எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 29, 2011

பெண் எழுத்தும் நானும்! 2

அடுத்தது அநுத்தமா: இவரை எனக்குப் பிடிக்குமா என ஜெயஸ்ரீ கேட்டிருந்தார். ரொம்பப் பிடிக்கும். அபிமான எழுத்தாளர் என்றே சொல்லலாம். இவரின் நைந்த உள்ளம் நாவலை எத்தனை முறை படித்திருப்பேன் எனக் கூற முடியாது. அவ்வளவு அருமையான நாவல். பெரும்பாலும் குடும்பத்தின் கஷ்ட, நஷ்டங்களையும், குடும்பப் பிரச்னைகளையும், மையமாக வைத்தே இவர் எழுதும் நாவல்கள் அமையும். அவற்றிலிருந்து குடும்பம் என்பது எத்தனை அருமையானதொரு கட்டமைப்பு என்பதும், உண்மையாகவே நல்லதொரு குடும்பமானது சிறந்ததொரு பல்கலைக் கழகமாகத் திகழும் என்பதும் புரிய வருகின்றன. திருமணம் ஆன பெண் குடும்பத்தில் எப்படிப் பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்த ஆசான் என்றே இவரைக் கூறலாம். கிட்டத்தட்ட நைந்த உள்ளம் மைத்ரேயி போல் விளையாட்டுத்தனமாக இருந்த என்னைப் பொறுப்பும், கடமையும் நிறைந்ததொரு குடும்பத்தின் மூத்த மருமகளாகப் போனதும் அவற்றை நிறைவேற்றி வைக்கும் ஆன்மீக பலத்தை இவரின் கதைகள் எனக்குக் கொடுத்தன என்றால் சற்றும் மிகையில்லை. பெண் தான் குடும்பத்திற்கு வேர் என்பதும், அந்த வேரில் அசூயை, கோபம், பொறாமை, துர் ஆங்காரம் போன்ற ரசாயன எருக்களால் ஏற்படும் அரிப்பையும், வேரே அரித்தால் குடும்பம் என்னும் விருக்ஷம் பட்டுப் போய்விடும் என்பதையும் வெகு அழகாக எடுத்துரைத்திருப்பார்.

இவரின் எல்லாக் கதாநாயகிகளும் சரியான சமயத்தில் சரியான முடிவுகளை நன்கு, ஆழ்ந்து யோசித்து எடுப்பார்கள், என்று கூற முடியாது. உதாரணம் லக்ஷ்மி நாவலின் லக்ஷ்மி சரியானதொரு முடிவை எடுப்பாள். அதே நைந்த உள்ளத்தின் மைத்ரேயி பல விஷயங்களிலும் அறியாமை என்னும் இருட்டால் தடுமாறிப் பின்னரே தெளிவாள். என்றாலும் இயல்பாக பெண்களுக்கே அமைந்து இருக்கும் எச்சரிக்கை உணர்ச்சியால் பல சமயங்களிலும் தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டாலும், தன் மனம் யாரை விரும்புகிறது என்பதை அறியாத குழந்தைப் பெண்ணாகவே இருப்பாள். மேல் பார்வைக்கு அவள் திருமணம் பெரியோரால் நிச்சயிக்கப்பட்டதெனத் தெரிந்தாலும், கடைசியில் மைத்ரேயி உண்மையை உணரும்போது அவளோடு சேர்ந்து நம் மனமும் அமைதியும், சந்தோஷமும் அடைகிறது. ஒரே ஒரு வார்த்தையோ உளவியல் ரீதியாகப் பேசப்பட்ட கதைகளில் முக்கியமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் தமிழில் வெளிவந்த முதல் மனோதத்துவ நாவல் என்றும் கூறப் படுகிறது. இதைத் தவிரக் கேட்டவரம் என்னும் நாவல் கேட்டவரம்பாளையம் என்னும் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு ஊரில் நடக்கும் ஸ்ரீராமநவமி விழாவைப் பற்றி விவரித்து அதனூடே குடும்பங்களில் நடக்கும் இயல்பான சம்பவங்களையும் புகுத்தி எழுதப் பட்டது. இந்த நாவலைக் காஞ்சி ஸ்ரீஸ்ரீ பரமாசாரியார் அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார் என்பதே இந்த நாவலின் உயர்தரத்துக்கு ஒரு சான்று என்றால் மிகையாகாது.

இப்படிப்பட்டவர் கொஞ்சமானும் நாகரீகமாக இருக்கவேண்டாமோ? அதுதான் இல்லை. ஒன்பது கஜம் மடிசார் வைத்துக்கட்டிய புடைவையோடும் , அதற்கேற்ற அலங்காரங்களோடும் காட்சி அளித்த ஸ்ரீமதி அநுத்தமா, பனிரண்டு வயதில் பத்மநாபன் என்பவரைக் கைப்பிடித்தார். இயற்பெயர் ராஜேஸ்வரி. இவருக்கு வாய்த்த புக்ககம் அருமையானது என்பதோடு இவரின் மாமனார் இவரைத் தம் பெண்ணாகவே பார்த்தார் என்பது இவரின் ஆற்றலைத் தெரிந்து கொண்ட மாமனார் இவரை எழுதத் தூண்டியதும், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவான அநுத்தமா என்னும் புனைப்பெயரை மருமகளுக்குச் சூட்டி எழுத ஊக்குவித்ததும் போற்றத் தக்கவை ஆகும். அபாரமான ஆங்கிலப் புலமை படைத்த இவர் தன் சுய முயற்சியில் இந்தி, ப்ரெஞ்ச், தெலுங்கு போன்ற மொழிகளையும் கற்றுத் தேறினார். இவரின் ஆங்கிலப் புலமைக்கு உறுதுணையாக இருந்தவர் இவரின் அருமைக் கணவர் ஸ்ரீபத்மநாபன் ஆவார். இவரின் நாவல்கள் கலைமகளில் வெளிவந்தன. திரு கி.வா. ஜகந்நாதன் அவர்களின் அருமைத் தங்கை என்று அவராலேயே பாராட்டப் பெற்ற இவரைக் கிவா.ஜ. அவர்கள் அப்படியே அறிமுகமும் செய்து வைப்பாராம். இரவெல்லாம் இவர் நாவல்களை எழுதிக் குவிக்க, இவர் கணவர் அவற்றைத் திருத்திச் சரிபார்த்துப் பிரதிகள் எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பாராம்.

முழுக்க முழுக்க சம்பிரதாயங்களையும், சாஸ்திரங்களையும், பின்பற்றி வாழ்வதையே ஆதரிசமாய்க் கொண்ட இவரின் நாவல்களும் அப்படியே அமைந்தன. அவற்றையே மென்மையாக வலியுறுத்தின. ஆர்.சூடாமணியின் நெருங்கிய தோழியான இவருக்குத் தனக்கு முன்னால் சூடாமணி இறந்ததும், மனம் தளர்ந்தார் என்கின்றார்கள். அதன் பின்னர் இவர் வெகுநாட்கள் இருக்கவில்லை. தோழியைத் தேடிச் சென்றுவிட்டார். இவரின் நாவல்களில் குறிப்பிடத் தக்கவை

நைந்த உள்ளம்,
கேட்டவரம்,
மணல் வீடு,
ஆல மண்டபம்
ஒரே ஒரு வார்த்தை
லக்ஷ்மி
தவம்,
வேப்பமரத்து பங்களா
அங்கயற்கண்ணி
ஜயந்திபுரத் திருவிழா
பூமா
சுருதிபேதம்
கெளரி,
முத்துச்சிப்பி,
சேவைக்கு ஒரு சகோதரி(சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு)
பல விருதுகளையும், கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசுகள் போன்ற பல பரிசுகளையும் பெற்ற இவர் கதைக்குத் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நாம் காணும் நம்மைப் போன்ற சராசரி மக்களே. அடுக்களை என்பது சமைக்கும் பாத்திரங்கள் மட்டும் வைக்கும் இடம் இல்லை, கதாபாத்திரங்களும் கிடைக்கும் இடம் என்பதை நிரூபித்துக்காட்டியவர் இவர்.



டிஸ்கி: கல்யாணமாம் கல்யாணம் தொடரும். கரையான்களோடும், மற்றப் பணிகளுமாகக் கொஞ்சம் வேலை, கொஞ்சம் பிசி, விருந்தினர் வருகை, ஊருக்குப் போனது, மீண்டும் விருந்தினர் வருகைனு சேர்ந்துகொண்டது. இன்னும் எழுதவே இல்லை! :)))))))))))

21 comments:

  1. அனுத்தமா எனக்குப் புதிது. தேடிப் பார்க்கவேண்டும் . இதுவரையில் படித்ததில்லை. இணையத்தில் உள்ளதா என்றுத் தெரியவில்லை. பார்க்கணும்

    ReplyDelete
  2. வாங்க எல்கே, அநுத்தமா மிகப் பழைய எழுத்தாளர். உங்களுக்குப் புதுசுங்கறீங்க. இணையத்தில் நாவல்கள் கிடைக்கின்றனவா தெரியலை. அவரைக் குறித்த செய்திகள் கிடைக்கும். சென்னை ஆன்லைனில் பாருங்கள். எல்லாத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் கிடைக்கும்.

    ReplyDelete
  3. சென்னை வந்தபிறகே நான் அதிகம் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். சொல்லப்போனால் பதிவெழுத ஆரம்பித்தப் பிறகு படித்ததுதான் அதிகம்

    ReplyDelete
  4. ஜெயஸ்ரீயின் பின்னூட்டம் மெயிலில்.

    Hi Mrs Shivam
    comments ஐ பப்லிஷ் பண்ணினா ப்லாகர் எரெர்னு வரது .SIGN IN னும் காணும் அதான் இப்படி :))
    sai ram
    jayashree


    எனக்கு இவரோட கதைகள் ரொம்ப பிடிக்கும் . கேட்டவரம் படிச்சதில்லையே! படிக்கணும் . பாக்யம் ராமசாமி??? உய்யோ சிரிச்சு சிரிச்சு AAA மறக்க மிடியாத டக் வெலோ பேபேயி!!:))

    லக்ஷ்மி அம்மா நான் சிரத்தையா படிச்சதில்லை. பின்னால வந்தவர்கள்ல தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி , நண்டு , அம்மா சிவசங்கரி , வாசந்தி . ஆமா எப்படியடி காதலிப்பது எழுதினவர் பேரு மறந்து போச்சே!!. என் பெஸ்ட் எழுத்தாலர்கள் , கதை – கல்லுக்குள் ஈரம் ராசு நல்ல பெருமாள் எங்கே போகிறோம் அகிலன்;))

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ, எப்படியடி காதலிப்பது? ஆநந்த விகடனில் வந்தது தொடராக. ராஜேந்திர குமார் ஞே என விழிப்பாரே எல்லாக் கதைகளிலும்! :)))))

    நீங்க சொல்லி இருக்கும் மற்றக் கதைகளும் பல முறை படிச்சிருக்கேன். :)))))

    ReplyDelete
  6. எல்கே, நாவல்கள் மட்டுமில்லாமல் பல புத்தகங்களும் நிறையப் படிக்கணும். வாசிப்பு அநுபவமே தனி. :)))))

    ReplyDelete
  7. ஜெயஸ்ரீ, இந்துமதி தரையில் இறங்கும் விமானங்களுக்குப் பின்னர் என்னைக் கவரவில்லை. சிவசங்கரியின் பாலங்கள் நன்றாக இருந்தது. மற்றக் கதைகள் எனக்கு அவ்வளவாப் பிடிக்கவில்லை. ஸோ, ஸோனு தோணும். வாசந்தியோடதும் ஒரு சில நன்றாகவே இருக்கும். லக்ஷ்மி நிறையப் படிச்சிருக்கேன். எல்லாம் ஒரே மாதிரியான நாவல்கள். :))))))

    ReplyDelete
  8. லக்ஷ்மியை விடவும், வசுமதி ராமசாமி, சரோஜா ராமமூர்த்தி, ஆர்.சூடாமணி, பிரேமா நந்தகுமார் போன்றவர்களின் நாவல்கள் வித்தியாசமாகவும், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும் இருக்கும். இவங்க பெயரெல்லாம் இக்காலப் பெண்களுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்.

    ReplyDelete
  9. ||இரவெல்லாம் இவர் நாவல்களை எழுதிக் குவிக்க, இவர் கணவர் அவற்றைத் திருத்திச் சரிபார்த்துப் பிரதிகள் எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பாராம். ||

    அப்படின்னா பத்மநாபன் எழுத்து அதாவது ஆண் எழுத்துக்குல்ல நீங்க இவங்களைப் பத்தி எழுதணும் ?!!

    அவ்வவ்வவ்வவ்வ..

    அப்புறம் கொஞ்சம் நவீன காலத்துக்கும் வாங்க கீதாம்மா...

    கேடி எஃபக்ட் இன்னும் போகலையா?!!

    டபுள் அவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்!!!


    நானும் கேள்விப்பட்டிருக்கேன் அநுத்தமா பற்றி,பெயர் பற்றி,எழுத்து பற்றி.

    ஒரு ரஷ்யப் பழமொழி அல்லது சொல்லாடல் இருக்கு...I am merely a forerunner of some body else, who is more fortunate than I அப்படின்னு...

    இதற்கு அநுத்தமா,கோதைநாயகி போன்றவர்கள் நல்ல எடுத்துக்காட்டுன்னு நினைக்கிறேன்..

    நாவல் உலகத்தை விட்டு வெளியில பெண்கள் ஆக்கபூர்வமா எதாவது எழுதிருக்காங்களா?

    எனக்குத் தோன்றிய வரை இந்துமதியும் வாஸந்தியும் கொஞ்சம் தொட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

    அப்புறம்...இன்னும் விரிவா எழுதி இருக்கலாம்னு சொன்னதால தொடர் பதிவ உண்மையாவே தொடர் பதிவாவே ஆக்கிட்டிங்க..

    நடத்துங்க..

    ReplyDelete
  10. கீதா ,பெண் எழுத்து எப்படி யொருன்தது என்பதை அழகாகப் பொருத்தமாக எழுதி இருக்கிறீர்கள் .கிருஷ்ணா அம்மாவை விட்டு விட்டீர்களே.
    அனுத்தமா ,பேருக்கு ஏத்தாற்போல உத்தமமான எழுத்தைக் கொண்டவர்.
    வசுமதி ராமசாமி வீட்டு அருகில் தான் வசித்துவந்தார். நிறையப் பார்த்திருக்கிறேன்.
    அவர்களுடைய கற்பகாம்பாள் சங்கம் பவுர்ணமி தோறும் ஏழைப் பெண்களுக்கு ஒரு திருமாங்கல்யம் வழங்கி
    வந்தது.
    நல்ல ராஜேந்திர குமார். நல்ல ஞே முழிப்பு.
    இன்னமும் அதெல்லாம் அப்படியே நினைவில் இருக்கிறது. எழுத்தாளர்களின் பொற்காலம் நாம் படித்த நற்காலம்:)

    ReplyDelete
  11. அப்புறம் கொஞ்சம் நவீன காலத்துக்கும் வாங்க கீதாம்மா...

    கேடி எஃபக்ட் இன்னும் போகலையா?!!//

    @அறிவன், கேடி எஃபக்ட் உங்க கிட்டேத் தான் நிறைய இருக்கு! :P:P:P:P

    நவீன காலத்துக்கு வரேன், வரேன், சரித்திரத்திலே ஆரம்பகாலத்திலே என்ன நடந்தது சொல்லவேண்டாமா? :)))

    வை.மு.கோ. அவர்கள் சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அவங்க எழுத்து வேறுவிதம்.

    நாவல் உலகைத் தாண்டி திருமதி அநுத்தமா நிறைய சேவைகள் செய்திருக்காங்க வெளியிலே விளம்பரம் பண்ணாமலேயே. இதோ கீழே வல்லி சொல்றதைக் கேளுங்க, இது போல் நிறைய! :))))))

    ReplyDelete
  12. இந்துமதி, வாசந்தி எல்லாம் சமகால எழுத்தாளர்களாயிடறாங்க, இல்லையா? மெதுவா வரேன்/ :))))))

    ReplyDelete
  13. வாங்க வல்லி, இவங்களை எல்லாம் பத்தி எழுத நிறைய இருக்கு. நேரப் பற்றாக்குறை, அப்புறமா ஒரே எழுத்தாளர் பத்திப் பக்கம் பக்கமா எழுதினா போர் அடிக்கும் என்ற எண்ணம் எல்லாமும் சேர்ந்து சுருக்கமா அறிமுகம் மட்டும் கொடுத்திருக்கேன். என்னோட கருத்துக்களைக் கூட மேலோட்டமாத் தான் சொல்லி இருக்கேன்.

    ReplyDelete
  14. கிருஷ்ணாவுக்கும் வரேன், அவங்களோட மாவிலைத் தோரணம் பைண்டிங் என் கிட்டே இருக்கு. அப்போ அப்போ எடுத்துப் படிச்சுப்பேன். :))))))) புத்தகமாய்க் கிடைக்கிறதில்லை. ரொம்ப அபூர்வமான தொகுப்பு இதெல்லாம். பத்திரமா வச்சிருக்கேன். பேப்பர் பேப்பராய் வருது! ஒரு மாதிரி சமாளிச்சுட்டுப் படிப்பேன்.

    ReplyDelete
  15. பெண் எழுத்தாளர்கள் நல்ல பகிர்வு.
    பல விடயங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது.

    லஷ்மி,சிவசங்கரி,இந்துமதி,வாஸந்தி, படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. enga veettil- 'penn ezhuththu' patri pathivu ezhutharaanga nnu enga amma appa kitta sonnen... enga appa--- "meenakshi maami"yum antha list-la seththukka vendiyathu thaan- nnu sonnar! oru vithaththula paaththaa athu unmai thaan... eppadi aduppu paththa vaikkanum-ngarathulernthu measure by measure samaiyal kurippu ezhutharathu- nijamaagave oru periya vela thaan... cookery book-aa irunthaalum- antha ezhuththoda effectiveness, enga amma pannara samayal-la theriyum... :)


    rombave rasichchen... 1 and 2-- sequence maaraama padichchen... very interesting!

    ReplyDelete
  17. மாதங்கி மெளலி, மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகங்களே நான் அநேகமாய் இளம்பெண்களுக்கு வாங்கி அளிப்பது. தற்சமயம் அவங்க பேத்தியோ கொள்ளுப் பேத்தியோ நவீன சமையலையும் சேர்த்திருக்காங்க. அதோடு பழைய அளவுகளுக்கான மெட்ரிக் அளவுகளும் சேர்த்திருக்காங்க. உண்மையிலேயே தற்காலப் பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான். கட்டாயமாய் அவங்களையும் குறித்து எழுதறேன். கிருஷ்ணசாமி ஐயரின் மகளோ, மருமகளோ, நினைவில் இல்லை. என்றாலும் வாழ்க்கைக்குறிப்புகள் கிடைக்கும். நன்றிம்மா சுட்டிக் காட்டியதற்கு.

    ReplyDelete
  18. வாங்க மாதேவி, இவங்களோட புத்தகங்களையும் வாங்கிப் படிச்சுப் பாருங்க. :)))))

    ReplyDelete
  19. I want எப்படியடி காதலிப்பது by ஜெயஸ்ரீ ...
    Vikadan'ல் தொடர்கதையாக வந்தது.

    ReplyDelete
  20. I want எப்படியடி காதலிப்பது by ஜெயஸ்ரீ ...
    Vikadan'ல் தொடர்கதையாக வந்தது.

    ReplyDelete
  21. ராஜரத்தினம், எப்படியடி காதலிப்பது எழுதியவர் ராஜேந்திர குமார். விகடனில் வந்ததுனு நினைவில் இருக்கு. பைன்டிங் இருந்தது. தொலைந்து போனவற்றில் அதுவும் ஒன்று. விகடன் பிரசுரமாக வந்திருக்க வாய்ப்பு உண்டு. கேட்டுப் பார்க்கவும்.

    ReplyDelete