எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 19, 2021

விடுதியில் இருந்து கிளம்ப முடியுமா?

 காலையில் நாங்கள் டிஃபன் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள்ளாக ஶ்ரீராம் மொபைலில் அழைத்தார். நிலவரம் இருவருக்குமே தெரிந்திருந்ததால் நான் எங்கள் விலாசத்தையும் கொடுக்கவில்லை. அவர் இருக்குமிடத்தில் இருந்து வெகு தூரம் மாம்பலம் இருப்பதால் அதைப் பற்றிப் பேசாமல் பொதுவாகப் பேசிக் கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு ஶ்ரீராம் மொபைலை வைத்த அடுத்த கணம் மீண்டும் அழைப்பு! ஙேஏஏஏஏஏஏ! என்னடா, என மொபைலை எடுத்தால் இஃகி,இஃகி,இஃகி, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஶ்ரீராமின் பாஸ் வந்து வந்து பார்த்திருக்கார். ஶ்ரீராம் பேசிட்டு அவரிடம் ஃபோனைக் கொடுப்பார்னு நினைச்சிருக்கார். ஶ்ரீராம் அவரிடம் எதுவும் சொல்லாமலே ஃபோனை வைச்சுட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் போல! ஏன்னா திரும்பக் கூப்பிடறச்சே ஶ்ரீராம் குரலில் அ.வ.சி.  ஹிஹிஹி, நானும் கண்டுக்காதது போல் பாவனையுடன் ஃபோனை வாங்கி ஶ்ரீராமின் பாஸுடனும் பேசிவிட்டு வைத்தேன். கொஞ்ச நேரம் மொபைலை நோண்டியதில் எ.பி. வாட்சப் குழுமத்தில் நான் மாம்பலத்தில் இருக்கும் தகவலைப் போட்டேனோ இல்லையோ, உடனே அப்பாதுரையிடமிருந்து செய்தி. "நான் உங்களைப் பார்க்க மாம்பலம் வரலாமா?" என. இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கப் போவதாகவும் எங்களை வந்து பார்க்கலாமா என்றும் கேட்டிருந்தார். அவர் சென்னையில் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. எங்கே இருக்கார்னும் தெரியாது. வரட்டுமானு கேட்கிறாரே என நம்மவரைக்கலந்து ஆலோசித்தேன்.

இங்கே பக்கத்தில் இருந்தால் வரச் சொல்லலாம்; இல்லைனா கூப்பிடாதே என்றார். நானும் அவர் எங்கே இருக்கார் எனக் கேட்டதற்குப் பள்ளிக்கரணை என்றார். அங்கிருந்து இங்கே வர நேரம் எடுக்கும். காரில் வந்தால் காரெல்லாம் வருமானு சந்தேகமா இருந்தது. ஏற்கெனவே இவர் வெளியே செல்கையில் மக்கள் நாலைந்து பேர்களாகக் குடும்பம் குடும்பமாகத் தேவையான சாமான்களுடன் பாதுகாப்பான இடம் தேடிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். மின்சாரம் இப்போதைக்கு வராது எனவும் நீர் எல்லாம் வடிந்ததும் தான் திரும்ப விநியோகம் என்றும் சொன்னார்கள். ஆகவே மக்கள் அவரவர்கள்வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமையில் அப்பாதுரையைப் பள்ளிக்கரணையிலிருந்து இங்கேயா வரச் சொல்லுவது?  அந்தச் சமயம் பார்த்துத் தான் தம்பி தொலைபேசி எங்களையும் தயார் நிலையில் இருக்கச் சொல்ல சாப்பாடு வருவதற்குள்ளாகச் சாமான்களைச் சேகரம் செய்து கொண்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல வசதியாகத் தயார் நிலையில் வைத்தோம். தம்பியும் அவர்கள் குடும்பமும்  டெம்போ ட்ராவலர் மூலம் சாமான்களை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள சத்திரத்துக்குச் சென்று முதலில் சாமான்களைப் போட்டுவிட்டுப் பின்னர் எதிரே உள்ள "க்ரீன் பார்க்" ஓட்டலில் அறைகள் பதிவு செய்யப் போவதாயும், அவர்கள் யாரும் சாப்பிடவில்லை எனவும், சாப்பிட்ட பின்னர் தம்பியின் பெரிய பிள்ளை எங்களை அழைத்துச் செல்லக் காருடன் வருவார் என்றும் சொன்னார். உடனே அப்பாதுரைக்கு வாட்சப் மூலம் நாங்கள் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு மாறப்போவதைத் தெரிவித்துவிட்டுச் செவ்வாய் காலை வரை அங்கே இருப்போம் என்பதால் அவர் சௌகரியப்படி வந்து பார்க்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவருக்கு அங்கே சூழ்நிலை எப்படி இருந்ததோ! நல்லவேளையாக வரேன்னு சொல்லலை. பிடிவாதம் பிடிக்கலை. ஹிஹிஹிஹி!

நானும் தம்பியிடம் நாங்கள் தயாராக இருப்போம் னு சொல்லிட்டு அன்னிக்கு ராகுகாலம் வருவதால் நாலரைக்கு முன் வரச் சொன்னேன். அது முடியுமானு தம்பிக்கு யோசனை. ஆறு மணிக்கு வரச் சொல்றேன் என்றார். நானும் சரினு சொல்லிட்டேன். அது எவ்வளவு தப்புனு அப்போவே புரிந்தது. அப்போ மணி இரண்டாகிக் கொண்டிருந்தது.  இதற்குள்ளாக என் மைத்துனர் மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் எங்கள் நிலவரத்தைத் தெரிந்து கொண்டிருந்தவர் தஞ்சாவூர் மெஸ்ஸில் சொல்லிச் சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன் என்று சொல்லிவிட்டு அங்கே பேசினால் அவங்க அந்தத் தண்ணீரில் சாப்பாடு எல்லாம் கொண்டு கொடுக்க ஆள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதே போல் காமாட்சி மெஸ்ஸிலும் காலை ஆகாரத்துக்காகப் பேசினப்போவே நீங்கள் ஆள் அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தனர். பல இடங்கள் திறக்கவே இல்லை. ஏனெனில் மின்சாரம் இல்லாததால் எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. எப்படிச் சமைப்பது? கடைகளுக்கு வேலைக்கு வந்திருந்த ஆட்களும் அவரவர் குடும்பத்தைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  தம்பி சாப்பாடு வந்ததா எனக் கேட்டு விசாரித்துக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக இரண்டேகால் மணிக்குச் சாப்பாடு   வந்தது. அந்த மாமா சுமார் பத்துப் பேர் சாப்பிடும் அளவுக்குச் சமைத்துக் கொண்டு வந்திருந்தார். எங்களுக்கு ஏதேனும் ஒரு சாதம் போதும்னு ஏற்கெனவே சொல்லி இருந்தோம். ஆனால் அவர் வகை வகையாகக் கொண்டு வந்திருந்தார். அப்போதைய மனநிலையில் ஜாஸ்தி இறங்கவே இல்லை. சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்தோம். என்னிடம் மிச்சம் இருந்த பாலையும் அவரிடம் கொடுத்துவிட்டுப் பாத்திரத்தைத் தேய்த்து எடுத்து வைத்துக் கொண்டோம். அதுக்குள்ளே மழையும் ஆரம்பித்தது. நாங்கள் இருந்த ஹால் ஒரே இருட்டு. கொஞ்சம் போல் வெளிச்சம் படுக்கை அறையில். ஆகவே அங்கே போய் உட்கார்ந்தோம்.மற்ற இரு படுக்கை அறைகளும் கும்மிருட்டு. 

அப்போத் தான் புரிந்தது இந்த இருட்டில் சாமான்களை எடுத்துக் கொண்டு தம்பி அனுப்பும் காரில் எப்படிச் சாமான்களை எல்லாம் ஏற்றப் போகிறோம் என்பதே. அவரும் சொன்னார், வெளிச்சத்தோடு வரச் சொல்லு. தெருவில் வெளிச்சம் இருந்தால் தான் சாமான்களை ஏற்ற முடியும். அதோடு காரை இந்தச் சின்னத் தெருவில் ரொம்ப நாழி நிறுத்தினால் பிரச்னை ஆகும் என்றார். நானும் தம்பிக்கு இதைச் சொல்லச்சாப்பிட்ட உடனே பிள்ளையை அனுப்புவதாகச் சொன்னார். மணி நான்கு, நான்கரை எனப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் யாருமே கூப்பிடவில்லை. காரும் வரவில்லை.  சுமார் ஐந்தரை மணி போல இருக்கும். தம்பி பிள்ளை அலைபேசி மூலம் அழைத்து அவர்கள் துரைசாமி சப்வே பக்கம் இருப்பதாகவும் அங்கே எல்லா வழிகளையும் மூடிவிட்டார்கள் எனவும் ஏற்கெனவே மாட்லி ரோடிலும் மூடி இருப்பதால் உள்ளே எப்படி வருவது என்பதே தெரியவில்லை எனக் கூறிவிட்டு என்ன செய்யலாம் என்றும் கேட்டார். எனக்கு ஒரே சமயம் படபடப்பும், இங்கிருந்து கிளம்பவே முடியாதோ என்னும் பயமும் வந்தது. 

28 comments:

  1. அன்பின் கீதாமா,
    ஏற்கனவே எழுதி இருக்கிறீர்களா. பார்க்கவே விட்டுப் போயிருக்கிறது மா.
    இத்தனை நடந்திருக்கா. அடப்பாவமே!!!!
    நீங்கள் முதலிலேயே போயிருக்கக் கூடாதோ.
    என்ன சங்கடம் மா. இது .முன் பதிவைப்
    படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. அதனால் என்ன நேரம் இருக்கையில் படியுங்கள்.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    அடாடா... இந்த மழையில் நீங்கள் அனைவருமே ரொம்பவே கஸ்டபட்டு விட்டீர்கள். கடைசியில் நம் பதிவுலக நண்பர்களை சந்திக்க விடாமல் மழை படுத்தி எடுத்து விட்டது போலும்...!மதிய சாப்பாட்டை அந்த நண்பர் அந்த மழை வெள்ளத்தில் எப்படியோ கொண்டு வந்து தந்தாரே அதுவே பெரிய விஷயம்..! ஆனால் அப்போதிருக்கும் மனநிலையில் எவருக்குமே சாப்பாடும் பிடிக்காது. கஸ்டந்தான்..! அந்த சூழலில் வெளியில் பயணிப்பதும், அடுத்து என்ன செய்ய போகிறோம் என யோசிப்பதும், மனக் கலக்கத்தை எப்போதும் விட அதிகமாக தந்து விடும். எப்படியோ பகவான் பக்க பலமாக துணையிருந்து அனைத்தும் நல்லபடியாக்கி தந்திருக்கிறார்.

    மணி ஆறுக்குள் உங்கள் தம்பி பிள்ளை வந்து சேர்ந்தாரா? அவரும் எப்படி அந்த வெள்ளத்தை தாண்டி காரில் பயணித்து வந்தார்? எப்படி அந்த கருக்கல் இருட்டில் சாமான்களை ஏற்றிக் கொண்டு மண்டபத்திற்கு போய் சேர்ந்தீர்கள் என்ற விபரமறிய தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, மழை வெள்ளத்தில் கஷ்டப்படுவது இது முதல் முறை அல்ல. என்றாலும் இப்போது வயது கூட ஆகிவிட்டதாலும் ஆரோக்கியம் முன்போல் இல்லாததாலும் எல்லாமே மலை போன்று பெரிதாகத் தோன்றுமிறது.

      Delete
  3. நீங்கள் அழைப்பீர்கள் என்று காத்திருந்துவிட்டு, ஊருக்கு வந்தீர்களா இல்லியா என்றே தெரியாத நிலையில் நான் அலைபேசினேன்!  மழை நிலவரம் அன்றைய நிலையில் கலவர நிலைதான்.  அதோடு எனக்கு டியூட்டி வேறு!

    ReplyDelete
    Replies
    1. அழைக்கலாமா/வேண்டாமா/ உங்கள் வீட்டுப் பக்கமெல்லாம் மழையின் பாதிப்பு எப்படி என்பதெல்லாம் யோசனையில் இருந்ததால் திங்களன்று அழைத்துப் பேசி முடிந்தால் ரிசப்ஷனுக்கு வரச் சொல்லலாம் என இருந்தோம். ஆனால் எல்லாமே மாறிவிட்டது.

      Delete
  4. பாஸ் என்னை என்ன செய்துவிட முடியும்? போனால் போகிறது என்று போனை அவர் கையில் கொடுத்தேனாக்கும்... இருங்கள்.. பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹிஹிஹிஹி, ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!

      Delete
  5. எனக்கும் இரண்டு முறையாக அப்பாத்துரை உடனான சந்திப்பு தட்டி போகிறது. சூழ்நிலை!

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை 2012/13 ஆம் வருஷங்களில் ஒரே ஒரு முறை தான் வந்தார். அதன் பின்னர் இந்தியா வந்தும் திருச்சியைத் தாண்டிச் சென்றும் எங்களைச் சந்திக்கலை. இம்முறை அவரே வரேன்னு சொல்லியும் முடியலை.

      Delete
    2. If destined to meet, at destined time only, it is possible. மயிலைக்கு வல்லிம்மா வந்தும், நான் அடையாரில் இருந்தும் அப்போது அவரைச் சந்திக்க முடியாமல்போய்விட்டது.

      Delete
    3. அது என்னமோ சரிதான். 2015 நவம்பரில் சென்னை சென்றபோது வல்லியைப்பார்க்கணும்னு ஆட்டோவில் லஸ்ஸுக்குக் கிளம்பினோம். பனகல் பார்க் தாண்ட முடியலை. ஒரே கூட்டம். போக்குவரத்து நெரிசல். ஆட்டோக்காரர் இந்தக் கூட்டம் கலைந்து எல்லாம் சரியாக 2 மணி நேரத்துக்கு மேல் எடுக்கும் என்பதால் முடியாது சார்னு சொல்லிட்டார். பின்னர் மாம்பலத்தில் தம்பி வீடு திரும்பினோம்.

      Delete
  6. மாம்பலம், தேனாம்பேட்டை  பக்கம் எல்லாம் கூட வெள்ளம் வரும் என்பது சென்னையின் சமீபத்திய சாதனை!  சென்ற முறையாவது செம்பரம்பாக்கத்தை திடீரென திறந்து விட்டார்கள்.  இந்த முறை அதற்கு முன்னரே இந்நிலை.  

    ReplyDelete
    Replies
    1. மாம்பலம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பக்கமெல்லாம் பெரிய ஏரிகளைத் தூர்த்து வந்தவை தானே! என் தம்பி இருப்பதே லேக் வியூ ரோடு தானே மாம்பலத்தில்.

      Delete
  7. நிலைமை மிகவும் சங்கடமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சங்கடமான நிலைதான்.

      Delete
  8. கீதாக்கா இதைத்தான் நான் முந்தைய பதிவில் கேட்டிருந்தேன். எங்கள் மாமியார் வீடு கோடம்பாக்கம். என் மாமா, மாமா மகள்களின் வீடு எல்லாம் மாம்பலம் ஆரியகௌடா, ஸ்டேஷன் ரோடு இடங்களில். எனவே அங்கு தண்ணீர் வந்தால் என்னாகும் என்று தெரியும். டூ வீலர் சப்வே முழுவது ரொம்பி விடும் அது போலவே துரைசுவாமி சப்வே எல்லாமே.

    நிஜமாகவெ ரொம்ப இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். சரி எப்படி அடுத்து மண்டபம் சென்றீர்கள்? தம்பி பிள்ளை எப்படி வந்தார்? சீட் நுனிக்கு வந்து விட்டேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆர்ய கௌடா ரோடில் தண்ணீர் அவ்வளவு இல்லை. கிழக்குப் பகுதியில் அதிகமாகத் தண்ணீர்.எல்லாச் சுரங்கப்பாதைகளும் முழுகி விட்டன.

      Delete
  9. பில்லர் வழி போவதும் கூட கஷ்டம் அல்லது அசோக்நகர் வழி செல்வதுனாலும் கூட வண்டி வர வேண்டும்...
    எப்படிப் போயிருப்பீர்கள் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பில்லர் பக்கம்/அசோக் நகர் எல்லாம் அதன் பின்னரே மழை நீர் புகுந்திருக்கிறது.

      Delete
  10. இவ்வளவு பிரச்சனைகளா?

    நிச்சயம் ஸ்ரீராமால் வந்திருக்க முடியாது. நீங்களே எப்படிச் சமாளித்தீர்கள் என்பதே புரியலை. திருமணத்துக்கு வந்துட்டு, மழைநீர், இருட்டு, உணவுப் பிரச்சனை என்று ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதான் தொந்திரவு செய்யவில்லை நெல்லை. உண்மையில் இது மறக்க முடியாத் திருமணம். எங்க பையர் கல்யாணத்தின் போதும் சென்னையை அடுத்தடுத்துப் புயல் தாக்கிக் கொண்டிருந்தது.

      Delete
  11. நான் போட்ட பின்னூட்டம் காணோமே?

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணே ஒண்ணு வந்திருக்கு ரேவதி. முதல் பின்னூட்டமே அதான்.

      Delete
  12. என்னாலான இது மதுரைக்கு சீ சென்னைக்கு வந்த சோதனை!!?? மறக்க முடியாத திருமணம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. ஜெட்லாகெல்லாம் சரியாயிடுத்தா? ஆமாம், உண்மையிலேயே மறக்க முடியாத்திருமணம் தான்.

      Delete
  13. நிறைய கஷ்டபட்டு விட்டீர்கள் போல!

    திருமணம் நன்றாக நடந்து நீங்களும், நல்லபடியாக ஊர் திரும்பி விட்டீர்கள் அதற்கு இறைவனுக்கு நன்றி.

    தொடர்கிறேன் உங்கள் அனுபவங்களை படிக்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. நன்றி தொடர்வதற்கு. உங்க பதிவுகளுக்கு இனித் தான் வரணும்.

      Delete