எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 13, 2014

தலை அலங்காரம் புறப்பட்டதே!



மின் தமிழில் பேராசிரியர்  நாகராஜன் அவர்கள் அந்தக் காலத்துத் தலை அலங்காரத்தைக் குறித்த படங்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருந்தார்.  இதைப் பார்த்ததும் எனக்கு என்னோட தலை அலங்காரங்கள் எல்லாம் நினைவில் வந்து கன்னாபின்னாவென மோதிக் கொண்டு இப்போ இருக்கும் அலங்காரத்தைக் கலைக்கப் பார்த்தன. ஆஹா இப்பூடி விடக் கூடாதேனு அதைக் குறித்து எழுதிடலாம்னு நினைச்சேனா.  உடனே செயல்படுத்தியாச்சே!  18 ஆம் எண்ணின் சிறிய படத்து முதல் அலங்காரம் ஆன இரட்டைச் சாட்டை அளவுக்கு நீளம் இல்லாட்டியும் இரட்டைப் பின்னல் பின்னிக் கொண்டு மடிச்சுக் கட்டறது 50களின் கடைசியிலும் 60 களின் ஆரம்பத்திலும் பிரபலமான ஃபாஷன்.  "கல்யாணப்பரிசு" சரோஜா தேவி ஸ்டைல்னு சொல்வாங்க.  நாங்களும் அப்படிப் போயிருக்கோமுல்ல!

அதே பதினெட்டின் வைரஜடை முன்புறம், பின்புறம் (19 ஆம் எண்) படங்களில் இருக்கிறாப்போல் அலங்காரக் கொடிப்பின்னல் வாங்கி வைச்சிருக்கோமாக்கும்.

16, 17 ஆம் எண்ணிலுள்ள இரட்டைச் சடை அரைப்பின்னல் நமக்கு ரொம்பவே இஷ்டமாயிட்டு.  வீட்டிலே இருந்து போறச்சே மடிச்சுக் கட்டிண்டு போயிட்டு ஸ்கூல் போனதும் தோழிகள் அவிழ்த்து அரைச்சடையாகப் பின்னித் தொங்க விடுவாங்க.  மறுபடி வீட்டுக்குப் போறச்சே சேம் விளையாட்டு விளையாடிட்டுப் போகணும். :)))) அதென்னமோ அரைப்பின்னல் பின்னித் தொங்கவிட்டால் கோபம் வரும் எல்லாருக்குமே! ஏன்???  இரட்டையாகப் பின்னலைப் பின்னிட்டுப் பின் அதை ஒற்றையாகச் சேர்ப்பாங்க.  எனக்கு என்னமோ அந்தப் பின்னல் பிடிக்காது. :)




எட்டாம் படத்தின் இரட்டைப் பிச்சோடாவும் சரி ஒன்பதாம் படத்தின் சுருள் பின்னலும் சரி, நவராத்திரி ஸ்பெஷலாகப் பின்னிட்டிருக்கோம்.  இதுக்காக ஸ்கூலுக்கு லீவெல்லாம் போட்டுட்டு வீட்டுக்கு வந்த அனுபவம் எல்லாம் உண்டு. அதே போல் பிரிமணை வத்தும் கொண்டை போட்டுக் கொண்டதுண்டு.  எங்க அப்பா, அம்மாவின் சிநேகிதி ஒருவர் செல்லம்மா அக்கா என்பவர் மணிபர்ஸ் பின்னல் என்றொரு பின்னல் பின்னுவார். அது இந்த ஏழாம் படத்தின் பாப் தலை போலத் தான் இருக்கும். இதைத் தவிர எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆற்றுப் பின்னல்னு பின்னிப்போம்.  எனக்குக் கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்து மூணு வருஷத்துக்கு அப்புறமா என் கணவரோட அத்தை எனக்குத் தாழம்பூ வைச்சுப் பின்னி விட்டாங்க.  அவங்க ஊரான கீழத்தஞ்சாவூரில் இருந்து எங்க புக்ககம் ஆன கருவிலி-பரவாக்கரைக்கு அந்தத் தாழம்பூப் பின்னலோடு வந்திருக்கேன்.  ஹிஹிஹி, சின்னப் பொண்ணு தானே!  அதனால் அப்போல்லாம் ஒண்ணும் புரியலை!




இந்த மலையாளக் கொண்டை போட்டுக் கொண்டது இல்லைன்னாலும் கிருஷ்ணன் கொண்டை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கே போயிருக்கேன். இதுவும் நவராத்திரி ஸ்பெஷல் தான். வலைக் கொண்டைனு நெட் வைச்சுக் கொண்டை போட்டிருக்கேன்.  அந்த வலையிலே வித விதமான மணிகள், சம்க்கிகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.  இந்த அள்ளிச் சொருகிய கொண்டைக்குத் தான் இன்னி வரைக்கும் என் தலை மயிர் சொன்னதைக் கேட்டது இல்லை. :))) எப்படிச் சொருகிக் கொண்டாலும் அவிழ்ந்து விடும்.  இதோடு இல்லாமல் மல்லிகைப் பூக்காலத்தில் குறைந்தது இருமுறையாவது பூத்தைத்துப் பின்னல் போட்டுக் கொண்டிருக்கிறேன்.


குஞ்சலங்கள் வித விதமாக வைத்துக் கொண்டிருக்கேன். சிவப்புக் குஞ்சலம், கறுப்புக் குஞ்சலம், குஞ்சலத்திலேயே ஜரிகை சுற்றியது, மணிகள் வைத்ததுனு விதவிதமான வெல்வெட்டுக் குஞ்சலங்கள் வைத்திருந்தேன். சில குஞ்சலங்களில் சவுரி மாதிரி நீளமாகக் கயிறுகள் தலைப் பின்னலிலேயே வைத்துப் பின்னும்படியும், நுனியில் பிசிர் பிசிராகவும் இருக்கும்படியாக உண்டு.  அந்தக் குஞ்சலங்கள் எனக்குப் பிடித்ததில்லை.  அநேகமாக உருண்டைக் குஞ்சலங்கள் தான்.  ஆண்டாள் கொண்டை போட்டுக் கொண்டு அதிலே நடுவிலே ராக்கொடி அல்லது சூர்யப்ரபை, சந்திரப்ரபை, ஜடைபில்லை ஏதானும் ஒன்றை வைத்துத் தைத்துக் கொண்டு ஜிமிக்கியை அதில் கட்டித் தொங்க விடுவாங்க. நாம் பேசும்பொதெல்லாம் தலைக்கொண்டையில் அது அழகாக ஆடும்.  இந்த அலங்காரங்கள் எல்லாம் செய்து விடுவது எங்க வீட்டில் வீட்டு வேலைக்கு உதவிக்கு இருந்த சுப்பம்மா என்னும் அம்மா தான்.  வளையல்கார நாயக்கர்களான அவங்களோட கைவண்ணம் இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  மீனாக்ஷி கோயிலுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் கட்டளையும், வளையல் திருநாளில் வளையல்கள் அளிக்கும் கட்டளையும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தது.  எங்க வீட்டு வளைகாப்புக்கெல்லாம் அவங்க வீட்டிலே இருந்து வந்து தான் வளை அடுக்குவாங்க.    எல்லாரும் பார்த்து ரசிங்க. ஒரு வழியாப் பல நாட்கள் கழிச்சு ஒரு கொசுவத்தி சுத்தியாச்சு! :)))))

32 comments:

  1. அடடா...! இத்தனை விதங்களா...?

    ReplyDelete
  2. தலை அலங்காரங்களில் மலரும் நினைவுகள் மணந்தன. பாராட்டுக்கள்..!

    செவ்வந்திப்பூ சீசனில் இல்லத்தில் பூத்த பூக்களை எடுத்து தலையில் வைத்து பின்னிவிடுவார் சித்தி..

    ஸ்கூலுக்கு லேட்டானாலும் ஆசிரியை பின்னலை ரசித்துப்பார்த்து பாராட்டுவார்..!

    ReplyDelete
  3. பின்னிட்டீங்க...

    முதல் படத்துல இருக்கறது உங்க சின்ன வயசுப்படமா... நடிகை ஜமுனா மாதிரியே இருக்கீங்க! :)))

    ReplyDelete
  4. தலைப்பும் சரி, பதிவுப் படங்களும் சரி அற்புதம்.

    நேர்த்தியான பதிவு. ஸ்பெஷல் கங்கிராட்ஸ், கீதாம்மா.

    மயில் தோகை போன்று விரிந்திருக்கும் அளகபாரத்தின் அழகுக்கு அழகு சேர்த்த அழகு தான் என்னே!

    பிச்சோடாவைக் காணோம் பார்த்தையா என்று ராக்கொடி போட்டுக் கொடுத்தது.

    அதே போலத் தான். திருவாங்கூர் சகோதரிகளில் லலிதாவை மட்டும் காணோம். இல்லை, பத்மினியை மட்டுமா?.. ராகினிக்கு மற்ற இருவரிடமிருந்தும் வேறுபடுத்தும் முகம் என்பதினால் அடையாளம் கண்டதில் அதிசயமில்லை.

    இடுக்கில் மறைந்திருந்த 'பொக்கிஷம்' ப்ளாக் மட்டும் என்ன? சுட்டுப் போட்டதைச் சுட்டிக் காட்டும் அசத்தல் அது.

    ReplyDelete
  5. ஹாஹா, டிடி, இதிலே நான் விட்டது நாலு கால் பின்னல், எட்டுக்கால் பின்னல் போன்றவை. அதெல்லாம் என் சித்தி (அசோகமித்திரன் மனைவி) போட்டு விடுவாங்க. மணி பர்ஸ் பின்னல் எங்க பள்ளியில் ரொம்பவே பிரபலம். :))))

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, ஆமாம், ஜவந்திப் பூப் பின்னலை மறந்துட்டேன். அம்மா பின்னிவிடுவாங்க. தலையோடு வைச்சுத் தைச்சுட்டு மறுநாள் அவிழ்க்கையில் அழுவேன். :))))

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நான் இல்லை; இல்லை; இல்லவே இல்லை. கீழே பாருங்க ஜீவி சார் கரெக்டாச் சொல்லி இருக்கார். அது ராகினி! :))))

    ReplyDelete
  8. வாங்க ஜீவி சார், லலிதாவும், ராகினியும் மட்டும் தான் இருக்காங்க. பத்மினி தான் இல்லை. :)))) மின் தமிழில் இன்று வந்த ஒரு இழையிலிருந்து படங்களைச் சுட்டுத்தான் போட்டேன். அதான் பேராசிரியர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேனே! :))))

    ReplyDelete
  9. சொல்ல மறந்துட்டேனே ஜீவி சார், ரசனைக்கு நன்றி. யாருமே ரசிக்கலையேனு வருத்தமா இருந்தது. :))))

    ReplyDelete
  10. ரண்டு பேரும் தப்பு. லலிதாவும் பத்மினியும் தான் இருக்காங்க. ராகினியைக் காணோம். அவங்க எல்லாவிததிலயும் வேறு. மற்றபடிச் சுட்டுப்போட்டாலும் சுடாமல் போட்டாலும் அருமையான நினைவலைகளைக் கிளப்பி விட்டீர்கள் கீதா. சரோஜாதேவி ஸ்டைல் பின்பற்றப் பட்டதும் பணத்தோட்டம் படத்திலிருந்துதான். என் தோழிக்குக் குட்டை சடை. அவள் வெகு அழ்காக இரட்டை ஜடைகள் போட்டு அழகாக வருவாள். என் ஜடை நீலத்ஹ்துக்கு இந்த மடித்துக் கட்டுதல் தோளுக்கும் கீழே போய்விடும் ரசிக்காது. ஆஹா என்ன ஒரு கொடுவத்தி. சூப்பர் பகிர்வு மா.

    ReplyDelete
  11. அட??? வல்லி, வைர ஜடை முன்புறம் போட்டிருப்பது பார்த்தால் ராகினி மாதிரித் தானே இருக்கு!!!!!!!!!!!!!!!!! கீழே லலிதா இல்லையா? பத்மினியா????????????????

    ReplyDelete
  12. கீதாம்மா, நீங்க தான் ரைட். எந்த சந்தேகமும் வேண்டாம்.

    முதல் படம் ராகினியே தான்.

    வல்லிம்மாக்கு ராகினி முகம் கூட மறந்து போயிடுச்சேன்னு எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.

    பொக்கிஷத்தில் ஆ.வி. நிழலாடுகிறது. எல்லாம் உங்களுக்கே தெரிஞ்ச ஆவி தான்.

    ReplyDelete
  13. எனது முந்தைய பின்னூட்ட ஆராய்ச்சி கேன்சல்டு

    சிறிய சைஸ் படத்தை தீட்சண்யமாகப் பார்த்த போது தான் தப்பு தெரிந்தது.

    வல்லிம்மா, ஃபைன். நீங்க தான் கரெக்ட்.

    ராகினி தான் இந்தப் படங்களில் இல்லை. முதல் படம் லலிதா. இரண்டாவது பத்மினி.

    ReplyDelete
  14. கடைசிப்படம் பத்மினி மாதிரி தான் இருக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் பல் நினைவுகள் வந்து அலை மோதுகிறது. பள்ளி நாட்கள், கொலு....என்று பல இனிய நினைவுகள் கொண்டு வந்து விட்டீர்கள் கீதா மேடம்.

    ReplyDelete
  15. வல்லிம்மா சொன்னதே ரைட்டு!.. பத்மினி தான்!.. மலரும் நினைவுகள் சூப்பர்!.. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும் அம்மா!.

    ReplyDelete
  16. விடுங்க ஜீவி சார், மூணு பேரிலே யாரோ ரெண்டு பேர். :))))

    ReplyDelete
  17. வாங்க ராஜலக்ஷ்மி, நன்றி.

    ReplyDelete
  18. வாங்க பார்வதி, நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். எனக்கு அவ்வளவெல்லாம் தெரியறதில்லை. மூணு பேரிலே ராகினியை மட்டும் தான் கொஞ்சம் சுலபமாக் கண்டுபிடிப்பேன். இன்னிக்கு அதுவும் இல்லை. :)))))

    ReplyDelete
  19. முதலில் உங்க எல்லாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.
    இப்ப ஜடைக்கு வருவோம். ரெட்டை சாட்டை தெரிஞ்சது நாம எல்லோருமே போட்டதா இருக்கும்! பிரிமணை, மெட்ராஸ், தாழம்பூ, சுருள் பின்னல் எண்ணை வைரம் எல்லாம் பாத்தது இந்த ரெட்ட பிச்சோடா பாத்ததில்லை. சொருக்கு கொண்டை ?? படத்துல இருக்கறது இல்லை குளியல் கொண்டை அது ?
    18 ராகினி மாதிரி தான் இருக்கு

    ReplyDelete
  20. நானும் அப்படித்தான் நினைச்சேன் ஜெயஶ்ரீ. வல்லியும், பார்வதியும் இல்லைங்கறாங்க. போகட்டும், அவங்க மூணு பேரில் யாரோ இரண்டு பேர். அம்புடே :))))

    ReplyDelete

  21. பூஃபாங் கொண்டை என்று ஒன்று உண்டு தெரியுமா.?இதில் எதிலும் சேராத கொண்டையாக என் மனைவி வெயில் காலத்தில் தூக்கிக்கட்டுவாள். அழகாகவும் இருக்கும் சௌகரியமாகவும் இருக்கும். தற்காலத்திய ஃபாஷன் அள்ளி முடியும்போது நுனி கற்றை தனியே தெரிய வேண்டும் பின்னல் என்பது மூச்..! முகத்தில் முடி தொங்க வேண்டும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. கீதாம்மா.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  23. பூஃபாங்க் கொண்டை தெரியாது. ஆனால் அள்ளி முடியும்போது நுனி கற்றை தனியே தெரியும்படித் தான் நான் முடிஞ்சுப்பேன். :)))) அதான் எனக்குப் பணக்கார லுக் கொடுக்குதுனு எங்க பொண்ணு சொல்லுவா. :))))))

    ReplyDelete
  24. புத்தாண்டு வாழ்த்துகள் ஜீவி சார், இங்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இம்முறை காலை வருமாறு பதிவை ஷெட்யூல் செய்யமுடியாமல் போய் விட்டது.

    ReplyDelete
  25. ரசிக்க வைத்தன படமும் செய்திகளும்.

    ReplyDelete
  26. ரசிக்க வைத்தன படமும் செய்திகளும்.

    ReplyDelete
  27. அந்தக் கால படங்கள்... விதம் விதமான கூந்தல் அலங்காரம் ரசிக்கும்படி இருந்தது.

    படங்கள் உங்களுடைய நினைவலைகளை மீட்டி விட்டது போலும்.....

    விதம் விதமாக பின்னி, அதில் பூஜடை தைத்து அலங்காரம் செய்வார் பெரியம்மா....

    ReplyDelete
  28. நன்றி சிவகுமாரன், வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. ஆமாம், வெங்கட், கொசுவத்தி சுத்திட்டேன். :))))

    ReplyDelete
  30. அட, அட! என்ன ஒரு அருமையான மலரும் நினைவுகள். பின்னிட்டீங்க! பாலும் பழமும் வந்த புதிதில் அதில் சரோஜாதேவி போட்டுக்கொண்டு வரும் கொண்டை பிரபலமாயிற்று. என் அம்மா கூட அதைப்போல போட்டுக்கொள்வார்.
    சின்ன வயதில் ஸ்ரீரங்கத்திற்கு கோடை விடுமுறையில் வந்தால் பாட்டி ஒருநாள் தாழம்பூ ஜடை, ஒரு நாள் மல்லிமொக்கு ஜடை என்று பின்னி விடுவார். நடுநடுவில் சின்ன சின்ன பொம்மைகள் வைத்து பாட்டி பின்னிவிடுவார். போட்டோ கூட இருந்தது. இப்போது எங்கேயோ?
    எங்கள் வீட்டில் எங்கள் அக்கா தான் கூந்தலழகி. நமக்கு எப்போதுமே பற்றாக்குறை தான். ஆனால் எனக்குதான் விதம்விதமாகப் பின்னிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை!

    ReplyDelete
  31. வாங்க ரஞ்சனி. விதவிதமாய்ப் பின்னி இருக்கேன். :)))

    ஹிஹிஹி, பாலும், பழமும் படம் இன்னமும் பார்க்கவில்லை. பார்த்தப்புறமாச் சொல்றேனே சரோஜாதேவி கொண்டை பத்தி. :))) ஆனால் அஜந்தா கொண்டைனு ஒண்ணு உண்டு பாருங்க, அந்தக் கொண்டை நான் போட்டுக் கொண்டிருக்கேன்.

    கூந்தலழகினு சொல்ல முடியாட்டியும் அடர்த்தியான கூந்தல் இருக்கும். கைகளுக்குள் பிடிக்க முடியாது. அந்த அடர்த்திக்கு நீளம் கம்மியாத் தெரியும். இப்போ அடர்த்தியும் இல்லை. நீளமும் இல்லை. :))) எங்கே போச்சுனு தெரியலை.

    ReplyDelete
  32. எங்க பெண்ணுக்குத் தான் கருகருவென சுருட்டையான சில்க் மாதிரியான கூந்தல். இப்போ அமெரிக்கா போனதும் குட்டைத் தலைமுடியைப்பார்க்கிறச்சேயே எனக்குக் கண்ணீர் வரும். அவ்வளவு போஷாக்கு பண்ணி அந்தக் கூந்தலை வளர்த்தேன். :)

    ReplyDelete