எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 30, 2021

நம்ம "கர்மா" நம்மை விடாது!

 ஹாஹா! என்ன தலைப்புனு யோசிச்சு, உடம்பு வந்ததையும் கர்மா தொடர் பார்த்ததையும் சேர்த்து ஒரு பதிவாப் போட்டுட்டேன். இரண்டுமே கர்மா தானே!

கர்மா தொடர் பதினாறு பகுதிகள் பார்த்திருக்கேன். உட்கார வேண்டி இருப்பதால் அதிகம் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை அடுத்து என்ன ஆகுமோ என திக், திக், திக் தான். தஞ்சை ஜில்லாவின் அந்தக் கால கிராமம் ஆன ஶ்ரீகண்டபுரம்/பாலூரில் உள்ள ஓர் அக்ரஹாரத்தின் ஓர் குடும்பத்தின் கதை. கனபாடிகள் அந்த ஊரிலேயே பெரிய மனிதர். நாலும் தெரிந்தவர். அவர் சொன்னால் சொன்னது தான். அது தான் தீர்ப்பு! அந்த ஊரில் அதே அக்ரஹாரத்தில் வசிக்கும் சங்கர சாஸ்திரிகள் கனபாடிகளின் வீட்டுப் புரோகிதர். கனபாடிகளின் மூத்த இரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிக் குழந்தையே பிறக்காததால் சங்கர சாஸ்திரிகளின் ஏற்பாட்டில் சந்தான கோபால விரதம் ஏற்பாடு செய்து நடக்கிறது. சங்கர சாஸ்திரிகளுக்கு ஒரே பெண்/ தாயில்லாப் பெண்/ருக்கு. கதையின் நாயகி. அவளுக்கு கனபாடிகளின் மூன்றாவது பிள்ளை வெங்கிட்டுவின் மேல் ஒரு கண். அந்த வீட்டு மருமகளாக வர வேண்டும் என்னும் கனவில் இருக்கிறாள். 

கனபாடிகளின் கடைசிப் பெண்ணான காமுவுக்கு  (கதைப்படி 12 வயசுச் சிறுமி. நடிப்பதும் சின்னஞ்சிறு பெண் தான்) அந்தக் கால வழக்கப்படி கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன.  கனபாடிகளின் வேண்டுகோளுக்கு இணங்கக் கோனேரிராஜபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் சம்பந்தி வீட்டாரைப் பார்த்துப் பேசச் செல்லும் சங்கர சாஸ்திரிகள் திரும்புகையில் புயல், மழையில் அகப்பட்டுக் கொண்டு இரவு நேரத்தில் அந்தப் பக்கத்தில் உள்ள ஓர் காட்டு ஓரத்தில் மயங்கி விழுகிறார். அந்த வழியாக வண்டியில் செல்லும் அந்த ஊரைச் சேர்ந்த தங்கம் என்னும் தேவதாசிப்  பெண்மணி மயங்கி விழுந்திருக்கும் சங்கர சாஸ்திரியைப் பார்த்துவிட்டுத் தன் வண்டியில் அவரைத் தூக்கிப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு அவரை எடுத்துச் சென்று வைத்தியரை வரவழைத்து உடனடியாக மருந்துகளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறாள். அந்தக் கால வழக்கப்படி தாசிகளின் வீட்டுக்கோ வீடுகள் இருக்கும் தெருவுக்கோ பிராமணர்கள் செல்ல மாட்டார்கள். சங்கர சாஸ்திரிகளோ அங்கே போனதோடு அல்லாமல் ஒரு இரவு முழுவதும் அங்கே நினைவின்றிக் கிடக்கிறார். மறுநாள் உண்மை தெரிந்த அவருக்குக் கவலை/பயம்/ஊரில் யார் என்ன சொல்வார்களோ என்னும் அச்சம்! தைரியம் சொல்லி அவரை வீட்டின் பின் பக்கம் வழியாக அனுப்பி வைக்கிறாள் தங்கம். ஆனால் குற்ற உணர்விலும் அவமானத்திலும், அச்சத்திலும் குறுகிக் குன்றிப் போன சங்கர சாஸ்திரிகள் ஊர் திரும்புகையில் ஊர் எல்லைக் குளத்தில் தான் தாசி வீட்டில் தங்கிய தோஷத்தைக் கழிப்பதற்காகக் குளித்து முழுகி எழுந்திருக்கும்போது கனபாடிகளின் இரண்டாம் மாப்பிள்ளை (ஆராய்ச்சியாளன்) பார்த்து விடுகிறான். விஷயத்தை சாஸ்திரிகள் மூலம் தெரிந்து கொண்டு இதை ஒருத்தருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவன் சொல்லி சாஸ்திரிகளைச் சமாதானம் செய்கையில் மூத்த மாப்பிள்ளை சேஷு இதை ஒட்டுக் கேட்டுவிட்டு ஊரில் பரப்பி விடுகிறார். ஊரே பத்திக் கொண்டு எரிகிறது. 

இதை எதிர்கொள்ளும் சங்கரசாஸ்திரிகளை கனபாடிகள் ஊரிலிருந்து பிரஷ்டம் செய்து விட, அவமானம் தாங்க முடியாமல் சங்கர சாஸ்திரிகள் ஊர்க்குளத்தில் விழுந்து உயிரை விடுகிறார். ருக்குவுக்கு ஏற்கெனவே அம்மா இல்லை. இப்போது அப்பாவும் போய்விடத் தாய்மாமன் கிச்சாமி பக்கத்தில் இருந்தாலும் அவர் துணையுடன்  கனபாடிகளைப் பழி வாங்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள் ருக்கு. ஏற்கெனவே கிச்சாமிக்கும் கனபாடிகளுக்கும் கொஞ்சம் விரோதம் இருக்கிறது. ருக்குவோ எப்படியேனும் கனபாடிகளைப் பழி வாங்கித் தன் தகப்பன் இறந்த அதே குளத்தில் கனபாடிகளும் மூழ்கி இறக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள்.  இதற்காக அவள் செய்யும் சாகசங்கள்! அவை தான் மீதிக்கதை! ஒவ்வொன்றாய்ப் பார்த்து வருகிறேன். அந்தக் காலத்து அக்ரஹார வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் பாம்பே சாணக்யா. நடிக நடிகையர் தேர்வில் இருந்து அவர்களிடமிருந்து சற்றும் மிகையில்லா யதார்த்தமான நடிப்பை வாங்கி இருக்கிறார். ஒரு காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாமல் அப்படியே இருக்கும். அதைக் காட்சிப் படுத்தியதோடு இல்லாமல் இந்தக்குறிப்பிட்ட காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாது என்னும் அறிவிப்பும் கொடுத்து நம்மைக் கவனிக்க வைக்கிறார். தேர்ந்தெடுத்திருக்கும் ஊரும், அங்குள்ள வீடுகளும் நம்மை 1930 ஆம் ஆண்டுகளுக்கே அழைத்துச் செல்கிறது. இதெல்லாம் தான் நம் மனதைக் கவர்ந்து இழுக்கிறது. நல்லவேளையாகப் பிரபலமான நடிகர்களோ/நடிகைகளோ இதில் நடிக்கவில்லை. இருந்திருந்தால் முகத்தின் அஷ்டகோணல்களால் கெடுத்திருப்பார்கள். யதார்த்தம்/இயல்பான நடிப்பு என்றால் என்னவென்று இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

இதற்கு நடுவில் தான் ஊர்ப் பிரஷ்டம் செய்ததால் தந்தை இறந்து அநாதை ஆன ருக்குவைத் தன் பிள்ளைக்கே மணம் முடிக்க நினைக்கிறார் கனபாடிகள். கல்யாணங்களும் நடக்கின்றன. ருக்குவின் கல்யாணத்தோடு சேர்ந்து காமுவுக்கும் கல்யாணம். சின்னப்பிள்ளை/சின்னப் பெண். பார்க்கக் கண்ணுக்கு அழகான ஜோடி. அவர்களை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பும் ருக்குவின்  வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது. வீட்டில் எல்லோரும் அவளுடன் எப்படிப் பழகினார்கள்? ருக்குவின் திட்டம் என்ன? ஒவ்வொன்றாய் விரிகிறது "கர்மா" கனபாடிகள் செய்த இந்தத் தவறு அவர் குடும்பத்தை நான்கு தலைமுறைகளுக்குப் பிடித்து ஆட்டக்குடும்பம் பிரிந்து பின்னர் ஐந்தாம் தலைமுறையில் ஒன்று சேரும் என்பது ஆரூடம். இன்னும் இந்தத் தலைமுறையில் பிரிவே ஆரம்பிக்கலை. இனி போகப் போக மற்றவை.

*********************************************************************************

பேருந்துகள் இயங்காததால் சரிவர மருந்துகள் வராமல் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதமாகக் கரூரில் வெங்கட்ரமணா மருத்துவசாலையில் இருந்து ஆயுர்வேத மருந்துகள் வரவே இல்லை. நமக்கோ இப்போப் பார்த்து மருந்துகள் தீர்ந்து போக! எல்லாம் சேர்ந்து பதினைந்து நாட்களுக்கும் மேல் படாத பாடு பட்டாச்சு. ஒரு வழியா இன்னிக்குத் தான் கரூரில் இருந்து ஆயுர்வேத மருந்துகளும் மருந்துக்கடைக்கு வந்து சேர்ந்தன. தேவையான மருந்துகளை  வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இனி கால் பிரச்னைகள் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் சமையல் செய்ய ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் ஆகலாமோ எனத் தோன்றுகிறது. காலை ஊன்றி நிற்க முடிந்தால் பின்னர் ஆரம்பித்து விடுவேன். இந்த உஷா மாமி சமையல் பரவாயில்லை. ஆனால் இட்லி, தோசை,உப்புமா என பயமுறுத்துகிறார். தோசை எல்லாம் கறுப்பாகக் கையில் ஒட்டிக் கொள்கிறது. இட்லி என்பது இரண்டு இட்லிகளை ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வைச்சாப்போல் உள்ளே முடிச்சாக இருக்கு. உப்புமா என்னும் பெயரில் நேற்று சாதத்தைத் தாளித்துக் கொடுத்து விட்டார். நொய்யில் பண்ணி இருக்கார் என நம்ம ரங்க்ஸ் சொன்னாலும் நானும் மாமியார் வீட்டில் கருவிலியில் பச்சரிசி நொய்யில் பண்ணின அரிசி உப்புமா சாப்பிட்டிருக்கேன். தேங்காய்ச் சாதம் போல அவ்வளவு ருசியாக இருக்கும். நேத்திக்குச் சாப்பிடவே முடியலை. ஒரு மாதிரியா உள்ளே தள்ளினோம். இன்னிக்கு அடைனு சொல்லி இருக்காங்க! ஆஹா! என்ன அழகு! அடையைச் சாப்பிட்டுப் பழகு! என வைகோ சொன்னாப்போல்  அடை இருந்துட்டால் நல்லது. பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! உம்மாச்சி, காப்பாத்துங்கப்பா! 

20 comments:

  1. உடம்பு சரியில்லைனா, சமத்தா பசிக்குச் சாப்பிடணும். இந்தக் குழந்தை ருசிக்குச் சாப்பிடுவதால்தான் இத்தனை பிரச்சனைகளும்.

    நீங்க வேற, அவங்களை சும்மானாக்கும் பாராட்டறேன் என்ற போர்வையில் உங்க உப்புமா நல்லா இருந்ததுன்னு சொல்லிட்டீங்கன்னா, வாரத்துக்கு மூன்றுதடவை உப்புமாதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. கொஞ்சமானும் சாப்பிடும்படி இருக்க வேண்டாமோ? உப்புமாங்கற பேரிலே தாளித்துக்கொட்டிய சாதத்தைக் கொடுத்துட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேத்திக்கு அடை பரவாயில்லை ரகம். தொட்டுக்க ஒண்ணுமே கொடுக்கலை. கொடுக்க மாட்டாங்களாம். :)

      Delete
  2. எந்தச் சமையலுமே ராக்கெட் சயன்ஸ் இல்லை. என்ன செய்யணும், எப்படிச் செய்யணும் என்று புரிந்துவிட்டால். கைப்பக்குவம் நல்லா இருந்தால் மிக ருசியாகவும் இல்லைனா பரவாயில்லாமலும் இருக்கும். அவ்ளோதான்

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் வாய்க்காது நெல்லை. கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்கு.அது காலை வாரிவிடும்.

      Delete
  3. கர்மா, நான்கு தலைமுறை பழிவாங்கல்...ஆஹா அறுபது வருடங்கள் எடுக்கும்படியான கருவாக இருக்கிறதே..

    மாசம் 170 ரூபாய் கட்டலைனா, இடையில் சில பல எபிசோடுகள் பார்க்க முடியாது என்று பயமுறுத்துகிறார்களே..

    அதுக்கு உங்க விமர்சனத்தையே படித்துவிடலாம்

    ReplyDelete
    Replies
    1. பணம் வேறே கட்டணுமா என்ன? எனக்கு அதெல்லாம் வரலை. இன்னிக்குப் பார்க்க முடியலை. நாளைக்குப் பார்க்கும்போது கவனிக்கிறேன்.

      Delete
  4. கர்மா தொடர் - கேள்விப்பட்டதில்லை. நேரம் எடுத்து தான் பார்க்க வேண்டும். முயல்கிறேன்.

    உடல் நிலை விரைவில் சீராகட்டும். நல்ல வேளையாக மருந்துகள் கிடைத்தனவே.

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சாப் பாருங்க வெங்கட். இது "விஸ்வரூபம்" என்னும் பெயரில் ராஜ் தொலைக்காட்சியில் தொண்ணூறுகளில் வந்து கொண்டிருந்தது.

      Delete
  5. விமர்சனம் அழகாக செல்கிறது திரைப்படம் பார்த்தது போல....

    நலம் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. பாம்பே சாணக்கியா இயக்கமா?  கேள்விப்பட்டிருக்கிறேன்.  பார்த்ததில்லை.  குறித்து வைத்திருக்கிறேன்.  கிருஷ் ஸார் சொல்லும் அரசியல் விடீயோக்களும் குறித்துக் கொண்டு வைத்திருக்கிறேன்.   எப்போது பார்ப்பேனோ! 

    ReplyDelete
    Replies
    1. நாங்க பாம்பே சாணக்யாவின் ரசிகர்கள் ஶ்ரீராம். நிறையப் பார்த்திருக்கோம். எல்லாமே ராஜ் தொலைக்காட்சியில் தான். அரசியல் வீடியோக்கள், சமையல் வீடியோக்கள், சொற்பொழிவுகள், ஆன்மிகக் கதைகள்னு எல்லாமும் மாமா போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பதால் "புல்லுக்கும் ஆங்கே பொசிந்து விடுகிறது." :)))))

      Delete
  7. ஆயுர்வேத மருந்துகளும் வரவேண்டுமா?  ஆனால் இப்போதுதான் போக்குவரத்து சாதாரணமாகத் தொடங்கி விட்டதே...    

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு மாசமாப் பேருந்துப் போக்குவரத்தே இல்லையே! மருந்துகள் தீர்ந்து உடனே வாங்கிடணும்னு நினைச்சால் அந்த மருந்துக்கடை மாமா எல்லாம் தீர்ந்து போச்சு! இனிமேல் வந்தால் தான் னு கை விரிச்சுட்டார். பேருந்துகள் திங்களன்று ஆரம்பித்ததும் மருந்துகள் வந்து நேத்திக்குக் கொடுத்தனுப்பினார். நேத்திலேருந்து சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். ஒரு மாசமாப் பட்ட பாடு! நரகம் என்றால் என்னனு புரிஞ்சது. நகர்வது கூடக் கஷ்டமாப் போச்சு! :(

      Delete
  8. நன்றாக விமர்சித்துள்ளீர்கள்.

    சாப்பிடும் உணவு நமக்கு பிடிக்காமல் இருந்தால் சிரமமே. கால்வலி மாறுமட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி. கால் வலி முற்றிலும் குறைய நேரம்/நாள் எடுக்கும். ஏனெனில் ஒரு மாசமா எந்த மருந்துகளும் இல்லையே! சுத்தமா முடக்கிடும் போல் பயமாகப் போய் விட்டது. அதுக்காகவே அவ்வப்போது எழுந்து மெல்ல மெல்ல நடப்பேன். உணவு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வாங்கித் தான் ஆகணும். பாதங்களில் வலு இல்லாததால் நிற்பது கடினமாய் இருக்கு. நின்றால் தானே சமைக்க முடியும்! :))))

      Delete
  9. கர்மா தொடர் பார்க்கிறேன்.
    நிறைய விஷயங்கள் அலசப்படுகிறது இந்த கதையில். காலங்கள் மாறும் போது வாழ்க்கை முறை மெல்ல மெல்ல மாறுவதும் சொல்லப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. நீங்க பார்ப்பது குறித்து மகிழ்ச்சி. நான் பதினாறு பார்த்திருக்கேன். இன்னிக்குப் பார்க்க முடியலை. நீங்க சொல்றாப்போல் விஷயங்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கு இந்தத் தொடரில்.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    தலைப்புக்கு பொருத்தமான பதிவு . பதிவுக்கு பொருத்தமான தலைப்பு. அருமையாக யோசித்து வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள். ஆமாம்..உண்மைதான்... இந்த இரண்டுமே நம்மை விடாதது. நீங்கள் சென்ற பதிவில் கர்மா சுட்டி தந்திருந்ததினால்,நானும் போனேன். இரண்டு எபிசோடு முழுதாக பார்த்து விட்டேன்.பாக்கியை நேரம் கிடைக்கையில் தொடர வேண்டும்.நன்றாக உள்ளது. பூவிலங்கு மோகன் ஜே.லலிதா போன்றவர்கள் அப்போதிலிருந்து தூர்தர்ஷன் நாடகங்களில் நடித்தவர்கள். நிதானமாக தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடிப்பவர்கள்.உங்கள் விமர்சனம் முழுத் தொடரையும் பார்க்கத் தூண்டுகிறது. முழுவதும் அந்த சுட்டியில் உள்ளதா?

    உங்கள் கால்வலி இப்போது எப்படி உள்ளது? அலோபதி மாத்திரைகளில் கொஞ்சம் குணம் தெரிகிறதா? விரைவில் நாட்டு மருந்துகள் எடுத்துக் கொண்டு பூரண நலம் பெற வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    கொஞ்ச நாளைக்கு சமையல் மாமியிடமே வாங்கி சாப்பிடுங்கள். இட்லிக்குள் இட்லி வைத்து இட்லி கொழுக்கட்டை பண்ணி தந்தாலும் சரி, உப்புமாவை எத்தனை ரூபங்கள் மாத்தினாலும், நீங்கள் கொஞ் நாளைக்கு உஷா மாமியை மாற்றாமல் உங்கள் நலத்தை பத்திரமாக கவனித்துக் கொள்ளவும்.:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வாங்க கமலா, உங்க இட்லி கொழுக்கட்டை என்னும் விமரிசனம் படிச்சதும் சிரிச்சுட்டேன். கிட்டத்தட்ட அப்படித் தான் இருந்தது இட்லி. அது ஏன்னு புரியலை. கல்லுப் போல் இருந்ததுனு சொல்லலாமோ? நீங்களும் கர்மா தொடர் பார்ப்பது குறித்து சந்தோஷம். ஜே. லலிதா அந்தத் தொடரில் இருக்காரா? எனக்கு யார்னு புரியலை! மறுபடி பார்த்தால் கவனிக்கிறேன். கால்வலி முழுதும் குறையக் கொஞ்ச நாட்கள் ஆகும். அலோபதி மாத்திரைகள் ஐந்து நாட்கள் கோர்ஸ் முடிஞ்சிருக்கு. அதனால் தான் ஓரளவுக்கு எழுந்துக்க முடிஞ்சது. ஆயுர்வேத மாத்திரைகளும் சேர்ந்து உடலில் நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கேன். பார்ப்போம். சமையல் மாமியிடம் தான் இப்போதைக்கு வாங்கி ஆகணும். வேறே வழியில்லை. :)

      Delete