எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 25, 2008

ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு:

ராமாயணம் வால்மீகி எழுதிய காலத்திலேயே இந்தியா ஒருங்கிணைந்தே இருந்ததாய்த் தெரிய வருகின்றது. இன்றைக்கு நாம் காணும் கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, பொருநை, பம்பை போன்ற நதிகளே அன்றைக்கும் இருந்து வந்திருக்கின்றன. மலைகளும், அதன் இருப்பிடங்களும் அதன் வர்ணனைகளும் கூடியவரையில் இன்றைய நாட்களுக்குப் பொருந்தும் வண்ணமாகவே உள்ளது. இமயமலைத் தொடர் வடக்கே இருப்பதாய்க் கூறும் வால்மீகி, அங்கே இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் சீனாவையும் குறிப்பிட்டு மஞ்சள் நிறமுள்ள மிலேச்சர்கள் அங்கே வசிப்பதாயும் கூறுகின்றார். திருக்கைலை செல்லும் வழியைக் கூறும் அதே நேரம் அங்கே நிலம் மண் வளமற்றுப் பாசனங்கள் ஏதுமின்றி வெறும் தரிசாய்க் காணக் கிடைப்பதையும் குறிப்பிடுகின்றார். அங்கே மனிதர்கள் அதிகம் வசிக்க முடியாது என்று இன்று இருக்கும் அதே நிலையை அன்றும் இருந்ததாய்க் கூறுகின்றார். மேலும் தெற்கே உள்ள பொருநை நதியைக் குறிப்பிடும் வால்மீகி அங்கே பாண்டியர்கள் இருந்ததையும் குறிப்பிடுகின்றார். சோழ, சேரர்கள், ஆந்திரம், காவேரி நதி, அகஸ்தியரின் இருப்பிடம் போன்றவற்றைச் சொல்லும் வால்மீகி, தாம்பிரவர்ணியைத் தாண்டி பாண்டிய சாம்ராஜ்யம் பெரியதாகப் பரவிக் கிடந்ததாயும் கூறுகின்றார். இன்னும் பாண்டிய நாட்டின் முத்துக்களைப் பற்றி வர்ணிக்கும் வால்மீகி மகேந்திரமலையானது அகஸ்தியரால் வைக்கப் பட்டதாயும், ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அங்கே இந்திரன் வந்து பூஜை செய்ததாயும் கூறுகின்றார். இன்னும் மேற்கே இருக்கும் பாலைவனத்தையும் குறிப்பிட்டு அங்கிருந்து சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தையும் குறிப்பிடுகின்றார்.

அதோடு இல்லாமல் வால்மீகி ராமர் அநேகமாய் இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும், தன் பதினான்கு ஆண்டு வனவாசத்தில் பயணம் செய்ததாயும் சொல்லுகின்றார். இன்றைக்கும் நாசிக் என்னும் பஞ்சவடியில் சூர்ப்பநகையின் மூக்கு அறுக்கப் பட்ட இடம் என்று இருக்கின்றது. தினமும் ராமர் கோதாவரிக்குப் பூஜை செய்து அன்றாட வழிபாடுகள் செய்த இடம் ராமதீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. சித்திரகூடமும், தண்டகாரண்யமும் இன்றும் காண முடிகின்றது. அதே போல் பம்பா நதி தீரத்தில் சபரியைக் கண்டதும், சபரியின் பெயராலேயே சபரிமலை விளங்குவதையும் அறிய முடிகின்றது. கால ஓட்டத்தில் நதிகள், மலைகள் இடம் மாறி இருக்கலாம். காவேரி நதி கூடச் சென்னைப் பக்கமாய் ஓடிக் கொண்டிருந்ததாய் ஒரு கூற்று உண்டு. ஆகவே, இப்போது சபரி மலையோ, பம்பையோ இருப்பது கேரளத்தில் என்பதால், அது நடந்திருக்கச் சாத்தியமே இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

மேலும் ராமர் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களையும் தன் நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் ஏற்றுக் கொள்ளுகின்றார். முதலில் கங்கையைக் கடக்கும்போது வேடுவ அரசன் ஆன குகனைத் தன் நீண்ட நாள் நண்பன் என்று சொன்னதோடு அல்லாமல், பின்னர் வரும் நாட்களிலும் சீதையைப் பிரிந்த பின்னர் அவளைத் தேடிச் செல்லும் வழியில், பறவை அரசன் ஆன ஜடாயுவிற்காக ஈமக் கிரியைகள் செய்கின்றார். மனைவியையும் சுற்றத்தையும் இழந்த வானர இளவலுக்காக உதவி செய்கின்றார். அரக்கன் ஆன விபீஷணனைச் சிறிதும் சந்தேகிக்காமல் அவன் சரணடைவதை ஏற்றுக் கொள்ளுவதோடு அல்லாமல், அவனுக்கு உதவிகள் செய்வதாயும் உறுதி அளிக்கின்றார். காட்டில் வாழும் ரிஷிகள், முனிவர்கள் அனைவரையும் பாதுகாப்பதும், அவர்களின் தவங்களுக்கு இடையூறு நேராமல் பாதுகாப்பதும் தன் கடமையாக நினைக்கின்றார். தன்னலம் கருதாமல் செய்யும் இத்தகையதொரு சேவையைக் குறித்து வியக்காமல் இருக்க முடியுமா??

ராமாயணம் வட இந்தியக் காப்பியம், தென்னிந்தியர்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் சொல்ல முடியாது. ஏனெனில், கம்ப ராமாயணத்திற்கும் முன்பே தமிழில் சில ராமாயணங்கள் இருந்தே வந்திருக்கின்றன. சங்க காலத்திலும் ராமாயணம் இருந்து வந்திருக்கின்றது.புறநானூற்றின் கீழ்க்கண்ட 378-ம் பாடல் இதைச் சொல்லுகின்றது. அரசனிடம் இருந்து பரிசில்கள் ஆக நகைகளைப் பெற்றுக் கொண்ட பாணர்கள் அவற்றை அணியும் வகைதெரியாமல் திண்டாடியதை நகைச்சுவையாகக் குறிப்பிடும் இந்தப் பாடலில், கிஷ்கிந்தாவாசிகள் கண்டெடுத்த சீதையின் நகைகளை வானரங்கள் அணியத் தெரியாமல் தவித்தது போல் பாணர்கலும் தவித்தனர் என்று குறிப்பிடுகின்றது.

378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

மேலும் அகநானூற்றில் 70-ம் பாடலில் ராமன், ஆலமரத்தின் நிழலில் சேதுவைக் கட்டும் முன்னர் ஓய்வு எடுத்தது பற்றியும் கீழ்க்கண்டவாறு கூறப் படுகின்றது.

கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப், அலர்வாய்ப் பெண்டிர்=வம்பு பேசும் மகளிர் அலர்=என்றால் கிசுகிசு என்று அர்த்தம். எத்தனை அழகிய சொல்லை இழந்துவிட்டோம்????? :((((((((
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வீ ஞ்஡ழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே.

தலைவியிடம் கொண்ட காதலைப் பற்றிப் பேசும் ஊரார் பற்றிக் குறிப்பிடும்போது வருவதாய்க் கூறும் இந்தச் செய்யுளில் இதில் தனுஷ்கோடி பாண்டியர் குலத்துப் பழமையான ஒன்று என்று குறிப்பிடப் படுவதோடு அல்லாமல், ராமன் வெற்றி என்பது பற்றி இல்லாமல் வேறொன்றறியாதவன் என்றும் சிறப்பித்துச் சொல்லப் பட்டிருக்கின்றான். இலங்கைப் படை எடுப்புக்கு முன்னால் தனுஷ்கோடியில் ராமன் ஆலோசனையில் ஆழ்ந்திருந்ததையும், சேதுவைக் கட்ட முனையும் முன்னர் நடந்தவை பற்றியும் இந்தப் பாடல் கூறுகின்றது.

இந்தப் பழைய ராமாயணம் பிழைத்திருக்கின்றதா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் மயிலை சீனி. வெங்கடசாமி “மறைந்து போன தமிழ் நூல்கள்” என்னும் ஒரு நூலில் மறைந்து போன பழைய ராமாயணத்தில் இருந்து சில செய்யுட்களைக் காட்டியதாய்க் கூறப்படுகின்றது. ஆனால் அந்த ராமாயணத்தின் ஆசிரியர் பெயரோ, ஊரோ சரிவரத் தெரியவில்லை எனினும் கம்பராமாயணத்திற்கும் முந்தையது இது என்பதை உறுதிபடச் சொல்லுகின்றனர். இது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை எனினும் ராமாயணம் பற்றிய தகவல்கள் கடைக்கோடி தென் தமிழ்நாடு வரையில் அன்றைய நாட்களிலேயே பரவி இருந்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் இந்த நாட்டைக் கட்டிக் காப்பது “ராம” என்னும் இரண்டெழுத்துத் தான் என்பதிலும் சந்தேகம் எதுவும் இல்லை.

2 comments:

  1. //காவேரி நதி கூடச் சென்னைப் பக்கமாய் ஓடிக் கொண்டிருந்ததாய் ஒரு கூற்று உண்டு.//


    ஆமா, சொல்லிகிட்டாங்க, அம்பத்தூர்ல தான் காவிரி உற்பத்தியே ஆச்சாம். :p

    தரவு இருக்கா? சும்மா இந்த சென்னைவாசிங்க சொல்றதை வெச்சு எல்லாம் பதிவு எழுதக் கூடாது. :D

    நாளைக்கு அம்பிக்கு ஒரு பதில்!னு பதிவு போடுவீங்களே! :))

    ReplyDelete
  2. நானும் இந்த தகவலைப் படித்திருக்கிறேன் (தீராநதி?). கூவம், அடையாறு, பாலாறு முதலியவை அந்த வழித்தடத்தின் எச்சங்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆறுகள் வழித்தடங்களை மாற்றிக் கொள்வது வழமையாக நடப்பது தான். அண்மைய எடுத்துக் காட்டு நேபாள் - பீகாரின் துயரம் கோசி!

    ReplyDelete