எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 20, 2019

வந்து கொண்டே இருக்கேன்!

நேற்றோடு மிக மிக முக்கியமான வேலை முடிந்தது. கொஞ்சம் ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மின்னூல்களுக்கான இரு புத்தகங்களை இன்று எடிட் செய்து அனுப்பி வைத்திருக்கிறேன். இன்று முழுவதும் அதில் போய்விட்டது. அதோடு வீட்டிலும் இரு நாட்களாகச் சுத்தம் செய்யும் வேலை. இம்முறை ஆளைக் கூப்பிடாமல் நாங்களே செய்ததால் காலை ஆரம்பித்துப் பின்னர் அது முடிஞ்சு சமைச்சுச் சாப்பிடவே ஒரு மணி ஆகி விடுகிறது. அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் உடல் ஓய்வைத் தேடுகிறது. இருந்தாலும் இன்று எப்படியானும் முடிச்சுடணும்னு இரண்டு நூல்களையும் பிழை திருத்தங்கள் சரி பார்த்து விட்டுப் போனதைப் பதிவுகளில் தேடிச் சரி பார்த்து அனுப்பி வைக்க இத்தனை நேரம் ஆகி விட்டது. வெளி வந்ததும் இங்கே சுட்டி கொடுக்கிறேன்.  இரண்டுமே  நீங்கள் அனைவரும் ஏற்கெனவே படித்து ரசித்தது தான்.

இனி நாளை முதல் பண்டரிபுரம் பதிவின் தொடர்ச்சியை எழுதி முடிக்கணும். அதிகம் இல்லை. ஒரு நாளில் முடிந்து விடும் என எண்ணுகிறேன். இன்னும் இரு புத்தகங்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் விரைவில் அனுப்பி வைக்கும்படி இருக்கும்.ஆகவே கொஞ்சம் அப்படி, இப்படி வருவேன். பொறுத்துக்கொள்ளவும். அல்லது விட்டது தொல்லை என சந்தோஷமும் அடையலாம்! :P :P:P:P:P இப்போக் கடமை ரொம்ப நேரமா அழைப்பதால் போய் வருகிறேன். டாட்டா, பை, பை! இஃகி, இஃகி, நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு நல்ல மூட். டாட்டா சொல்லி ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது. :))))))

Friday, May 17, 2019

ஙே!!!!!!!!!!!!!!!!!!!

மூன்று நாட்களாக வேலை அதிகம். இணையத்துக்கு வந்தாலும் பதிவுகள் போடவோ,நண்பர்கள்பதிவுகளைப் படிக்கவோ முடியவில்லை. நல்ல வேளையாக யாரும் தேடவில்லை. நெ.த.வும், ரேவதியும் மட்டும் தனியாகச் செய்தி கொடுத்துக் கேட்டிருந்தார்கள். அதோட அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வேலைகள் முக்கியம் இல்லையா? அதிரடி எல்லாம் அம்மா வந்திருக்கும் சந்தோஷத்தில் நினைக்கக் கூட மாட்டாங்க என்பது இயல்பு. அதோடு அவங்களுக்கு என்னோட ஜனனி, ஜனனி பதிவில் கொஞ்சம் இல்லை நிறைய வருத்தம்! :) மனசு தாங்கவில்லை அவங்களுக்கு.  நேற்றைய ஸ்ரீராமின் பதிவு மட்டும் அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். கருத்துச் சொல்லவில்லை. அங்கே இருந்த ட்ராஃபிக் ஜாமில் காணாமல் போய்விடும் அபாயம் இருந்ததால் எதுவும் சொல்லவில்லை. யாருக்கானும் அந்த ருசியில் நம்ம நினைவு வந்திருந்தால்தான் ஆச்சரியப் படணும். :)

நேத்து ராத்திரி/இல்லை, இல்லை, இன்னிக்குக் காலையிலே தூக்கத்திலே  3- 30 மணி சுமாருக்குக் கத்தினேனாம். நம்ம ரங்க்ஸ் சொல்றார். எனக்கு நினைவில் இதெல்லாம் இருப்பதில்லை. எதுக்குக் கத்தினேன்னு கேட்டார். முழிச்சேன். என்ன பதில் சொல்றது? அப்போத் தான் 3 மணிக்கு ஏசியை அணைச்சுட்டுப் படுத்தேன். அரைமணிக்குள் என்னவா இருக்கும்? இஃகி,இஃகி, எனக்கே தெரியலை! ஒரு வேளை நேற்றைய அனுபவங்களோ?  நேத்துப் பூரா ஐஆர்சிடிசி தளத்தில் வெட்டியாக நாளைச் செலவழித்ததில் அதில் பயந்துட்டேனோ என்னமோ! கடைசியில் ரயில்வேயில் அங்கே இங்கேனு கேட்டும் மெயில் கொடுத்தும் வேலைக்கு ஆகலை! அது எரர் காட்டிக் கொண்டே இருக்கு. விஷயம் ஏதும் இல்லை.  ஐஆர்சிடிசி மூலம் ரயில்வேயில் அறை முன்பதிவு செய்யணும். தலை கீழா நின்னு பார்த்துட்டேன். பெப்பே என்று விட்டது. இன்னிக்கு மறுபடி உட்காரலாமா வேண்டாமானு யோசனை. அப்புறமா இந்த நாளும் வெட்டியாக ஆயிடுமோனு பயம்மா இருக்கு! அதான் துர்சொப்பனமா வந்து கத்தினேனோ? ஙே!!!!!!!!!!!!!!!!!!

Sunday, May 12, 2019

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

(ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ  (மீள் பதிவு!)





அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

கிட்டத்தட்டப் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்தாருக்கும் இதே அனுபவம். தன் தாய் இறந்ததும் பச்சை வாழைமட்டைகளை வைத்தே இவரும் தாய்க்குத் தீ மூட்டினார். அப்போது பாடிய பாடல்கள்  ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகத்தை ஒத்திருக்கும்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

மாத்ரு பஞ்சகத்தில் சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. இதுக்கு மேல் எழுதினால் கல்லெறி விழும்னு நினைக்கிறேன்.

தாயுமானவராய் இருந்து தன் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து கொடுத்துச் சிறப்பாகக் கடமை ஆற்றிய கில்லர்ஜி அவர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அவரை இவ்வளவு பொறுப்பாக வளர்த்த அவர் அன்னைக்கும் நம் நமஸ்காரங்கள்.

Saturday, May 11, 2019

ஜெய ஜெய விட்டல! பாண்டுரங்க விட்டல!

இந்தப் பண்டரிநாதன் எளியோருக்கு எளியவன். இவனை அதிகம் தரிசிக்க வருபவர்கள் அக்கம்பக்கம் ஊர்களில் உள்ள எளிய கிராம மக்களே. ஆகவே தான் அவர்கள் வந்து தங்குவதற்கு ஏற்றாற்போல் ஓட்டல் அறைகள் இருப்பதாகச் சொன்னார் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் முதலாளி. ஒரு அறையில் குறைந்த பட்சமாக நாலைந்து பேர் தங்குவார்களாம். கட்டிலில் படுத்தால் 500 ரூபாயும் கீழே படுக்கிறவர்கள் 300 ரூபாய் எனவும் பணம் வாங்குவார்களாம். கீழே நாலு பேர் படுத்தால் 1200 ரூ ஆகிவிடுகிறது. இரண்டு கட்டில்களில் படுப்பவர்கள் மூலம் ஆயிரம் ரூபாய்! ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 2,200 ரூக்குக் குறையாமல் வசூல் ஆகுமாம். அப்படிக் கொடுக்கப்படும் அறையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் தங்குவது என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இரண்டு பேருமே வயதில் பெரியவங்க என்பதால் அறையைக் கொடுத்திருக்கோம். மற்றபடி இங்கே நாங்க சேவை எதுவும் செய்ய மாட்டோம். நீங்களே பார்த்துக்க வேண்டியது தான் எனத் திட்டவட்டமாக ஓட்டல் முதலாளி கூறி இருந்தார்.

அதோடு அங்கே வெளி வாசலில் போட்டிருந்த சில நாற்காலிகள் அவங்க மட்டும் உட்காருவதற்காகப் போல! தெரியாமல் அதில் உட்கார்ந்துவிட்டு! போதும், போதும்னு ஆயிடுத்து! இதிலே நாளைக்காலை வரை இருக்கணும். அதோடு இன்னொரு முறை தரிசனமும் பண்ணணும்னு நம்ம ரங்க்ஸ் ஆவல்! எட்டரைக்குத் தான் பார்க்க முடியுமாம். எட்டரைக்கு நாங்க கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆயிடும் என்கிறார்கள். 11-20க்கு உத்யான் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புனே செல்கிறது. புனேக்கு 3-45க்குப் போயிடும். ஆனால் போய் 20 நிமிஷத்தில் ரயிலைப் பிடிக்கணும். எந்த நடைமேடைனு எல்லாம் தெரியாது. அங்கே போய்த் தான் பார்க்கணும். 2,3,4 ஆம் நடைமேடைகள் எனில் படிகள் வழியே மேலே ஏறுவது எனில் சிரமம்! மண்டையை உடைத்துக் கொண்டே ஆட்டோவில் பயணித்துக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். மிகப் பழமையான ஊர். இன்னமும் முழுக்க முழுக்க "ந"ர"க மயம் ஆகவில்லை.  ஆட்டோ ஓட்டுநர் நாங்க பேசினதைக் கேட்டுவிட்டு இந்த ஆட்டோவில் எல்லாம் நீங்க சோலாப்பூர் வரை பயணிக்க முடியாது. கஷ்டம், அதுவும் அம்மா ரொம்ப சிரமப்படுவாங்க என்றார்.

அப்போ நம்மவர் தனியார் பேருந்துகள் இருக்கானு கேட்டார். அதோடு ஏதோ ஓர் ட்ராவல்ஸ் பெயர் சொல்லி அவங்க பேருந்து புனேக்கு இருக்கானும் கேட்டார். அந்த ஓட்டுநர் தரிசனம் முடிச்சுட்டு வாங்க! நான் கூட்டிப் போகிறேன். அப்படியே சாப்பாடுக்கும் குஜராத்தி தாலி மீல்ஸுக்குக் கூட்டிச் செல்கிறேன். என்றார். சரி எனச் சம்மதித்தோம். கோயில் நெருங்கியாச்சா எனக் கேட்டதுக்கு எதிரே இருந்த சுமார் 20,25 படிகளைக் காட்டி இந்தப் படிகளில் ஏறி அந்தப்பக்கம் சென்றால் கோயில் வாசல் வரும் என்றார். ஙே!! படிகள்,எங்கே போனாலும் படிகள்! ஆனால் விட்டலனைப் பார்த்தாகணும்! ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு எங்களைப் படிகளில் ஏற்றிவிட ஆட்டோ ஓட்டுநரும் கூட வந்தார். எங்கள் தரிசனத்துக்கான முன்பதிவுச் சீட்டுக்களில் அங்கே ஓர் மடத்தில் போய் முத்திரை வைச்சுக்கணும். இருவருமாகச் சென்று அதை முடித்துக் கொண்டு வந்தனர். அது இல்லைனாலும் பார்க்கலாம். கூட்டம் எல்லாம் இப்போ அதிகம் இருக்காது என்றார் ஓட்டுநர். நாங்க போனது தான் முக்கிய வாயில் என நினைக்கிறேன். கோபுர வாயிலில் இருந்து தெருப்பூராவும் அடைத்துப் பந்தல் போட்டிருந்ததால் கோபுரம் தெரியவே இல்லை. 

இரு பக்கங்களிலும் நிறையக் கடைகள். நாங்க ஓர் கடையில் துளசி மாலைகள் மட்டும் வாங்கிக் கொண்டோம். மற்றவற்றை அப்படியே தூக்கி எறிவாங்க! அந்தக் கடையிலேயே செருப்பை விட்டுவிட்டுக் கோயில் முக்கிய வாயிலுக்குள் நுழைய முடியுமானு பார்த்தால் பக்கவாட்டில் கம்பித் தடுப்புப் போட்டு முன்னர் மேலே ஏறிப் போன மாதிரியான வாயிலில் கொண்டு விட்டது. என்னடா இது மேலே ஏறணுமோனு நினைச்சு அங்கே இருந்த பக்தர் ஒருத்தரைக் கேட்டதுக்கு ஏற வேண்டாம், நேரே போங்க, பெரிய மண்டபம் வரும் என்றார்.  சரினு நேரே உள்ளே போனோம். பெரிய மண்டபம் வந்தது. அங்கே பலரும் தரிசனத்துக்கான வரிசையில் நின்றிருந்தனர். சிலர் ஒரு கூட்டமாக நின்றிருந்தனர். இன்னொரு வரிசை வேறொரு வாயில் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அதற்குள்ளாக மாலை வழிபாட்டுக்கான நேரம் வரவே திரை போட்டார்கள். விட்டலனுக்கும் ரெகுமாயி என அழைக்கப்படும் ருக்மிணிக்கும் ஆராதனைகள் முடிந்த பின்னரே திரை திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே நுழையலாம் என்றார்கள். காத்திருந்தோம்.

பாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு 

படத்துக்கு நன்றி விக்கிபீடியா



பாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி கூகிளார். 

Tuesday, May 07, 2019

அக்ஷய த்ரிதியைக்கு என்ன செய்யணும்?

உப்பு வாங்கலையோ உப்பு!

அன்னக்கொடி விழா



அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். 

இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!


வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.


உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்



ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.



சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 


Monday, May 06, 2019

பண்டர்பூரில்!

விட்டலனை ஏற்கெனவே பார்த்திருக்கோம். நல்ல தரிசனம் கிடைத்தது. இப்போக் கோயிலை அரசு எடுத்து நடத்துவதாகச் சொன்னார்கள்.அதோடு ஆன்லைனில் தரிசனத்துக்காக முன்பதிவும் செய்துக்கலாம் என்றார்கள். அது தெரிந்ததில் இருந்தே நம்மவர் மூணு மாசம் முன்னாடி இருந்தே என்னை முன்பதிவு செய்யச் சொன்னால் அது ஏற்கவே இல்லை. உன்னோட நேரம் இப்போ வரலைனே சொல்லிட்டு இருந்தது.  வழக்கமான குருக்ஷேத்திர யுத்தத்துக்குப் பின்னர் அவர் தம்பியிடம் சொல்லியும், எங்கள் பையரிடம் சொல்லியும் முன்பதிவு செய்யச் சொன்னார். இருவருமே தரிசனத்துக்கான தேதிக்கு ஒரு வாரம் முன்னால் பதிவு செய்ய முடியாது என்று சொன்னதுக்குப் பின்னர் தான் கணினி வாங்கிக் கொடுத்து நாம் மோசம் போகவில்லை என சமாதானம் அடைந்தார். :))))) அதை ஏன் கேட்கறீங்க! இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் கணினி என்னைப் போட்டுப் பார்த்துடும். அதிலும் ஐஆர்சிடிசி முன்பதிவுனாலே எனக்கு வயத்தைக் கலக்கும்! :))))

இப்படியாகத் தானே கடைசியில் பண்டர்பூருக்கும் வந்து சேர்ந்தோம். ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினதுமே வழக்கம்போல் ஆட்டோக்காரரிடம் கோயிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் எதுக்கானும் கூட்டிப் போகச் சொல்லி எங்கள் முக்கியத் தேவைகளான ஏசி, வெஸ்டர்ன் கழிவறை போன்றதை உறுதியும் செய்தோம். ஆனால் பாருங்க அந்த ஆட்டோக்காரர் இதை எல்லாம் இந்தக் காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டுட்டார். கோயில் அலுவலகத்திலேயே நடத்தும் யாத்ரி நிவாஸுக்குக் கூட்டிப் போகிறேன் என அந்த வழியே செல்ல ஆரம்பித்தார். நான் இங்கே கொஞ்சம் கோபத்துடனேயே அங்கெல்லாம் என்னால் வர முடியாது எனச் சொல்லிக் கொண்டிருக்க அவரோ பண்டர்பூரில் லாட்ஜே இல்லை போலப் பேசினார். கடைசியில் யாத்ரி நிவாஸுக்கு அருகே கொண்டு வந்தும் விட்டார். நாங்க கேட்ட மாதிரி அறைகளும் இருப்பதாகவும் இரண்டாம் மாடி எனவும் ஒரு நாளைக்குத் தானே அங்கேயே இருந்துக்கோங்க என்றும் சொன்னார். அது இருக்கும் இடத்தைப் பார்த்தாலே பிடிக்கலை! சந்து! கழிவு நீர்ச் சாக்கடைகள் ஓடிக் கொண்டிருந்தன. அதோட இரண்டாம் மாடி! படிகள் ஏறி இறங்கணும். என்னால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லவும் கூட அவர் ஒத்துக்கலை. போய்த் தான் பாருங்க! 500 ரூ தான் வாடகை  என்றார். அப்போத் தான் புரிந்தது. இவர் குறைந்த வாடகைக்கு நாங்கள் சம்மதிப்போம் என நினைக்கிறார் என்று. உடனேயே நான் வாடகை பத்திக் கவலை இல்லை; வேறே லாட்ஜுக்குக் கூட்டிப் போங்க! இல்லைனா இங்கேயே விடுங்க, நாங்களே வேறே ஆட்டோ பிடிச்சுப் போய்ப் பார்த்துக்கறோம்னு சொல்லிட்டேன்.

ஆனால் அவருக்கு எங்களை விட மனசில்லை. ஏனெனில் அந்தக் கொஞ்ச நேரத்தில் நம்ம உண்மை விளம்பி இருக்காரே அவர் மறுநாள் சோலாப்பூர் போய் அங்கிருந்து உத்யான் எக்ஸ்பிரஸில் நாங்க புனே போகப் போவதையும் இங்கிருந்து சோலாப்பூருக்கு எப்படிச் செல்வது என்பதையும் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலேயே போயிடலாம் என்றார். எவ்வளவு ஆகும் என்றதற்கு மற்றவர்கள் என்றால் 2000 ரூபாய் வாங்குவதாகவும், எங்களுக்காக 1500க்கு வருவதாகவும் சொன்னார். வேறு அரசாங்கப் பேருந்துகள் இருக்கானு கேட்டதுக்கு அவை எதுவும் சரியில்லை என்றும் நின்று நின்று போகும் எனவும் சொன்னார். கார் ஏதேனும் ஏற்பாடு செய்து கொள்ளலாம், நானே செய்து தரேன் என்றும் சொன்னார். சோலாப்பூரில் இருந்து புனே செல்ல இருவருக்கும் சாதாரண வகுப்புக்கான பயணச்சீட்டுத் தான் எடுத்திருந்தோம். அது 300 ரூபாய்க்கும் கீழே! இங்கே பண்டர்பூரிலிருந்து சோலாப்பூர் போக 45 அல்லது 50 கிலோமீட்டருக்கு 2000 ரூபாயா எனத் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தோம். இது ஒரு முடிவுக்கும் அப்போதைக்கு வரவில்லை.

அவர் முணுமுணுத்துக் கொண்டே அந்தச் சந்தில் திரும்பிப் பக்கத்து மெயின் ரோடுக்கு வந்தார். எதிரே ஓர் பெரிய லாட்ஜ் அதை ஒட்டிய ரெஸ்டாரன்ட் இரண்டும் தெரிய இவர் அங்கே போகாமல் வலப்பக்கம் தெரிந்த ஓர் பாதையில் திரும்பி ஆட்டோவை நிறுத்தினார். அங்கே ஒருத்தர் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தார். அவரை எழுப்பி விஷயத்தை சொன்னோம். முதல் மாடியில் ஓர் அறை இருப்பதாகவும் லிஃப்ட் இருப்பதாகவும் சொல்லிவிட்டுப் போய்ப் பார்க்கச் சொன்னார். வாடகை பற்றிக் கேட்டதற்கு 1,800 ரூபாய் என்றார். அறையில் ஏசி இருக்கானு கேட்டதுக்கு இருக்கு என்றார். கழிவறையும் வெஸ்டர்ன் என்றார். நம்மவர் என்னைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.  சரினு லிஃப்டைத் தேடினால் இஃகி,இஃகி! ஒரு சின்ன ஜன்னல் தென்பட்டது! அதான் லிஃப்டாம்! அதுக்குள்ளே என்னோட இந்தச்சரீரம் புகுமானு நான் யோசிக்கையில் அந்த லாட்ஜின் ஊழியர் ஒருத்தர் (அங்கே அவர் தான் எல்லா முடிவும் எடுப்பார் போல) லிஃப்டைத் திறந்து தானும் உள்ளே போய் என்னையும் அழைத்தார்! இரண்டு பேரா? இந்த லிஃப்டிலா?ஙே!!!!!!!!!!!!!!!!!!!!! என நான் முழிக்க என் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிக் கொண்டார். லிஃப்ட் இரு கதவுகள் கொண்ட அந்தக் காலத்து லிஃப்ட். மேலே சென்றதும் முதல் தளத்தில் அறையைக் காட்டினார். அறை பெரியது தான்!

ஆனால் ஒரு ஷெல்ஃப் கிடையாது. மேஜை, நாற்காலிகள் இல்லை. டெலிஃபோன் இல்லை. எதற்கேனும் வரவேற்பில் உள்ளவர்களைக் கூப்பிடணும்னால் ஒவ்வொரு முறையும் கீழே வரணும். சின்னச் சின்னதாய் இரு அறைகள். ஒன்று கழிவறை, ஒன்று குளியலறை! ஒருத்தர் உள்ளே போவதே சிரமம். எப்படிக் கட்டிட்டு அந்தக் கொத்தனார் வெளியே வந்திருப்பார் என நான் வியந்தேன். அறையில் இரு இரும்புக் கட்டில்கள்! இரும்புச் சட்டங்கள் அடித்து! ஒன்று சுவரை ஒட்டிப் போடப் பட்டிருக்கவே அந்தப் பக்கம் படுப்பவர்கள் எப்படிக் கீழே இறங்குவது எனக் கேட்டதுக்குக் கட்டில்களைத் தனியாய்ப் போட்டால் விழுந்து விடுவீர்கள் என அந்த ஊழியர் பயமுறுத்தினார். ஒரு பக்கம் நிறையப் படுக்கைகள். கம்பளிகள். அவற்றை எடுப்பீங்களா? நாங்க பெட்டியை எல்லாம் வைச்சுக்கணுமே, ஒரு ஷெல்ஃப் கூடக் கிடையாது என்றதுக்கு ஓர் மூலையைக் காட்டி இந்தப் பக்கம் வைங்க என்றார். படுக்கைகளை எடுக்க முடியாது என்றார். கீழே போய் நம்மவரிடம் சொன்னால் அதற்குள்ளாக அந்த ஓட்டல் உரிமையாளர் இவரை எப்படியோ மெஸ்மரைஸ் பண்ணி அறைக்கான ஒரு நாள் வாடகையை வாங்கிக் கொண்டிருந்தார். ஆட்டோக்காரர் திரும்ப வந்து கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லிவிட்டுப் பணம் வாங்காமலே போயிட்டாராம். அறையைப் பார்த்துட்டு வருவதற்குள்ளாக இங்கே எல்லாம் முடிஞ்சே போச்சு! இனிமேல் அறை வேண்டாம், வேறே இடம் போகலாம்னு எப்படிச் சொல்றது?

அரை மனதோடு கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டியையும், பையையும் அந்த ஊழியரிடம் மாடியில் அறையில் கொண்டு வைக்கச் சொன்னால், "யே ஹமாரா காம் நஹி! ஆப் லே ஜாவோ!" என்று சொல்லிவிட்டு அவர் மறுபடி உள்ளே போய்ப் படுத்து விட்டார். ரூம் சர்வீஸ் கிடையாதா எனக் கேட்டால் பதிலே இல்லை. இதுக்கு 1,800 ரூபாயா? எனக்கு மயக்கமே வந்தது! அதுக்குள்ளே நம்மவர் அந்தக் குட்டி ஜன்னலில் சாமான்களை வைத்துக் கொண்டு தானும் ஒடுங்கிய வண்ணம் மேலே அறைக்குச் செல்ல ஆயத்தமானார். இருவருமாகச் சேர்ந்து போக முடியாது. ஆகவே என்னிடம் கீழே இதிலேயே ரெஸ்டாரன்ட் இருக்காம்; இங்கேயே சாப்பிட்டுக்கலாம்னு சொல்றார். முதல்லே தேநீர் வாங்கிக் கொண்டு வா எனச் சொல்லி என்னிடம் பணத்தையும் ஃப்ளாஸ்கையும் கொடுத்துவிட்டு அவர் அறைக்குப் போனார். கீழே இருந்த ரெஸ்டாரன்டுக்குப் போய் அங்கிருந்த பெண்மணியிடம் இரண்டு தேநீர் வேண்டும் எனச் சொல்லி ஃப்ளாஸ்கைக் கொடுத்தேன். 30 ரூபாய் என்றார். சரினு பணத்தையும் கொடுத்தேன். தேநீர் போட்டுக் கொடுத்தார். வாங்கிக் கொண்டு மேலே வந்து முதலில் தேநீரைக் குடிப்போம்னு ஃப்ளாஸ்கைத் திறந்தால் உள்ளே தேநீரைத் தேட வேண்டி இருந்தது. மறுபடி ஙே!!!!!!!!!!!!!!!!! கொஞ்சூண்டுக்குத் தேநீர். அதுவும் 30 ரூபாய்.

மறுபடி கீழே இறங்கி அந்த அம்மாவிடம் கேட்டால் குழந்தைகளுக்குப் பால் புகட்டும் பாலாடை அளவுக்கு ஒரு கிண்ணத்தைக் காட்டி இதில் தான் தருவோம் என்றார்கள். நான் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பல்லைக் கடித்துக் கொண்டு மறுபடி இதே போல் நான்கு தேநீர் போட்டுத் தரச்சொன்னேன். அப்போக் கூட அரைக் கப் தான் வரும்! ஆனால் அறுபது ரூபாய்க்குத் தேநீருக்குச் செலவழிக்கணுமானு மனசு வருந்தியது.  மேலே போய்த் தேநீரைக் குடித்துவிட்டுக் கைகால் கழுவிக் கொண்டு கோயிலுக்குச் செல்லத் தயாரானோம். இதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் கட்டில்களைப் பிரித்து ஏறி, இறங்க வசதியாகப் போட்டிருந்தார். பின்னர் கீழே வந்து ஆட்டோக்காரருக்குத் தொலைபேசிச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். அங்கேயும் அந்த ரெஸ்டாரன்ட் அம்மா, இங்கே உட்காராதே!அங்கே உட்காராதே! எனச்சொல்லிக் கொண்டிருந்தார். எரிச்சல் தாங்கலை.

பின்னர் ஓர் ஆட்டோ வந்தது. இது எதுவானாலும் ஏறிப் போயிடலாம்னு நான் சொல்லுவதற்குள்ளாக அந்த ஆட்டோவை ஓட்டி வந்த பையரே ஸ்டேஷனில் இருந்து எங்களை அழைத்து வந்தவரின் தம்பி எனச்சொல்லிவிட்டு அண்ணன் வேறே சவாரிக்குப் போயிருப்பதாகச் சொல்லிவிட்டு எங்களை அழைத்துச் செல்லும்படி அண்ணன் கூறி இருப்பதாகச்சொன்னார். சரினு அவருடன் கோயிலுக்குக் கிளம்பினோம்.

Saturday, May 04, 2019

மீண்டும் மஹாலக்ஷ்மி தரிசனம்! பண்டர்பூர் பயணம்!

தொடர்ந்து எழுதி முடிக்கலாம்னு பார்த்தால் நாலைந்து நாட்களாக அடிக்கடி மின் வெட்டு. அதிலும் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட முழு மின்வெட்டோனு நினைக்கும்படி இருந்தது. கிடைத்த நேரத்தில் ஒரு சில பதிவுகளுக்குத் தான் போக முடிந்தது. எழுத முடியலை. இரவிலும் ஒன்றரை மணி நேரம் போல் மின்சாரம் போய் விட்டது. இன்னிக்கும் காலை ஒன்பது அல்லது ஒன்பதரைக்குப் போன மின்சாரம் இப்போ ஒன்றரைக்குத் தான் வந்தது. இது தொடரும் மின்வெட்டா அல்லது பராமரிப்புக் காரணமான மின்வெட்டானு தெரியலை. அறிவிப்பெல்லாம் கொடுக்கவில்லை.  அதன் காரணமாகவே எழுதி முடிக்க முடியாமல் போகிறது.

ஏற்கெனவே அதீத சூடவெயில் காரணமாக வேனல் கட்டிகள் குழந்தைகளுக்கு வராப்போல் வந்து  ஒரு நாளைக்கு 100ரூக்கு  என மாத்திரை சாப்பிடும்படி ஆகி விட்டது. சூரியன் என்னமோ காலை வேளையில் போக்குக் காட்டினாலும் தாமதமாக எழுந்ததை ஈடு கட்டும் விதத்தில் சுட்டெரிக்கிறான். இன்னிக்கு அக்னி நக்ஷத்திரம் ஆரம்பமாம். 41 டிகிரி செல்ஷியஸ் காட்டுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கணினியில் ரொம்ப நேரம் உட்கார்ந்தாலும் சூடுதான் என்பதால் அதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது. கிடைக்கும் கொஞ்ச நேரத்துக்குள் எல்லாம் முடிக்க முடிவதில்லை! ஆகவே திடீர்னு காணாமல் போனால் தேடாதீங்க! வரவேண்டிய நேரத்துக்குக் கரெக்டா வந்துடுவேன்! :))))
********************************************************************************

மறுநாள் காலை எழுந்ததும் வழக்கம் போல் தேநீருக்குச் சொல்லிவிட்டு வாங்கிக் குடித்தோம். பின்னர் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் கோயிலுக்குச் செல்லத் தயாரானோம். லிஃப்டில் கீழே வந்து அங்கே போய்க் கொண்டிருந்த ஓர் ஆட்டோக்காரரை அழைத்துக் கோயில் வாசலில் விடும்படி கேட்டுக் கொண்டோம். அவரும் அழைத்துச் சென்றார். நிற்கவா எனக் கேட்டவரை வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டோம். வாசலில் விற்றுக் கொண்டிருந்த பூக்காரர்களிடம் கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டு நேற்றுச் சென்ற அதே வழியில் சென்றோம். கூட்டமே இல்லை. என்றாலும் சுமார் நூறு, இருநூறு பேர்கள் இருப்பார்கள். ஆனால் அங்குமிங்குமாக இருந்ததால் சந்நிதியில் கூட்டம் தெரியவில்லை. முதல் நாளைப் போல இன்றும் சரஸ்வதியையும் காளியையும் தரிசித்துக் கொண்டு நேற்றுப் பார்க்காமல் விட்ட மஹாகணபதியையும் தரிசித்துக் கொண்டோம். அங்கிருந்து சந்நிதிக்குச் செல்லும்போது நாங்கள் தமிழில் பேசுவதைக் கண்ட ஓர் தம்பதியினர் எங்களை விசாரிக்க நாங்களும் அவர்களை விசாரித்தோம். அவர்கள் நால்வர். பல வருஷங்களாக நண்பர்களாம்.சென்னை வாசிகள். ஒருத்தர் இருப்பது வட சென்னை பெரம்பூர். இன்னொருத்தர் இருப்பது தென் சென்னை க்ரோம்பேட்! ஆனாலும் நட்பு இருவரையும் குடும்பத்துடன் இங்கே தரிசனத்துக்கு அழைத்து வந்திருந்தது.

பின்னர் சந்நிதிக்குச் சென்று அம்பிகையைக் கண்ணாரப் பார்த்தோம். பட்டர் தான் எழுந்து போய், எழுந்து போய் கூடியவரை மறைத்துக் கொண்டிருந்தார். என்றாலும் விடாமல் நின்று பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அங்கே ஓர் இடத்தில் அம்பிகைக்கு மக்கள் அளித்த உண்டியல் காணிக்கைகள் மூலம் பண்ணப்பட்ட தங்கப்பல்லக்கு காட்சி அளித்தது. அதை ஓர் க்ளிக் செய்து கொண்டேன்.

வெளியே வந்து பிரகாரங்களைச் சுற்றிய போது சில இடங்களில் பிரகாரங்களை மட்டும் க்ளிக்.




அதிகம் படங்கள் எடுக்கலை. நம்ம ரங்க்ஸுக்குப் பசி வந்து விட்டது. ஆகவே அங்கே வெளியே கடை போட்டிருந்த ஓர் பெண்மணியிடம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக அம்பிகையின் படங்கள் மற்றும் ஶ்ரீசக்ரம் படங்கள் வாங்கிக் கொண்டோம். பின்னர் நாங்கள் நுழைந்த வாயில் வழியே வெளியே வந்தோம்.  காலை உணவுக்கு எங்கே போகலாம் என யோசிக்கையில் கோயிலுக்கு எதிரேயே இரண்டு, மூன்று கடைகள் திறந்து வைத்திருந்தனர். ஓர் கடையில் நன்றாக இருக்கும் என ஓர் ஆட்டோக்காரர் சொல்லவே அங்கே போனோம். நான் எனக்குப் போஹா மட்டும் போதும் எனச் சொல்லவும், அவரும் அதுவே வாங்கிக் கொண்டார். காரமில்லாமல் இருக்கணும் என நினைத்து வாங்கியது ஒரே பச்சை மிளகாய்! பொறுக்கி மாளலை! அதைச் சாப்பிட்டுவிட்டுத் தேநீர் வேண்டாம்னு சாச்(ஸ்)(chach) கேட்டோம். மோர் என்னமோ நல்ல திக்காக இருந்தது. ஆனால் இதிலும் பச்சைமிளகாய்க் கூட்டம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனதுக்குள் சொல்லிவிட்டு எல்லாவற்றையும் எடுத்துவிட்டுக் குடித்தாலும் காரம் நாக்கில்!

பின்னர் அங்கிருந்து ஓர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு ஓட்டலுக்குப் போனோம். அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு நாங்க  சொன்ன ஓட்டல் பெயர் புரியாமல் நீளப் போனார். அவரை வழிமறித்து யூ டர்ன் அடிச்சுத் திரும்பி வரணும்னு சொல்லி நாங்க தங்கிய இடத்துக்கு வந்தோம். மேலே அறையில் போய்க் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாமான்கள் எல்லாவற்றையும் கட்டியாச்சானு சரி பார்த்து விட்டுப் பத்து மணி போலக் கீழே இறங்கலாம்னு நினைச்சோம். ஏனெனில் பனிரண்டு மணிக்கு பண்டர்பூருக்கு வண்டி அங்கிருந்தே போகிறது. நாக்பூர் போகும் ரயில் பண்டர்பூர் வழியாகச் செல்கிறது. அதில் இரண்டு படுக்கை உள்ள இருக்கைகளை இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தோம். 

நாங்கள் கீழே சாமான்களை எடுத்துக் கொண்டு போகவும் எங்கள் ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் வரவும் சரியாக இருந்தது. ஓட்டலில் பணம் செட்டில் செய்துவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போனோம். நல்லவேளையாக ரயில் அங்கிருந்தே கிளம்புவதோடு முதலாம் நடைமேடையும் கூட. ஆகவே அங்குள்ள முதல் வகுப்புப் பிரயாணிகள் தங்குமிடம் சென்றோம். ஒரே கூட்டம். நெரிசல். கழிவறை நாற்றம். சகித்துக் கொண்டு உட்கார்ந்தால் என்ன ஆச்சரியம்! காலையில் கோயிலில் பார்த்த நபர் க்ரோம்பேட்டைக்காரர்.அவர் மனைவியும் நண்பர் மற்றும் அவர் மனைவியோடு இன்னொரு பயணிகள் தங்குமிடத்தில் தங்கி இருப்பதாகவும் அங்கே கொஞ்சம் நன்றாக இருக்கும் எனவும் அவர் சொன்னார். ஆனால் இங்கே ஐஆர்சிடிசியின் உணவகம் பக்கத்தில் இருந்தது. நம்ம ரங்க்ஸுக்கு மத்தியானம் கொஞ்சமானும் சாப்பிடணும்! ஆனால் ரயில் வர நேரமிருந்ததால் அங்கிருந்து வந்துக்கலாம்னு நினைச்சுக் கிளம்பினோம். 

அந்த உணவகத்தில் விசாரித்தால் உணவு தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். சரினு என்னைக் கொண்டு போய் அந்தச் சென்னைப் பயணிகள் பக்கம் உட்கார வைத்துவிட்டு அவர் மட்டும் சாப்பிடச் சென்றார். நான் அவர்களுடன் பேசிக் கொண்டு பொழுதைக் கழித்தேன். சிறிது நேரத்தில் ரயில் வர நாங்கள் கிளம்பினோம். நான் தயிர் மட்டும் வாங்கிக் கொண்டேன். அமுல் கிடைக்குமானு கேட்டதுக்கு அவங்க சரியாச் சொல்லலை. அமுல் விற்பனைக்கூடம் கொஞ்சம் தள்ளி இருந்திருக்கு! நமக்கு அது தெரியலை. அவங்க கொடுத்த தயிரை வாங்கிக் கொண்டேன். அதில் 12 ரூ போட்டிருக்கப் பதினைந்து வாங்க எனக்கும் அவங்களுக்கும் ஒரு வாதவிவாதம். முடிவில் நான் 12 ரூ கொடுத்து வாங்கிக் கொண்டு வெற்றிப்புன்னகையுடன் திரும்பினேன். வழியில் பார்த்தால் அமுல் பொருட்கள் விற்பனை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  அவங்க "பெண்"களூர் போவதால் ரயிலுக்கு இன்னும் நேரம் இருந்தது. கோலாப்பூரிலிருந்து "பெண்"களூருக்கு ரயிலும், விமானமும் நேரடிப் போக்குவரத்து இருக்கு! இது தெரிஞ்சால் நாங்க புனேயில் தங்காமல் திருச்சியில் இருந்து நேரடி விமானத்தில் "பெண்"களூர் வந்து அங்கிருந்து கோலாப்பூர் போயிருந்தால் அலைச்சலும் மிஞ்சி இருக்கும். பணமும் மிஞ்சி இருக்கும். சரியாக விசாரிக்கலை. இனி என்ன செய்ய முடியும்? ரயிலில் ஏறிக்கொண்டு எங்கள் படுக்கை இருக்கைக்கு வந்தோம். ஒரு பக்கம் எனக்குச் சிரிப்பு! ஏனெனில் சாயங்காலம் /மத்தியானம் மூன்றரை மணிக்கெல்லாம் இது பண்டர்பூர் போயிடும். அதுக்கு படுக்கையா என நினைச்சேன். எங்களோட வந்த ஒரு பெண்மணியும் நாங்க எங்கே இறங்கப் போறோம்னு கேட்டுட்டு பண்டர்பூர்னதும் அதிசயமாப் பார்த்தாங்க! இஃகி,இஃகி. 

ரயிலில் தயிரைச் சாப்பிட்டேனோ இல்லையோ மேல் வயிற்றில் வலி! ரொம்பவே சிரமமாகப் போய் விட்டது. என்ன செய்யறதுனு தெரியாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்லிக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். நம்மவர் நல்ல தூக்கம். கொஞ்ச நேரத்தில் பண்டர்பூர் வரும் அறிகுறிகள் தெரிய நான் அவரை எழுப்ப அவர் இல்லைனு சொல்ல, நான் ஆமாம்னு சொல்லக் கடைசியில் பண்டர்பூர் வந்தே விட்டது. அடிச்சுப்பிடிச்சு இறங்கணுமேனு கவலைப்பட்டால் டிடிஆர் வந்து பத்து நிமிஷம் நிற்கும். நிதானமா இறங்குங்க என்றார். அப்பாடானு பெருமூச்சு விட்டுக் கொண்டு கீழே இறங்கினோம். முன்னர் பார்த்தது நான்கே நடைமேடைகள் உள்ள சின்ன ரயில்வே ஸ்டேஷன். அதில் இரண்டில் மட்டும் ரயில் போகும். இப்போப் பார்த்தால் ரயில் நிலையமே மாறி விட்டிருந்தது. கீழே இறங்கவும் இங்கேயும் ஓர் ஆட்டோக்காரர்!