா காளர் சந்நிதி

கெளரி அம்மன் சந்நிதி



சிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர்.  நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம். கீழே   முந்தைய பதிவின் சுட்டியைக் கொடுத்துள்ளேன்.  படங்களும் விபரங்களும் தொடரும். :))))


முந்தைய பதிவு

Wednesday, January 22, 2014

சோதனையா, சாதனையா? டெஸ்ட்!!!!!!!!

சோதனைப்பதிவு.  முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க நினைச்சால் அவை திறக்கவே இல்லை.  ஆகவே இந்த சோதனை எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான்! ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா!  இப்போத் தான் கவனிச்சேன்.  இது 1,700 ஆவது (மொக்கை) சேச்சே மொத்தத்தில் என்பது மொக்கைனு வந்திருக்கு. :) வெளியீடு.

1,700ஆவது பதிவு

கடவுளே, காப்பாத்து! தொடர்ச்சி!

டெல்லியில் மாநிலத்திற்கெனத் தனியான காவல் துறை இல்லை.  ஏனெனில் அது நாட்டின் தலைநகர்.  பல பெரிய தலைவர்கள், உலகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் வந்து போகும் இடம்; வசிக்கும் இடம். முக்கியமானவர்கள் வசிக்கும் ஊர்.  அங்கே மாநிலத்தின் கீழ் காவல் துறை இருந்தால் சரியா வராது என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது.  ஏற்கெனவே ஷீலா தீக்ஷித் முன்னாள் முதல்மந்திரி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தாலும் டெல்லி போலீஸின் மீது குறைகள் தான் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆகவே இது புதுசா இப்போ கெஜ்ரிவால் மட்டும் வந்து சொல்லலை.  அவரும்,அவர் கட்சி ஆட்களும் விதிமுறைகளை மீறிச் சட்டத்தை மீறிச் செயல்படுவதையும் டெல்லி போலீஸ் இவங்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்குக்குப் பயந்து கொண்டு வேடிக்கை தான் பார்க்கிறது.  அப்போ மட்டும் கெஜ்ரிவால் என்ன செய்தார்?

ஊழல் எதிர்ப்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த இந்தக் கட்சி நேர்மையான கட்சியாகத் தோற்றம் அளிக்கிறது.  அவ்வளவே. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கக் கூட இல்லை;  அது குறித்துப் பேசக் கூட இல்லை.  போராட்டங்களினால் ஊழல் ஒழியுமா?  செயல் முறை என்ன? டெல்லியின் முக்கியச் சாக்கடையான யமுனையைச் சீர் செய்ய இவர்கள் செய்யப் போவது என்ன?  சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன?  தங்கள் கொள்கைகை எவ்விதம் நிறைவேற்றப் போகிறார்கள்?

உண்மையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்.  Governance எனப்படும் ஆட்சி முறைக்கட்டுப்பாடு இல்லாமல் இவர் சாதிக்கப் போவது தான் என்ன?  டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா?  குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும்.  அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும்.  இவர்  இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.  சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும்.  நிஜத்தில் அல்ல.  முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன? முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

தெருக்கூட்டம் போட்டுப் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதும், பொதுமக்களையும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்னும் எண்ணற்ற ஊழியர்களை அவரவர் பணியைச் செய்யவிடாமல் இரண்டு நாட்களாகத் தடுத்து வருகிறார்.  மெட்ரோ ரயில் நிலையங்களே மூடப்பட்டு விட்டன. அவசரத்திற்குக் கூட மக்கள் எங்கேயும் அணுக முடியாத அவலம். டெல்லியில் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை நிலைமை புரியும்.  இந்த தர்ணா ஆரம்பிக்கும் முன்னர் அங்கே சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி இது.

நான் ஜோக்கெல்லாம் செய்யவில்லை. யாரிடமும் நியாயமாப் பேசித் தீர்க்க முடியாத ஒரு நிலை தான் இப்போது; இல்லை என்னவில்லை.  ஆனால் இவர் கைகளில் அதிகாரம் இருக்கிறது. வெளிநாட்டுக்காரங்களோட நினைப்பும் இந்தியாவுக்கு முக்கியம் தான்.  அப்போத் தான் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.  ஏற்கெனவே ஊழல்களில் இந்தியா மிகத் தலை குனிந்து தான் நிற்கிறது.  இப்போ இந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் வேறே.  அப்படி என்ன அந்த கெஜ்ரிவால் சாதித்துவிட்டார்? அவர் என்ன ஒழுங்கானவரா? இல்லையே! வருமானவரித்துறையில் இருந்தபோது தண்டனைக் கட்டணத்துடன் திரும்பச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவர் சொல்லாத சால்ஜாப்புகள் இல்லை. அப்புறமா சட்டரீதியான நடவடிக்கைனு துறையில் ஆரம்பிக்கவுமே மன்மோகன் சிங் பெயரில் செக் கொடுத்தார். துறையின் பெயரால் கொடுக்க வேண்டிய செக்கை இப்படிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்!

பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கையிலேயே மின் கட்டணக்குறைப்பு. மான்யத்தை எங்கிருந்து கொடுப்பார்?  ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை.  மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார்.  இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா?  முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது!  டெல்லியில் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொலைக்காட்சியில் சொல்றாங்க.  கேளுங்க.

இவை அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவைகளே!  இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :(  அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே! நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே! பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே! ஆனால் பின் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது நேற்றே எழுதியது.  ஆனால் என்ன காரணமோ வெளியாகலை. இப்போ வெளியிட்டுப் பார்க்கிறேன். :))))

Monday, January 20, 2014

கடவுளே காப்பாத்து! :(

ஒண்ணும் சொல்லத் தோணலை;  எங்கேயோ போயிட்டிருக்கு.  இதெல்லாம் மட்டமான முறையில் பிரபலம் ஆகணும்னு நினைக்கிறாரோனு நம்மை எண்ண வைக்குது! ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா? தெரியலை!  டெல்லியே ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு!  இதெல்லாம் சரியா? அதோட மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தைக் கொண்டாடக் கூடாதுனு வேறே கட்டாயப் படுத்திட்டு இருக்கார்.  இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை சுதந்திரப் போராட்டத்தின் போது கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். வெட்கமாக இருக்கிறது.  எதுவாக இருந்தாலும் முறைப்படி பேசித் தீர்த்துக்கத் தான் முயல வேண்டுமே தவிர இது சரியான வழிமுறை அல்ல. உலக அளவில் டெல்லி முதல் மந்திரியின் பெயர் பிரசித்தி அடையலாம் என்பதைத் தவிர நாட்டுக்கு எவ்வளவு தீமையை கெட்ட பெயரை விளைவிக்கும் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை. 


கடவுளே காப்பாத்து!