எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 13, 2006

106. எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்

எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்.
தமிழ் பேசும் வலை உலகின் ஒரே சிறந்த வலைப் பதிவு, எண்ணங்கள்.
உங்கள் அபிமான எழுத்தாளி "திருமதி கீதா சாம்பசிவம்" எழுதும் "எண்ணங்கள்."
வலை உலகிலே ஒரு எடுத்துக்காட்டு "எண்ணங்கள்"
இன்றே படியுங்கள் "எண்ணங்கள்'
நவரசத்தையும் சேர்த்துத் தரும் ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்'

இந்தப் பதிவைப் படிப்பதின் மூலம் நீங்கள் பெறும் நலன்கள் எண்ணற்றவை. நீங்கள் தமிழ்மணத்தைச் சேர்ந்தவரா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு பின்னூட்டம் கியாரண்டி. உங்கள் அபிமான எழுத்தாளரே வந்து பின்னூட்டம் இடுவார். தேன்கூட்டைச் சேர்ந்தவரா? கவலை வேண்டாம். நிச்சயம் அவருடைய வாக்கு உங்கள் எழுத்துக்கே. முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்தவரா? உங்களைப் பற்றி ஒரு சிறப்புக் குறிப்புக் கொடுக்கப் படும். இத்தனை சலுகைகளை அறிவிக்கும் ஒரே பதிவு "எண்ணங்கள்." உங்கள் ஆதரவு பெற்ற ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்."

தயாரிப்பு வடிவமைப்பு" : திரு மஞ்சூர் ராஜா, ராஜா, ராஜா.

தலைப்பு, மற்றும் பெயர் எழுத்துரு மாற்றம்: திரு நாகை சிவா, சிவா, சிவா, சிவா, (மேலும் சிறப்புத் தகுதி கொசுவையும், குருவியையும் பதிவு போடுவது. தற்சமயம் காக்கைப் பதிவு எதிர்பார்க்கப் படுகிறது.)

கெளரவப் பின்னுட்டாளர்கள்: திரு அசின் அம்பி. (மொக்கைப் பதிவுச் சிறப்பாளர். அசினைத் தியாகம் செய்த பண்பாளர். அசினுக்குத் தம்பியாகி சிறந்த சகோதரப் பாசத்தைக் காட்டியவர்.அப்போ அப்போ தலைவியை உங்களுக்கு இருக்கு என்னோட பதிவிலே என்று மிரட்டி விட்டு ஒன்றுமே எழுதாமல் ஊருக்குப் போய்விடும் நல்லவர், வல்லவர்.)
திரு கார்த்திக் முத்துராஜன்: தலைவியின் சுற்றுப் பயணத்திற்காக அலுவல் வேலையை விட்டு விட்டுப் போஸ்டர் அடித்தவர். அலுவல் வேலையா, தலைவியின் சேவையா என்ற கேள்வி வந்த போது தலைவியின் சேவையே பெரிது என்ற முடிவில் போஸ்டர் வெளியிட்டார். ஆஃபீஸில் நிஜமாகவே வேலை வரும் என்று கனவு கூடக் காணாதவர், இப்போ யு.எஸ். போய் என்ன செய்யப் போகிறாரோ?

நிரந்தரப் பின்னூட்டாளர்கள்:பாசமலர்களான செல்வி வேதா, மற்றும் புதரகத் தூதுவர் திரு ச்யாம் அவர்கள்.
இரண்டு பேருக்கும் பாசத்துக்காக உருகவே மற்றவர் வலைப் பதிவை உபயோகிப்பார்கள். :D வலை உலகின் பாச மலர்களான இவர்கள் இருவரும் தலைவி என்ன எழுதினாலும் மறுத்து எழுதுவதிலும் தலைவியை கால் வாருவதிலும் புகழ் பெற்றவர்கள். :D
அடிக்கடி வருபவர்கள்; திரு தி.ரா.ச. அவர்கள். இவர் செய்த ஒரு தப்பினால் தான் தலைவி இந்த அளவு ரம்பம் போட ஆரம்பித்து விட்டார் என்று எல்லாப் பின்னூட்டாளர்களும் இவர் மேல் கோபத்தில் இருப்பதாகக் கேள்வி. தலைவியைப் புகழ்ந்து வேதாளத்தைக் கட்டவிழ்த்து விட்டு விட்டோம் என்று இவர் நொந்து கொள்ளாத நாள் இல்லை.

விவசாயி திரு இளா: ஏண்டா இவங்க பதிவுக்கு வரோம்னு நொந்து போன இன்னொரு ஆள். விவசாய அணித் தலைமையே வேண்டாம் என்று விட்டு விட்டுப் போகிற அளவு நொந்து போய் விட்டாராம்.
மற்றும் அடிக்கடி வருபவர்கள் பட்டியலில் திரு மனசு, (ஆளே காணோம், கொஞ்ச நாளா, 9தாராவை விட்டுட்டு வேறே யாரையோ பத்தி எழுதப் போறார்னு கேள்வி.)
திரு நன்மனம், (உண்மையிலேயே நன்மனமான இவருக்கு என்ன எழுதுவது என்று தெரியாததால் இவர் பதிவில் ஒண்ணுமே இல்லை, புதுசாக. முழிக்கிறார்.)
மின்னல் தாத்தா: வேண்டாத வேலை எல்லாம் செய்யறார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போ எதுக்கு? ஆனால் இவர் வயசைப் பார்க்கறச்சே பொறுமையாக் கணக்கு எடுத்திருக்கிறாரேனு வியப்பு வருது.

எப்போதாவது எட்டிப் பார்க்கும் மனு, மற்றும் படித்து விட்டுப் பின்னூட்டம் இடாமல் செல்லும் துளசி போன்றவர்கள் வருவது இந்த ஒரே பதிவுதான்.

மேலும் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டாளர்கள் பயன்பெறும் வகையில் இன்னொரு தகவல்: "குமாரகாவியம்" என்ன ஆச்சுனு கேள்வி கேட்டே திரு சிபி அவர்கள் பித்தானந்தா ஆகி இருப்பதும் இவர்தம் தனிச் சிறப்பு. பித்தானந்தாவின் "பின்" நவீனத்துவமும், "பின்" மொழிகளும், தத்துப் பித்துவமான கவிதையுமே தலைவியின் இந்தப் பதிவின் பெருமைக்குச் சிறந்த சாட்சி. "பின்" நவீனத்துவம் என்றால் ஹேர்பின்னா? ஸேஃப்டி பின்னா என்பதை வாசகர்கள் ஊகத்துக்கே விடுகிறேன். இந்த வசதி வேறே எந்தப் பதிவிலும் கிடைக்காது. யோசியுங்கள். முத்தமிழ்க் குழுமத்தில் இருந்து வந்தவர்கள் கூடத் தலைவியின் திறமையையும், அறிவுச் சுடர் விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு வியந்து போற்றிப் பாராட்டி இருப்பதைக் கண்டு களிக்கலாம்.

ஆகவே வலை உலகத் தோழர்களே, தோழியரே, உங்கள் வருகையால் நீங்கள் நிச்சயம் பயன் பெறுவீர்கள். எல்லாம் இலவசம். இலவசம், இலவசம்.
பின்னூட்டம், பின் மொழிகள், தத்துப்பித்துவம் எல்லாம் கிடைக்கும் ஒரே வலைப் பதிவு இதுதான்.

Saturday, August 12, 2006

105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்

ஹி,ஹி,ஹி, எல்லாரும் படிச்சிருப்பீங்களே, நான் விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவிலுக்குப் போனதும், அங்கே வேதாளத்தைப் பார்த்ததும், அப்போ என்ன நடந்ததுன்னா? (ம.சா: ஹி,ஹி,ஹி, எனக்குத் தெரியும், எல்லாரும் இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க.) நீ, சும்மா இரு. கூடக்கூடப் பேசாதே, இது நான்.
அங்கே வேதாளத்தைப் பார்த்தேனா, அப்போ நான் அதனிடம் சில கேள்விகள் கேட்கலாம்னு நினைச்சேன். என்னோட முதல் கேள்வி :வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி பட்டத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்றுதான். (ம.சா: தக்க வச்சுக்கறது என்ன நீதான் யாருக்கும் விட்டே கொடுக்கலியே, திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கியே, அவங்க வேணாம்னாலும் நீ விட மாட்டியே!)

மனசாட்சியை அலட்சியம் செய்து விட்டு இரண்டாவது கேள்வி: அதிகப் பின்னூட்டம் வாங்க என்ன செய்யறது? (ம.சா: நீ எழுதற விஷயத்தையும் ஒருத்தர் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கறதே பெரிசு. இதிலே அதிகம் வேறே வேணுமா? நீ என்ன நாகை சிவா மாதிரி குருவி, கொசு இதைப் பத்தியா பதிவு போடறே, பின்னூட்டம் வேணுமாம், பின்னூட்டம்) ஷ்ஷ்ஷ்ஷ், என்னோடயே இருந்துட்டு எனக்கு எதிரா வேலை செய்யற உன்னை என்ன செய்யறது? இந்த அம்பி தங்கிலீஷ் எழுதிட்டு, அதிலே முடி வெட்டறதையும், தன்னோட டிசம்பர் மாதப் பிறந்த நாள் வாழ்த்துக்கு இப்போவே அச்சாரம் போட்டும் எழுதறார். இதிலே என்னை வேறே மிரட்டல், உங்களுக்கு இருக்கு, உங்களுக்கு இருக்குன்னு, கடைசிலே பார்த்தால் மனுஷனுக்குப் பயம் வந்துட்டது போலிருக்கு. ஹி.ஹி.ஹி. ஊரை விட்டுப் போயிட்டார். சொல்லவே இல்லை. (ம.சா: ஆமாம், உன்னோட பதிவில் பின்னூட்டம் கொடுக்க யாருமே இல்லை. இதிலே தெனாவட்டா?)

அம்பி ஊருக்குப் போயாச்சு. கார்த்திக் ஆஃபீஸ் பிரச்னை. வேதாவும் வரதில்லை. நாகை சிவா காக்காய் அனுப்பிச்ச கோவத்தில் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மின்னல் தாத்தா, சின்னக்குட்டி,தி.ரா.ச. இவங்களையும் காணோம். மனசு, நன்மனம் இவங்க எல்லாம் உளவுப் படை வேலையிலே ரொம்ப பிசி. இல்லாட்டி வருவாங்க. (ம.சா: ஆமாம் வருவாங்க, காத்துக்கிட்டிரு, மனு என்ன ஆச்சு? அவங்க இப்போ வராங்களா? எல்லாரும் உன் பதிவைக் கண்டாலே ஓடறாங்க, புரிஞ்சுக்கோ.) Grrrrrrrrrrrrr. இந்தா மனசாட்சி, நீ தமிழ் சினிமா மாதிரி எனக்குப் புத்தி எல்லாம் சொல்ல வேணாம்.(ம.சா. ஆமாம், என்னை அடக்கு, கைப்புள்ள வராரா? அதுக்கு என்ன சொல்றே? உன்னோட பிடுங்கல் தாங்காமல் தான் ஒருத்தர் பித்தானந்தாவா மாறிட்டார்.மறைக்காதே என் கிட்டே) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சும்மா இருக்க மாட்டே? கைப்புள்ள தலைவர், தலைவர் எல்லாம் அடிக்கடி வர மாட்டாங்க, நான் இப்போ எப்போவாவது தானே சங்கப் பக்கம் தலை காட்டறேன். அது மாதிரிதான். சிபிக்குத் தமிழ் எழுத முடியலை. மறந்து போச்சோ என்னமோ? நான் "குமார காவியம்" னு கேட்டாலே ஒரு மாதிரி பார்க்கிறார். என்னோட மூணாவது கேள்வி வேதாளத்துக் கிட்டே: என்னோட ப்ளாக்கர் பிரச்னை அடிக்கடி பண்ணுதே, அது எப்போ சரியாகும்?

மேற்கண்ட மூன்று கேள்விகளையும் வேதாளத்திடம் கேட்க நினைத்து வேதாளத்தின் சன்னதிக்குப் போய் வேதாளத்திடம் முறையிட்டேன். "வேதாளத் தலைவரே, என்னோட ப்ளாக் என்னும் வேதாளம் எனக்குக் கொடுக்கும் தொந்திரவு போனாலே போதும். அதுக்கு ஏதாவது செய்ய மாட்டியா?" என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். வேதாளம் என் கண் முன் தெரிந்தது. உடனே அதனிடம் என் கோரிக்கையை வைத்தேன். வேதாளம்," எனக்குக் கேள்வி கேட்டுத்தான் பழக்கம். பதில் சொல்லிப் பழக்கம் இல்லை." என்றது. ஒரு மாறுதலுக்காக இம்முறை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு வேதாளத்திடம் கோரிக்கை வைத்தேன். என்னோட எல்லாக் கேள்விகளையும் கேட்ட வேதாளம் திரு திரு திரு என விழித்தது. "என்ன, வேதாளம் பதிலே சொல்லலியே?" என்று நான் கேட்க அது பயத்துடன் என்னைப் பார்த்து,"ஆமாம், நீ யார்? " என்றது. "ஏன் கேட்கிறாய்? நான் கீதா சாம்பசிவம்கிற பேரிலே எழுதறேனே, நீ பதில் சொன்னால் உன்னைப் பற்றியும் எழுதுவேன்," என்றதும், வேதாளம் "ஆளை விடு, நீ சங்கத் தலைவியோ, அல்லது தலைவலியோ, உனக்குப் பின்னூட்டம் வருமோ வராதோ, அது கூடப் பரவாயில்லை.உன்னாலே இத்தனை பேர் ஊரை விட்டுப் போயிட்டாங்க. அதுவும் ஒருத்தர் பித்தானந்தாவாகிட்டார். தவிர, இந்த ப்ளாக்கர் வேதாளம்னு சொல்றியே, அதைப் பார்த்தால் பயமாயிருக்கு. நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு. விக்கிரமாதித்தா, இவங்க கிட்டே இருந்து என்னைக் காப்பாத்து." என்று கதறிக் கொண்டு போய்விட்டது.

Friday, August 11, 2006

104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்

நாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து திருச்சி போய்ப் பின் தஞ்சாவூர், கும்பகோணம் போய்ப் பின் சென்னை வந்தோம். ஆனால் இதில் பார்த்த வரிசைகள்படி நான் எழுதவில்லை. முக்கியமான கோவில்கள் பற்றி மட்டும் எழுதுகிறேன். ஆகையால் முன்னே பின்னே தான் வரும். வரிசையாக வராது. இப்போ திருவையாறு பற்றி. எல்லாருக்கும் இங்கே நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றித் தெரிந்திருக்கும். திருவையாறு என்ற பெயரில் திரு+ஐயாறு கலந்து வந்துள்ளது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் திரு+ஐயாறு ஆகும். அவைகாவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை ஆகும்.
கி.மு.முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகால் சோழ மன்னன் காட்டைத் திருத்தி நாடாக்கி வந்த காலத்தில், ஒருமுறை வடநாடு சென்று திரும்பும் வழியில் அவன் தேர் ஒரு இடத்தில் அழுந்தவே, தேரை எடுக்க முயற்சி செய்தான் மன்னன். அப்போது கிடைத்த லிங்கத்தை ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு உத்தரவு வர, அப்படியே செய்து ஐயனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். கோயிலின் வெளிப் பிரஹாரத்தில் "செம்பியன் மண்டபம்' என்ற பெயரில் ஒரு மண்டபம் கட்டி அங்கே தன் உருவச்சிலையையும், தன் மனைவிமார் சிலையையும் பிரதிஷ்டை செய்கிறான். கோவில் கட்டப் பணம் தேவைப்படவே அரசன் திகைக்கிறான். அப்போது அகப்பேய்ச்சித்தர் வந்து அரசனுக்கு நான்கு பெரிய குளம்படிகளைக் காட்டி அது நந்திஎம்பெருமானின் குளம்படிகள் எனவும், அவற்றுக்குக் கீழே தோண்டினால் நவரத்தினப் புதையல் கிடைக்கும் எனவும் சொல்ல மன்னன் அதே மாதிரி செய்து கோவிலைப் பூர்த்தி செய்கிறான். தற்சமயம் ஒரு தியான மண்டபம் ஆகியிருக்கும் இந்த மண்டபத்தில் அரசு மேற்குறிப்பிட்ட தகவலை எழுதி இருக்கும் பலகை பழுதடைந்து போயிருப்பதால் மிச்சம் உள்ள வார்த்தகளின் மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. சற்று மாறுபாடு இருந்தால் யாராவது தெரிவிக்கவும். ஸ்ரீதியாகராஜர் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கு ஏற்றச் சொல்லி வருவோர் போவோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10ரூ கொடுத்தால் 5 விளக்கு. ஒரு வியாபாரம்.

அப்பர் பெருமான் பதிகம் பாடிய தலமும் இது. கைலாயம் செல்ல விரும்பிய அப்பர் இறைவனால் தடுத்தாட்கொண்டு ஒரு பொய்கையில் மூழ்கி எழுந்தபோது திருவையாறில் எழுந்ததாக வரலாறு கூறுகிறது. அப்பருக்குக் கைலையைக் காட்டிய இடம் "தெ கைலாயம்" என்று அழைக்கப் படுகிறது. கோயிலுக்குத் தென்புறம் உள்ள இந்த சன்னதி "பஞ்சவன் மாதேவீச்சுரம்" என்றும் சொல்லப் படுகிறது. இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டதாக ஒரு ஐதீகமும் இந்தக் கோயிலில் உண்டு. அதன் வரலாறு: சிவாசாரியார் ஒருவர் காசிக்குச் சென்றிருந்த சமயம் அவர் ஐயனுக்குப் பூஜை செய்யும் முறை வந்தது. அவரால் உடனே ஊர் திரும்ப முடியவில்லை. அப்போது இறைவனே சிவாசாரியார் வேடத்தில் வந்து தன்னைத்தானே பூஜித்து வந்தார். சிவாசாரியார் வந்து பார்த்து "என்னைப் போல் இருக்கும் நீ யார்" எனக்கேட்க இறைவன் "வா, காட்டுகிறேன்." என்று சொல்லிக் கருவறையினுள் மறைகிறார். இந்த ஐதீகத்தைப் பின்பற்றி இப்போதுமொரு இரும்புப் பேழையில் இரு லிங்கங்களும், ஒரு அம்பாளும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.

மூலவர் கருவறை அகழி போன்று இருக்கிறது. மூலவரின் முடி வளர்ந்து வருவதாகவும் அதனால் ஜடாபாரம் கருவறைக்கு வெளியேயும் பரவியுள்ளதால் இந்தக் கோயிலில் மூலவரின் உள்பிரஹாரத்தைச் சுற்றி வரக்கூடாது என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி பிரஹாரம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தியைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். மூலவர்முன் கவசம் இட்டு அதில் பசு, சூலம் பொறிக்கப் பட்டுள்ளது.அம்மன் கோயில் தனியாக உள்ளது. ரொம்ப தூஊஊஊஊஊரம் போய்ப் பார்க்க வேண்டும். அன்னையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி ஆகும். இங்கே ஐயனுக்குத் தான் விசேஷம்.

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்குமாம். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்குமாம். ஏழு ஊர்ப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் காண திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) பெறுகிறது. நாங்கள் திருவையாறு செல்லும்போது திருவேதிக்குடி வழிதான் சென்றோம். உள்ளே போகவில்லை.

Thursday, August 10, 2006

103. உலகத்து நாயகி

"உலகத்து நாயகியே-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி"
**********************
நாங்கள் திருச்சி போனதும் சமயபுரம் போய் மாரியம்மனைப் பார்க்க முடிவு செய்தோம். பலமுறை போனதுதான். என்றாலும் பார்க்காமல் முடியாது. இதற்கு முன்னர் எங்களுக்கு நேர்ந்த ஒரு அனுபவம் அம்மனின் அருளையும், கருணையையும், நாங்கள் தவறாமல் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொன்னதையும் நினைவு கூர்ந்தோம்.
**********************
2005 மார்ச் மாதம் எங்கள் பையன் 3 வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு வந்ததால் குலதெய்வம் கோவிலுக்குப் போக முடிவு செய்து கிளம்பிப் போய்விட்டுப் பின் திருச்சியில் சொந்தக்காரரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பினோம். வழியிலேயே சமயபுரம் மாரியம்மன் கோவில் வருவதால் அங்கே போகலாம் என நானும், என் கணவரும் நினைக்க எங்கள் பையனும், டிரைவரும் அங்கே போனால் நேரம் ஆகிவிடும், பின் சென்னை போகும்போது நடுராத்திரி ஆகும் என்று சொன்னார்கள். நான் கோவில் மெயின் ரோட்டில் வழியிலேயே இருப்பதால் நேரம் ஆகாது என்று சமாதானம் செய்தேன். திருச்சி தாண்டியதும் கோவில் அடையாளத்தைக் காட்டும் வளைவு வருவதை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே வந்தோம். சாதாரணமாகச் சமயபுரம் போகும் பேருந்துகள் நிறையக் கண்ணில் படும். அன்று ஒரு பேருந்து கூடக் கண்ணில் படவில்லை. அதனால் என்ன நமக்கு இடம் தெரியுமே என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அரை மணி நேரத்தில் வரவேண்டியது ஒரு மணி நேரம் ஆகியும் கண்ணிலேயே படவில்லை. நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், எனக்குச் சரியாகப் புரியவில்லை, என்றும் இனிமேல்தான் சமயபுரம் வரும் என்றும் கூறவே வண்டி மேலே போனது. சற்று நேரத்தில் பெரம்பலூரும் வந்து அங்கே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வளைவும் வரவே நான் நிச்சயமாகச் சமயபுரம் தாண்டி விட்டோம் எனக்கூறவே உடனே அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டோம். அங்கெ இருந்த ஒருத்தர், "அது என்ன ஒரு பத்து கிலோ மீட்டர் தான் இருக்கும். திரும்பிப் போய்ப் பார்த்துவிட்டே போங்க," என்று கூறினார். சரி பத்து கிலோமீட்டர் தானே என்று திரும்பினோம். போனால் போய்க் கொண்டே இருக்கிறது. சமயபுரம் கோவில் வளைவு கண்ணில் படவே இல்லை. மறுபடி சந்தேகம், மறுபடி கேட்டு, மறுபடி இன்னும் ஒரு பத்து கிலோமீட்டர் என்று இப்படியே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வந்ததும் அன்னை தன் கோவிலைக் காட்டினாள். இத்தனை பெரிய வளைவு எப்படி ஒருத்தர் கண்ணிலும் படாமல் 50 கிலோமீட்டர் போனோம்? இன்று வரை புரியாத புதிர். அப்புறம் உள்ளே போய் அம்மனைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்பினோம். மாரியம்மன் எல்லாரும் ஒன்றுதானே, ஊரில் நம் குலதெய்வக்கோவிலில் பார்த்ததும் அவளைத் தானே என்ற எங்கள் பையன் வாயே திறக்கவில்லை.

இம்முறையும் அவளைப் பார்த்துவிட்டுப் பின் அவள் பிறந்த இடமான ஆதி சமயபுரம், மாகாளிக்குடி போன்றவையும் பார்க்க நினைத்துப் போனோம். சமயபுரம் கோவிலில் கூட்டம் இருந்தாலும் சிறப்புத் தரிசனம் இல்லாமலேயே அன்னை தரிசனம் நன்கு கிடைத்தது. பிரசாதமும் கிடைத்தது. வளையல், குங்குமம், மஞ்சள் போன்றவை தருகிறார்கள்.இந்த அன்னை வருடத்தில் பத்து நாள் வைகாசி மாதத்தில் நாச்சியார் கோவிலில் ஆகாய மார்க்கமாக வந்து தங்குவதாக ஐதீகம். பத்து நாளும் நாச்சியார் கோவிலில் உற்சவம் நடக்கும். அன்னைக்கு அங்கே ஆகாச மாரியம்மன் என்றே பெயர். நாச்சியார் கோவிலில் இருந்து எங்கள் கிராமத்திற்குப் போகும் வழிதான். . மற்ற நாட்களில் ஒரு முக்கோணவடிவிலான கல்லில் இருக்கும் அன்னை, பத்து நாளும் அலங்கார ஸ்வரூபிணியாகக் காட்சி தருவாள். நாங்கள் நாச்சியார் கோவில் வழி போனாலோ அல்லது திரும்பி வந்தாலோ போகாமல் வருவது இல்லை.
பிறகு அங்கிருந்து அன்னை பிறந்த இடமான ஆதி சமயபுரம் அல்லது இனாம் சமயபுரம் போனோம். வழி இந்தத் தற்போதைய சமயபுரத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் இருக்கிறது. நுழைவு வாயிலில் ஆதி சமயபுரம் போகும் வழி என்று வளைவு இருக்கிறது. அங்கே போய் அம்மன் தரிசனம் செய்து விட்டுச் சன்னதிக்கு அருகேயே இடது பக்கம் சிறு ஓட்டு வீடு போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்குள் அம்மன் பிரதிஷ்டை செய்திருக்கும். அதுதான் அம்மனின் உண்மையான பிறந்த இடம் என்கிறார்கள். அங்கிருந்து தற்சமயம் இருக்கும் இடம் வந்ததாகச் சொல்கிறார்கள். யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. கோவிலில் புத்தகமும் வாங்க முடியவில்லை. அன்னை அருளால் அடுத்த முறை போகும்போதாவது வாங்கிப் போடலாம் என்று நம்புகிறேன்.

இதற்குப் பிறகு நாங்கள் பக்கத்தில் இருக்கும் "மாகாளிக்குடி" என்ற ஊருக்குப் போனோம். இதுவும் சமயபுரத்திலிருந்து 2 கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. நான் ஒரு சில வருடங்களுக்கு முன் என் தம்பியுடன் போனேன். அப்போதில் இருந்து என் கணவருக்கு இந்தக் கோவிலைக் காட்ட எண்ணி இப்போதுதான் முடிந்தது. கோவிலின் விசேஷம்: இது விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவில். அதைத் தவிர உஜ்ஜையினியில் இருந்து அவன் கொண்டு வந்த முழுத் தங்கத்தால் ஆன காளி சிலை இங்கே இருக்கிறது. விக்கிரமாதித்தன் காடாறு மாசம், நாடாறு மாசம் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை காடாறு மாசத்தில் இங்கு வந்து தங்கி இருந்ததாகவும், அப்போது இந்தக் கோவிலைக் கண்டுத் தான் வழிபடும் காளியே இவள் என்று அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே தான் கையோடு கொண்டு வந்த காளி சிலையையும் அங்கேயே வைத்துப் பூஜித்ததாகவும் சொல்கிறார்கள்.விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் மாட்டிக் கொண்டு விழித்ததும் இங்கே தான். அன்னையின் அருளால் வேதாளத்தின் கேள்விகளுக்குப்பதில் கிடைத்ததும் இங்கேதான் என்கிறார்கள். முன்னே போயிருந்தபோது வேதாளம் இருந்த மரம் என்று ஒரு பழைய மரத்தைப் பார்த்த ஞாபகம். இப்போது வேதாளத்திற்குத் தனி சன்னதி இருக்கிறது. அம்மனின் சன்னதிக்கு இடப்பக்கம் பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கிறது.

அன்னை இங்கே "ஆனந்த செளபாக்கிய சுந்தரி"யாகத் தாண்டவ ஸ்வரூபத்தில், வாசி யோகத்தில் அருள் பாலிப்பதாக அங்கே இருந்த காளி உபாசகர் கூறினார். கோவிலில் கூட்டம் இல்லாத காரணத்தால் எல்லாம் கேட்டு அறிய நேரமும் இருந்தது. சொன்னவரும் ஸ்ரீவித்யா உபாசகர் என்று அவர் பேச்சிலேயே தெரிந்து கொண்டோம். விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மஹாகாளி இந்த அன்னையின் உற்சவ விக்ரஹத்திற்கு வலப்பக்கம் இருக்கிறது. அந்த அன்னைக்கும் தனியாகக் கற்பூர ஆரத்தி காட்டிச் சொல்கிறார்கள். சுமார் ஒரு அடி உயரம் இருக்கும் அந்த சொர்ணத்தினால் ஆன விக்ரஹம் அந்தக் கோவிலுக்கு வந்துப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். இதே மாதிரிதான் உஜ்ஜைனியில் காளி அம்மன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
**********************
"பூதமைந்தும் ஆனாய்-காளி!
பொறிகளைந்தும் ஆனாய்!
போதமாகி நின்றாய்-காளி!
பொறியை விஞ்சி நின்றாய்!

இன்பமாகி விட்டாய்-காளி!
என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால்-
பிறிது நானுமுண்டோ?

அன்பு தந்து விட்டாய்- காளி, காளி!
ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்-காளி!
துயரழித்து விட்டாய்!"

Wednesday, August 09, 2006

102. நான் செய்த தவம்

உண்மையிலேயே நான் ரொம்பத் தவம் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னோட இந்த உடல் நிலையில் இத்தனை கோவில்களுக்குச் சென்று வரமுடியாது. அதற்கு உரிய மனோதைரியத்தையும் எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி என்று சொல்வதை விட அவனையும், அவன் அருளையும் எந்நாளும் நான் மறவாமல் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் செயலே!

இம்முறைத் திட்டம் இட்டது ஒன்று. நடுவில் பங்களூர் பயணம் குறிக்கிடவே சற்று மாறுதல் செய்ய வேண்டி வந்தது. ஆகவே மதுரை போக முடியவில்லை. நிறையக் கோயில்கள் சென்று வந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான சில கோவில்களைப் பற்றி எழுத எண்ணம். எல்லாம் எல்லாப் புத்தகங்களிலும் வருகிறது. என்றாலும் நான் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டி எழுதுகிறேன். முதலில் என் அருமை நண்பர், என் எல்லாக் காரியங்களிலும் கை கொடுப்பவர், விக்னங்களைத் தடுத்து ஆட்கொள்பவர், ஒரு சிறு அருகம்புல்லிற்கே மனம் மகிழ்பவர் ஆன அந்த ஆனைமுகத்தோனுக்கு வணக்கம் சொல்லி அவன் திருக்கோயிலைப் பற்றி எழுதுவதுடன் ஆரம்பிக்கிறேன். இது போனது என்னமோ அப்புறம்தான். ஆனால் முதலில் ஆனைமுகத்தோன் புகழ்தான் வர வேண்டும் என்பதால் அவன் தாள் பணிந்து ஆரம்பிக்கிறேன்.
**********************
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு-துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற்சார்வர் தமக்கு.
**********************
திருவலங்சுழி
காவிரி அன்னை வலமாகச் சுழித்துக் கொண்டு போனதால் இந்த க்ஷேத்திரம் "திருவலஞ்சுழி" எனப் பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கட்டிக் கடையும் வேளையில் அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட தேவேந்திரன், என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் "விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்ல அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான். விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது. அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என அங்கேப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் "ஸ்வேத விநாயகர்" என்றும் "வெள்ளைப் பிள்ளையார்" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார். இவருக்கு அபிஷேஹம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப் படுகிறது. இவரை வழிபட்டுவிட்டுத் தான் இவரின் தம்பியான "ஸ்வாமிநாதனை" வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதைத் தவிர இந்தக் கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது.
வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் (பிலத்துவாரம்) ஏற்படவே காவிரி அதனுள் சென்று மறைகிறாள். சோழன் செய்வது அறியாது தவிக்க அசரீரி கூறுகிறது. "தன்னலம் கருதாது அரசன் ஒருவனோ அல்லது மாமுனிவர் ஒருவரோ அந்தப் பாதாளத்தில் தங்களைப் பலியிட்டுக் கொண்டால் பள்ளம் மூடிக் கொண்டு காவிரி வெளிப்படுவாள்" எனக்கூறுகிறது. இதைக் கேட்ட ஹேரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். ஹேரண்ட முனிவரின் சிலை கோவிலில் இருக்கிறது. மஹா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வெளிவந்து வழிபட்டதாக ஐதீகம். அன்னை பராசக்தி சடைமுடி நாதனையே மணம் புரிவேன் என்று தவம் இருந்த காரணத்தால் "சக்திவனம்" என்ற பெயரும் உண்டு. ஸ்வாமிமலை கோயிலுக்கு நுழைவு வாயில். கோயில் ரொம்பப் பெரிது. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலம். கோவில் ரொம்பப் பெரிது. ஆனால் இன்று திருப்பணி வேலைகள் ஆரம்பித்து நடுவில் நின்று விட்டது போல் தெரிகிறது. ஸ்வாமிநாதன் தன் அண்ணனின் வீடு கவனிப்பாரின்றி இருப்பதைக் காணவில்லையா தெரியவில்லை. இத்தனை பெரிய கோவிலைப் பராமரிக்க ஆட்களும் குறைவு. சன்னதிகளில் தனியாகப் போய்த் தரிசித்து விட்டு வரவேண்டி உள்ளது. பக்கத்தில் ஸ்வாமிமலை அத்தனை கோலாகலத்துடன் இருக்க அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயில் இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. கணபதி எளிமையானவர் என்பதால் இது போதும் என்று இருக்கிறார் போலும். கோவிலுக்கு மன்னர்கள் அளித்த மானியங்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேஹம் நடைபெறும் என நம்புவோம்.

Tuesday, August 08, 2006

101. குண்டர் படைத் தலைவர்

ஹி,ஹி,ஹி, குண்டர் படைத் தலைவருக்குத் தனிப் பதிவு போட்டுடலாம்னு ஒரு எண்ணம். அதான்.
*********************

திரு தி.ரா.ச. அவர்களின் ஆலோசனைப்படிக் குண்டர்படைத் தலைவரைக் கூட்டிக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட நினைத்த அம்பி ஏமாந்தார். தலைவி குண்டர் படைத் தலைவரைச் சரியாகக் கண்டு கொண்டதில் சந்தோஷம் அடைந்த அவர், "தலைவி சொல்லே வேத வாக்கு" என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்.
முன்னதாக அம்பியுடன் சேர்ந்து தலைவியை மிரட்ட வந்த குண்டர் படைத் தலைவர், தலைவியின் அறிவாற்றலையும், பிரச்னைகளைச் சமாளிக்கும் முறையையும், முக்கியமாக உண்மையிலேயே சின்னப் பொண்ணாகத் தலைவி இருந்ததைப் பார்த்து (!!!!!!!) வியந்தும், அம்பியிடம் இருந்து வந்த தன் நட்பை முறித்துக் கொண்டார். தலைவியின் மின்னல் வேகச் செயலாற்றும் திறமைக்குத் தலை வணங்கித் தான் தலைவியுடன் சேர்ந்து கொள்ளும் ஆசையில் தான் அம்பியுடன் வந்ததாகத் தெரிவித்தார். அவர் தம் முடிவில் மனம் மகிழ்ந்த தலைவி அவருக்கு உப்புப் பொட்டலம் பரிசளித்தார். அவரும் மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பதற்கேற்பத் தான் தலைவியிடம் மிக்க மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் அவருக்கு எனத் தனிப் பதிவு இல்லாத காரணத்தால் தலைவி அவரைச் சீக்கிரம் வலைப்பக்கம் ஆரம்பிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தலைவி அவரையும் ஒண்டிக்கு ஒண்டி என்று ஒரு கை பார்க்க வசதியாக இருக்கும் என்பது தலைவியின் எண்ணம். குண்டர் படைத் தலைவர், தான் மிக்க ஒல்லியாக இருப்பதால் இந்தப் பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளத் தலைவி ஒல்லியாக இருப்பவர்கள் குண்டர் படைத் தலைமையாக இருப்பது தான் நியாயம் என்று அவரைத் தேற்றினார்.
**********************

(ஹி,ஹி,ஹி, அம்பி, எப்படி இருக்கு? உங்க கூட வந்தவர் இந்த ஒரு பதிவில் மட்டும் இல்லை, இனி வரப் போகும் எல்லாப் பதிவிலும் குண்டர் படைத் தலைவர் தான். இது தான் இந்தப் பதிவுலகின் சாபக்கேடு, தமிழ் சினிமா மாதிரி.)

100. 100. 100. 100. 100. முப்பெரும் விழா,

ஹி,ஹி,ஹி, ஹி,ஹி, 100 அடிச்சுட்டேன். 100 பதிவுங்க வேறே ஒண்ணும் இல்லை. என்ன கேட்கறீங்க? படிக்கும்போது 100 வாங்கினேனா என்றா? அதான் இப்போ 100 வாங்கறேன் இல்லை. பழசை எல்லாம் கிளறக்கூடாது. இப்போ நம்ம முப்பெரும் விழா பற்றி ஒரு அறிக்கை.
*************

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியும், இத்தனை நாள் வெளியே போய் எல்லாருக்கும் நிம்மதியைக்கொடுத்தவருமான நம் தலைவி தன் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தலைமையகம் திரும்பினார். அவர் அம்பியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டதற்கும், தமிழ் நாட்டின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்ததற்கும், 100 பதிவுகள் போட்டதற்கும் சேர்த்து அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. நேரமும், விழாக் காணும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். இப்போது தலைவியின் வெற்றிப் பயணத்தின் விவரங்கள் வருமாறு:

முன்னதாகத் தலைவி கடந்த 30-ம் தேதி பங்களூரில் அம்பியுடன் ஒரு சந்த்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனது அனைவரும் அறிந்ததே! தலைவி பங்களூர் வந்து அடைந்ததும், திரு அம்பி அவர்கள், தன் குண்டர் படைத் தலைவருடன் தலைவியைத் தேடி அலைந்தார். அம்பி எதிர்பார்த்ததோ ஒரு குடுகுடு கிழவியை. பல் எல்லாம் போய்த் தலை நரைத்துக் கையில் ஒரு தடியுடன் ஒளவையார் ரேஞ்சுக்குக் கற்பனை செய்து வைத்திருந்த அம்பி தலைவியைக் காண முடியாமல் திணறினார். ஆனால் தலைவி அம்பியை இனம் கண்டு கொண்டார். தலைவியைத் திணற அடிப்பதற்காக அம்பி மாறு வேஷத்தில் வந்திருந்தாலும், அவர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில் இருந்த கறுப்பு நிறத்தை வைத்து அவர் மறைமுகமாகத் தலைவிக்குக் கறுப்புக்கொடி காட்ட முயல்வதைத் தலைவி புரிந்து கொண்டார். எனினும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். தலைவியைக் குழப்ப நினைத்த அம்பியும், குண்டர் படைத் தலைவரும் தங்கள் பெயரை மாற்றிச் சொன்ன போதிலும் தலைவி சரியாக அவர்களை இனம் கண்டார். தலைவியின் அறிவு இப்படி பட்டொளி வீசிப் பிரகாசிப்பதைக் காணச் சகியாத அம்பி தலைவியிடம் தான் smart ஆக இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்ள, தலைவி அவரை முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாகத் தான் கற்பனை செய்து வைத்திருந்ததை கூறுவதற்கு rough and tough என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்யவே அம்பியின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் வழிந்து ஓடிக் கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகரம், கபினி போன்ற அணைகளில் நீர் நிரம்பி வழிவதால் கர்நாடகாவின் பொதுப்பணித்துறைக்கு அந்தத் தண்ணீரைத் தமிழ் நாட்டிற்குத் திருப்பி விடக் கட்டளை இட்டார். தமிழ் நாட்டில் காவிரியின் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாய அணித் தலைவர் திரு இளா அவர்கள் தலைவிக்குக் "காவிரி கொண்டாள்" என்ற பட்டம் அளிக்கத் தீர்மானித்துள்ளார்.

அம்பியுடன் தலைவி போட்ட ஒப்பந்தம் சுமுகமாகக் கையெழுத்திடப்பட்டது. அம்பி ரேஞ்சுக்கு "சோபியா லாரன்", "எலிசபெத் டெய்லர்" போன்ற நடிகைகள் போதும் என்று தலைவி முடிவு செய்ய அம்பி இன்னும் கொஞ்சம் அவர்கள் இருவருக்கும் முன்னால் நடிக்க வந்தவர்களாகப் பாருங்கள் என்று தலைவியிடம் விண்ணப்பம் செய்து கொண்டார். தலைமையகம் திரும்பியதும் அதைப் பற்றிப் பரிசீலிப்பதாகத் தலைவி வாக்குறுதி அளித்தார். இதன் பின் தலைவி தமிழ் நாட்டின் காவிரி பாயும் மாவட்டங்களின் நீர் வரத்தையும், மற்ற விவரங்களையும் கண்டு களிக்கத் தமிழ்நாடு திரும்பினார்.

தலைவியின் இந்தத் திக்விஜயம் வெற்றிகரமாக முடிந்தது கண்டு சங்கப் பெருமக்கள் களிப்பு அடைந்திருக்கிறார்கள். தலைவி சுற்றுப் பயணம் செல்லும்போது நடந்த பிரிவு உபசார விழாவில் தாமதமாகக் கலந்து கொண்ட "நாகை சிவா" விற்குத் தலைவி முன்னம் அளிப்பதாக ஒப்புக் கொண்ட பரிசுகளை ரத்து செய்து விட்டுத் தற்சமயம் ஒரு பழைய சினிமா போஸ்டரும், சில பல காக்கைகளும் அனுப்பி வைத்தார். (சிவா, வந்ததும் ஒரு பதிவு போடுங்க, பராசக்தி படத்துக் "கா, கா" பாட்டைப் போட்டு, புரிஞ்சுப்பேன், காக்கை வந்ததை.)
***********
சங்கக் கண்மணிகளும், முத்தமிழ்க்குழும உடன்பிறப்புகளும், தமிழ்மகள்க் குழுமச் செல்வங்களும், மற்றும் உள்ள எல்லாச் சங்கப் பிள்ளைகளும் பெருமளவில் திரண்டு வந்து விழாவைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.