எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 07, 2014

காக்கைக்கூட்டில் குயிலா? கழுகா? --1

மழை கொட்டிக்கொண்டிருந்தது. ரவி அன்று வேலைக்குச் செல்லவில்லை. காலையிலிருந்தே பெய்து கொண்டிருந்த மழையில் உடம்பில் சோம்பல். மனைவியோடு வீட்டில் இருக்க மனம் மிக விரும்பியது.  அதோடு அன்று ஏதோ முக்கியமான ஒரு நிகழ்வு நடக்கப் போவதாய் அவன் மனம் சொல்லியது. சாதாரணமாக இம்மாதிரி உள்ளுணர்வுகளை அவன் நம்பியதில்லை.  ஆனால் அன்று ஏதோ ஒரு பரபரப்பு; தவி தவிப்பு. தன் வீட்டு முன்னறையில் அமர்ந்து இரவு உணவுக்குப் பின்னரான காஃபியை ருசித்துக் கொண்டிருந்தான் ரவி.  உள்ளே குழந்தை அழும் சப்தம் கேட்டது.  உள்ளே திரும்பிப் பார்த்தான்.  அவன் எதிர்பார்த்தது போல் சற்று நேரத்தில் அவன் மனைவி கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடியில் கிடத்திய வண்ணம் அதற்குப்பாலூட்டத் தொடங்கினாள்.

"எங்கே மற்றதுகள்?" ரவி கேட்டான்.

"எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறாங்க!" மென்மையாகச் சிரித்த சாந்தி, பால் குடிக்கையில் குழந்தை கடித்தானோ என்று தோன்றும்படியாக லேசாக முகத்தைச் சுளித்தாள். அதைப் பார்த்த ரவி சிரித்த வண்ணம் கண்ணடித்தான். "இவனுக்கு நாலு மாசம் ஆகிவிட்டது போலிருக்கே?" என்று கேட்டான்.  "ஆமாம், அதுக்கு என்ன?" என்றாள் சாந்தி.  "ஒண்ணும் இல்லை;  இவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேண்டாமா?" என்றான்.

"வேலையில்லை உங்களுக்கு?" என்று பொய்க்கோபத்துடன் அதட்டின சாந்தி, கொஞ்சம் யோசித்த வண்ணம், "இத்தோடு நிறுத்திக் கொள்வோம்; ரவி. ஏற்கெனவே நான் ஆறுமாசமாய் வீட்டில் இருக்கிறேன்.  இன்னும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன.  அதிலே கடைசிக் குழந்தை பெண் குழந்தை வேறு. ஆக நமக்குக் குழந்தை பாக்கியம் அமோகமாகத் தானே இருக்கு! இது போதாதா! இப்போதைக்கு உங்க சம்பாத்தியத்தில் தானே சமாளிக்க வேண்டி இருக்கு! இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால் நானும் வீட்டில் இருந்தே என் வேலையை ஆரம்பிக்க எண்ணி இருக்கேன். " என்றாள்.

தன்னிரு கைகளையும் தூக்கி விரித்துக் காட்டிய ரவி, "அப்புறமா உன் இஷ்டம்! என்னைக் குறை சொல்லாதே! " என்று சொல்ல விளையாட்டாக அவன் மேல் சோஃபாவின் மெத்தையைத் தூக்கி எறிந்தாள் சாந்தி. அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.  இருவரும் திரும்பிப் பார்க்கையில் ஏதும் சப்தமே இல்லை.  மறுபடியும் அவர்கள் விளையாட்டைத் தொடரலாமா என ரவி யோசிக்கையில் இம்முறை அழுத்தமாகக் கதவு தட்டப்பட்டதோடு ஒரு பெண்குரல், "தயவு செய்து கதவைத் திறவுங்கள். " என்றும் சொன்னது.  ரவிக்கு என்னமோ சுருக்கென்று மனதில் தைத்தது.  இந்த நேரத்தில் இந்தக் கொட்டும் மழையில் யார் வரப் போகிறார்கள்?  தன் மனைவியைப் பார்த்து, "பேசாமல் இரு!  இந்த அத்வானத்தில் இந்தக் கொட்டும் மழையில் இங்கே யார் வரப் போறாங்க? ஏதேனும் பிரமையாக இருக்கலாம்.  இல்லைனா குழந்தைங்க உள்ளே கதவை மூடித் திறந்து விளையாடலாம்."  என்றான்.

உள்ளே சென்று குழந்தைகளைப் பார்த்தாள் சாந்தி.  அவர்களில் கடைசிக் குழந்தையான சுஜா விளையாடிக் கொண்டே தூங்கி இருக்கிறாள்.  நாலு வயதாகும் அவள் மேல் ரவிக்கு உயிர்.  அதற்காக மற்றக் குழந்தைகளிடம் பாசம் இல்லை என்றெல்லாம் இல்லை.  இவள் தன் அம்மாவைப் போல் இருப்பதாக அவன் எண்ணம். அதனாலேயும், மூத்த இரு ஆண் மகன்களுக்குப் பின்னர் பிறந்த ஒரே பெண் என்பதாலும் அவளை மிகவும் நேசித்தான். கடைசியாக  இப்போது பிறந்திருக்கும் குழந்தையும் ஆணாகப் போய்விட்டது. சாந்தி குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் அவள் கட்டிலில் படுக்க வைத்துப் போர்த்தி விட்டாள்.  மற்ற இருவரையும் கொஞ்சம் கொஞ்சி, கொஞ்சம் கெஞ்சிப் படுக்க வைத்தாள்.  இருவருக்கும் போர்த்திவிட்டுப் பின்னர் மீண்டும் முன்னறைக்கு வந்தாள்.

வரும்போதே முன்னறையிலிருக்கும் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் யாரோ நிற்பது போல் தெரிந்தது.  கூர்ந்து கவனித்தாள் சாந்தி.  யாரோ ஒரு பெண் நிற்கிறாள் போல!  அவள் பார்வை போகும் திக்கைக் கவனித்த ரவி, அதைத் தெரிந்து கொண்டு, "பேசாமல் விடு சாந்தி!  மழை நிற்கும் வரை வராந்தாவிலே தங்கிட்டுப் போகட்டும். உள்ளே எல்லாம் கூப்பிட்டு உபசாரம் பண்ணாதே.  எனக்கென்னமோ அதிலே ஆபத்து இருக்குனு உள்ளுணர்வு சொல்லுது!" என்றான்.  சாந்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  "எப்போதும் என்னைக் கேலி செய்வீர்களே ரவி!  இப்போ உங்களுக்கே உள்ளுணர்வு உறுத்தலா?" கேலி செய்தவண்ணம் வாசல் கதவுக்காகச் சென்ற சாந்தி கதவைத் திறந்தாள்.

வெளியே ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், பிரசவம் இப்போவோ, அப்போவோ என்னும்படியாக இருந்த நிலையில் அங்கே தரையில் அமர்ந்திருந்தாள்.  அவள் கையில் பையோ, வேறு பெட்டியோ எதுவுமே இல்லை என்பதை சாந்தி கவனிக்கவே இல்லை.  கர்ப்பிணிப் பெண் என்பது மட்டுமே தெரிந்தது.  அவளை உள்ளே அழைத்தாள்.  அந்தப் பெண்ணும் உள்ளே நுழைந்தாள்.  அவள் உள்ளே நுழைகையிலேயே ரவிக்கு உடம்பு சிலிர்த்தது. தன்னையும் அறியாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.  அவள் கண்களில் ஓர் வெற்றிப் பெருமிதம் ஒரு கணம், ஒரே கணம் தெரிந்த மாதிரி இருந்தது.  அடுத்த நொடியிலேயே அவள் சாதாரணமாக ஓர் அந்நியனைப் பார்ப்பது போலவே அவனைப் பார்த்தாள். இவளுக்கு நம் மனதில் உள்ளது எப்படித் தெரியும் என்ற வியப்பு மாறாமல் விரிந்த கண்களுடனேயே ரவி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் உள் மனது இவளை இங்கே அனுமதிப்பது சரியல்ல என்று கூவிக் கொண்டிருந்தது.

சாந்தி அந்தப் பெண்ணிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள்.  அவர்கள் வீட்டுக்குச் சுற்றும் முற்றும் அதிகம் வீடுகள் வரவில்லை.  ஏதேனும் அவசரம் எனில் இரண்டு மைல் வண்டியில் போய் முக்கியச் சாலை சென்று தான் நகரத்துக்குள் செல்ல வேண்டும்.  இந்தப் பெண் நகரத்துக்குப் போகிறாள் போல் இருக்கிறது.  காலை விடிந்தவுடன் செல்வதாய்க் கூறுகிறாள்.  அவளுக்கு முன்னறைக்குப் பக்கத்தில் இருந்த ஓர் அறையில் படுக்க ஏற்பாடு செய்துவிட்டு அவள் சாப்பிட்டாளா என்று கேட்டுக் கொண்டு அவளுக்குச் சூடான பால்கொடுத்து உபசரித்துவிட்டுப் படுக்கச் சென்றாள் சாந்தி. அரை மனதாக ரவியும் மனைவியைப் பின் தொடர்ந்தான்.  அன்றிரவெல்லாம் அவனுக்குச் சரியான தூக்கம் இல்லை.  ஆனால் நாளைக்காலை வேலைக்குச் சென்றே ஆகவேண்டும்.  முக்கியமான ஒளிப்பதிவு நாளைக்கு இருக்கிறது.  விடிகாலை வேளையில் தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தான் ரவி.

அந்தப் பெண் வந்து தன்னையும், சாந்தியையும் பிரித்து விடுவதாகக் கனவு கண்டு கொண்டிருந்த ரவியை யாரோ தட்டி எழுப்பினார்கள்.  வேறு யாரும் இல்லை; சாந்தி தான்.  காலை எழுந்து காஃபி போட்டுக் கொண்டு அந்தப் பெண் படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்தால் உள்ளே அவள் இல்லை; கழிவறை சென்றிருக்கலாம் எனச் சிறிது நேரம் சாந்தி பொறுத்துப் பார்த்தும் அவள் வரவில்லை.  வெளியே, தோட்டத்திலே, கொஞ்ச தூரம் சாலையிலே எனத் தேடிப் பார்த்தும் காணாமல் தான் வேறு வழியில்லாமல் தான் அவனை எழுப்பினாள் சாந்தி. எழுந்ததும் விஷயத்தைக் கேட்ட ரவிக்குக் கோபம் தன்னை மீறி வந்தது.

"இதுக்குத் தான் கண்டவர்களை உள்ளே விடாதேனு சொன்னேன், கேட்டியா! இப்போப் பார்!" என்று கோபமாக ஆரம்பித்தவனை இடைமறித்தது அந்த அழுகுரல்.  சின்னக் குழந்தையின் அழுகுரல்.  பிறந்த குழந்தையின் அழுகுரல். சாந்தியிடம்," குழந்தை அழுகிறது பார்!  பால் கொடுத்தாயா?" என்று கேட்க, அவளோ, "இது நம்ம குழந்தையோடு அழுகை இல்லைங்க.  அவனுக்கு இப்போத் தான் பால் கொடுத்துத் தூங்க வைத்தேன்.  தொட்டிலில் தூங்கறான். இந்தக் குரல் வெளியே இருந்து வருதே!" என்றாள்.  உடனே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெளியே சென்று பார்த்தால் வராந்தாவில் ஓர் ஓரமாகக் கம்பளிப் போர்வைக்குள் சுற்றியபடி ஒரு குழந்தை இருந்தது.

டிஸ்கி: இந்தக் கதையின் மூலம் ஒரு ஆங்கிலக் கதை. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்னர் படித்தேன். இதன் சுருக்கம் இரு வருடங்கள் முன்னரே கொடுத்திருந்ததால் ஏற்கெனவே படித்தவர்கள் முடிவைப் பகிரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். :))) இதைத் தமிழகச் சூழ்நிலைக்கு மாற்றிக் கதாநாயகன், நாயகி பெயரையும் மாற்றியுள்ளேன். கொஞ்சம் விரிவாகவும் எழுத எண்ணம்.

14 comments:

  1. குழந்தை பாக்கியம் அமோகமாகத் தான் இருக்கு...!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, டிடி, இது ஆங்கிலக் கதை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதும் குடும்பக் கட்டுப்பாடு என்பது இல்லை. ஒரு வீட்டில் நாலு குழந்தைகள் என்பது சர்வசகஜம். இப்போதும். ஆகவே அந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டுள்ள கதை. நம் நாட்டிலும் ஒரு நாற்பது வருடங்கள் முன்னர் வரை மூன்று குழந்தைகள், நான்கு குழந்தைகள் சர்வ சாதாரணமாக இருந்தே வந்திருக்கின்றன அல்லவா? அப்படி நினைச்சுக்கவும். :))))))

    ReplyDelete
  3. முதல்லே வெளிநாட்டுச் சூழ்நிலையிலேயே தான் எழுத நினைச்சேன். அப்புறமா வேணாம்னு தோணிச்சு. :))))

    ReplyDelete
  4. எழுதுங்க... எழுதுங்க... சூழல் விவரிப்பு ஜோரா இருக்கு!

    //இதன் சுருக்கம் இரு வருடங்கள் முன்னரே கொடுத்திருந்ததால் ஏற்கெனவே படித்தவர்கள்... //

    ரெண்டு வருஷம் முன்னாடியா? என்ன தேதி? :)))

    ReplyDelete
  5. @ஶ்ரீராம், ஹாஹாஹாஹா, உங்களால் கண்டு பிடிக்க முடியாத்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. முடிவு தெரிந்து கொள்ள தொடர்கிறேன். இரண்டு வருடம் முன்பு எழுதியது படித்த நினைவில்லை.

    ReplyDelete
  7. அப்பாதுரை, இதானே வேணாங்கறது! :)))))) கண் பிடுங்கி நீலன் தூக்கத்திலே சொப்பனத்திலே வந்து பயமுறுத்தறான்.சீக்கிரமா எழுதுங்க. :)))

    ReplyDelete
  8. வெங்கட், நீங்க படிச்சிருக்கும் சாத்தியமே இல்லை. :))))

    ReplyDelete
  9. சுவாரஸ்யமாகச் செல்கிறது! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  10. வாங்க சுரேஷ், நன்றிப்பா.

    ReplyDelete
  11. இந்த முடிவே கதையைச் சிறப்பிக்கிறது. மேலும் நீட்டி முடிக்கப் போகிறீர்களா?

    ReplyDelete
  12. ஹாஹாஹா, ஜிஎம்பி சார், நான் படித்த புத்தகம் கிட்டத்தட்ட முந்நூறு பக்கங்களுக்கும் மேல் இருந்தது. நானே அதைச் சுருக்கிக் கொடுக்கப் போறேன். இப்போத் தான் கதையே ஆரம்பம். :))))

    ReplyDelete
  13. கதை நன்ராக இருக்கிரது.
    தொடர்கிறேன்.
    நிறைய பாக்கி இருக்கு படித்து விடுகிறேன்.

    ReplyDelete