எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 10, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72

ராவணன் கொல்லப் பட்டான். அரக்கர்களின் தலையாய தலைவன், இந்திரனை வென்றவன், பிரம்மாவின் வரங்களைப் பெற்றவன், தனக்கு நிகர் தானே தான் என்று பெருமையுடன் இருந்தவன் கொல்லப் பட்டான். பலவிதமான யாகங்களையும், வழிபாடுகளையும் செய்தவன், சிவபக்திச் செல்வன், சாமகான வித்தகன், கொல்லப் பட்டான். எதனால்?? பிறன் மனை விழைந்ததினால். இத்துணைச் சிறப்புக்களையும் பெற்றவன் பிறன் மனை விழைந்த ஒரே காரணத்தினால் ஒரு மனிதனால் கொல்லப் பட்டான். அரக்கர் குலமே திகைத்து நின்றது. விபீஷணன், அவ்வளவு நேரம், தன்னுடைய உடன்பிறந்த மூத்த சகோதரனைக் கொல்ல வேண்டி யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது கதறி அழ ஆரம்பித்தான். "தானாடாவிட்டாலும், தன் சதை ஆடும்" என்பது உறுதியாகிவிட்டதோ??? பலவாறு ராவணனின் பெருமையைச் சொல்லிச் சொல்லிக் கதறுகின்றான் விபீஷணன். சுத்த வீரனும், பெருமை வாய்ந்தவனும், தர்ம வழியிலும், அற வழியிலும் அரசை நடத்தியவன் என்று வேறு கூறுகின்றான். துக்கம் அளவுக்கு மீறியதாலும், தன்னுடைய அண்ணன் என்ற பாசத்தாலும் விபீஷணன் நிலை தடுமாறித் தன்னை மறந்தானோ??

ராமர் விபீஷணனைத் தேற்றுகின்றார். போர்க்களத்தில் கடும் சண்டை போட்டு வீர மரணம் அடைந்த க்ஷத்திரியர்களுக்காக அழுவது சாத்திரத்துக்கும், தர்மத்துக்கும் விரோதமானது என்கின்றார். தன் வீரத்தைக் காட்டிவிட்டே ராவணன் இறந்திருக்கின்றான் என்று கூறும் ராமர் அவன் சக்தியற்றுப் போய் வீரமிழந்து போய் இறக்கவில்லை என்றும் எடுத்துச் சொல்கின்றார். மேலும் தேவேந்திரனையும், தேவர்களையும், ராவணன் அச்சுறுத்தி வந்ததையும் எடுத்துச் சொல்லி, ராவணன் இறந்தது உலக நன்மைக்காகவே, என்றும் இதற்காக வருந்த வேண்டாம், எனவும் மேலே ஆகவேண்டியதைப் பார்க்கும்படியாகவும் விபீஷணனிடம் சொல்ல, அவனும் ராவணன் ஒரு அரசனுக்கு உரிய மரியாதைகளுடன் ஈமச்சடங்குகளைப் பெறவேண்டும் என்றும், தானே அவனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்வதாயும் கூற, ராமரும் அவ்வாறே ஆகட்டும், இறந்தவர்களிடம் பகைமை பாராட்டுவது அழகல்ல, ஆகையால் ராவணன் இனி எனக்கும் உரியவனே. அவனுக்கு உரிய மரியாதையுடன் அவன் ஈமச் சடங்குகள் நடக்கும் என உறுதி அளிக்கின்றார். இந்நிலையில் ராவணனின் மனைவிமார்களும் பட்ட மகிஷியான மண்டோதரியும் வந்து தங்கள் துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அழுகின்றார்கள். மண்டோதரி ராவணன் தன் பேச்சைக் கேட்டிருந்தால், சீதையை விடுவித்திருந்தால், ராமருடன் நட்புப் பாராட்டி இருந்தால் இக்கதி நேரிட்டிருக்காதே எனப் புலம்ப அனைவரும் அவளைத் தேற்றுகின்றார்கள்.

ராவணனின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அது நடக்க ஆரம்பிக்கும்போது திடீரென விபீஷணன் இறுதிச் சடங்குகள் செய்ய முரண்பட, ராமர் மீண்டும் அவனைத் தேற்றி, அவனுக்கு அறிவுரைகள் சொல்லி, தான் ராவணன் மேல் கொண்ட கோபம் தனக்கு இப்போது இல்லை என்றும், இறந்த ஒருவன் மேல் விரோதம் பாராட்டக் கூடாது எனவும் பலவாறு எடுத்துச் சொல்லி, விபீஷணனை ஈமச் சடங்குகள் செய்ய வைக்கின்றார். இந்திரனனின் தேரோட்டியைத் திரும்ப அனுப்பிர ராமர், பின்னர் லட்சுமணனை அழைத்து விபீஷணனுக்கு உடனடியாகப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறும், இன்னும் பதினான்கு வருஷங்கள் முடிவடையாத காரணத்தால், தாம் நகருக்குள் நுழைய முடியாது எனவும், லட்சுமணனே அனைத்தையும் பார்த்துச் செய்யுமாறும் கூறுகின்றார் ராமர். அவ்வாறே லட்சுமணன் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்து விபீஷணனுக்கு முறையாகப் பட்டாபிஷேகமும் நடக்கின்றது. விபீஷணன், ராமரை வணங்கி ஆசிபெறச் சென்றான். அப்போது ராமர் அனுமனைப் பார்த்து, இப்போது இலங்கை அரசன் ஆகிவிட்ட இந்த விபீஷணன் அனுமதி பெற்று நீ சீதையைக் கண்டு அவள் நலனை விசாரித்து வருவாய்! அவள் எண்ணம் என்ன என்றும் தெரிந்து கொண்டு வருவாய்! இங்கே அனைவரும் நலம் எனவும் தெரிவிப்பாய்! அவள் என்ன சொல்கின்றாள் எனத் தெரிந்து கொண்டு வருவாய்." என்று சொல்லி அனுப்புகின்றார்.
இரண்டாம் முறையாக ராமரால் தூதுவனாய் அனுப்பப் பட்ட அனுமன், நடக்கப் போவது ஒன்றையும் அறியாமல், மகிழ்ச்சியுடனேயே சென்றார். சீதையிடம் அனைத்து விபரங்களையும் தெரிவித்த அனுமன், ராவணன் இறந்ததையும், விபீஷணன் இப்போது இலங்கை அரசன் எனவும் சொல்லிவிட்டு, ராமர் அவளிடம், இனி அஞ்சுவதற்கு ஏதுமில்லை எனவும், சொந்த இடத்திலேயே வசிப்பதுபோல் அவள் நிம்மதி கொள்ளலாம் எனச் சொன்னதாயும், விபீஷணன் சீதையைச் சந்தித்துத் தன் மரியாதைகளைத் தெரிவிக்க ஆசைப் படுவதாயும் சொல்கின்றார். பேச நா எழாமல் தவித்தாள் சீதை. அனுமன் என்ன விஷயம், இத்தனை மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியும் என்னிடம் பேசாமல் மெளனமாய் இருப்பது எதனால் என்று கேட்கவும், தன் கணவனின் வீரத்தையும், வெற்றியையும் கேட்டதும் தனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை என்று சொல்லும் சீதை, இதைவிடப் பெரிய பரிசு ஏதும் இருக்க முடியாது எனவும் சொல்கின்றாள். சீதைக்க்க் காவல் இருந்த அரக்கிகளைத் தான் கொன்றுவிடவா என அனுமன் கேட்டதற்கு அவ்வாறு செய்யவேண்டாம், ராவணன் உத்திரவின்படியே அவர்கள் அவ்விதம் நடந்தனர், தவறு அவர்கள் மேல் இல்லை என்று சொன்ன சீதை, தான் ராமரை உடனே பார்க்கவேண்டும் எனச் சொல்லி அனுப்புகின்றாள். உடனே ராமரிடம் வந்து சீதை சொன்னதைத் தெரிவிக்கின்றார் அனுமன். ராமரின் முகம் இருண்டது. கண்களில் நீர் பெருகியது. செய்வதறியாது திகைத்தார் ராமர். ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு ராமர் விபீஷணனிடம் விதேக தேசத்து ராஜகுமாரியான சீதையை நன்னீராட்டி, சகலவித அலங்காரங்களையும் செய்வித்து, ஆபரணங்களைப் பூட்டி இவ்விடம் அழைத்துவரச்சொல்லவும், தாமதம் வேண்டாம் என்று சொல்கின்றார். விபீஷணனும் மகிழ்வோடு, சீதையிடம் சென்று ராமரின் விருப்பத்தைச் சொல்ல, சீதை தான் இப்போது இருக்கும் கோலத்திலேயே சென்று ராமரைக் காண விரும்புவதாய்ச் சொல்ல, விபீஷணனோ, ராமர் இவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னார் என்றால், அதன்படியே நாம் செய்வதே நல்லது. என்று கூற, கணவன் இவ்வாறு சொல்வதின் காரணம் ஏதோ இருக்கின்றது என ஊகம் செய்தவளாய்ச் சீதையும் சம்மதித்து, தன் நீராட்டலை முடித்துக் கொண்டு சகலவித அலங்காரங்களோடும், ஆபரணங்களோடும், அலங்கார பூஷிதையாக ராமர் இருக்குமிடம் நோக்கி வந்தாள். ராமர் குனிந்த தலை நிமிரவில்லை. வானரப் படைகள் சீதையைக் காணக் கூட்டம் கூடினர். நெரிசல் அதிகம் ஆனது. ஒருவரோடொருவர் முண்டி அடித்துக் கொண்டு சீதையைக் காண விரைய, அங்கே பெருங்குழப்பம் ஏற்பட்டது. விபீஷணனும், மற்ற அரக்கர்களும், வானரப் படைத்தலைவர்களும் கூட்டத்தை ஒழுங்கு செய்ய முனைந்தனர். ராமர் கடுங்கோபத்துடன் விபீஷணனைப் பார்த்து, "ஏன் இப்படி வானரப் படைகளைத் துன்புறுத்துகின்றாய்? இந்தக் கொடுமையை நிறுத்து. சீதைக்கு உயர்ந்த மரியாதைகளோ, உன்னுடைய காவலோ பாதுகாப்பு அல்ல. அவளுடைய நன்னடத்தை ஒன்றே பாதுகாப்பு. ஆகவே அவளை பொதுமக்கள் முன்னிலையில் வரச் செய்வதில் தவறொன்றுமில்லை. கால்நடையாகப் பல்லக்கை விட்டு இறங்கி வரச் சொல். வானரங்கள் விதேக தேசத்து ராஜகுமாரியைப் பார்க்கட்டும், அதனால் பெரும் தவறு நேராது." என்று சொல்கின்றார்.

ராமரின் கோபத்தைப் புரிந்துகொண்ட விபீஷணன் அவ்வாறே செய்ய, லட்சுமணன், அனுமன் சுக்ரீவன் போன்றோர் மனம் மிக வருந்தினர். சீதையின் மீது ராமருக்குள்ள அன்பையும், அவள் இல்லாமல் ராமர் துடித்த துடிப்பையும் கண்ணால் கண்டு வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு, ராமர் சீதையின்மேல் ஏதோ கோபத்துடன் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்டார்கள். கோபத்தின் காரணம் தெரியவில்லை. சீதையோ ஏதும் அறியாதவளாகவே, மிக்க மகிழ்வோடு பல்லக்கை விட்டு இறங்கி, ராம்ரின் எதிரே வந்து நின்று, தன் கணவனைக் கண்ணார, மனமார,தன் ஐம்புலன்களும் மகிழ்வுறும்படியான மகிழ்வோடு பார்த்தாள். இது என்ன?? ராமரின் முகம் ஏன் சுருங்குகின்றது? ஏன் பொலிவில்லாமல் காட்சி அளிக்கின்றது? எல்லாம் நம்மை ஒருமுறை பார்த்தாரானால் சரியாகிவிடும், சீதை மீண்டும் ராமரை நோக்க, ராமரின் வாயிலிருந்து வரும் சொற்களோ இடிபோல் சீதையின் காதில் விழுகின்றது. தன் காதையே நம்பமுடியாதவளாய்ச் சீதை ராமரை வெறிக்கின்றாள். அப்படி என்னதான் ராமர் சொன்னார்?

"ஜனகனின் புத்திரியே!, உன்னை நான் மீட்டது என் கெளரவத்தை நிலைநாட்டவே. இந்த யுத்தம் உன்னைக் கருதி மேற்கொள்ளப் பட்டது அல்ல. என்னுடைய தவங்களினால் தூய்மை பெற்றிருந்த நான் அவற்றின் வலிமை கொண்டும், என் வீரத்தின் வலிமை கொண்டும், இக்ஷ்வாகு குலத்திற்கு நேரிட்ட இழுக்கைக் களைவதற்காகவும், என் வரலாற்றை இழுக்கில்லாமல் நிலைநாட்டவுமே,அவதூறுகளைத் தவிர்க்கவுமே உன்னை மீட்கும் காரணத்தால் இந்தப் போரை மேற்கொண்டேன். இனி நீ எங்கு செல்லவேண்டுமோ அங்கே செல்வாய்! உன் மனம்போல் நீ செல்லலாம். இதோ என் இளவல் லட்சுமணன் இருக்கின்றான், அல்லது பரதனுடனோ நீ யாரோடு வேண்டுமானாலும் வாழலாம்!"

ராமர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளா இவை? அல்லது விஷப் பாம்புகள் தன்னை கடித்துவிட்டதா? அல்லது ராவணனின் வேறு வடிவமா? என்ன இது? ஒன்றும் புரியவில்லையே? தன்னை உள்ளும், புறமும் நன்கு அறிந்த தன்னுடைய கணவன் வாயிலிருந்தா இத்தகைய கொடும் வார்த்தைகள்? ஆஹா, அன்றே விஷம் அருந்தி உயிர்விடாமல் போனோமே? சீதைக்கு யோசிக்கக் கூட முடியவில்லை, தலை சுழன்றது. எதிரிலிருக்கும் ராமரும் சுழன்றார். பக்கத்திலிருக்கும் அனைத்தும் சுழன்றன. இந்த உலகே சுழன்றது. சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி பூமியை நனைக்கத் துவங்கியது. அங்கே உலகமே ஸ்தம்பித்து நின்றது. பூமிதேவி தன் சுழற்சியை நிறுத்திவிட்டாளோ???????

1 comment:

  1. இப்போது இலங்கை அரசன் ஆகிவிட்ட இந்த விபீஷணன் அனுமதி பெற்று நீ சீதையைக் கண்டு அவள் நலனை விசாரித்து வருவாய்!
    --
    அப்பாடா! என்ன ஒரு ப்ரொடோகால் கடை பிடிக்கிறார்!

    ReplyDelete