எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 23, 2017

நவராத்திரி நான்காம் நாளுக்கான குறிப்புகள்




நவராத்திரி நான்காம் நாளுக்கான தேவி கூஷ்மாண்டா எனப்படுவாள். உலகைப் படைத்தவள் என்னும் பொருளில் ஆதி சக்தி துர்கா தேவியை இந்தப் பெயரில் அழைத்து இன்று வழிபடுகின்றனர். சிலர் வாராஹியாகவும் வழிபடுவதுண்டு.

வாராஹி க்கான பட முடிவு
 வாராஹி க்கான பட முடிவு
படத்துக்கு நன்றி கூகிளார்

அன்னை ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் வாராஹி அன்னையின் படைக்குத்  தலைமை வகித்தவள்.  சத்ருக்களிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாக்க அன்னை வாராஹியை வழிபட வேண்டும். இன்றைய தினம்  மஹாலக்ஷ்மியாக சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும்படி அன்னையை அலங்கரிக்கலாம். ஷோடதசாக்ஷரி என்னும் பெயராலும் அழைக்கப்படுவாள்.  அக்ஷதை, மலர்கள் இரண்டாலும் கோலம் போடலாம். படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். கீழே குறுகி மேலே செல்லச் செல்ல அகலமாக இருப்பது போல் போட வேண்டும். வாழ்வில் படிப்படியாக உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.

செந்தாமரை, ரோஜா மலர்கள், கதிர் பச்சை, கஸ்தூரி மஞ்சள் பொடி போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ஜயதுர்கையாக நினைத்து வழிபடும் அன்னையை ரோகிணி என்னும் பெயரால் அழைக்கலாம். ஐந்து வயதுப் பெண் குழந்தையை ரோகிணியாகப் பாவித்து வழிபட வேண்டும்.  நிவேதனத்திற்குக் கதம்ப சாதம் செய்யலாம். மாலை பட்டாணிச் சுண்டல் செய்யலாம். கதம்ப சாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போலத் தான். காய்கறிகள் நிறையப் போடணும் என்பதோடு நாட்டுக்காய்களாகவும் இருக்கவேண்டும். பூஷணி, பறங்கி, வாழைக்காய், முருங்கைக்காய்( விருப்பமானால்), கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, அவரை, கொத்தவரை போன்றவை போடலாம். மொச்சை இருந்தால் ஊற வைத்துச் சேர்க்கலாம்.

அரிசி ஒரு கிண்ணம் எனில் சரி சமமாகத் துவரம்பருப்புப் போடலாம். இரண்டையும் நன்கு குழைவாக வேகவிட்டுக் கொள்ள வேண்டும். புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். காய்களை நீள வாட்டில் நறுக்கிக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக விட வேண்டும்.. காய்கள் பாதி வேகும்போது புளி ஜலத்தைச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்து பதமாகும் தருணம் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கவும். ஒரு சிலர் சாம்பார்ப் பொடியே சேர்ப்பார்கள். ஆனால் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தே.துருவல் எல்லாவற்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்.  கலவை கெட்டிப்பட்டு வரும்போது இந்த வறுத்த பொடியைப் போடலாம். சாம்பார்ப் பொடி எனில் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கையிலேயே சேர்க்கவேண்டும்.

தனியே ஒரு வாணலியில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை வறுத்துக் கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து அதைச் சாதக் கலவையில் கொட்டவும். கொத்துமல்லி தூவவும். இதற்குக் குழம்புக் கறிவடாம் இருந்தால் அதையும் வறுத்துச் சேர்க்கலாம். சிலர் இதற்கெனத் தனியாக வடைக்கு அரைத்து வடையை போண்டோ போல உருட்டிப் பொரித்துச் சேர்ப்பார்கள். அப்படியும் செய்யலாம். கொத்துமல்லி தூவவும்.

பட்டாணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்து நன்கு கழுவவும். வழவழப்பு அப்போது தான் போகும். பின்னர் மறுநாள் குக்கரில் பட்டாணியை உப்புச் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு, கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய், தேங்காய்(கீற்றுக்களாக நறுக்கியது) போட்டுக் கொண்டு கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கலக்கவும். வழக்கம் போல் ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்தச் சுண்டலுக்குத்ஹ் தேங்காய்த் துருவலை விடத் தேங்காயைப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

நமஸ்கார ஸ்லோகங்கள்

11. யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
லஜ்ஜா= என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்துமோனு நினைக்கிறேன். ஆங்கிலத்தில் modesty?? என்று சொல்லலாமோ?? நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப் படுவதோடு அல்லாமல், நாம் தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகையதொரு கல்வியே தேவை இல்லையா?? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்தத் தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

12. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் ஷாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

இங்கே ஷாந்தி என்பது மெளனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா?? அந்த அமைதி தான் இங்கே. மெளனமும் ஒரு மொழியே. மெளனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மெளனம். மெளனம் கடைப்பிடிக்கப் பட்டால் அங்கே ஷாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மெளனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

13. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

ஷ்ரத்தா என்பது இங்கே வெறும் மத சடங்குகளில் நம்பிக்கை என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆழ்ந்த நம்பிக்கையையும் குறிக்கும். தீவிரமான கவனத்தையும் குறிக்கும். குருவின் உபதேசங்களில் நம்பிக்கை, குருவின் ஒவ்வொரு ஆணையும் நமக்கு நல்லதே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை, நாம் படிக்கும் பாடங்களில் உள்ளவைகளில் நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கும் கவனம், அந்தக் காரியம் நன்மையாய் முடியும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புகளில் நேர்மறைப்பார்வை என்று எடுத்துக் கொண்டு, தேவி இவை அனைத்திலும் அந்த ஆழ்ந்த நம்பிக்கையாக உறைகின்றாளே, அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

நேத்திக்குச் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போனால் ஒரே சோகக் கதையா ஆயிடுச்சு! ஒருத்தர் வீட்டிலே தான் சுண்டல்! இன்னொரு வீட்டில் புட்டு! சிலர் மத்தியானமே கூப்பிட்டுடறாங்க! சுண்டலுக்காகச் சாயங்காலமாக்  கூப்பிடக் கூடாதோ! என்ன போங்க! நம்ம வீட்டில் தான் கொலு இல்லைனா பலரும் இந்த வருஷம் வைக்கலையாம்! சுண்டல் கலெக்‌ஷன் டல்லு தான்! :)))))))

12 comments:

  1. கதம்ப சாதம் சுவாரஸ்யம்.சூடாகச்ச்சாப்பிட்டால் சுவையாக இருக்கும்! நேற்று நாங்களும் மூன்று வீட்டில் சுண்டல்களேகானுக்கு சென்றோம். ஒரு வீட்டில் ட்ரெடிஷனலாக வுட்டு. போர்! இன்னொரு வீட்டில் பட்டாணி சுண்டல். எங்களைப் போலாவர்களும் உப்பிலியப்பன் கோவிலில் திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன்! மூன்றாவது வீட்டில் கடையில் வாங்கிய மைசூர்பா! கொஞ்சம் ஏமாற்றம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், சுண்டல் கலெக்‌ஷன் சரியில்லை என்பதால் எ.பி.க்களைக் கண்டுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) இங்கேயும் கிடைச்சது கடலைப்பருப்புச் சுண்டல் மட்டுமே! :)

      Delete
    2. கஷ்டம் இந்த கீபோர்டோடு!

      பிழை திருத்தங்கள்.

      சுண்டல் கலெக்ஷனுக்கு

      //ட்ரெடிஷனலாக வுட்டு. //

      புட்டு!

      எங்களைப்போல அவர்களும்

      Delete
  2. கடைசியில் நவராத்திரி பற்றிய இடுகைக்கு சுண்டல் பின்னூட்டமா? உங்கள் முறையில் கதம்பசாதம் செய்துபார்க்கிறேன்.

    நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன். ஒருவரது வீட்டுக்காரம்மா தஞ்சை/கும்பகோணத்தைச் சேர்ந்தவரோ என்றும் யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. க.ப.சு. கொடுத்தவங்க ஶ்ரீரங்கம்! புட்டுக் கொடுத்தவங்க வீட்டிலே இரண்டு பேருமே கும்பகோணம் தான்! :)

      Delete
  3. வழக்கம் போல்.... தகவல்கள் அதிகம் வாழ்க நவராத்திரி...... தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. அப்பப்பா.எவ்வளவு செய்திகள். பாராட்டுகள். கூஷ்மாண்டா இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  5. நான் எழுதும் பின்னூட்டங்கள் மட்டறுக்கப் படுகிறதோ

    ReplyDelete
    Replies
    1. என்ன எழுதி இருந்தீங்க? திரும்ப ஒருமுறை கொடுங்க! அப்படி எல்லாம் எதையும் மட்டுறுத்தவில்லை! உங்கள் கருத்து வந்தால் அதை அப்படியே வெளியிடுவேன். நான் மெயிலில் இருந்தே பார்ப்பதால் அங்கேயே வெளியிடுவேன்.

      Delete
    2. டாஷ் போர்டுக்குப் போயும் பார்த்துட்டேன். அங்கே ஏதும் கருத்து பாக்கி இல்லை! :(

      Delete